*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, April 13, 2008

என்னருகில் நீ இருந்தால்...

காத்திருந்து களைத்ததினால்
காதலுடன் உனை நினைத்து
கண்ணீரால் நான் நனைத்த
தலையணைக்குள் முகம் புதைத்து
மென்மையான முத்தங்களுடன்
உன்னவள் வரைகின்ற
இன்ப மடல் இது.
என் அன்பே...
காலத்தால் கரையாத
காவிய நினைவுகளின்
துணை கொண்டு வாழ்கின்ற
உன் இனியவளின்
ஒரு துளி நினைவுகள்.
தனித்தவள் என்று
நான் என்றுமே கலங்கியதில்லை.
நீ மாயமாய் மறைந்துவிட்டாய்.
நீ விட்டுச் சென்ற
உன் நிறைவான
நினைவுகள் எனக்குள்.
நீ மீண்டும் வந்தால்...
என் நினைவுக்குள் நீ நிறைந்தால்...
கற்பனை கொடிகட்டும்
காவியங்கள் மாயமாகும்.
வாழ்வு வசந்தமாகும்
வாலிபம் தூக்கம் கலையும்.
சொந்தம் சுருதி சேர்க்கும்
சோகங்கள் சொரிந்து சாகும்.
உறவு சிறகு விரிக்கும்
உறக்கம் உதிர்ந்து ஓடும்.
கண்கள் நிறையப் பேசும்
கனவுகள் உன் முன் நாணும்.
கோடை பூக்காடாகும்
மாரியும் தூவானம் தூவும்.
நரை விழுந்த கண்ணுக்குள்
திரையாய் உன் விம்பம் விழும்.
கண் பூக்கள் அர்ச்சனை போடும்
காதலும் கதறி அழும்.
உதடுகள் மெளனமாகும்
ஊமையாய் மணி நகரும்.
அன்பின் இறுக்கத்தில்
காற்றும் திசை மாறும்.
ஆசையும் அலைந்து களைக்கும்
அசையாது இயற்கையும் நிலைக்கும்.
இத்தனையும் நிஜங்களாகும்
என்னருகில் நீ இருந்தால் !!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

இவ்வளவும் நடக்குமா! என ஆச்சரியப்படவைக்கிறது உங்கள் கவிதை.

Post a Comment