*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label ஈழம் காதல். Show all posts
Showing posts with label ஈழம் காதல். Show all posts

Saturday, May 31, 2014

அவன்...அவன்தான்...

அவன் வாசனை வருகிறது
வந்திருக்கிறான் போலும் என் தேவன் இன்று
நேற்றே கனவில் புள்ளி வைத்தவன்....

அன்றுபோலவே
காய்த்த கைகளில்
காயாத பூவரசம்பூ கொண்டு வந்திருப்பான்...

கூரைபிய்த்திறங்கி
ஒற்றை இறகில் தன்னை அறிவித்தவன்
பிரபஞ்சம் தாண்டிய குருதிக்காடுகளில் வாழ்பவன்
தொலைத்தேன்....தொலைந்தேன்
மிக மிகத் தொலைவில்
இப்போ தலைப்பிரசவம்
அவனின் பெயரால் முத்தமிட வந்திருக்கிறான்
முத்தப்பிசாசவன்...

என்னோடு வாழ்ந்த
காட்டு வாழ்க்கையின் நிமிஷங்களைக் குறுக்கியவன்
ஒரு சிறகு தந்தவன்
நொண்டியா(க்)கி மறுசிறகோடு பறந்தவன்...

வானொலிப்பூச்சியவன்
ஒற்றைச் சிரிப்பில் உலகோடு கதைத்தவன்
இதழில் இளையராஜா பாடல் சொன்னவன்
அர்த்த ராத்திரியில்
சாந்தனின் பாடல்களைக் கேளடியென உறுக்கியவன்...

குண்டுகளையும் கோள்களையும் சேமித்த
சமகாலத்தில்
மின்னியலுக்குள் மேகம் புதைத்தவன்...

இன்னும் வாசனை அவன் புகைந்த மனதில்
தேடிக்கிடைத்த பொருளவன்
இன்னும் தொலையாமல்...

தேவதைகளை ஆள்பவன்
இந்தத் தேவதையை
கண்ணி வைத்தே கருக்கொண்டவன்...

ஓ....வேர்க்கிறதவனுக்கு
விசிறிவிடுகிறேன் அவன் வாசனைக்கு...

இன்னும் ஆள்கிறான் காதல் சாம்ராஜ்யத்தில்
வானுக்கும் மேகத்துக்குமிடையில் நம் கோட்டை
வாழ்த்துங்கள் மனமிருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 14, 2013

போர்க்காலக் காதல்...


போர் ஒழிந்தபின்னும்
சிதைந்த காவலரணாய்
நிகழ்வுகளின் சாட்சியாய்
நம் காதலில் நான்.

ஆயுதங்களைக் கொள்ளையடித்தவர்கள்
உன் ஷெல் பார்வையை
விட்டு வைத்திருக்கிறார்கள்
நன்றி.

எறிகணை இலக்குகளை ஏவி
உச்சப் பனையில் புகையெழும்பும்
இரசாயனக் குண்டுகள் துளைத்த
திசைக்கூடாரமென
மனம் சல்லடையாய் கிடந்தாலும்
உன்னுள் மீள்குடியேற
13 ம் திருத்தச்சட்டமென
ஒப்பமிடுகிறேன்.

கிடப்பு அரசியலில்
அமைதிக்காலப்பணியென
நம் காதலும்
வெடிக்காத கண்ணிவெடியென
உன் மௌனமும்.

நீ....
சோதனைச்சாவடி
இராணுவமல்ல
நான்....
அடையாள அட்டை
காட்டிப் பல் இளிக்க.

முச்சந்தி தாண்டும்
கனரக வாகனத்துள்
உறங்கும்
மரணித்த போராளியாய்
A 9 பாதை
மிதிவெடிகளையும்
குடிசைகளின்
இடப்பெயர்வுகளையும்
மாவீரர் கல்லறைகளையும்
உணர்வற்றுக்
கடந்துகொண்டிருக்கிறேன்
உன் ஒவ்வொரு
ஆட்டிலெறிச் சொற்களையும்
தாங்கியபடி.

ஊரடங்குச் சட்ட காலத்தில்
தஞ்சமாய்
புகுந்தே கிடக்கும்
குழந்தைகளின் பங்கருக்குள்
தவறி விழுந்த பாம்பென
அலறியடிக்கிறது உயிர்.

நீ....
புலம் பெயர் தேசமல்ல
நான்....
அகதியுமல்ல
நிவாரணங்களை அள்ளி வழங்க.

நிச்சயம்
போரற்ற காலத்தில்
சமாதானப் பேச்சுவார்த்தைக்
குழந்தைகளோடு
நீ என்னுடனும்
நான் உன்னுடனும்தான்.

ஒரு சொல் சொல்லிவிடு
தீர்ப்பில்லா
காலவரையறையற்ற
வதைமுகாமாகிக்கொள்கிறேன்.

புரிந்துகொள்....
போர்க்காலம் தாண்டியபின்
இன்னொரு சொல் வேண்டாம்
நம் இலங்கை அரசாங்கம்போல்!!!

http://kaatruveli-ithazh.blogspot.ch/2013/10/blog-post.html?spref=fb

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 15, 2013

விட்டுப்போன புத்தன்...

அழுவதால்
நீயோ
இல்லை
நானோ
தீட்டாகி விமாட்டோம்.

தமிழனின்
இரத்தமும் கண்ணீரும்
நனைத்த புத்தன்கூட
இன்னும்
போதி மரத்தடியில்தான்.

இலங்கையில்
இருக்கும் புத்தன்
போலியாம்
அது வேறு கதை.

தலைகள்
சிதறும் தருணத்தில்
காணாமல் போன
புத்தன் போல
நீ இப்போ.

வெள்ளரசு மரத்தடியில்
காணாமல் போன
தமிழன் வாழ்வு
தொடர்கிறது
மரணத்தோடு
அவர்களோ
சதுரங்க விளையாட்டில்.

நான்
மண்ணோடு அல்ல
மரணித்த பின்னும்
வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்
புத்தனைப்போல.

ஆசை பட்ட பின்னல்ல
ஆசைப்பட்டபின் தானே
சித்தார்த்தனும்
புத்தனானான்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 13, 2012

பார்வைப் போர்...

குளம் தொடும்
மழைக் குமிழ்க் கண்களுக்குள்
விடுதலைக் கனவுகளை
சேகரித்த வன்னியன் அவன்
போதாதோ அது
அவனோடு
நான் போர் தொடுக்க.

வார்த்தைப் போர் தொடுத்தால்
மடித்திழுக்கிறான்
கண்களால் மடிமீது
வாள் எடுத்து வாவென்று
ஆணையிட்டேன்
இமைக்க மறந்தவனாய்
என்....
இடைவாளை எடுக்கின்றான்.

இரங்குவேனோ என்றவளை
ஓர்மம் கலைத்து
காதல்....
கன்னத்து
பருக்களை நிரப்ப
விரல்வழிக் கவிதை கேட்டு
கொஞ்சம்
ஒத்தி வைக்க
கெஞ்சுகிறான் வீரனவன்
போரையும் போரையும் !

ஹேமா(சுவிஸ்)

Thursday, April 14, 2011

பங்கு நீ சித்திரையில்...

வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்
இன்றைய நாளில்தான்
இருவருக்குமான
உரையாடல்கள் ஆரம்பித்து
ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.

மற்றைய நிறங்களை
நீயே நிறமற்றதாய்
உருமாற்ற இணங்கியுமிருந்தாய்.

நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு
சம்மட்டியாலும் அடித்தே
உறுதியாக்கிக்கொண்டேன்.

சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்
அழகாய் வார்த்தெடுத்த
நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!!

ஹேமா(சுவிஸ்)

என் எல்லா நண்பர்களுக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வணக்கங்கள் !