*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, July 24, 2011

1983 - 2011 கருப்பு ஆடி...

துண்டித்த தலைகள்கூட
புன்னகை சிந்தின 83ஆடியில்
நான் நினைப்பதுண்டு
"எனக்குண்டான வாழ்விது
என்னை வாழவிடு"
கெஞ்சுவதாக இல்லையா அது.

ஒட்டிய வயிறோடு
உயிர் விட்டிருந்தன
பசியோடு இருந்த
தமிழ்க் குழந்தைகள்
பெற்றவர்களின் கைகளில்.

1953 தொடக்கம்
சிங்கள
ஆட்சிக் கொடியெங்கும்
கொட்டிச் சிதறிக்கிடந்தன
தமிழ் இரத்தம்.

83 ஆடியில்
போதாத
சவப்பெட்டிகளுக்காக
காத்திருக்கவில்லை
தமிழ்ப்பிணங்கள்
தம்மைத் தாமே
அடக்கம் செய்துகொண்டன
கண்களைத் திறந்தபடி.

ஆடி இருளில்
வருடங்கள் கடக்கையிலும்
மெழுகுதிரிப் பொய் ஒளியில்
என்ன கொண்டு வந்தாய்
இந்த வருடத்திலாவது என்றபடி
காத்திருக்கின்றன அவைகள்
கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.

உங்கள் நினைவு நாளில்
வேண்டுமென்றே வைத்த
உள்ளூராட்சித் தேர்தலில்
வெற்றி தமிழுக்கே
என்று சொல்வதைத் தவிர
இப்போதைக்கு வேறொன்றுமில்லை
பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 22, 2011

சொல்லா சாபமா...

சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்...

நீர்த்த உணவுக்குள்
ஒட்டாமலிருக்கும் உணவாய்
தனித்தேயிருப்பதாயும்
நாளைய வெக்கையில்
நசிந்து நாறப்போவதாயும்...

தொலைத்த கணங்களில்
மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
இம்மியளவாவது
இம்சிக்காமல் சாவு வராது என்றும்...

மூலை முடுக்குகளில்
இடுக்களில்
மீனின் செவுளாய்
கண் காணாத சாபங்கள்
உள்ளிருப்பதாயும்...

கோடுகளுக்குள்
நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
பிறழ்வுகளுக்குள்
அகப்பட்டேயாவாய் என்றும்...

சிவப்புச் சட்டைபோட்ட
உன் கருத்த வேண்டுதல்கள்
இப்போ விலகியே இருந்தாலும்
இறுதியில் உன்னுடனே
தொடரும் என்றும்....

இன்னும் இன்னும்...
சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்
பாவியவள்!!

நன்றி உயிரோசை.ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 12, 2011

கூடு...நீ !

காத்திருக்கும் தூரம்
கைக்கு
எட்டக்கூடியதேதான்
கூடும் உன்னதுதான்
என்றாலும்
நீ...
தொடுவதாயில்லை.

ஒற்றைச் சிறகு
முளைத்தபோதும்
பின் பறக்கும்போதும்
கண்டு பிரமிக்கிறாய்
ரசிக்கிறாய்.

கோதுடைத்த அன்றே
கொஞ்சித் தலைகோதி
நட்பாய் அன்னையாய்
ஆசானாய் அன்பாய்
அனைத்துமாய் ஏந்திய
ஒருங்கணைத்த உறவாய்
நீ எனக்கு.

சிறகும் பறத்தலும்
வேண்டியிருக்கவேண்டாம்
உன் சிறகால் கட்டிய கூடே
போதுமாயிருந்திருக்கும்.

இனியும்...
இன்னும்...
காத்திருக்கும் கூடு
என்னோடு கூட
உன்னோடு கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 04, 2011

கவிச்சோலைக்குள் நானும்...


எல்.கே கார்த்திக் அவர்கள் தனது கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம,குறுந்தொகை போன்ற சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை வடிவம் கொடுத்துப் பல பதிவுகள் போட்டிருந்தார்.அதன்பின்னர் போட்டியாகவே எழுதக் கேட்டிருந்தார்.நானும் கலந்துகொண்டேன்.எழுதிய ஏழ்வரில் என் வரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.மனதிற்கு மிகவும் சந்தோஷம்.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பாடல்

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

நான் எழுதிய வரிகள்

சேரன்
எதிர்த்த படை
தேர் காண
பிளிறும் வீரயானை
நீட்டிய தந்தம் நசுக்கும்
வெண்குடை - இங்கு
மதி தவற
மாறித் தெறித்த திங்களென
தூக்கிய தந்தம் தவறாய்!!!


விளக்கம்

"தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது.அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும்,நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது..."என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

ஹேமா(சுவிஸ்)