*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, December 31, 2009

2010...ஈழம்

நீ
நான்
போட்டி
பொறாமை
காட்டிக்கொடுப்பு
கட்சி
ஏற்றம்
தாழ்வு
அடிமைத்தனம்
மாற்றமில்லா பூமியில்
ஆண்டின் மாற்றமும்
அதன் வேகமும்
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்றபடி
வந்தும் போய்க்கொண்டும்தான்.

இதைவிடப்
போர்
நோய்
இயற்கை என
அழிப்புக்களும் இடைக்கிடை.
வருந்தாத வருஷம் மாறியபடிதான்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
பசி வறுமையோடு
இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தீபாவளி புத்தாண்டு என்றில்லாமல்
நித்தம்
சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று
திடமாயிருக்கிறேன்.

"உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்"
என்று
எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

என் இனிய நண்பர்களுக்கு மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Monday, December 28, 2009

ஏன் அழைத்தாய்...

நீ என்னை அழைத்த வேளையில்
தொலையும் என்னை
இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.

கம்பீரமாய் மயக்கினாலும்
அன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி
வயலின் இசைத்த நிகழ்வொன்றை
வந்து கலைத்தது உன் குரல்.

மண்ணின் பசளைக்காகவே
பயிரிடப்படுவது போலானது
என் மண்ணில் பலர் வாழ்வு.

இப்போதும் நக இடுக்குகளில்
வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
அப்படியேதான்.
உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
என் இறப்பு இன்றைய நாளிலேயே.

சொல்லிகொள்ளாமலே வருகிறது
என் அறைக்குள்
இரவும் பகலும்
சந்திரனும் சூரியனும்
பெயர் தெரியாத பூவின் வாசனையும்
உன் சுவாசம் கலந்த
சிகரெட்டின் வாசனையும் கூட.

சமயம் கிடைக்கும்போது வா
என்னோடு நீயும் காண !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, December 26, 2009

முடியாத இரவொன்றில்...


மாட்டிய கயிற்றின் இடைவெளியில்
என் இறுதி மூச்சு.
அதுக்கும் எனக்குமான தூரம்
ஒன்றும் அதிகமில்லை.

முரண்பாடுகளோடுதான்
நேற்றைய கனவும்.
வாதாடிய முகம் நெருக்கமானதாய்
என் கையைப் பிடித்தே
என் குரல்வளை நெரித்தபடி அது.

முன்னைய இரவுகளிலும்
கனவுகள் கலைத்து
நானே என் கனவைக்
கலைத்துக்கொண்டதாய்
குற்றம் சுமத்தியுமிருக்கிறது.

வண்டாய் என் மகிழ்ச்சி குடைந்து
மண்ணுக்குள் புதைத்து,
சிரிப்பைப் பறித்து
திரும்பவும் எனக்கே
சில்லறைக்கு விற்பனை செய்து
சித்திரவதை செய்யும் சனியன் அது.

காற்றுப் புகவும்
கவிதை எழுதவும் கதவடைத்து,
அணிலும் குயிலும் கடித்த மாங்காயை
பறித்துண்ணவும் பழகியிருக்கிறது.

மனம் முட்டி எழுத நினைக்கையில்
எழுதுகோல் ஒழித்து,
கூரை தட்டி மழை தரும் கவிதை
தடுக்கும் பிசாசு.
இனியும்....
நான் இருக்கப் போவதில்லை இதனோடு.

தடுக்கமாட்டீர்கள்
நீங்கள் யாரும் என்னை.
ஏனென்றால்
நீங்களும் கூட்டுத்தானே அதனோடு.

யாரோ ஒரு கை என் கயிறறுத்து
சொல்லட்டும் நாங்களில்லை
அது உன்னோடு உறங்கும்
தாழ்வான எண்ணமென்று.
தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
ஐயோ பாவமென
அதுவும் எனக்குத் தெரியும் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 22, 2009

சொல்வதற்கில்லை...

சொல்வதற்கில்லை...
எங்கு சரி....யார் தப்பு.
அழிவு அழிவு...
முற்றுப்பெறாத முடிவிலியாய் வாழ்வு.
நிமிடங்கள் கூட நிச்சயமற்றதாய்.
அக்கிரமங்கள் ஆக்கிரமிக்க
இயற்கையின் அகோர தாண்டவம்.
தானே உண்டாக்கிய கர்வத்தில்
உயிர்களின் உயிரோடு விளையாடியபடி.

ஏப்பமாய் பிரசவிக்கிறது
ஆயிரமாய்...இலட்சமாய்
உயிரகளை விழுங்கிய இயற்கை.
கடலாய்...மண்சரிவாய்...வெள்ளமாய்...
புயலாய்...தீயாய்...நோயாய்...
பட்டினியாய்...போராயும் கூட.
வானம் தவறிய பெய்கையால் விவசாய அழிவு.
உயரும் வாழ்க்கைச் செலவு.

மனிதன் வாழ்வும் வளமும்
இயற்கையின்றிச் சாத்தியமில்லை.
வாரி வழங்கும் இயற்கையே
எரிச்சலோடு போர் அரக்கனாய்.
தன்னையே பரீட்சிக்கும் மனிதனுக்கு
எதிராய்...
தானும் ஆயுதம் தூக்குகிறதோ!

உலகம் எங்கும்
கூச்சல்...அவலம்...
கூக்குரல்...இரத்தம்...இறப்பு
என்னதான் நடக்கிறது?
யாரை...எவரை...எதை
நினைத்தாலும் மனம் சங்கடமாய்.

இதில் எப்படி...
எம் வெற்றி கொண்டாட?
இதுவரை தமிழன்...
வென்றதும் பெரும் வெற்றிதான்.
இனியும் வெற்றி மேல் வெற்றிதானே!
முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!
தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.
சொல்வதற்கு இல்லை...
இனி என்னதான் நடக்கும்!!!
எதுவும் ஆகும்!!!

[மீள்பதிவு]
ஹேமா(சுவிஸ்)

Thursday, December 17, 2009

மாற்றங்கள்...

எப்போதாவது நான் கடக்கும்
ஒரு தெரு
ஒரு வீடு
ஒரு தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் ஒரு பூனை
குருவிக்கென தொங்கும் உணவு
சிவப்புக் கார் ஒன்று.

இன்று...
"நல்வரவு ஜஸ்மின்"
கதவில் பெரிதாய் எழுதிய வாசகம்.

ஓ....
நீண்ட நாள் காதலர்கள்
கல்யாணம் எப்போ நடந்து
குழந்தை பெற்றிருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்
கடந்து செல்கிறேன்.

பின்னொரு நாளில்
மீண்டும் அதே தெரு
அதே வீடு
அதே தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் அதே பூனை
குருவிக்கென தொங்கும் உணவு.

இவற்றோடு
புதிதாய் சாய்த்தி வைக்கப்பட்ட
சின்னச் சைக்கிள்
விளையாட்டுக் கார்.

ஓ... குழந்தை வளர்ந்திருக்கிறாள்.
அம்மாவின் கைபிடித்து
அப்பாவின் மடியில்
ஜஸ்மின்
அழகாய்ச் சிரிக்கிறாள்

இன்னொரு ஆறு மாதமிருக்கும்
பாதை மாறியதாவும் இல்லை
மறதியும் எனக்கில்லை.

அதேவீடு
அதே தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் அதே பூனை
குருவிக்கென தொங்கும் உணவு.

காரின் நிறம் மாறியிருக்கிறது.
தோட்டத்தில் இருக்கும்
அப்பா மாறியிருக்கிறார்.
அதே அம்மாவின்
விரல் பிடித்து
விளையாடுகிறாள் ஜஸ்மின்.

எப்போ புரிந்து தேடுவாள்
தன் அப்பாவை !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 11, 2009

தொட்டுச் சென்றது ஒரு குடை...

விநாடிதான்
குடையென நிழல் தந்து
சட்டெனெ
மறைந்த அதிசயமாய் அது.

சுருங்கிய கணங்களுக்குள்
கண் மடல் தீண்டி
புன்னகைக்கும்
சின்னத் தென்றலின் தழுவலாய்.

மேகமாய் முட்டிய
சின்னக்குடையால்
சிந்திய துளியில்
நனைந்தே போனது
நமைத்த இதழொன்று.

சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொட்டு....விட்டு
சுகம் தந்து....விட்டு
நிமிடத்தில் கடந்த விதம்.

காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட
மல்லுக்கட்டிய தடுமாற்றம்
தூவுகின்ற மழைத்துளிக்கும்.

மெல்ல மௌனம் கலைக்க
மூச்சிளைத்து முகில் பாட
களையாமல் கரைகிறது
களைப்பும் வியர்வையும்.

தோய்த்து உலர்த்திய துணிகள்
காய்ந்து விறைக்க
அடுத்த குடையாய்
வரும் வரை
வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, December 06, 2009

நே[கா]ற்று முத்தம்...

என் கண்ணுக்குள் நீயாய்
நெஞ்சுக்குள் நிறைவாய்.

இன்னும் இன்னும்
கன்னம் இனிக்க
நீ...
காற்றலையில் தந்த
உன் முதல் முத்தத்தை
பெற்றவளாய் ரசித்தபடி.

இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.

ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.

பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!

முத்த மயக்கத்தோடு
ஹேமா(சுவிஸ்)

Thursday, December 03, 2009

பதியம்...

துடைத்தெடுத்த வீதிகளும்
வெள்ளை மரங்களும்
நாட்டுப்பற்றுள்ள மனிதர்களுமாய்.

வெளுத்த உலகத்தில்
அழுதபடி அக்குழந்தை.
குளிரூட்டப்பட்ட சாலையில்
யார் குரலுக்கும் சாயாமல்
மிரட்சியோடு என் பக்கமாய்.

தன் வீட்டு மரங்களை
பிடுங்கி வந்து
சட்டிக்குள் முளைக்க வைத்த
சாமர்த்தியம் இவர்களுக்கெப்படி !

திருடன் இல்லா உலகத்தில்
மூடிய கதவுகள்.
நாளைய நாட்களில் பயமில்லை.
உறவுகள் தேவைப்படாத
வாழ்வுக் கோப்புக்கள்.

இத்தனை இருந்தும்
விம்மல் விலக்கி என்னை
அழுத கண்ணீரோடு
எப்போதும்
சிநேகித்த கை நீட்டலோடு
கிட்ட வரும் பிஞ்சுக் கால்கள்.

ஏன் ?
ஏன் ?
ஏன் ?

நடு வீட்டுக்குள் முனகும்
நாய்களும் பூனைக்குட்டிகள்.
அன்பு காட்டினாலும்
பழக்கமில்லாத வெளுத்த முகங்கள்
அடங்கிக் கிடக்கும் தெருக்கள்.

ஒன்ற மனமின்றி
ஓவென்று அலறிய பிஞ்சுக் குரல்
என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.

பூத்திட முடியாக் கிளையொன்றைப்
பதியமிட்ட சங்கதி.
ஆபிரிக்காவில் தத்தெடுத்த
கறுப்பு மரக்கிளையொன்று அது.
ஒட்டி ஆறியபடி என்மீது
தன் உறவுகளின் நினைவோடு.

ஏனென்றால் நானும் கறுப்பு !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 27, 2009

தோழா நீ எங்கே...

தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ
எங்கே நீ !

கொஞ்ச நாட்களாக நீயின்றி
பரிதவித்து நீரின்றி வறண்டு
வரப்புகளில் ஆடும் மாடுமாய்
நத்தைககளும் ஊர
களைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கிறோம்
தோழா எங்கே நீ!

என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே !

என்றாலும் தீராத வெறியோடு
எமக்கான பாதைகளைச் சீர் திருத்தி
இடைவெளிகளை நிரப்பிச் செப்பனிட்டு
ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !

முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

அந்தரத்தில் எம்மை விட்டு
பலியாடாய் ஆக்கிவிட்டு
போதுமடா சாமி என்று போவாய்
கனவிலும் பறைந்திருக்க மாட்டோமே.
தமிழீழம் தாங்கி நின்று
வழி காட்டி பாதை வெட்டி
வீரனாய் விழித்திருந்த தோழா எங்கே நீ!

வாராயோ ஒரு நிமிடம்
உன் குரல் தாராயோ ஒரு முறை
எமக்கான சேவகனே...
சென்ற இடம் சொல்லாமல் போனதேன்
இல்லை என்று தெரிந்தபின்னும்
இன்னும் தேறாத மனதோடு
தோழனே காத்திருக்கிறோம்
எங்கே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 24, 2009

பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்

இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.

தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.

தமிழ்த் தாயின் செல்ல மகன்
உணர்வை உழுதுகொண்டவன்
படுக்கைப் பாயைத்
தானும் சுவீகரித்த புன்னகையோடு.

அவன் முகமும் பால் மணமும்
தும்பியோடு
வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
சிந்திய சிரிப்போடு
மலர் கொய்யும் என் தலையில்
அவன் கரங்கள்
வீரப் புண்களின் வடுக்களோடு.

வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
பிரபஞ்ச முட்டைக்குள்
என்னோடு தஞ்சம் கேட்டுத்
தானும் கம்பீரமாய்.

அழகே இன்னும் ஒருமுறை
பலமுறை
என் கண்ணுக்குள்
என் நெஞ்சுக்குள்
நான் படுக்கும் பாயில்
என் பூமியில்
பூத்தபடியே இரு.

நானும்...
தமிழ்ப்பறவைகளின்
வார்த்தைகளில்
வாழ்த்துக்கள் சேகரித்து
பாடியபடியே
சரிவேன் உன் மடியில் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 20, 2009

கேட்பாரற்ற பொழுதுகளில்...

சில கதவுகள் வேண்டுமென்றே
மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.

தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.

கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.

விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.

சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.

பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!

"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 18, 2009

இழப்புக்களின் வரிசையில்...

நீ....
அன்றைய தினத்தில்தான்
உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!
காதலிப்பதாகவும் சொல்லிவிட்டாய்.

அதே ஆவேசம்
பயமாய்
கௌரவமாய்
அம்மா முகம் நிழலாட
பிரிந்தும் விட்டாய்.

எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளும்புகிறது பார்.

உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய் சென்றாய்.
பெரியதொரு பெருமூச்சோடு
நிம்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.

மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, November 14, 2009

பழுத்தல் இலை...

புதிய தளிர்கள் பூப்படைய
பழுத்தல் இலையாய்.
தாங்கிய காம்பு தளர்ந்து உலர
இறுக்கிப் பற்றிய
என் தாய் கரம் தவற விட
வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய் நான்.

தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.

வாகன நெரிசலுக்குள்
வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !
வெப்பக் கற்கள் கோர்த்து
கொத்தனார்கள் கூடிக் கட்டிய
கட்டிடக் காடுகளின் நடுவிலா !
ஈக்களும் கொசுக்களும்
கொஞ்சி கதை பேசி விளையாடும்
குப்பைகள் சேரும் கும்பலிலா !
கரையோடும் தரையோடும்
உரசி நெளிந்து ஓரத்துப் புற்களோடும்
முந்தியோடும் மீன்களோடும்
போட்டி போடும் ஓடுகின்ற தண்ணீரிலா !
மனிதனின் உணவுக்காய்
மேய்கின்ற மாடுகளின் உணவுக் கூடத்திலா !
காடும் மலையும் காதலிக்க
வானம் பார்த்துக் கூச்சம் கொள்ளும்
கானகக் கரைகளிலா !
இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற
ஓவியப் புத்தகத்திலா !

காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

வானம் வெளித்த பின்னும்...

அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்.

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில் அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
இன்னொன்றின் மேல் படர்ந்ததா?

ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய் !!!

"வானம் வெளித்த பின்னும்"முகப்புக்காய்
ஆர்வத்தோடு ஆக்கம் இணையத் தோழி கலா.

அவருக்கென்று தளம் இன்னும் இல்லை.என்றாலும் சிங்கையிலிருந்து எப்போதும் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தும் ஒரு குரல்.அவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இப்பதிவு அன்போடு அவருக்காக.கலா உங்கள் அன்பிற்கு என்னால் இப்போதைக்கு என் அன்பாக !!!

என்னோடு சேர்ந்து நீங்களும் என் தோழியை
வாழ்த்துங்கள் தோழர்களே.


தூரத்துத் தோழி கலாவின் கைகள் பற்றிய வெப்பத்தோடு
ஹேமா(சுவிஸ்)

Monday, November 09, 2009

காதலுக்கு விலையில்லை...

முத்திரை இல்லை
முதலில்.
முகவரி இல்லை !
முன்னுரை இல்லை !
முன்பின் தெரியவில்லை !
என்...
கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!

பிரியமுடன் வசந்த் கவிதையில்
பிரிந்த கவிதை.

ஹேமா(சுவிஸ்)

Friday, November 06, 2009

வெட்கச்சிறை...

பூ போல...
பனித்தூவல் போல...
தூவானம் போல...
யாழின் இசை போல...
அணிலின் கொஞ்சல் போல...
அந்தி வானம் போல...
வேப்பம்பூ மணம் போல...
இன்னும்
போல போல...
உன் வெட்கம்.

ஐயோ...
உன்னையே தின்று தொலைக்கும் அது
அப்போதுதான்
பறக்கப பழகும் பட்டாம்பூச்சிக் கூட்டமாய்
எத்தனை வர்ணங்களில்
குழைத்தெடுக்கிறாய் உன் வெட்கத்தை
கன்னக் குவளைக்குள்
ஒவ்வொரு வெட்கமும்
ஒவ்வொரு சொட்டுக் கவிதையாய்.

நான் கேட்க
நீ மறுக்க
தரத் தயங்கி
பின் உன்னைத் தயார்ப்படுத்த !
ம்ம்ம்...

மகரந்தம் தொடும் கரமாய் நான்
வெட்க நிறங்களாய் நீ
உன் வெட்கம் தொட்டுப் பார்க்க
வெறும் வண்ணப் பொடி மட்டுமே
ஒட்டி முகம் மறைக்கிறாய்.

போடா...
உன் (ஆண்) வெட்கம் என்ன
பிறர்காணா
புது மொட்டின் மலர்வோ !
பார்க்கவும்
பறிக்கவும் கடினமாய்.

ப்ரியமானவனே...
உன் வெட்கச் சிறைவிட்டு
சுலபமாய் வெளிவர
ரகசியம் ஒன்று சொல்லவா
என் இதழ் தொட்டு
முத்த ஒப்பமிடு!!!

வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 03, 2009

எனக்குண்டான நிலத்துண்டு...

பருந்துகள் அலறிச் சுழலும்
சம​வெளிக்கு வந்தாலும்
பாதாளம் பார்க்கப் பயந்து
கால்கூசும் உயரத்தில்
வேறெங்கோ விரைகிறேன்.

எனக்கான நிலத்துண்டு
ஒரு அல்கெமிஸ்டின் குடுவைக்குள்
நீர்மமாக நிறைந்திருக்கிறது
கவிழ்க்கவியலா மர்மத்தைத் துக்கித்து
மீண்டு கடுகிப் பறக்கிறேன்.

பழைய பீடபூமியின் செவ்விந்தியன்
அழுகும் பிணங்களின் பித்ருக்களுக்கு
இயற்றிய பாடலுக்குள்
இளைப்பாறப் பார்த்தாலும்,
இறந்தவர்களின் கனவு மிச்சங்க​ளை
மொழி​பெயர்க்கப் பயந்து
மீண்டும்
புலம் பெயர்ந்தேன்.

பேராழிகள்
தோட்டங்கள் ​
மெக்பத் நாடக அரங்கின் திரைசீலை
மனிதர்களின் ஆறாம் விரல்கள்
கிதாரின் நரம்பு அறுந்த இசை
பறந்து கொண்டேயிருக்கும்
ஹீலியம் பலூன்கள்
எங்கும் இல்லை
எனக்குண்டான வாழ்நிலம்.

உடன்பாடு கொண்ட உறவுகளின்
அணுக்கத்தின் இருள்மையில்
மீண்டும் மீண்டும் ஏமாந்து
இருளின் திணறலிருந்து விடுபட்டு
நிலவொளிக்கு வந்து
கூந்தல் உதறி முடிந்து கொண்டேன்
மிக மிக ஆசுவாசமாய்.

கதவு திறக்கும் அக்ஸெஸ் கார்டு சாவிகள்
வாய்ஸ் மெயிலில் கேட்ட ஏலியன் அழுகுரல்
பாம்பின் வாசம் வீசம் என் ஆடைகள்
இரண்டாவது தற்கொலைக் கடிதம்
தனியே அழுது நடந்த இரவின் தெருக்கள்...
எங்கும் எங்கும் எங்குமே
எனக்குண்டான
ஏமாற்றத்தின் முகவரிகள் மட்டும்
கிழிந்து தொங்குகின்றன.

இறுதி நடவடிக்கையாய்
ஒரு கைவிடப்பட்ட தெய்வம்
கனவொன்று கண்டது.
கனவின் மொழிபெயர்ப்பில்
என் நிலமுகவரி தெரிந்தது
அது.....
கணணியின் விசைப்பலகையில் என்று !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 31, 2009

இருளும் ஒளியும்...

புத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.

அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.

ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.

அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.

வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.

எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 27, 2009

புதிதாய் ஒரு பூ...

நொந்த தருணங்கள் நொடிந்து விழ
எண்ணச் சிலந்திகளை கடித்துப் துப்ப
அந்தகார அரூபங்களாய் எரி பூச்சிகள்.

பகலவனுக்குப் போட்டியாய் எரிக்க
என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.
தீயின் அகோரம்
என் பசப்புச் சிரிப்பை
அம்பலப் படுத்தி
எரித்துக்கொண்டே விரட்டுகிறது.

கோடை விடைதர
வாடைக் காற்றில்
பூமி மஞசள் நிறத்தில்
நாகரீக உடையோடு.
எனக்குப் பிடிக்காவிட்டாலும்
அரிதாரம் இட்டுக்கொள்கிறேன்
அடையாளம் காட்ட.
வேற்று நிறங்களை பூமி ஏற்றுக்கொள்ள
வேறுபட முடியாமல்
ஒத்துழைத்துத் திரும்புகையில்
வாழ்வின் உண்மைகளில் ஒரு வெறுமை.

பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.

நான்கு சுவர்களுக்குள் பயணித்த உணர்வு
மொழி கடந்து தூரம் கடந்து
பதிலில்லாக் கேள்விகளோடு
நெடும் பாதையில் விரைகிறது.
பாதைகள் திசை சிதறிப் போனதா.
இல்லை...
என் உணர்வுகள் கலைந்து போனதா.

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 22, 2009

சேமித்த கணங்களில்...


ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !

என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

தடுமாறும் மனதின்
தகறாறு நீ.
எங்கே என் காதலைப்
பார்த்து விடுவாயோ
பயத்திலே மறைக்கிறேன்
என் கண்களை !

மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திருக்கின்றன.
நீ...
விட்டுப் போன
வார்த்தைகளோடு !

நகர மறுக்கிறது
நிமிடங்களும் நொடிகளும்.
நீ வரும் வரை
என்னோடு விரதமாம் அவைகளும்.
வந்துவிடு !

நீ ...
தராமலேயே போனாயோ
தந்து வராமல் போனதோ
உன் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கவே இல்லை !

சுற்றிச் சுழன்று
திரும்பியும் விழுகிறேன்
உன் நினைவுக் குழிக்குள்.
என் புதைகுழியாகவும்
அமையலாம் அது !

கூட்டுக்குள்ளும் அடைத்து
கதவையும்
திறந்து விட்டிருக்கிறாய்.
உன்னைத் தாண்ட முடியாத
சுதந்திரம்.
எனக்கு ஏன் !

நனைந்த தலயணையை
உலர்த்தி எடுத்துப்
பரவி விடுகிறேன்
படுக்கை முழுதும் நீ.
கைகளோடு
இறுக்கிக்கொள் என்கிறேன்.
மறுபடியும்
உயிர்த்தெழுந்து
மடி சாய்த்துக்கொள்கிறாய்
உணர்வோடு !

உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன்னால்
மட்டுமே முடியும்.
உயிர்ப்பித்தாய்
உயிரையும் எடுக்கிறாய்.
பத்து நாள்தானே
பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
கல்லாய்த்தான் இருந்தேன்
கரைத்தது உன் அன்பு.

கண்ணீரின் சாரல் எங்கும்
அன்பே...போய்விடு
யாரும் பார்க்கமுன் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 19, 2009

நேற்றைய இரவில்...

வெள்ளைத் தெருவில் குடியிருப்பு
பலகாலமாய்.
குடிசையும் கூடும்
வாழ்வும் நிரந்தரமாயிற்று.

மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு.

மரபணு கொல்லாமல்
தொடரும் நகர்வில்
இன்னும்
இரையூட்டி...இரையூட்டி
வளர்ந்த ஒரு மிருகம்.

காயசித்திக் காரகன்.
காரடை தின்றாயா
காராம்பசுவில்
பால் கறந்தாயா என்கிறது
பிந்திய இரவில்
செய்மதி துளைத்து.

காரணம் சொல்லாத கோடாங்கி.
இயல் இனம் மாறாத கார்க்கோடகன்.
இல்லையேல்
கேசவாரிப் பறவையாயும் இருக்கலாம் !!!

இகழ்தலுக்காட்பட்டு (நன்றி நேசன்)

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 17, 2009

தீபத்திருநாள் ஈழத்தில்...

Orkut Scraps - Butterfly
தமிழன்னை தவமிருக்கிறாள்.
நொந்திருக்கிறாள்.
அவதி அவளுக்கு
வேதியல் மாற்றங்களாலும்.
தன் குழந்தைகளின் இழவுகளுக்கு
அழுதழுது கண்களிலும் புண்.
உயிர்கசிந்து
ஊண் உருகிக் கிடக்கிறாள்.
கனத்த பாரம்
கைகளிலும் தோள்களிலும்.
பாவம் கொஞ்சம் தூங்கட்டும்.

உற்சாகமாய் பசுமையாய் எழுவாள்
இயற்கை அன்னை உயிர்ப்பிக்க.
மலைகளைச் சுருட்டி வைத்து
புயலின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.

அண்டம் விரிப்பாள்.
அவனியெங்கும்
மகப்பேறுகள்.
சூல்கொள்வாள் தானும்.
வண்ண வண்ணமாய்
வண்ணத்துப் பூச்சிகள் படைத்து
கலயம் கலயமாய்
கருமுட்டைகள் கொடுத்து
மயிர்கொட்டிப் புழுக்களால்
என் தேசம் நிறைப்பாள்.
தானும் பத்தியம் இருந்து
பேறுகாலம்
பார்த்துக் காப்பாள் அவளே.

முட்டைகள் வெடித்து விழும்
மயிர்கொட்டியாய்.
இன்னும் இனம் வளர்ப்பாள்
மீண்டும் கூடுகட்ட
இருள் விலகும்.

வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!!

என் இனிய நண்பர்களுக்கு
என் மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 13, 2009

முடியாத அவகாசங்கள்...

சிரிக்கச் சிரிக்க
கவிதை ஒன்று எழுதலாமென்று
விறுவிறென்று
சிவப்பு விளக்கில் கூட
நிற்காமல் நடக்கிறேன்.

தபால் பெட்டியில் அபாய அறிவிப்புக்கள்.
பூட்டிய கதவைத் திறக்கும்போதே
தனிமை முட்டித் தள்ள
தொலைக்காட்சி திருப்புகையில்
"முகாம்களிலும் பட்டினிச்சாவு".
தொலபேசி அலற
பிறந்த தேசத்து அகதிகளுக்கான பணத்திரட்டல்.
வெதுப்பகத்து ஏதோ திரள் ஒன்று
பசி போக்கக் குளிர்ந்து கிடக்க
ஒரு மிடர் தண்ணீரால் தொண்டை நனைத்து

இணையம் திறந்தால்
இறப்பு
அழிவு
அலட்சியம்
அநியாயம்.

இயலாமை வர்ணங்களால்
சிலவரிகள் கிறுக்கத் தொடங்குகிறேன்.
சிவப்பு
பச்சை
நீலம்
கறுப்பு என
கண்ணீரில் கரைந்து
என்னை மாற்றுகின்றன வர்ணக் குழைவுகள்.

காதலைத் தேடினேன்
அங்கும் காத்திருப்பு
சந்தோஷம்
சிரிப்பு
தோல்வி
அழுகை
முற்றும்.

மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.

சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 11, 2009

முகமூடிக் காதல்...

இப்போ எல்லாம்
அடிக்கடி
உன் மடியில்
விட்டுச் சென்ற
பறவையின் இறகாய்
பசிக்கு ஏங்கும் ஒரு சிறு பாலகனாய்
ஏதோ ஒரு வளர்ப்புப் பிராணியாய்
உன்னோடு அணைந்தபடி
பால் சுரக்காத் தாயாய் நீயும்.

நிழல்தரும் இலைகள்போல
நீயும் சருகாவாய் ஒரு பொழுதில்
அன்று முடிவில்லாச் சூரியன்
சுட்டெரிப்பான்
விட்டும் போவான்
இன்றைய நிழலில்
நாளை நீறான சாம்பலாய் நான்.

அனிச்ச இதழைவிட
உன் அன்பு இதம்
மூச்சுக்காற்றின் வெப்பம்
ஒரு யுகத்தின் இனிய தாம்பத்யம்
மழைத் தூறலிலும் வானின் கீறலிலும்
வானவில்லாய் நீ
எந்த நேரத்திலும்
சுவடே இல்லாமல் 

அழிந்தும்விடலாம்.

காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்
அத்தனையிலுமே உன் விம்பம்
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, October 09, 2009

இன்று நான்...

நெடுநாள் கழித்து
இன்று...
என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்.
நேற்றுத்தான் பார்த்தது போலிருக்கிறது
எந்த மாற்றமும் இல்லாமல் இப்போதும்.

பறவைகள் அப்படியே
மனிதர்கள்
பூக்களும் கூட.
மாறச் சாத்தியம் இல்லை.
நானும் அப்படியே.
சாலைகள் கொஞ்சம் ஒடுங்கிவிட்டதோ
மலைகள் கொஞ்சம் மெலிந்திருக்குமோ
காடுகளிடை வீடுகளோ
என்பதைத் தவிர.

நீண்டு வளைந்த காலம்
போதையேறித் துவண்டு கிடக்கிறது.
கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.
தாயின் வயிற்றை உந்தி உதைத்து
முகமெங்கும்
உப்புப் பூக்க வைக்கும் கர்வம்
வளரும் அந்தக் கருவுக்கு.
நான் மாத்திரம் அப்படியே.

சிறு வழி
பின் பெரு வெளி தாண்டி
வெயிலும் மழையுமாய்
சேற்றுக் கிடங்குகள் கடந்து
கற்கள் அகற்றி
விவாதங்களை வேதனைகளை
குடைகளாய்
விரித்து மடக்கி
ஆசை கனவு காதல்
வெட்கம் வேதனை உட்புகுத்தி
என்னையே எனக்கு அறிமுகமாக்கி,
ஆரத்தி எடுக்கும்
அழகான நங்கையாய்
பொட்டிட்டுப் பூவும் செருகி
பருவம் கோர்த்து மையலாக்கிய வயது.

நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 06, 2009

பயந்தாங்கோழிக் கடவுள்...

ஒரு பிடி மண் எடுத்து
மனிதனாய்...
மிருகமாய்...
இயற்கையாய்...
இன்பம் தந்த இறைவன்.
இன்று
தன்னைத் தானே குட்டிக்கொண்டு.
மானுடம் காணச் சகிக்காமல்
தப்பாய் ஒரு விதி செய்தோம்
என்று சலித்தவனாய்.

கொடுத்ததை எடுக்கவும் முடியாமல்
கோணலாய் வளைந்த உலகை
திருத்தவும் முடியாமல்.
குரங்காகவே விட்டிருக்கலாம்.
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்.

மாறிக்கொண்டு இருக்கும் மனிதன்
அவனால் மாற்றப்படும் இயற்கை
அவஸ்தையோடு
முழி பிதுங்கிவனாய்.
வானத்தில் ஓட்டை
கடலுக்குள் ஓட்டை
பறவைகள் மிருகங்கள் படுக்க இடமின்றி
மரங்களை அழித்துவிட்டு
கட்டிடக் காடுகள்.

கொளுக்கட்டை பிடிக்கப் போய்
குரங்காய் ஆன கதைதான் என்கிறாள்
பார்வதி தேவி.
முருகனும் பிள்ளையாரும்
மீண்டும் அப்பனுக்கு
பாடம் சொல்லித்த் தர ஆயத்தமாய்.
செய்வது எதுவுமே இன்றி
படைத்தவனே பயந்து பின் வாங்கி
நடப்பது நடக்கட்டும் என்று ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்க்கும் ஒருவனாய்.

சமைத்தே இருக்க மாட்டானோ
முன் கூட்டியே அறிந்து இருந்தால்!
படைத்துவிட்ட மனிதக் குரங்காலேயே
தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ
என்ற பயம் வேறு உள்ளுக்குள்!

முட்டாள் கடவுளே
கையால் ஆகாத உன் குருட்டாட்டம்
பேரழிவுகளின் அவலம்.
தடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு
படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.

அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 04, 2009

வேண்டாத ஞாயிறு...

ம்ம்ம்ம்.....
இன்றைய பொழுதில்
இப்போது
என்ன செய்துகொண்டிருப்பாய் நீ.
சில சமயம்
என்னைக்கூட
நினைத்துக்கொண்டிருப்பாயோ.

கணணிக்குள் கை விட்டுத் துழாவி
எதையோ தேடிக்கொண்டிருக்கலாம்.
இன்று ஞாயிறு.
ஆதலால் தொலைபேசிக்குள்ளும்
தொலைந்திருக்கலாம்.

அங்கும் அளந்து அளவோடுதான்
உன் அளவலாவல்.
கதைப்பதில்கூட பச்சைக்கஞ்சன் நீ.
முத்தா உதிர்த்துக் கொள்வாய்.
செல்லமாய்தான் பேசிவிடேன் கொஞ்சம்.

ஆத்திரம்தான் வரும் எனக்கு.
ஆவலோடு நான் காத்திருக்க
அப்புறமாய் பேசலாம் என்பாய்.
ஆணவமோ இல்லை
இப்படித்தான் இயல்போ.
ஏன் அப்படி ?

என்னையே நினைப்பது உண்மையென்றால்
சிலசமயம் சிரித்தும் கொண்டிருக்கலாம் நீ.
நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு.
எப்போதும் நான் "அழுமூஞ்சி" என்ற நீ
"இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னை"என்றாய்.

நான் உன்னை
நினைத்துக்கொண்டே தூங்குவதும்
தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
என் வழக்கமாகிவிடுகிறது.

கொஞ்சம் பேசிவிடு அன்பே.
முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
நான் ஒரு சமயம் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, October 02, 2009

முடிவிலி...


தொடர்புகள் அற்ற ஒரு பெருவெளி.

ஒரு யானை...
ஒரு குழந்தை...
ஒரு ஆறு...
ஒரு பிச்சைக்காரன்...
எனத் தொடர் தொடராய்.
முடிவில்லா ஒற்றைப் புள்ளியாய் !

யானை ...
தன் சுயமற்று
பாகனின் அங்குசத்தில்
அசைகிறது அது
அதன் மன உளைச்சலும்
தன் இனத்தைக் காணாத ஏக்கமும்
யாருக்குச் சொல்லும்
என்றாலும்....
ராஜாபோல கம்பீரமாய்
ஒரு தைரியத்தோடு
வாழ்ந்து கொண்டுமிருக்கலாம்!

யார் அந்தக் குழந்தை...
யார் அந்தப் பிச்சைக்காரன்...
ஆறு ....
என்னோடு ஏழேழு ஜென்மங்களில்
கை கோர்த்தவர்களோ !

கனவில் மட்டுமே முடிகிறது
கடவுளோடு
சண்டை போடவும்
கோபிக்கவும்
கொலை செய்யவும்
ஏன் ...
தற்கொலை செய்து கொள்ளவும் கூட!

பயண முறைகளில் மாற்றமில்லை
தெளிவாய் இருக்கிறேன்
பயணம் தூரம் என்பதால்
எல்லாவற்றையும்
சரி பார்த்துக் கொண்டேன்
குழப்பமில்லை

ம்ம்ம்...
பொழுதும் விடியும்
பயணமும் தொடங்கும்
இன்னொரு விடியலை
கடப்பது என்பது ? !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 27, 2009

தூங்க விடு கொஞ்சம்...

அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்
இடறி விழுந்து
நொறுங்கிப் போனது
என் பிடிவாதங்கள்.

ஆறுதல் வார்த்தைகளில்
அடிமையாய்ப் போனது
என் இதயம்.

எழுப்பி எழுப்பி
அலுத்துப்போனது
எனது ஆயுள்.

இன்பமும் துன்பமும்
சிறைப்பட்டுப் போனது
உன் நினைவுகளுக்குள்.

உன் நினைவால் நிறைந்து
மேகத்தை மூடும் முகிலாய்
மூடிக்கிடக்கிறது
என் அன்றாட அலுவல்கள்.

இதயத் துடிப்போடு
கூடியிருப்பதால்
மூட மறுக்கிறது விழிகள்.

உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.

அன்பே காது கொடு
சொல்கிறேன் ஒன்று
கேட்பாயா கொஞ்சம்.
உன்னால் முடியுமா !

எனக்குள் உன் நினைவுகளை
நீயே முடக்கிப் போடு.
இன்றாவது உனை மறந்து நான்
நின்மதியாய்
கண் துயில !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 25, 2009

ஒண்டும் விளங்கேல்ல...

செத்துப் போகலாம் போல இருக்கு.
சாகக் கூட உரிமையற்ற
பிறப்புக்களா நாங்கள்.
விசாரணையின் பெயரால்
ரத்தமும் சிதழும்
கலந்து கசிந்து நாற
பிறந்த மேனியாய்
மூத்திரம் சொட்டச் சொட்ட.
கால்கள் ஏவாமல்
மனம் சொல்ல நடக்கிறது கால்கள்.

பச்சை மிளகாய் வாங்கப் போக
குச்சொழுங்கையில் சங்கவியும் வர
பேசிச் சிரிக்கேக்க
வந்தாங்கள் ஐயா ஆமிக்காரன்.
இப்போ என்னண்டா
என்னவோ
உண்மை ஒண்டு சொல்லட்டாம்.
என்ன இருக்கு என்னட்ட உண்மை ?

உடுப்பையும் கழட்டி
உரிஞ்சான் குண்டியாய்
உதைக்கிறாங்கள் போட்டு.
தொங்க விட்டாங்கள் தலைகீழாய் நேற்று
மிளகாய் சாம்பிராணியும் போட்டு.
கம்பியாம் நாளைக்கு ஆணுடம்புக்குள்ள.
என்னவோ...
ஒரு உண்மை சொல்லட்டாம் என்னை.

ஈரெட்டு வயதின் எல்லைக்குள் நான்.
எனக்கென்ன தெரியும்.
அறியவில்லை அரசியல்.
அப்பா சொல்வார் கொஞ்சம் விளங்கும்.
மிச்சம் விளங்காது.
எம் தலை கிள்ளி முளை கிள்ளுவது
விளங்கியும் விளங்காமலும்.(புரிந்தும் புரியாமலும்)
எம்மை அழிக்கும் கருடர்கள் கையில் நாம்.
தெளிவாய் மிக மிகத் தெளிவாய்.


மற்றும்படி குண்டு வெடிக்கும்
ஹெலி பறக்கும்
பங்கருக்குள்(பதுங்குகுழி)பதுங்குவோம்.
ஓடுவோம் கோயிலுக்குள்.
தலையணையோ பாயோ
ஏன் சிலசமயம்
உடம்பில உடுப்புக் கூட இருக்காது.
என்ன வேண்டிக் கிடக்கு
உடுப்பும் சாப்பாடும்.
மனம் அலுத்துப் போகும்.
ஆனால் பயமில்லை.

வருவாங்கள் ஆமிக்காரங்கள்.
சன்னதம் ஆடுவாங்கள்.
இழுத்துப் போவான்கள் அடிப்பாங்கள்.
அப்பாவுக்கும் கால்முறிச்சவங்கள்.
பக்கத்து வீட்டு அல்லி அக்காவை
அசிங்கப் படுத்தினவங்கள்.
விசர் அக்கா இப்ப அவ.

உண்மை ஏதோ கேக்கிறாங்கள்.
என்ன சொல்ல இருக்கு என்னட்ட.
பயமாயும் கிடக்கு எனக்கு.
பொய் எண்டாலும் சொல்லலாம்.
அடிப்பாங்கள் சொன்னாலும்.
சொல்லாட்டிலும்
கம்பிதான் மூலத்துக்குள்ள
.

அப்பவும் சொன்னனான்...
அப்பா ஆமிக்காரன்ர அட்டகாசத்தை
எழுதிப் போடுங்கோ ரேடியோவுக்கு எண்டு.
எழுதின ஆக்கள்
காணாம போய்விடுவினமாம்.
கரம் நறுக்கி
காக்காய்க்கு போடுவாங்களாம்.
கவனம் தம்பி எண்டவர் அப்பா.
எழுதேல்லையே நானும்.
அப்ப என்ன உண்மை நான் சொல்ல?

ம்ம்ம்ம்...
துயரங்கள் சுமப்போம் முடியும் வரை.
அதே பாரம் கனமாய் மாறி
முடியாமல் போகும் ஒரு நாள்.
பார்க்கலாம் அதுவரை பொறுப்போம்.
சொன்னாலும் அடி விழும்.
சொல்லாட்டிலும்
அடிதான் விடிய விடிய.
விடிய வேண்டாம் இந்த இரவு மட்டும்.
நானும் சொல்ல வேண்டாம் ஒண்டும்.
செத்த இரவுக்குள்
சாகாமல் இருக்க நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 23, 2009

பேசு - பேசவிடு...

பெண்ணே பேசு...
கொஞ்சம் பேசு
பத்துத் தலைமுறை தாண்டியாச்சு.
அடுப்படி தாண்டி படலை கடந்து
பறக்கும் தட்டில் நீ இப்போ.
அகராதியில் பேதை என்றதாலோ
பேச்சின் உரிமையை
உனக்குள்ளேயே புதைக்கிறாய் - ஏன் ?
பெட்டைபுலம்பல் என்றான் யாரோ.
மனம் சலித்தால்
உன்னையே சலித்து
ஒழித்துவிடும் உலகில் உன் யாத்திரை.
எண்ணங்களின் உணர்வுகளை
உன் உரிமைகளை
கொஞ்சம் பேசேன்.

அடி கோழையே...
உன்னைப் பேசா மடந்தை என்றவன் ஓர் ஆண்தானே.
உடன் கட்டை ஏறச்சொன்னவனும் அவனே.
பெண்ணைப் பாதி சுட்டு மீதி தின்றவனும் அவன்.
அவன் காலத்தில் சொன்னதை இன்னும் !
ஏன் இன்றும் ஏகாந்தத்துள் நீ !
பேசடி பேசு.
பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.
பகிரண்டம் கேட்கப் பேசு.
உள்ளத்து உணர்வுகளைப் பேசு.

ஆக மிஞ்சி...
உன் கண்களையாவது பேசவிடு.
சிரிக்கும்போது ஆனந்தக்கண்ணீராய்
நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.
கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!

(தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்)

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 20, 2009

காதல் கிசுகிசு...

மழையில் நனைகிறாய்.
அட ...
நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையே
பரவாயில்லை வா
என் முந்தானைக் குடைக்குள் !

என்னைச் சரியாக்க
உன்னால் மட்டுமே முடிகிறது. பார்...
என்னைத் துவைத்து
மனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்
கசங்காமலே !

என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்து
எதையாவது வந்து
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.
சீ...போடா வெட்கமாயிருக்கிறது.
உன் சின்னச் சின்ன
சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.
பிற்காலத்திற்கு உதவுமே என்று !

உன்னைப் பிடிக்கவில்லை
வேணாம் போ என்று
சொல்லிச் சொல்லியே
உன் நினைவுக் கயிற்றிலேயே
தொங்கித் தொடங்குகிறது
என் பயணம் !

இப்போ எல்லாம்
காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.
எனக்காக நீ தந்துவிட்ட
கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்
அபகரித்துக்கொள்கிறது அது !

நீ காற்றில் உளறிய
ஒவ்வொரு சொற்களையும்
சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.
நீ திரும்பி வரும்வரை
என்ன செய்வது நான் !

எல்லாம் சரிதான்... 
கிழித்தெறியமாட்டாய்
என்கிற நம்பிக்கையில்தான்
மனு ஒன்று சமர்ப்பித்தேன்.
சொல்லாமலே கிழித்தது ஏன் ?

மௌனம்போல ஒரு சுமை இல்லை.
நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்
மௌனம் என நினைத்தது தப்பானது.
இன்று...
இன்றைய உன் மௌனம் ?

உன்னை எழுத நினைக்கிறேன்
என் கவிதையில்கூட
நிறைய எழுத்துப் பிழைகள் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 18, 2009

எரிக்கப்படவேண்டிய கோட்பாடுகள்...

என்றோ கலைந்த
கனவுகள் மீண்டுமாய்
இன்றைய கனவின் தொடராக.
பழைய காயங்கள்
சிறிதுதான் ஆறியபடி.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்துச் சொல்கிறது.
கேட்டுத்தான் ஆகவேண்டும்.
காற்றைப் பிடிக்கவும்
விற்கவும் நான் யார் ?
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

அறிவு கெட்டவளே...
ஏன் திரும்பவும் திரும்பவும்
வாலாட்டிக்கொண்டு.
நாயிலும் கேவலமாய்
துரத்தப்படுகிறாய்.
கவனம்
உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.

இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
பூதமொன்று இனியும் வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.

இதென்ன
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 17, 2009

மலையடிவாரத்துத் தோழியே...3

உன் அப்பாதான் தோட்டக் கங்காணி.
பறங்கி வெள்ளைக்காரத் துரையோடு
கையில் ஒரு தடியோடும்
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்
தேயிலை மலைகள் நடுவில்
தூரமாய் உயர மலையில் தெரிவார்.
உன் அப்பாவும் அம்மாவும்
இப்பவும் சுகம்தானே தோழி.

உன் அம்மா சுடும் ரொட்டியும்
சம்பலும் அது ஒரு அலாதி ருசியடி.
ஒற்றை ரொட்டிக்கு எத்தனை கைகள் நீளும்.
ம்ம்ம்...மாங்காய்க் குழம்பு.சேமக்கிழங்குக் கறி.
கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.
சுடுநீர்க் குளியல்.
எண்ணை சளிக்க வைத்து வலிக்க வலிக்க
இழுத்துப் தலை பின்னிவிடும் உன் அம்மா.
போடி போ...மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க.

ஒரு நாள் பகல் பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு
இரு கைகளை ஒரு கையாக்கி சுடுகாடு தாண்ட
வேணுமென்றே யாரோ பயமுறுத்த
காய்ச்சல் பீச்சலோடு படுத்துக் கிடந்தோமே
இருவரும் வாரம் இரண்டு.
இன்னும் நான் அப்படியேதான். நீ ?

அந்த இந்தியத் தமிழ் மக்கள் பேசும் தமிழின்
இழுவையும் ஒரு சங்கீதம்தான்.
உன்னோடு திரிந்த
அந்த இளமைக் காலத்தில்
பன்னிரண்டு வயதுவரை
அந்தத் தமிழைத்தானே நானும் உச்சரித்தேன்.
பின்னர்தான் அணைத்தது
யாழ்ப்பாணத் தமிழ் என்னை.
காலம் பிரித்தது கல்வி என்கிற பெயரில்
உன்னையும் என்னையும்.

மறந்தே விட்டேனடி இன்னொன்றை.
உன்னோடு உங்கள் பண்டிகைகள்.
ரதி மனமதன் கூத்து,மாவிளக்குப் பூஜை
மஞ்சத்தண்ணி நீராட்டு என்று.
முழுதாக இல்லை என்றாலும்
நீறாக நினைவு தெளிந்து மறைகிறது.
இதைவிடப் பௌத்த மக்களின்
பன்சல (புத்தவிகாரை) புத்தனின் பெரிய உருவம்.
இருவரும் இறுக்கிக் கைகளைப் பிடித்தபடி
முட்டுக்காலில் தாமரைப் பூ வைத்து
ஊதுவர்த்தியும் ஏற்றிக் கும்பிட்டதும்
நினைவலையாய்.

இத்தனை வயது கடந்த பின்னும்
கடந்த தடங்களைத் தூசு தட்டி
உன்னையும் தேடுகிறேன்.
என் அம்மா கோழிக்கு அடை வைப்பா
பத்து முட்டை என்றால்,
அதில் எங்கள் அத்தனை பெயர்களையும்
பொறித்துக்கொண்டு காத்திருப்போம்.
எப்போ என் முட்டை குஞ்சாய்ப்
பொரிக்குமென்று.
அந்தக் குஞ்சுகளும்
எங்கள் பெயரிலே உலவி வரும்.

இன்றைய நாகரீகச் சூழலில்
அன்பும் அமைதியும் தெய்வமும் தூய்மையும்
தொலைந்த தேசத்தில் நாம்.
சொர்க்கமாய் இருந்த அத்தனையும்
இற்றுப்போனதாய்.
நோக்கமில்லாமல் நகரும் உலகம்.
அதனால்தான் அழிவுகளும் ஏராளம்.
இத்தனை அழிவுக்குள்ளும்
இயலுமானவரை காத்துவைப்போம்
விழிகளுக்குள் எம் அழியா நினைவுகளை.
என்ன இன்பம் என்ன சுகம்.

கண்கள் திரைகிறதடி
முழுதாகச் சொல்லாவிடினும்
எழுதியதில் முழுதாய் இருக்கிறாய் என்னோடு நீ.
அப்போது இருந்த நான்
இப்போ எனக்குள்ளும் இல்லை.
மலையடிவாரத்து என் தூரத்துத் தோழியே
என் இனிய நண்பியே
கூடப்பிறவா சோதரியே...சகியே
வளைத்துப் போடமுடியா
அந்த இன்பப் பொழுதுகளை
மீண்டும் கண்டுகொள்வோமா ?
நானும் நீயும்...
எப்போ சொல்லடி !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் போதும்]

Wednesday, September 16, 2009

மலையடிவாரத்துத் தோழியே...2


மூத்திரக்காய் மரத்தடியில்
பொன்னையா மாஸ்டர்
அதுதானடி மூக்குப்பொடி மாஸ்டரின்
முதலாம் மூன்றாம் வகுப்பு மிரட்டல்கள்.
பாடநடுவில் அவரின் யாழ்ப்பாணச் சமையல்
மணமும் மூக்கைத் துளைத்து
பசியையும் தூண்டும்.

அடுத்த வகுப்பை மறைக்க பிரம்புத் தட்டி ஒன்று.
என் அப்பாவின் வகுப்பு நடக்கும் அங்கே.
அவரின் சத்தம் ஊரையே கூட்டும்.
வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் இடையே
ஒரு தேயிலை மடுவம் ,ஒரு கோயில்
ஒரு ஆறு,ஒரு வயல் வெளி,பாலம்,சிறுகுளம்
படிக்கட்டுக்கள் வைத்த சரிவாய் தேயிலைத் திட்டுகள்.
மீண்டும் சலசலக்கும் பெரிய ஆறு,பாலம்
கடக்கப் பள்ளி வரும்.
மூச்சு விட்டுக்கொள் கொஞ்சம்.
அப்பாவின் "டேய் பிள்ளைகளா"அதட்டும் சத்தம்
இத்தனையையும் தாண்டி
என் வீட்டுச் சுவரில் எதிரொலித்து
சமைக்கும் அம்மாவின் காதில் பட்டுப் போகும்.
இன்னும் அப்படியே அனைத்தையும்
அள்ளிக் காண்கிறாயா.
அத்தனை காட்சிகளும்
எத்தனை வருடங்கள் கடந்த பின்னும்
தூரத்துத் தோழியின் நினைவோடு
நிழலாடுகிறது மீண்டும்.

தேயிலை மலைமுகடுகள் தாண்டி
காலைச் சூரியன் சுள் என்று மேல் எழும்ப
மெல்லப் பனியும் சில்லென்று சேர
சொல்ல முடியா அழகுக் கோலங்கள்.
அப்பப்பா...
அனுபவித்த சுகங்கள்
நெஞ்சக்குழிக்குள் சோகங்களாய்.
விடியலின் வனப்பில்
தேயிலை மடுவத்தில் சங்கு ஊத
ஐந்து மணிக்கே ஊர்ந்து வரும் தொழிலாளர்கள்.
இடுப்பில் கைக்குழந்தைளோடும்
முதுகில் கூடைகளோடும் கூடும்
பெண்களும் ஆண்களுமாய்.
மேல்கணக்கு கீழ்க்கணக்கு
என்று டிவிஷன் பிரித்து பெயரும் வாசிக்க
இடையில் சாக்குக் கட்டி
வரிசையாய் பிரிந்து போய்
கொழுந்து பறிக்கும் அழகே அழகு.

இரப்பர் மரங்களில் பொருத்திய சிரட்டைகளை
பிய்த்துக்கொண்டு குடல் தெறிக்க ஓட்டம்.
தேயிலைக் கன்றுகள் நடுவில்
ஒளித்துப் பிடித்து விளையாட்டு.
மர அசைவு கண்டு அதட்டல் ஒன்று
"யாரடா அது"அது உன் அப்பா.
உன் அப்பாவை
பாப்பாவின் ஐயா"பாப்பையா"என்றே அறிமுகம் எனக்கு.
பெயர் நான் அறிந்திருக்கவில்லை இன்றுவரை.
சரியான பயமும் மரியாதையும் அவரில் எனக்கு.
ரதி என்று கூப்பிட்டால்
எட்டடி தூர நின்று"என்னாங்க ஐயா"என்பேன்.
நீயும் நானும் நடத்தும் நாடகங்களை
அப்பாவிடமும் போட்டுக் கொடுத்தும் விடுவார்.
வாங்கிக் கட்டியும் கொள்வோம்.
எத்தனை நாட்கள்.
அன்று வலியாய் இன்று வடுவாய்
நினைவுப் புண்கள் !!!

ஹேமா(சுவிஸ்)
[நாளை முடியும் ஞாபகங்கள்]

Tuesday, September 15, 2009

மலையடிவாரத்துத் தோழியே...1

மலையடிவாரத்து
என் தூரத்துத் தோழியே...
உன்னைக் கண்டு எவ்வளவு காலமடி.
கனவில்கூட வரமாட்டாயாமே.
என்னைப்போலவே
நீயும் அதே மலையடிவாரத்தில்
சுகமாய் இருப்பாய் என்கிற
நம்பிக்கையோடு நான் இங்கு.
காற்று வாக்கில் கூட
உன்னைப் பற்றிய செய்திகள்
கேட்டு நாளாயிற்று.
நான் இங்கு அகதித் தமிழ்க் கிளியாய்
வெளிநாட்டுக் கூண்டில்.

மலையடிவாரத்து
தூரத்து என் நண்பியாய்
இளமைக காலங்களை
நினைக்க வரும்போதெல்லாம்
சடாரென்று உன் உருவம்தான்
ஓடி முன் வரும்.
என் இளமைக்காலத்தை
முழுதாய் பங்கிட்டவள் நீதானே.
சின்னப்பாப்பாவைக் காணாவிட்டால்
ரதியும் தொலைந்திருப்பாள்.

உன் அக்கா,நீ,உன் தங்கை
நான்,என் தம்பி,தங்கைகள் இரண்டு.
பார்ப்பவர் சொல்வது
ஒரு தாயின் பிள்ளைகளாய்.
அதுவும் உன் அக்காவும் நானும்
நிறத்தில் உருவத்தில் ஒன்றாய்.
குணத்தில் ஒன்றாய்.
இளமை தொலைந்துகொண்டிருக்க
முதுமை முதுகில் ஏற
அன்றைய நாட்களை மீண்டும் மீட்கையில்
கண்களில் சொல்லொணாச் சோகம்.

முதுமை நரைகளுக்கு
இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.
நீயும் வேணுமடி அதற்கு.
சிட்டாய் சிறகடித்த கணங்களை
மனக்குழிக்குள் இருந்து
தோண்டி எடுக்கிறேன் நீயும் வா.

நாம் நடந்த விளையாடிய அதே இடங்கள்
இன்னும் இருக்கிறதா?
தேயிலை மலைகள்,ரப்பர் காடுகள்,
பறித்த பழ மரங்கள் இன்னும் எவ்வளவு.
எம் தடங்களாவது தெரிகிறதா தோழி.
வான் தொடும் மலைகள் எங்கும்
விதவிதமாய் எத்தனை வர்ணப் பூக்கள்.
உங்கள் வீட்டில் வளர்ந்த
சண்டை போடும் கொண்டைச் சேவல்.
உன்னைக் கண்டாலே
கலைத்துக் கொத்த வரும் தீக்கோழி.
கட்டை வாழையில் குலை பழுத்திருக்க
முன் பக்கப் பழங்கள் இருக்க
உள்ளால் கோதிவிடும் அணில்கள் நாம்.

கொட்டும் மழையில்
ரெயின் கோட் மறந்ததாய் பொய் சொல்லி
சேறு விளையாடி
தொப்பையாய் நனைந்து வர
தலை துடைத்து உலர்த்துமுன்
அழுதபடி முட்டுக்காலில் இருவரும்.
பின் சேற்றுப்புண்
இரண்டு காலையும் பற்றிக்கொள்ள
குண்டியால் நடந்ததும் ஞாபகம் இருக்கா.

ஒட்டி ஒட்டி உறவாடி
உள்ளிருந்து இரத்தம் உறிஞ்சும்
ரப்பர் அட்டை கௌவிக் கடித்திருக்க
நான் கத்திக்குளறி ஆர்ப்பாட்டம் போட
தேயிலை கொய்யும் அம்மா
போயிலை எச்சில் துப்பி மருந்திட
இரத்தமும் கக்கி
பந்துபோல அட்டையும் உருண்டு விழ
இரத்தம் கண்ட அதிர்ச்சியில் நீயும் மயங்கி விழ...
உயிருக்குள் உணர்வுக்குள்
உறைந்து கிடக்கும் நினைவுத் துகள்கள் அது.

இன்னும் ஒன்று சகியே...
பாவம் என்று நினையாத பருவம் அது.
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
போஞ்சி,கீரை,புடலை என்று
காய்கறிகளின் நுனி கிள்ளிப் போகும்
நத்தையின் மேல் கோவம்.
நத்தை அழிப்பு.நாம்தான் ஆமிக்காரனாய்.
ஒரு நத்தைக்கு இரண்டு சதம்.
நிலா வெளிச்சத்தில் நத்தை வீட்டு விலாசம் தேடி
வெற்று மீன்டின்னுக்குள் சமாதி கட்டுவோம்.
சேரும் நாளொன்றுக்குக் குறைந்தது
இருபது முப்பது நத்தைகள்.
நத்தை பிடித்த பணம்
பல்லி முட்டை மிட்டாயாய்
எம் வாயில் இனிக்கும்.
இன்று நினைகையிலும்
இனிக்கின்ற நாட்களாய் அது.

பெரும் கரும்பாறைகளில் பொறித்த
நம் பெயர்கள் கரிக்கட்டைக் கோலங்களாய்.
நாம் உரக்கக் கத்துவதை
அப்படியே திருப்பிக் கூறும் அதிசய மலைகள்.
மரங்கள் நடுவில் உரக்கக் கீதம் பாடும் புள்ளினங்கள்.
அடை வைத்து
இறக்கிவிட்ட கோழிக்குசுகளுக்காய்
சிறகடித்துத் திரியும் பருந்துகளுக்கும்
கீரிப்பிள்ளைகளுக்கும் கூட
நாம்தானே காவல்காரர் கம்போடு !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் தொடரும் நாளை]

Saturday, September 12, 2009

வேணும் பத்து வரங்கள்...



வரமென்று கேட்டதில்லை.
வந்ததும் நிலைப்பதில்லை.
வேணுமென்று கேட்டதில்லை.
வேண்டுமென்று எதுவுமில்லை.

பிரியமுடன் வசந்த்
பிரியமாய்க் கேட்கிறார்.
பத்து வரங்கள்...
கேட்கணுமாம்
ஏஞ்சல் தேவதை வாசல் வந்தால்.


ம்ம்ம்....
என் மனதில் முன்னுக்கு
முளைப்பதெல்லாம்
என் வீட்டு முற்றம்தானே !

ரத்தமில்லா - யுத்தமில்லா என் பூமி.
பாரபட்சம் இல்லா அரசியல்.

சுத்தமான காற்று.
சுதந்திர தேசம்.

கனவுகள் வற்றிய கல்லறைகள்.
கனவால் நிரம்பா வீடுகள்.

கடவுள் இல்லா உலகம்.
மதங்கள் இல்லா இறைவன்.

சாதியில்லா மனிதன்.
பசியில்லாப் பிஞ்சுகள்.
nice

பேதம் காட்டாப் பெற்றோர்.
பெருத்த கனவோடு வளரும் தலைமுறை.

சரிநிகராய் நாங்கள்.[பெண்கள்]
அன்பாய் ஆணகள் குறை சொல்லாமல்.

கரம் தவறாத மக்கள்.
கல்வியோடு மனிதம்.

எனக்கென்றும் ஒரு வாழ்வு.
இறப்பிலாவது என் மண்.

நோயில்லா மெய்.
நட்பு தரும் ஒரு பூ.

எல்லோரிடமும் அன்பு வேண்டும்.
எல்லாமே கேட்க வேண்டும் !!!


இன்னும் அனுப்புகிறேன் ஏஞ்சலை

ஜெஸ்வந்தி -
மௌனராகங்கள்

கீழை ராஸா - சாருகேசி

சத்ரியன் - மனவிழி

பாலாஜி - சி @ பாலாசி

கும்மாச்சி - கும்மாச்சி

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 09, 2009

போய் வா...

இனியவனே...
இறக்கை கட்டிக் கொண்டு
போய் வருகிறேன் என்கிறாய்.
எனக்கு இறக்கை முளைக்க வைக்காத
இறைவனைச் சபித்து
போய் வா என்கிறேன்.

எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.
உன் சாவடி கடக்கையில் மாத்திரம்
இரத்தம் உறைந்து போகிறது.
பரிசாகப் பதக்கமா கேட்டிருந்தேன்.
புரிந்திருந்தும் பயணமாகி விட்டாய்.
எங்கள் ஊரின்
சோதனைச் சாவடிகள் கடக்கையில்
காயங்களாவது மிஞ்சியிருக்கும்.
இங்கே...!

அறிவாயா அன்பே
உன்னைப்போலவே
விழிகளுக்குள் குருதி தேக்கி
காட்டிக் கொள்ளாமலே சிரிக்கிறேன்.
நிர்வாண தேசத்துள்
ஆடை அணிந்தவைனைத்
தேடிக்கொண்டிருக்கிறாய்
உன் கனவுகளுக்குள்ளும்
நான் எழுதும் கவிதைகளுக்குள்ளும்.
இப்போதைக்கு உன் கைக்குள்
அகப்படப் போவதில்லை
அந்த நிழல்க் கனவு.

நேற்றைய இரவு
காத்திருந்து களைத்து
தூங்கப் போகிறேன் என்கிறேன்.
உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
கதவுகளைச் சாத்தி
சாவியை மாத்திரம் உன்னோடு
வைத்துக் கொண்டாய்.
ம்ம்ம்...
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தையும் காட்டு என்கிற
பதத்தையே காக்க வைத்த
களவானிப் பயலடா நீ.

விடியலின் வெள்ளிக்காய்
முகாம்களில் காத்திருக்கும்
என் இனம் போல
சலிக்காமல் காத்திருப்போம்
நானும் என் கன்னங்களும்.
நலமாய்ப் போய் வா !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 07, 2009

அது....

அது.....அது...
அதுதான் அது...
சின்னதாய்...பெரிதாய்
அழகாய்... வித விதமாய்
வடிவங்கள் மாறினாலும்
இயக்கும் கையில் இயங்கும்
இயல்பாய்...
மாறாத மனம் கொண்டதாய்
அதற்கென்றே விதிக்கப்பட்ட
தனிப்பட்ட குணமுள்ளதாய்.

நண்பனோ எதிரியோ
தயவோ தாட்சண்யமோ இன்றி
எதுவுமே... எல்லோருமே
சமமாய்
நீட்டிய திசையில்
தன்பணி நிறைவாய்.

ஆயிரம் காரணங்கள்
ஆயுதங்கள் கையிலேந்த.
தட்டிக்கொடுக்கும் கையையே
தனக்கெதிராய் திசை திருப்பும்.
கணங்கள் நொடிகளுக்குள்
உலகப் பந்தில்
உயிர்.....
ஒரு இதுவாய்.

யார் கையிலும் ஆயுதம் இங்கு.
கொலைவெறி...இரத்த தாகம்.
எல்லோருமே எஜமானர்கள்.
யார் யாரையும் கொல்லலாம்.
வாழ்வு வரம்..சாவு சாபம்.
உயிர்.....
உதிர்ந்து விழும்
மயிரை விட மோசமாய்.

மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்... வருடங்களாய்
கடந்து கால காலமாயிற்று.
உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.
மிருகங்களில் கூட
ஏதோ எங்கோ ஒன்றுதான்
அதிசயமாய்
தன் இனத்தைத்
தானே தின்னும்.
மிருகங்களை வென்றவனாய்
இங்கு மனிதனும் இப்போ.

வலிக்கிறது...
மனம் ஒரு மாதிரியாய்.
சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கி
சச்சரவே வாழ்வாய்.
சரித்திரமும்
சாதனைகளும் படைக்க
மானிடம் தேவை.
மனிதன் இல்லா மண்
ஏன் ??? எதற்கு.
மனிதம் இல்லா மனம்
ஏன் ??? எதற்கு.

அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ
தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 04, 2009

தொடரும் வாழ்வில்...



நண்பன் ஒருவன் இறந்ததாய்ச் செய்தி.
தற்கொலையாம்.
தன்னைத் தானே சுட்டுக்
கொண்டானாம் - கொன்றானாம்.
கோழை என்றாலும் வீரன்.
எதிரியின் குண்டு வாங்கிச் சாகாத வீரன்.

பிரச்சனைகளோடு விளையாட முடியாமல்
தோற்றுப்போனானாம்.
எதிர்க்காற்றில் நீச்சலடிக்கத்தானே
நேசங்கள் நீக்கி
தேசம் கடந்து
சர்வதேசக் கூலிகளாய் நாடு கடத்தப்பட்டோம்.

அழத்தான் முடிந்தது.
அரற்றினேன் நண்பர்களிடம்.
வந்து பேசியது அவனது முகம்.
அவன் மனைவி ,ஐந்தே வயதான மகன்.
ஏனடா....நீ எங்கேயடா.

பொழுது நகரச் சாப்பிட்டேன்.
படுக்கையில் புரண்டேனே தவிர
தூக்கம் புழுவாகி நெளிந்தது.
அவனது புள்ளியில்.

விடிந்தது...தொலைபேசியில் விசாரித்தேன்.
புறப்பட்டேன்.
மாற்றுத் துணிகளோடு புகையிரதத்தில்.
டிக்கட் எடுத்தேன்.
அறிவித்தலுக்காகக் காத்திருக்கிறேன்
கோட்டுக்கு வெளியில்.
யன்னலோர இருக்கையே பிடிக்கிறது.
தேடி இருந்து கொள்கிறேன்.
யாரோ ஓட்டுனர் கதவைத்
திறந்தால் மட்டுமே ஏறவும் இறங்கவும்.
மூன்று மணித்தியாலப் பயணம்.
தூங்கியும் இருக்கலாம்.

இறங்கி நடக்கிறேன்.
பாதையின் இடையில் சிநேகிதர்கள்
குசல விசாரிப்பு.
சந்தோஷமான விடயங்களும் கூட.
அண்ணா வீட்டுக்குப்
பழங்களும் இனிப்புக்களும் பை நிறைய.
இறந்தவர் போக இயல்பு வாழ்வு
கை கோர்த்துக் கொள்கிறது.

போனேன்...
அவளைப் பார்த்ததுமே குழறி அழுதுவிட்டேன்.
குழந்தை சிரித்தான் தூக்கினேன்.
பிடிக்கவில்லை அவனுக்கு என்னை.
இதோ விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சம்பிரதாயங்கள் நடந்தன.
முடிந்தன.
முடிந்தது எல்லாமே மூன்று நிமிடத்தில்.
அந்தப் பிஞ்சு கேட்கும் கேள்விகள்
மட்டும் முடிவில்லாமல்.
" அம்மா அப்பா எங்கே? " !!!

ஹேமா(சுவிஸ்)

ஊரில் என் அயலவரும் நண்பருமான
பொ.கேதீஸ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.(31.08.09)

Wednesday, September 02, 2009

முற்றுப் பெறாத இனம்...

அன்று...
அரை வயிறுதான்
உறவுகள் வீடு நிரம்பலாய்.
இன்று...
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்.

ஆண்ட தமிழனாம்
இன்று
அம்மணமாய்
அடிமையாய்
அகதியாய்
அநாதையாய்!

கொழுத்த சிங்களம் அறிந்ததோ
முற்றுப் பெறாத இனம் தமிழனாய்.
அதுதான்
பொட்டே வைக்காமல்
முற்றுப்பெறாத சொல்லாய்
"தெமிழ"என்கிறதோ?

முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?
கம்பிகளோடு கம்பியாய்
ஒரு கை அசைகிறது.
மகளே...
சுருதிப் பெட்டியோடு
இணந்த குரல்
ஈனஸ்வரத்தில்.
அது அம்மா.

இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 30, 2009

காதல் கவிதை[கள்]

Friday, August 28, 2009

முடியாதது...

நேசித்தது...நெருங்கியது
கேட்டது...ரசித்தது
பாட்டானது...பழகியது
அழகானது...உயர்வானது
ஆனந்தமானது...மயக்கமானது
இன்பமானது...இடருமானது
இரவலானது...என்னதுமானது
ஆர்ப்பரித்தது...அவதியுமானது
எதிர்பார்த்தது...ஏங்கியது
பார்த்தது...பரிமாறியது
அணைத்தது...இனித்தது
சொந்தமானது சொர்க்கமானது
உறவானது...பிரிவுமானது
நிஜமானது...நிழலானது
மந்திரமானது...மறக்காதது
தூரமானது...துயரமானது
வேதனையானது...விரக்தியானது
காயமானது...கருகாதது
நெருப்பானது...நீறானது
ஒளியானது...இருளுமானது
வலியானது...வரமுமானது
கனவானது...கனமுமானது
விதியானது...கதியானது
கேள்வியானது...கேலியானது
பதிலானது...பௌத்திரமானது
போராடியது...பொய்யானது
காத்திருந்தது...காலமானது
தேடலானது...திரும்பாதது
சுமையானது..சுகமுமானது

என்றோ ஆனது
இன்றும் நினைவானது.

என்ன ??? !!!

சலிப்பானதா ?
சோர்வானதா ?
கோபமானதா ?
கொதித்ததா ?

இதயம் மௌனமானது
உணர்வுகள் புதிரானது !!!

கிறுக்கினது 2000 ல்.ஹேமா(சுவிஸ்)