*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Saturday, February 14, 2015

அநேகன் அவன்...


சிறகொடித்துச் சிறகு தந்தவனே....

மீண்டுமொரு காதலர் தினம்.காத்திருப்பாய் நிச்சயமாய் என் விளங்கா மொழியில் கவிதைபோலுள்ள வார்த்தைப் பொட்டலத்தோடு போராட.பிரபஞ்சப் பெருவெளி கடந்தும் என் வாசனையைச் சேமித்து வைத்திருக்கும் உன் நாசிக்குடுவை வாசனைக்கோடு கிழித்து வழிகாட்டித் தரும் வந்துவிடு என்னிடம்.

ஒரு பொக்கிஷம் போன்றவன் நீ
ஆயுதம் தாங்கிய என் காவலன் நீ
உயிர்க் காதலன் நீ
என் திசைகாட்டும் முள்செடி நீ
தமிழின் உயிர் நாக்கு நீ.

கன்னமுரசி நீ தந்த கணங்கள்தான் என் கவிதைகளின் கரிசனப் பெருவெளி.வாழ்வின் கூழாங்கற்களை உருட்டிக்கொண்டே கடந்தும் சமப்படுத்தியும் நீட்டியும் செல்லும் தோரணம் கட்டிய வசந்தப்படிக்கட்டு.

வார்த்தை ஜாலங்களோடு மனம் குடைந்த துவாரம் மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன் வாழ்க்கைப்பட்டுப் போகாத குடியேறிய இந்த ஐரோப்பிய நாட்டில்.குளிர்சாதனப் பெட்டியில் பலமாதம் பச்சை தொலைக்காமல் வாழும் காய்கறிகள்போல எப்போதும் புதிதாகவும் அழகாகவும் இன்னும் இருக்கிறேன் கரதலம் பற்றிய உன் நினைவுப் போர்வை போர்த்திய காதல் நினைவுகளோடு.

நிஜமான அந்தப் பயமான உக்கிரமான....ஆனால் நமக்குச் சுகம்தந்த அந்த நாட்கள் எத்தனை சுகமானவை.உனக்காகச் சமைத்தபொழுதில் கீறிய கத்தியைத் திட்டிக் காய்த்து மரத்த உன் கையால் தடவிவிட்ட பொழுதில் காயத்தைவிட உன் கை தொட்ட வலி சொல்லாமல் நான் சுகமாய் அத்தடவலை ரசித்து மயங்கிய பொழுதில்தான் முடியாமல் மூச்சிறைத்து உன் மடி சாய்ந்தேன்.அந்த நேரத்தின் மங்கலில் நீ வலுவிழந்தாய்.உன்னை உலுப்பி முதுகில் குத்தி சாத்தான்களும் தாடிவைத்த பூனையுமென கதை சொல்லியாய் நானப்போ.

ஆட்டமும் பாட்டமுமாய் பெருவெளிச்சமுமாய் நம் தெருக்கள் களை கட்டிக்கிடந்த காலமது தேவனே.அந்தக்காலத்தின் என் தோள் தொட்ட உன்னையும் அந்தக் காலத்தையுமே காதலித்தபடியே இருக்கிறேன் இப்போதும் மறந்துவிடமுடியாமல்.அந்த நாட்களின்மீது பேரவா பேயாசை எனக்கு.அதை இன்னும் கடக்காமல் முழங்காலில் தவழ்ந்து கொண்டிருக்கிறேன் உன் குழந்தைக்காதலியாக.உன்னை வரவேற்க அதே பூவரசு மரமும்,பெயர் மறந்த உதடொட்டும் தேரடிப் பழமரமும் நானும் இன்னும் அங்கு.

என்னை....என் உடலை எனக்குப் பிடிக்கவில்லை காயமானவனே.
மௌனத்தின்மீது கல்லெறிவதை அறிவாயா நீ.எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன.உன் வயிற்றோடு சரமாய் வளைந்து செருகிக்கிடந்திருப்பேன் நீயிருந்தால். இத்தகவல்களொன்றும் எனக்கானதாயிருக்காது.இப்போது நானே சரப்பாம்பாயும் நானே அதன் வாயின் உணவாயும்.என் விஷம் நீக்கும் கருடக் கல் நீதானே.

போதும்...இது போதுமென்ற வார்த்தை என்னிடமிருந்து வரும்வரை காத்திருக்கப்போகிறாயா செல்வனே.என்னை அறியாதவனா நீ அறிவானவனே.தற்காலிக இறகு தந்து நீ காத்த உயிர் எடுப்பாயெனக் காத்துக்கிடக்கிறேன் தாயாவனே.இறுகிக் கிடக்கிறேன் இப்பனிக்காட்டில்.பத்திரமாய்ப் பெயர்த்தெடுத்து உன் நெஞ்சின் இளஞ்சூட்டில் கரைத்தே என் முகம் காணவேண்டிவரும் நீ.அத்தனை கொடுமைக்குள் வசிக்கிறேன்.கொண்டு செல் என்னை.

இறகானவனே.....

நம் அரசியலும் வாழ்வும் மாறிக்கொண்டுதான்.இறப்பும் பிறப்பும் இயல்பாய் சந்ததிகள் போராடிக்கொண்டும்தான்.அவர்களுக்கு நீ விட்டுப்போன நம் கதைகளை நாம் சொல்லிக்கொண்டும்தான்.

என் இப்போதைய மனநிலை வெறுப்பாயும் குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும்.இந்த என் வெறும் நாட்களை பகிர்ந்துகொள்கிறேன் பெருவெளி இணையத்தளத்தில்.ஏதோ எங்கோ ஒரு முத்தச்சொட்டு உன்னைக் கண்டடையும் என்கிற மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் இறுமாப்போடும்.

வயதாகிறது எனக்கும்.ஆனால் சொல்லவே மாட்டாய் புருவம் சுருங்கிய உன் ரசனையில் நான் குழந்தைக் காதலிதானே.
அதானால்தான் நாம் வாழா மிச்ச சொச்ச வாழ்க்கைக்காகக் காக்க வைத்துப் போனாயோ மாயவனே மீண்டு வாழ்வோம் என்கிற நம்பிக்கையில்.

நானும் ஒற்றை இறகோடு காத்திருக்கிறேன்.பொய்யென இயற்கை உணர்த்தினாலும் மனம் சலித்தாலும் உன் மீதான காதல் உன் பெயர் சொல்லும் என் இதயத் துடிப்பின் ஓசையில் பொய்யில்லா உன் வார்த்தையாலும் காத்திருக்கிறேன் கள்வனே என் திமிரோடும் துணிவோடும் நீ என் பின் கழுத்திலிட்ட முத்தத்தோடும்.

வீரனே..... என் இதய வானொலியே....ரசனைக் கிழவனே..... வந்துவிடு இறுதி மூச்சின் சில இரவுகளோடும் ,பகல் நேர முத்தங்களோடும், நிறையக் கதைகளோடும் ,நாடா கோர்ப்பதாய் எடுத்துப்போன என் பாவாடையோடும் ,சாபங்களற்ற நம் நிர்வாணக் காதலோடும்.ஐந்து புலன்களின் அழகனே,என் ஆண் பூவே இன்று நமக்கான நாளாம் சொல்கிறார்கள் இவர்கள் என்றுமே இளமை மாறா நம் நாட்களைக் காணாதவர்கள்!!!

ஒரு வளைவான
சூரியன் பட்டுத்தெறிக்கும்
தங்க நிறக்குவளையில்தான்
சிறை வைத்திருக்கிறேன்
நேசித்தலின்
தயார்ப்படுத்தலாயிருக்கும்
உன் ஒற்றை இறகை.

அது காட்டும் திசைவழி
உன் அழகிய
சின்னக் கண்ணின் ஒளிவீச்சு
அதன் பேச்சில் நிதர்சனக்கீற்று
அதன் மொழிபெயர்ப்பில்
எப்போதுமே தோற்றுப்போகிறது
என் தமிழ்.

நீ சொன்ன
அந்த ஐந்தாவது மலைபோல்
அற்புதம்
உன் வசீகர நினைவுகள்.

அன்பின் சதிகாரா....

நம்பி நிறைந்திருந்திருக்கிறது
என் நாட்கள்
உன்னைப் பற்றுதலுக்கான
தழுவலுக்கான
தருணங்களுக்களுக்காய்.

வந்துவிடு
அடுத்த காதலர் தினத்திற்குமுன் !!!


அதே காதலுடன் மாறா நினைவுகளுடன் உன்  *ஹேமா*

Friday, February 14, 2014

ஒற்றைச் சிறகில் அடைகாக்கும் பிரியம்...

கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில் வானில் திட்டுத்திட்டாய் திரண்டுருளும் சில மாற்று நிறங்களை ரசித்தபடி குவளைத் தேநீரோடு சபித்துக்கொண்டிருந்தேன் உன் நினைவுகளையும் என் காலங்களையும்.

நீ....
தந்த
மதுவும் போதையும்
தீரவில்லை அன்பே...

நிரம்பாக் குவளையில்
ஊற்றிப்போனவனே
நீதானே...

முடிந்துவிட்டதாய்
நினைக்கிறார்கள்
அவர்கள்...

முடிவிலிருந்து
தொடங்கி வைக்கிறாய்
யாருமறியா
ஏதோவொன்றை
எப்போதும்
நீ...!


அன்று....இரவின் வாசனையோடு நுழைகிறாய் நீ.ஒரு குளிர்தருவோ தளிர்நிழலோ உவமானமாகிட முடியாது நம் சந்திப்புக்கு.ஒரு மலையுச்சி தொட்டு நகரும் மேக இருப்பின் கால அளவேதான் கதைத்திருப்போம் எப்போதும் நம் கதை கேட்கும் பூவரம் பூ சாட்சியாய்.

எப்போதாவது இருளில் முகம் காட்டும் உனக்கு மறைத்த என் மார்பினிடை மத்தியில் உனக்காய் ஒற்றைமலர் எனக்கும் பிரியம் காட்டத்தெரியும் என்பதாய்.எதிர்பாராமல் திக்கித்திணறிய நீ.....துணைக்கழைக்கிறாய் உன் பத்து விரல்களைப் போர்க்களத்திற்கு......பழக்கத்தின் தோஷமாய்.


உன் ஆக்கிரமிப்புக்களில் தோற்று நானே நீண்ட முத்தங்களைப் பரிமாறினேன்.”காடும் மேடும் கடந்து வேர்கள் இடித்துப் புண்ணாகும் கால்விரல்களில் மீண்டும் பதிப்பேனடி இம்முத்தங்களை”.... என்றாய் கண் இமையால் என் கன்னம் வருடியபடி.

தொலைத்த ஆன்மாவை
தலை தடவி
சுகம் கேட்டுக்கொண்டிருக்கிறது
வெள்ளைப் பூவொன்று....

இப்போ....
பக்கமிருந்து போனாயா
தனிமை
தள்ளி நிற்கிறதே!


பறவைகளின் மீது இயல்பாகவே எனக்கிருந்த நெகிழ்வு இந்தப்பறவையை துரத்தவோ இருக்கச்சொல்லவோ இடம்தரவில்லை.பறவைகள் வருவதும் போவதும் கானகத்து மரங்களுக்கு வழமைதானே.இக்காட்டுப்பறவை பாடிக்கொண்டே  எனக்காகவே என் கானகக்கிளை வந்ததமர்ந்தது பட்டகிளையை அழகுபடுத்திக்கொண்டு.அதன் வருகையை நான் என்ன சொல்லிப் பரவசப்படுத்த....

அத்தோடு எனது காத்திருப்பெல்லாம் தேசத்து வேரை அசைக்கும் புயலாய் சிறகடிக்கும் பறவையின் வருகைக்காகத்தானே.முதன்முதலில் அப்போதுதான் ஒற்றைச் சிறகைப் பரிசாய்த் தந்திருந்தது அந்த வானொலிப் பறவை.முன்பே ஒருமுறை நான் சொல்லியிருக்கிறேன் உங்களுக்கு !

இப்போதும் அடைகாக்கிறேன் அச்சிறகில் நினைவு முட்டைகளைக் காலம் பிந்தினாலும் பொரிக்காதெனத் தெரிந்தபோதும்.                     எப்போதாவது வந்தணைத்துப்போகும் புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் காடுவழித் தண்டவாளங்கள்போல விவரிக்கமுடியா அதன் அன்பிற்காகக் காத்தும் இருக்கிறேன்.

பறித்துக்கொண்டிருக்கிறேன்
கனவிலும் நினைவிலும்
பிரியக் கிளையில்
சாய்ந்துன்னை...

உதிர்வதாயும்
நிலம் படர்வதாயும்
காற்றின்
வாகு படித்தவனாய்
நர்த்தனமாடுகிறாய்
நெளி பரப்பிலும்
நெளி பறப்பிலும் !

நீ தந்த
ஒற்றைச் சிறகோடு
வலிக்க வலிக்க
ஒருபக்கக் கோணலாய்
வலிந்து
சரிந்து பறக்கையில்
இன்னும் உன் பிரிவை
விதி பறித்ததாயும்
பரவாயில்லையென்றும்
மன்னிக்கமுடியாமல் !


தேவதைகளுக்கு மட்டுமல்ல என் தேவனுக்கும் சிறகுண்டு.தேவகுலத்தினர் தூங்குவதில்லையாம் யாரோ சொன்னார்கள்.நிச்சயமாய் உறங்குகின்றான் என் தேவன் அவனுக்கான காடுகளில் அதுவும் மிக இனிமையான கனவுகளுடன்...என் கனவில் எனக்குச் சொல்லியிருந்தான் கதை கதையாய்....அந்த நேரத்தில் தனித்துவமாய் சிரமமில்லாமல் எனக்காய் எனக்காகவே ஒரு புன்னகை வெடிக்கும்  கானம் சுமக்கும்
அந்தக் கடினமுகத்தில்.அவன் இயல்பு அன்பேயாயிருந்தாலும் சிலசமயங்களில் கோரைப்பற்களும் முளைத்துவிடும் ராட்சதனாய்...

இல்லை என்பதும் நீ
இருக்கிறாய் என்பதும் நீ
இது காதல்
இல்லை என்பது
நிஜமுமல்ல
பொய்யுமல்ல
உனக்குள் நான் என்பதன்
மாயை !


இன்னொரு நிகழ்வில்....

என்னுடைய வாசனையும் ஒற்றைமுடியும் சேர்த்தனுப்பும் கடிதங்களை நண்பர்களுக்குப் பயந்து பாசறைக் கிணற்றருகே எலுமிச்சை மரத்தடியில் ஒளித்து வைத்திருப்பதாயும் அதைக் கறையான் தின்றுவிட்டதாகவும் சொல்லியிருந்தான் ஒருமுறை.


”அத்தனை வார்த்தைகளையும் நினைவில் வைத்திருக்கிறாயா?தொலைந்த கடிதங்களால் நினைவுகளைத் தின்றுவிடத் தெரிவதில்லை ஒருபோதும்” என்று ஆறுதலாய் சொல்லியிருந்தேன் எனை உருக்கி அவனுள் சிற்பமாக்கும் அவன் மயக்கும் கண் பார்த்து.

இப்போ....எனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து நமக்கிடையே உரையாடல் இல்லாதிருக்கலாம்

இருந்தும்...

நான் இல்லாப்பொழுதுகளில் ஆயுதம் சுமக்கும் மிடுக்கான உன் தோளில் எப்போதாவது நானிருக்கும் உன் கனவுகளை ,அந்நேர அந்தரங்கங்களை,
கீறிட்ட இடம் தரும் புள்ளிகள் நிரப்பா நிச்சயங்களை உறுதிப்படுத்தி இன்னொருமுறை கடிதமொன்று எழுதுவாயா என் செல்வனே காத்துக்கிடக்கிறாள் உன் தேவதை.உன்னுயிர் நினைவால்தான் எஞ்சிருக்கிறது இந்த  நுரையீரல்கள் சுவாசித்துக்கொண்டு.ஆனால் ரணமாகிறது ஒவ்வொரு இரவும்...

எதுவும் நினைவிலில்லை
நான் உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை....

கொஞ்சம் முதல்
கொஞ்சிக்கொண்டிருந்தாய்
பின்னராய்
என் முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தாய்....

பேசித்தீரா பிரியங்களை
பெருவெளி மணலிலும்
வானின் எரிநட்சத்திரங்களின்
இருண்ட முனைகளிலும்
புதைத்து வெளியேறும் உன்னை....!

உறவுக்காய் விதியில் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும்.உன் சக இணை நான்.அடிமையாகவும் எதிரியாகவும் உன் வக்ரங்களையும் குரூரங்களையும் கொட்டித் தீர்க்கும் நிலமாகவும்,நண்பணாயும்,காதலனாயும்,தாயுமானவனாயும்,என் மடிதவழும் குழந்தையாயும் என்னை உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்துக்கு நன்றி.

உன் இணைப்பறவை நான்.கண்கள் தாண்டிய வானத்தில் நீ தந்த அந்தச் சிறகோடு உன்னோடு பறக்கக் கனவு கண்டவள்.என் மரத்தின் இலைகளை உதிர்த்தது விதி.என் சருகுகளின் இசையை தொலைத்துவிட்டேன். போகும்போது என் மரத்தின் பாடும் குருவிகளையும் கொத்திப் போய்விட்டாய் சுயநலக்காரனடா நீ...

இப்போதெல்லாம் புதிதாய் முளைவிடும் இலைகளை உற்றுநோக்குகிறேன்.திசையெங்கும் தேடி ஆதரவுக் கிரணங்களை கட்டி இழுத்து வருகிறேன்.
 

இசை தேடும் சாதகப் பறவைபோல அன்பு தேடி அலையும் பட்சி ஒன்று மனதுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது.மடை திறப்பதற்காக என்னுள் மிகப்பெரிய நதி ஒன்றும் காத்திருக்கிறது.

மௌனமொழியில்
உயிரெடுக்கிறாய்...

இருவருக்குமான
ஊர் எல்லையில்
உதிரத்தொடங்கும்
வெண்மஞ்சள்
இலைகளைகளிலாவது
நீயனுப்பிய
ஏதோவொன்று
ஏதோ ஓரிலையில்
ஓட்டியிருக்குமென்கிற
நம்பிக்கையில்
இலையலசி நடக்கையில்
எல்லை கடக்கிறது
மனது.....
மிதக்கும் ஒற்றைச் சருகில்!


உனக்காக எத்தனை விரதங்கள் வேம்படி மூலை வைரவருக்கு உனக்குச் சொல்லாமலேயே.சொல்லப் பிடிப்பதுமில்லை சொன்னாலும் நீ அக்கறைப்படுவதில்லை.அக்கறைப்படுவதுபோலக் கேட்டாலும் நக்கலும் நளினமுமாய் உன் முகம் கோணலாகி...ஆனாலும் உன் கடிதங்களில் ஒரு வார்த்தை நழுவிப்போயிருக்கும் எனக்கான உன் வாஞ்சையில்.ஒற்றைக் கோப்பியில் வளரும் என் கோப்பித்தேவதையென்று..

ஒருமுறை நச்சரித்தாய் ஒரு விரதநாளில் அசைவ ரசம் வேண்டுமென்று.வீட்டுக்குத் தெரியாமல் ரசம் வைப்பதென்பது விளையாட்டா.வாசனை வரும் ஏன் - எதற்கு - யாருக்கு என்பார்கள் என்றேன். இதழில் ரசம் வச்சுக்கொண்டு என்னடி வாசம் - வீடு - விளையாட்டு என்கிறாயென...... அப்பப்பா....நீ....வாசனை இன்னும் இதழில் ஈரமாய்....என் விரதமும் கலைத்தாயன்று.

ஒற்றைப்புருவத்தால் மட்டுமே கோபிக்க முடியுமப்போ எனக்கு.உன் ஆக்கினைகள் அந்த நேரத்தில் பயத்தைக் கொண்டு வருமே தவிர அத்தனையும் ஆசையாய் இனிக்கும் இதயத்துப் பொக்கிஷங்கள்.

உன்னிடம் சொல்லாத ஒரேயொரு வேண்டுதலுக்கான விரதம் அப்போது என்னிடம் இருந்தது. கடவுள் கேட்கவுமில்லை தரவுமில்லை.எல்லாம்....எல்லாமே கொடுத்தும் தரவில்லை.


எனக்கு உன்னைத் தர  விருப்பமில்லா என் தேசம் முதலிலும் பின் கடவுளும்.....நான் விரதமிருந்தும் வீணாய்ப்போனது.மாதமொருமுறை ஒருகிழமை ஒற்றைக் கோப்பியோடு கோயில் போய் வந்திருந்தேன் உனக்கும் சொல்லாமல்.

நீ போன திசையில் கடவுளர்கள் இருக்கிறார்களா.கடவுளைக் காண்பாயா நீ இப்போ? நான் வந்ததும் சொல்லக் கதைகள் சேமிப்பாய்தானே.கேட்டு வை என் வேண்டுதலைச் செவிமடுக்காச் செவிட்டுக்கடவுளின் ஏனென்ற அந்தக் கதையையும்.உனக்கான ஆயிரமாயிரம் நம் தேசத்துக் கதைகள் மிஞ்சி மிஞ்சிக் கிடக்கின்றன என்னிடத்திலும் சொல்ல...

இப்பொழுதும் என்னிடமொரு விரதம் இருக்கிறது
அது கடவுளுக்கு அல்ல.உனக்குத் தெரியும் எதற்கானதென்றும் எவரிடமென்றும்....

எப்படி உதறினாலும்
ஒட்டிக்கொண்ட
வானம் உதிரா நட்சத்திரமென
எனதுகளில் வார்க்கப்பட்ட
உன் சிற்பங்கள்
உளியோ
கற்களோ அல்லாமல்....

என் மரணம்வரை
பிரமாண்டமாய்
பார்வையும் பரிசுமாய்
பிரகாசித்தாலும்
எனதில்
உனதின் உளிபட்டு
கை வழி வளியும் குருதி
காயா ஈரமாய்...

எனதுகளில்
எனக்காய்
உனதால் கீறிய காவியங்கள்
காலத்தால் சிதைக்கப்பட்ட
வாதைகள்...

அனாதையாக்கப்பட்ட
உனதறியா
உனதான நினைவுகளும் நானும்
எனதான கண்ணீருக்குள் வாழ்ந்து
கரைந்திறக்கும் சுகங்கள்...

இருந்தும்
எனதுகள் எல்லாமே
உனதுகளாக்கப்பட்டவை...!!!


உன் காதல் மறவா ஹேமா....... இப்போ சுவிஸ் ல் இருந்து...!

இனிமையான மகிழ்ச்சியான அன்பான காதலர்தின வாழ்த்துகள் சொந்தங்களே !!!

Thursday, February 14, 2013

கருத்த இரவிலொரு காதல் சிதறல்...




மழைபிடித்திருந்தாலும் குடை பிடித்து நடக்கையில் தவறுதலாய்த் தொட்டு விழும் தூறல் துளிகளை ஏதோவொரு திரவமெனத் துவாலையால் துடைத்து எடுத்துவிடுவதுபோல சுலபமாய் முடிந்துவிடுவன அல்ல அவன் நினைவுகள்.

ஒரு மழைக்காலத்தில் என் வீட்டில் கூரை பிய்த்தெறிந்த காற்றின் ஈரலிப்போடு புகுந்த அவன் தேகத்தின் தத்துவங்களை ரசித்திருந்தேன்.வாழ்வு ஒரு அணுவென்றால் அதன் எல்லாத் துகள்களையும் உணர்ந்துவைத்திருந்த அமைதி அந்த முகத்தில்.

நேற்றைய போதை தீர இன்றும் கொஞ்சம் போதை தேவைப்படுவதுபோல இப்போதெல்லாம் தினம் தினம் தேவைப்படுகிறது போதையான அவன் நினைவுகளைத் தூங்க வைக்கக் கொஞ்சம் சிவப்புத் திராட்சைரசம்.போதையேறினால் தூக்கம் கண்ணைக் கட்டுமென்பார்கள்.எனக்கோ அப்போதுதான் அவன் மடிதேடித் தூக்கம் தொலைந்து கலைகிறது.


நீ....சொல்லாத
ஒற்றைச் சொல்லுக்குள்
பெருஞ்சுழியென
விழுந்தும்
அமிழ்ந்தும் மிதந்துமாய்
குமிழிகள்
விடத்தொடங்குகிறதென்
கற்பனை
ஏதாவது
சொல்லியிருப்பாயோ
என்னோடு பேசியிருந்தால்
இன்று......நீ !



செல்லா......இப்போதெல்லாம் முன்னைவிட அதிகம் நினைக்கிறேன் உன்னை.அதிகமான கவிதைகளுக்குள் உன் ஞாபகம் ஒரு சொட்டாவது சொட்டி கவிதையை அழகுபடுத்தியிருக்கும் நம் காதல்.....இல்லையில்லை உன் காதல்.காதல் ஒரு பொதுமறையென்பார்கள்.உன்னை நினைத்து நான் எழுதத் தமக்கானதாய்ப் பலர் பொருத்தியும் கொள்கிறார்கள்.உன் பெயரைப் பலமாதிரியும் திரித்தெழுதப் பழகிவிட்டிருக்கிறேன் யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி நான்.ஆனால் எழுதும்போது உயிராய் நீ என் எண்ணம் இறுக்கி வலித்து கண்வழி கசிவதும் உன் குரலைக் காற்றுப்பிரித்து நான் தேடுவதும்.......யாருக்குத் தெரியும்.உனக்காவது.....சொல்லாமல் போன உனக்கு உணர்வின் அவஸ்தை புரியுமா என்ன.உணர்வுகளை தேசக்காட்டில் பரப்பிவிட்டல்லவா என்னைத் தொலைத்திருந்தாய்.மன்னிப்பேயில்லா பாவக்காரன் நீ...!

பறத்தலும் இருத்தலும் எனக்கேனோ இயல்பாயில்லை.இயல்பாயிருந்தாலும் உள்நிற்கும் நீ என் எழுத்துவழி என் இயல்பைப் பறித்தபடி.நீ என்கிற வட்ட வடிவத்துள் அடைத்துப்போய்விட்டாய் என் சந்தோஷங்களை.பலதரப்பட்ட சமூகச் சதுரத்துள் நான் திணிக்கப்பட்டாலும் உனக்கான வட்டத்துள் வாழ்வதே பிடித்திருக்கிறது எனக்கு.



நீ....
அப்படியே இருந்துவிடு
முறைத்த முகம்தான்
உனக்கழகு
கலைக்கும் நான்
கிராதகியாகவும்
தெரியலாம் உனக்கு.
 

இல்லை....
இல்லாமல் இருப்பதுதானே
அதன் நிறைவு
சபிக்கப்பட்ட
சில விஷயங்கள்
அப்படியே இருப்பதுதான்
சௌகரியம்
அப்படியே இருந்துவிடு
நீ....!


போர்க்காலங்களில் அதிகமாகச் சந்திப்பதுகூட முடிவதில்லை.4 - 5 மாதத்திற்குப்பிறகு நீ வந்திருப்பதாக அறிந்து கோழி தூங்கும் இரவு எமக்காய் இன்னும் கருகியிருக்க வந்தேன்.அதுவும் ஒரு காதல் மாதம் முடியும் தருணம்தான்.மணல் குவித்த கடைச்சல் பட்டடை முற்றத்திற்கு.இரவு 11 ஐத் தாண்டியிருந்தது.உன்னைச் சுமந்து பறக்கும் வாகனம் சாய்த்து வைத்திருந்த அடையாளத்தில் உன்னை நெருங்கினேன்.நீயோ கையைத் தலையணையாக்கிக் பயண அலுப்பில் கொஞ்சம் அசந்துமிருந்தாய்.எழுப்ப மனமில்லாமல் உன் தலையை என் மடி மீது அணைத்துக் கிடத்த.....வந்துவிட்டதைத் தெரிந்துகொண்டே என்னை இறுக்கிவிட்டு மீண்டும் தளர்த்தித் தொடர்ந்தும் உறங்கிவிட்டிருந்தாய்.

15 நிமிடத்தின் பின்.....

ஏனப்பா அலுப்பாயிருந்தால் வந்திருக்கவேணாமே என்றேன்....

வராவிட்டால் இந்த தலை கோதும் சொர்க்கமும் இந்த மடிமீதான நித்திரையும் கிடைச்சிருக்குமோ.அதுதானே என்னை இங்கு இழுத்து வருகிறதென்றாய்.

தொடர்ந்து.....இப்பிடித்தானடி சொல்லுவாய்.வராவிட்டாலும் காதலர் தினத்துக்குத்தான் வரவுமில்ல தரவுமில்ல.பிறகெண்டாலும் வந்திருக்கலாமே எண்டும் கோவிச்சுக்கொள்ளுவாய்.எனக்குத் தெரியாதோ உன்ர குரங்குக் குணத்தை......

அப்ப....அப்ப நான் குரங்கோ.எனக்காகத்தான் வந்தனீங்களோ.உங்களுக்காக இல்ல......எனக்காக மட்டுமெண்டா இனி வராதேங்கோ.....

என்ன சொன்னாலும் முட்டையில என்னமோ பிடுங்கியெடுக்கிறமாதிரித்தான் நீ.....உன்னை.....உன்னை.....

என்ன என்ன....இப்ப என்ன....கொஞ்சம் கையைக் காலை அந்தந்த இடத்தில ஒழுங்கா வச்சிருங்கோ சொல்லிப்போட்டன்.....

சரி நேரமாகுது.சாப்பிட்டும் இருக்கமாட்டீங்கள் என்றபடி நான் கொண்டு வந்திருந்த உணவைக் குழைத்துக் கொடுக்க குழந்தைபோல ஆ...... என்கிறாய் ஊட்டிவிடும்படி.ஊட்டும்போது வேண்டுமென்றே கையில் மெதுவாகப் பல் படக் கடித்து இருட்டிலும் கொஞ்சிச் சிரிக்கிறாய்.

அச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ...........சாப்பாடு தந்தால் பேசாமல் சாப்பிடுங்கோ பாப்பம்.அதுக்குள்ள ஒரு சேட்டை உங்களுக்கு.ஆளைப்பார் ....என்கிறேன் நான்.

இந்தக் கரிசனத்துக்காவும் கையைக் கடிக்கவும்தானே இவ்வளவு நேரம் இந்த மணல்ல தவம் கிடந்தன்.வரம் தரும் தேவதையடி நீ என்கிறாய் நீ.

நாளைக்கே போறீங்களோ என்கிறேன்....

ம்ம்ம் என்கிறாய்.....

ம்ம்ம்............

எதுக்கு இந்த ம்ம்ம்ம்ம்.......

சரி அப்ப வெளிக்கிடுங்கோ.நல்லா நேரமாச்சு.கொஞ்சம் அமைதியா வீட்ல போய்ப் படுங்கோ என்கிறேன்.

போகலாம் பொறு என்றபடி அணைத்து என் தலைகோதி நெற்றியில் ஒரு முத்தமும் இடுகிறாய்......ஒரு கவிதையடி நீயெனக்கு என்றபடி.

அடிக்கடி என் பிறவிப் பயனை நினவுகொள்ள வைத்தாய் உன் அன்பால்.உன் தோள் சாய்ந்தபடியே புளியமரத்தடிச் சந்திவரை வருகிறேன் உன்னோடு.என் வலது கையில் பத்து விரல்கள் இருந்து அப்போது.

குழந்தைபோல எனைச்சுற்றியிறுக்கி அழாமல் இருக்கவேணும்.நேரம் கிடைச்சால் ஓடி வந்திடுவன் என்ர செல்லத்தைப் பார்க்க........ என்று சொன்னாலும் குரலில் தளர்வு விளங்கியது எனக்கு.இருவருமே அழுதுவிட்டோம் ஒருவருக்கொருவர் தெரியாமல்.

அணைத்தபடி சமைந்திருக்க பூவரசு உரசி எம்மை நேரம் பார்க்க வைத்தது.

அமர்ந்திருந்த மணல்மேடுகூட எமைப்பார்த்து ஏங்க எம் காதலை அம்மணலுக்குள் அப்போதைக்குப் புதைத்துவிட்டு பிரிந்துபோனோம்.

அதன் பிறகு....



சூன்யத்துள் வாழ்வதாகப் பரிகசிக்கிறார்கள் சிலர் என்னை.இல்லை......காலம் இப்போதும் என்னை எடுத்துச் சென்றுகொண்டுதானிருக்கிறது என்னுள் படர்ந்திருந்த உனக்கான தீ அணையாமல்.பற்றிக்கொண்ட சுடர்கள் எங்குமிருக்கிறது.எங்காவது சில உருவங்களின் திருப்பத்தில் உருமாற்றங்களோடு சந்தித்துக்கொள்கிறேன்.என் சுவாசம் தொலைத்த உன்னை எப்போதாவது காணாமலா இறந்துவிடுவேன்.நீ வளர்த்த தேசத்துக் காற்றில் கலந்த காவலன் தானே நீ....கண்டு கொள்வேன் உன்னை என் காவலனாய் காதலனாய்...........!!!


இன்னொரு நிழல்
உன் போல
இந்தா பிடி...
பிடியென
உன்னோடு
ஒளித்தோடி
பார்வைகள் மறைத்து
தேடுவதும்
தொலைப்பதுமே
வாழ்வாகிறது எனக்கு
கண்
மாற்றிக் கட்டுகிறாய் நீ
வாழ்வின்
அத்தனை கனவுகளையும்
வலிகளையும்
கட்டிக்கொள்கிறேன்
உனக்காக நான் !


நட்புக்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான காதலர் தின வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 14, 2012

சிறகானவனுக்காக...

தொட்டுக்கொண்டே நகர்ந்துபோகும் முகிலாய் நம் நட்பில் முளைத்த காதல் பட்டுக்கொண்ட நொடியிலேயே பட்டும்போனது.வெற்றிடம் நிரப்பும் காலமாய் நீ....இப்போதும் கைபற்றித்தான் வைத்திருக்கிறாய்.பேச்சு,பார்வை,தொடர்பு,இணைப்பு எதுவும் தேவையில்லை.உயிருக்குள் வாழும் உணர்வுக்குத் தீண்டல் அவசியமற்றது.ஒரு அழகான இறகு காற்றின் திசையில் வந்ததாகவே முதன் முதலில் அறிந்துவைத்திருந்தேன் உன்னை.பௌர்ணமி பூஜித்த ஒரு நாளில் சிறகுகளோடு நுழைந்த நீ கை குலுக்கிச் சிரித்தாய்.பின் இடப்பக்கச் சிறகில் இருத்தி மெல்ல மெல்ல அழைத்துப்போனாய் ஓரிடம்!

அழகான அல்லது ஒளிர்மையான இல்லை இல்லை துளிர்காலமென்று உவமை சொல்லமுடியாத தனித்த தீவின் ஒரு மூலையாய் இருக்குமோ அது.வெக்கை பரவிய மணல் தரையை உன் நிழலைப் போர்த்தி ஈரமாக்கினாய்.நட்புக் கலந்த காதலோடு கைகுலுக்கினாய்.காய்த்திருந்த கைகளை வெடுக்கென இழுத்து இது களம் தந்த வடுக்களென வெளிறிச் சிரித்தாய் உயிரை எனக்குள் புதைத்து!சில பகல்கள் பல இரவுகளின் பின் ஒரு நட்சத்திரங்களற்ற இரவைத் தேர்ந்தெடுத்தாய்.அன்றைய நாளில்தான் உன் தத்துவங்கள் சேமிக்கும் போதிமரமானேன்.அணுவின் துகள்களைக்கூட அனுபவித்துச் சேர்த்த ஒரு அமைதி உன்னிடமிருந்தது.நானறியா ஒரு மலையின் பெயர் சொல்லி அங்குதான் வாழப் பிடிக்குமென்றாய் அடிக்கடி.பத்து நிமிடத்தில் இருபத்தொரு முறை அந்த மலையின் பெயர் வந்தது.நடு நடுவில் காத்திருப்புப் பற்றிய கதையும் சொன்னாய்.எனக்கானதா நம் தேசத்திற்கானதா என அறியமுடியவில்லை.அந்த இரவில் உன் முகமும் சரிவரத் தெரியவில்லை!

காலத் திசைகள் வேறுபட்டிருந்தாலும் அணையாது காதல் தீ என்றும் கை பிடித்துச் சொல்லியிருந்தாய்.அன்று பற்றிய தீ உன்னிடமும் என்னிடமும்.தீயில் உருகி உருமாறும் காலத்திலும் காதல் குழந்தையோடு நாமிருக்கலாம் என்றும்,தீயில் வெந்தாலும் சாம்பல் விலக்கி உனக்குள் இருக்கும் என்னையும் எனக்குள் வாழும் உன்னையும் பார்த்துவிடலாம் தீ வளர்த்த அந்த புதுத் தேசத்தில் என்றும் சொல்லியிருந்தாய்.தீயாய் நீராய் குளிர்தரு நிழலாய் இருந்தாலும் ஒற்றை இறகாகவே பறக்கும் லாவகம் உன்னிடமிருந்தது.காலமாற்றங்களின்போது உதிர்ந்த இறகுகளைப் பரிசாகவும் தந்திருந்தாய்.காதலின் மிகுதியாய் எப்போதுமிருக்கும் என்னிடம் அவைகள் உன் வீரம் சொன்னபடி!

தீ வளர்த்த தேசத்தில் சாம்பல் விலக்கி என்னைத் தேடு.நானும் முயல்கிறேன் உன்னைத் தேட.அங்குதான் நாம் நாமாக நமக்குள் பூத்திருப்போம்.கலையாத காதலும் உன் ஒற்றை இறகும்...அப்போதும்!!!


அன்றைய இரவில்தான்
உன் முழுமையான
காதலைக் கண்டுகொண்டேன்
சாமங்கள் தாண்டிய இரவது
காதலின் முழுபலத்தையும்
முத்தங்கள்கொண்டு
மூர்ச்சடைய வைத்திருந்தாய்.

வேப்பம்பூவும்
தென்னங்கீற்று நிலவும்
கொஞ்சம் வெட்கி
மொழிமறந்த அழகு நேரமது
ஓவியக் கிறுக்கல்கள் பழகுகிறாய்
குழந்தையென என்மீது
அத்துமீறல்கள்தான்
என்றாலும்....
அளவோடு அனுமதிக்கிறேன்.

எல்லைவரை கூட்டிப்போன
நீ.....
என் ஒற்றை அதட்டலுக்குப் பணிந்து
வியர்வைக் குளியலோடு
தலைகுனிகிறாய்
"போடா பொறுக்கி நீயும் உன் வீரமும்"
தலைகோதி அணைக்கையில்
ஒற்றைக் கண்ணீர்த்துளி சொன்னது
வானம் தாண்டிய
உன் அன்பை!!!

அத்தனை என் உறவுகளுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துகள்.
காதலொடு ஹேமா(சுவிஸ்)

Monday, February 14, 2011

ஒரு நான் ஒரு அறிவிப்பாளன்.

முக விழிப்பிற்கே முழித்து விழித்து நிற்கிறேன்.நீ என் அன்பா,காதலனா இல்லை என் கணவனா.எப்படித்தொடங்க நான்.சரி அது அப்படியே இருக்கட்டும்.என் உயிர் நீ.இப்போதைக்கு இது போதும்.வாழ்ந்த காலங்கள்,வாழப்போகும் காலங்கள் அனைத்துமே உன்னோடுதானே.

திட்டமிட்ட எழுத்துக்கள் இங்கு எதுவுமில்லை.கணணி பழுதடைந்துவிட்டது.நேற்றுப் பின்னேரம்தான் புதிதாய் ஒன்று வீடு நுழைந்தது.முழுமையான கணணி அறிவு என்னிடமில்லை.ஓரளவு தொடர்பு நூல்களை இணைத்து மின்சாரம் கொடுத்திருக்கிறேன்.
இதைச் செப்பனிட நீ மட்டுமே சொல்லித் தந்துகொண்டிருந்தாய். இப்போ சொல்லித்தர யாருமில்லாமல் கணணி முழுமைடையாமல்....!

இனி நீ இல்லை என்பதை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு கணமும்.புதிதாய் ஒரு கணணிபோல இதயத்தை மாற்றமுடியாமல் புதுக் கணணித் திரையிலும் முழுதாக உன் முகமே தெரிய நான் செத்துக்கொண்டிருக்கும் செய்தியைக் கிறுக்கிகொண்டிருக்கிறேன்.

காதலர் தினம்.வருவேன் உன் கையோடு இருப்பேன்.உன் இதழின் சுவையோடு பசி மறந்திருப்பேன்.நீ எனக்கொன்றும் சமையல் செய்யக்கூட வேண்டாம்.நீயே சமையலாயிரு என்று சிரித்த ஞாபகம்.ஆனால் நீயுமில்லை...சமையலுமில்லாப் பொழுதில்தான் காத்திருக்கிறேன் உன் குரலின் சூன்யத்தோடு.பசிக்கிறது மனம்.இன்னும் நேரமிருக்கிறது வந்துவிடு.....!

திட்டமிடாத சமயத்திலேயே நான் விரும்பத்தொடங்கியிருக்கிறேன் இந்தக் கடிதம்போல உன்னை.ஆனாலும் என்னை முழுதாகச் சொல்லியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். என் சோகங்களைத் தின்று செரித்தவன் நீ.அப்பாவாய்,
அம்மாவாய்,சிநேகிதனாய்,வில்லனாய்,விமர்சகனாய்க்கூட இருந்திருக்கிறாய்.இப்போ.....!

உன்னால் அனுப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துக்குள் எம் திருமணத்தன்று எனக்குப் பிடித்த ஒற்றை ரோஜா இதழைச் சிறைப்பட வைத்தாய்.இன்னும் என் புத்தகங்கள் நடுவில் உயிரோடு.உன் ஒற்றை எழுத்துக்களைக்கூட நான் வீணாக்குவதில்ல.....உன் குரலை ஒலிப்பேழைக்குள் சேமித்ததைப்போலவே.ஆண்மை நிரம்பிய உன் குரலுக்குள் ஏதோ இறுகிய இறுமாப்பு எனக்கு.என்னவன் இவன்தான் என்கிற அறிவிப்பு.வானொலியில் முதல்நாள் உன் குரல் கேட்டபோதே விளங்கி வெட்கப்பட்டேன்.

இப்போ நான் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.அலைந்து அலைந்து நிலையில்லாத சிட்டின் இறகாய் அங்கு கொஞ்சம்...இங்கு கொஞ்சமாய் உன் நினைவுகளூடே.மனமும் அலைந்துகொண்டிருக்கிறதோ.
இப்போதைய என் எண்ணங்களை பதிந்துகொள்ள மட்டுமாய் இம்மடல்....!

என் வாழ்வமைப்பு சோகச் சிற்பமாய் என்னை இறுக்கியிருந்தாலும் உன் இறந்தகால வருகைதான் கண்முன் என்னை கொஞ்சம் என்னை உடைத்து உருக்கியிருந்தது.இன்று அதே அன்பு என்னை உலகத்து அத்தனை அன்பானவர்களையும் வெறுத்து விலகிக் கொன்று குவிக்கவும் வைக்கிறது.இதற்கெல்லாம் நீ பதில் தரப்போவதுமில்லை.எனக்கும் தேவையில்லை.தேடிக் களைத்து பின் தொலைத்த நித்திரைக்காலம்போல இனியும் இந்த இரவுகளைச் சலித்துக்கொள்ளப்போவதுமில்லை.

ஏப்ரல் முதலாம் திகதி எம் திருமணமத் தினத்தை நீ நினைக்காமல் போனாலும்,காதலர் தினமான இன்று என்னை நீ நிச்சயம் நினைத்துக்கொள்வாய்.இன்று பார்க்க நேரமில்லாவிட்டாலும்,ஒற்றை நடசத்திரத்தை இரவு முத்தமிடும் சமயத்தில் வெட்கத்தால் பளிச்சிடும் வெளிச்சத்தில் பார்த்துக்கொள்வாய்.

உனக்கான எத்தனை கவிதைகள்.ஆனால் உனக்குப் புரியாமலே இருந்திருக்கிறது.நீ முத்தமிட்ட முதல்நாள் என் உதட்டில் இன்னும் ஈரமாய்த்தான்.ஒரு அறிவிப்பாளனாய் செய்திகள் சேமிக்கும் ஒரு பத்திரிகையாளனாய் என் இந்தக் கடிதத்தையும் சேமித்துக்கொள்வாய்.அறிவிப்புப் பாணியில் வாசித்தால் இதில் உயிர் இருக்காது.இது செய்தியல்ல என் உணர்வு.உன் குரலில் பாவங்கள் வெளிப்படுவது குறைவு என்பது உனக்கே தெரிந்த குறை.இதனாலே கவிதைகளை நீ வாசிப்பதில்லை என்பதும் செய்தி.அன்பை அறிவிக்கும் அறிவிப்பாளனாகவே இருந்திருக்கிறாய்.

குழந்தையாய் உன் சின்னவிரலோடு பயணித்த காலங்கள் தடம் அழுத்தமாய்."எனக்காக என்று என்ன செய்திருக்கிறாய் நீ" என்று நேரிலும் கடிதத்திலும் தொலைபேசியிலும் சண்டை போட்ட நேரங்களில் எல்லாம் என் உள்மனதிற்குள் உன்னை உன் அன்பை நேசித்தபடியே நெகிழ்ந்திருக்கிறேன்.உன்னைத் தவிர வேறு யாரல் என்னை இத்தனை தூரம் வழிநடத்தி என உயிரை உனக்குள் பாதுகாக்கமுடியும்.என் கவிதைகளையும் கூடத்தான்.

ஞாபகங்கள் நிறையவே தந்திருக்கிறாய்.நானும்தான் என்பாய்.
பத்திரமாக்கிக்கொள்வாயா இனியும் தெரியவில்லை.கொஞ்சம் பயந்தாங்கோழி நீ.நாம் எத்தனை வருடங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே அன்பைக் கொட்டி இறைத்துக் கொண்டிருந்தோம்....இருக்கிறோம்.அந்த இரவுகளும் ஏன் பகல்களும்கூட கூச்சப்பட எத்தனை கதைகளும் சேட்டையுமாய் என்னைத் திக்குமுக்காட வைத்திருப்பாய்.ஒரு பிறந்தநாளோ ஏன் தீபாவளி பொங்கலைக்கூட ஒரு கிழமை,இரண்டு கிழமை பிறகு ஒரு மாதம்,இரண்டு மாதம் என்றுகூடக் கொண்டாடிக்கொள்வாய்.அந்த நேரங்களில் என்னையும் உன் அன்புத் தலையணைக்குள் வைத்தடைத்து திணித்து ஒரு உருளையாய் உருட்டிப்போவதுதான் உன் கெட்டித்தனம்.மூச்சுத் திணறித் திட்டித் தீர்த்திருக்கிறேன்....!

இன்னும்....இன்னும் நிறைய.சலிப்பேயில்லாத உன் சவரம் செய்யப்படாத அழகான ஒற்றை நாடிக்குள் அடங்கும் அந்தச் சின்ன முகம்.சின்னக் கண்.புசுபுசுவென்று ஒழுங்காய் வராத உன் முடி.இதில் ஒரு வேடிக்கை ஒற்றை பியர்க்குவளை இன்னும் கூட்டிவைக்கும் உன் அன்பை.பொழிந்து கொட்டுவாய் உளறும் உன் நாக்குக்கூட உன்னை நக்கலடித்திருக்கும். பெயர்போன ஒரு அறிவிப்பாளன் இப்படி உளறித் தள்ளுகிறானே என்று.

பாடலும் வரும் சிலசமயம்.ரசிகையாக நான் எத்தனை ராத்திரிகள் சாமக்கோழியாய். இடைக்காலப் பாடல்களையும் எங்கள் போர்க்காலப் பாடல்களையுமே விரும்பிக் கேட்பாய். இதில் இம்சை என்னவென்றால் தொலைபேசியில் அந்தப் பாடல்களை நான் கேட்டு அபிப்பிராயம் வேறு சொல்லவேண்டும்.இல்லையென்றால் நீ சரியாகக் கேட்கவில்லையென்று திரும்பவும் கேட்கவைப்பாய்.திட்டித் திட்டி பாட்டுக் கேட்கும் முதல் ஆள் நான் என்று பலத்த சிரிப்போடு நீ....!

தூங்கும் அழகை ரசிப்பதா இல்லை திட்டுவதா என்று தடுமாற்றம் எனக்குள்.குளிரோ வெக்கையோ வளைந்து வயிற்றில் சூடு சேமித்து எத்தனை மணி வரைக்கும் என்றாலும் நித்திரை கொள்வதில் நீயேதான்.உன் நித்திரைக்காக நானும் படுத்திருந்த நாட்களும்.அப்படியே பகலை முத்தப்போர்வையாக்கி என்னையே களவாடிய தினங்களும்....படுக்கை வலிக்க போர்வை உன்னைத் தேட பதிலற்ற இரவுகளைத் துரத்தும் போராளியாய் நான் இப்போ.

ஒரு சிகரெட்டை முழுதாக புகைக்கும் பழக்கமில்லாமல் அடிக்கொருதரமாய் புகைத்துக்கொள்வாய்.அதற்கும் திட்டும் சண்டையும்."ஐயோ....வாய் நாறுது கிட்ட வரவேண்டாம்" என்று வெறுத்துத் தள்ளிக்கூட வைத்திருக்கிறேன். பாவமாய் முகம் வைத்து நெருங்குவாய்.நானும் திருந்தவில்லை...நீயும் திருந்தவில்லை இந்தப் பழக்கத்தில்.

நேசம் மட்டுமே சொல்லித்தந்த உன் உதடுகளில் கொஞ்ச நாட்களாக அலட்சிய வார்த்தைகள் அலட்சியமாக வந்து விழுகின்றன.
வெறுக்கிறாயோ.நிறையவே பொய் சொல்லவும் பழகியிருக்கிறாய்.இந்தச் சமயத்தில் நீ சொன்னதொன்று வழுக்கி விழுகிறது மனதிற்குள்."யாரிடம் பொய் சொன்னாலும் நான் உன்னிடம் என்றுமே பொய் சொன்னதில்லை.சொல்லப்போவதுமில்லை"என்று அதன்படியும்தான் என்னோடு வாழ்ந்திருக்கிறாய்.வாழ்கிறாய்....!

என் சோகம் தனிமை என்கிற விரக்தித் தோட்டத்துள்ளுள் நுழைந்த நீ என் தோள் தொட்டுத் திருப்பி உன் நேசக் கரத்துள் அணைத்துக் கூட்டி இதுவரை வந்துவிட்டாய்.கண்ணில் ஒன்று, மூக்கில் ஒன்று,கன்னத்தில் இரண்டு,உச்சத்தலையில் ஒன்று,உதடு கழுத்து என இறங்கி வரும் உன் முத்தங்களாலேயே என் சோகம் குறைத்த நீ இன்னும் இன்னும் அதே அன்பு மாறாமல்தான் எனக்குள்.

ப்ரியங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது உன் உலகம்.என்னை அதற்குள் அனுமதித்து உலவவிட்டிருக்கிறாய் இதுநாள்வரை.அதற்கே நான் நன்றி சொல்கிறேன்.அம்மாவிடம் கிடைக்காத அன்பைக்கூட தந்து தாயுமானவனாய் தலைதடவி,என்னடி என்று அதட்டியும் அன்புமாய் அனுசரித்திருக்கிறாய்.பிரமித்த பாதை வழி என் விரல் பிடித்து கூட்டிப்போகுபோதெல்லாம் அன்பின் கடவுளோடு நடப்பதாய் மறுப்புச் சொல்லாமலே நடந்திருக்கிறேன்.பள்ளமும் குழிகளும் அறிந்து வைத்திருக்கும் அதிசயக் கடவுளாய் இருக்கிறாய் எப்போதும் எனக்குள் நீ.

இனி நீ என் வாழ்வில் இல்லையென்றாலும் தூரத்துக் கடவுளாய் என்னைக் காத்துக்கொள்வாய் என்கிற நம்பிக்கை இன்னும்.என்னால் முடியவில்லை. வந்துவிடு.பிரிவையும் இழப்புக்களையும் பழகிய இதயத்தோடு பழகியதால்....தெரிந்துதான் விலகினாயோ.கிராதகா.....
கவலைப்படாதே.
நான் செத்துக்கொண்டேயிருக்கிறேன்.ஆனாலும் உயிர் தொலைத்து அலையும் உன் பிசாசாய் நான்.உனக்கான என் கவிதைகளையும் கவனித்துக்கொள்.என்.....உன் சுவாச எண்ணங்களாய் அவைகள்.

அன்பு அப்படியேதான் மாறாமல்.முத்தங்களின் ஈரத்துக்காகவே காத்திருக்கும் தகிக்கும் உதடுகளும் அப்படியேதான்.நீ மட்டும்தான் இன்று தவறவிடப்பட்ட பொருளாய். கண்டுகொள்வேன் ஆனால் என்னது என்று சொல்லிக்கொள்ளமுடியாத ஒரு இடமாய்க்கூட இருக்கலாம் அது!!!

குற்றம் சொல்ல முடியாத
உன் அன்பை
சுவிஸின் உயர்ந்த யுங்(F)ரௌ மலைகளில்
செதுக்கி வைத்திருக்கிறேன்.
காதுக்குள் பாடிய பாடல்களை
பனிமுடிய
முளைக்கும் முதல் புல்லின் துளிரிலும்
அப்பிள் மரங்களும் அடியிலும்
பியர்ஸ் மரங்களின் முதல் பிஞ்சிலும்
உன் பெயர் செதுக்கிய
காதலர்தின ஞாபகங்கள்.

கறுப்புக்கடலின் முகத்திலும்
ஆயிரமாயிரம் கேள்விகள்.
கோடிட்ட இடமும் நிரம்பாது
கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது.
அந்த இடங்களில்
வெறும் புன்னகைப் பூக்களை மட்டுமே
நட்டு வைக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

எவரும் விரும்பாத பூக்களையே நடுவேன்
பறிக்கும் ஆசை வராத பூக்கள்
எனக்குமானது மட்டுமாய்.
பனியில் கருகிய பூக்களைக்கூட
பொத்திப் பாதுகாத்து
பனியுடுத்திய
வெள்ளைமரங்களுக்கு நடுவில்
நானும் வெள்ளைச்சேலை
உடுத்தத் தொடங்குவேன்
இனி உன் அன்போடு!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, February 14, 2010

2010 காதலர் தினத்தில்...

இந்தக் காதலர் தினத்திலும்
பனிப்போருக்குள் குளிர் தணிய
வெப்பமூட்டியபடி
தனித்த தீவுகளில்தான் நாம்.

திடீரென உன் வாசம்
குளிர்ந்த காற்று
சுமந்து வந்திருக்கிறது.

தற்சமயம் நான் கூட
உன் அறையில்
உன் மடியில் இருக்கலாம்.
கதவுடைத்து
என்னைத் தொடும் காற்று
உன்னைத் தொட்ட காற்றாயும்
இருக்கலாம்.

பொழுது கழிய அலுவல்கள் ஆயிரம்.
ஆனாலும்
தூக்கத்திலும்
என் நினைவுகளோடு
நகரும் உன் நிமிடங்கள் போலவே
என்னுடைய நொடிகளும்.

திகதியிடப்படாத எல்லையில்லா
பாவிப்பின் பெறுமதியோடு
தேங்கிக் கிடக்கிறது
உனக்கான அன்பும்
முத்த முத்துக்களும்.
சீக்கிரம் வா
திணறும் பாரம் இறக்கு.

ஓ...
உன்னை எண்ணிய இரவும்
துயில் கலைந்து
விடியலுக்கு
காதலர்தின வாழ்த்துச் சொல்லி
முத்தாடுகிறது.

நான் இன்னும் உன் அணைப்பில்தான்.
கொஞ்சம் விடேன் என்னை.
இனியேனும்
கொஞ்சம் தூங்கலாம் நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, February 14, 2009

கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...

Valentines

கால் நொடிந்த காத்திருப்புக்கள்
க(கா)த்திருப்புக்களாய் குந்தியபடி.
ஆற்றாமைகள் ஆமையாய்
கைகளையும் கால்களையும்
முடக்கிக்கொண்டு.
கோபமும் சோகமும் சந்தோஷமும்
ஒன்றையொன்று முறைத்தபடி.


உன் பார்வைப் புகையால்
கண்களுக்குள் காளான் விதைகள்.
என்னதான் நினைக்கிறாய் நீ?
நீயேதான் என்கிறாய்
வந்தாலோ...
முள்வேலி போட்டல்லவா
பொத்திப் பாதுகாகிறாய்
இதழை.
காலங்களும் கேலி செய்ய
காத்திருக்கிறேன் பார்
உன் உதட்டோரம்.
நீ என் பெயர் சொல்வதும் இல்லை.
என்னை நெருங்க விடுவதும் இல்லை.
முகத்தில்
நெருஞ்சி முள் வளர்த்து
நெருக்கம் குறைக்கும் கிராதகன் நீ.
இங்கே பார்...
ஒற்றை நரைகூட
எட்டிப் பார்த்து நகைக்கிறது.


மெழுகு தோய்த்த உன் முத்தங்களில்
எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை.
பேசிக்கொள்கிறார்கள்
எங்கள் ஊரின் A9 பாதைகூட
திறப்பதற்கு ஆயத்தமாம்.
உன் பாதை திறக்க
தவமல்லவா இருக்கிறேன்.
கொஞ்சம் திறந்துதான் விடேன்
இந்தக் காதலர் தினத்திலாவது.
நீ என்ன இலங்கை இராணுவம் போல
முத்தக் காவலனா
இல்லை என் காதலனா.


பொறுமை எருமையாய் மாறும்.
முள்வேலி பிய்த்து எறியும்.
நீ ஒரு நாள் தூங்கும் காலம்
என் கத்தரி தூங்காது.
வேலி வெட்டித் தறிக்கும்
மீட்டு எடுப்பேன்
என் முத்தத்தை நானே!!!


                                        மீசைக் காதலன்...
மலர்கள் மகரந்த மடல் கீறிக்
காத்திருக்கின்றன
சூரியனின் முத்ததிற்காய்.
மண்ணும் காத்திருக்கிறது
மழை முத்தத்திற்காய்.
இரவின் முத்ததிற்காய்
பனித்துளி காத்திருக்க
நான் தனிமையின் ஒரு ஓரமாய்.


என் ஊரில்
திருவிழாக்காலமும்
இல்லை இப்போ.
தொலைந்தாலாவது தேடி எடுத்து
துளி முத்தம் தருவாய்.


காற்று நிரவிய பலூனாய் பார்
உன்னைச் சுற்றியே என் பறப்பு.
பைரவக் கடவுளின் நாய்போல
காவலுக்கு
மீசை வளர்த்த பைரவன் நீ.
வெட்கம்,சிணுங்கல்,ஊடல்,கூடல்
அணைப்பு,ஆதரவு
ஆசையாய் இல்லையா அறிய .
காதலே கடவுளாய் கதை நான் எழுத
நீயோ
முற்றும் துறக்கும் முனிவன்
கதைக்குள் மூழ்கியபடி.


முத்தப்போர் முடிக்க
ஆயுதம் களைந்து வா.
காலியாய் விடு கொஞ்சம்.
இதழ் சுற்றி
இதமாய் ஒரு வேலி அமை.


காத்திருந்து...காத்திருந்த
அலுத்த எனக்கு
கன்னத்தில் ஒரு முத்தம்
கயவனடா நீ.
கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க
கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம்.
மீசை குத்தாமல்
இந்தக் காதலர் தினத்திலாவது!!!


ஹேமா(சுவிஸ்)

Thursday, February 14, 2008

மீண்டும் ஒரு காதலர் தினம்...


வாழ்வு முழுதும்
காதல்...
வியாபித்திருந்தாலும்
காதலர் தினத்தன்று
அந்த...
ஒற்றை றோஜாவுக்குள்
அத்தனை அன்பையும்
திணித்துக்கொண்டு
மிக அழகாய்
மீண்டும் ஒரு
காதலர் தினம்.
எத்தனை காதலர் தினங்கள்
நீ என்னிடம் வந்த பிறகு.
எட்டவே இருந்தாலும்
என்னை
உனக்குள் பூட்டிக்கொண்டு
சாவியைக் கூட
தர மறுத்தபடி.
என்னை
நான் நேசிப்பதை விட
நீதான்
என்னை நேசிக்கிறாய்
முழுமையாக.
யாரையுமே காணவில்லை
உன்னப்போல.
உன்னோடு யாத்திரையும்
தொடர்கிறது வருடங்களோடு.
கொஞ்சம் அழுவேன்
பொறுத்துக்கொள்.
புரட்டிப் புரட்டிப்
புடம் போட்டுப்
பதம் பார்க்கிறது
வாழ்க்கை என்னை.
கடும் புயலின் வேகத்திற்கும்
சுனாமியின் கோபத்திற்கும்
ஈடுகொடுக்கும்
பக்குவத்தோடு நான்.
அடுத்து என்ன...
அடுத்து என்ன...
கேள்வியின் கைகளுக்குள்
என் வாழ்வு.
இதற்குள் ஏன்
அநியாயமாய் நீ.
வாழ்வின் வழியில்
வழியோடு நிழலாய்
ஒளி விடும் நிலவு கூட
சிலசமயம்
அண்ணாந்து பார்க்கையில்
காறித்துப்புவதாய்.
நேராக நடக்கையில் சமூகம்
அண்ணாந்து பார்க்கையில் நிலவு
நடக்கக் கூட
மனதில் திடமற்று
நாதியற்று
நடக்கும் ஜடத்திடம்
ஏன்... எதற்கு
இப்படியொரு காதல்!!!!

ஹேமா(சுவிஸ்)14.02.2008