*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Thursday, May 21, 2015

ஒரு யுகமழித்த வழி...

இதே.....
இரவாய்த்தான் இருக்கவேண்டும்
குரைத்தலின் ஓசை
கூடியும் குறைந்தும்
பாதச்சுவட்டை அழித்தழித்தே
கடக்க வேண்டியிருக்கிறது.

அடர்ந்த கிளைகள் அடவெடுக்க
முகிலின் திணவெடுத்த உரசல்கள்
காம்புகளில் உருண்டு
நர்த்தனமிட
மாறிய உருவகத்து
கவிதை வார்த்தைகளாய்.

எம்பிய காற்றுச் சருகுகள்
குவளையாக்கிய
வல்லினக் கனவுகளை
சல்லடையாக்குகின்றன
அமானுஷ்யங்கள்.

வெறுமனே சிக்குண்டு கிடக்கும்
சிலந்திகளுக்கு
ஆறுதல் இப்பொழுது.

கூடுதங்கும் பறவைகள்
மரங்களின் வேரறுத்தல்
பகல்களில் தானென
வேரூன்றும் கன்றுகளின் நிழல்களில்
பசியாறத் தொடங்கியிருக்கின்றன.

நம்புங்கள்
கணநேரத்தில் விடிந்துவிடும்
பயணங்களில் சந்திக்கலாம் நாம்
நீயும் நானும் கூட.

விடிகாலை மணியோசை
பகலைச் சமைக்கத் தொடங்குகிறது
சூரிய வெக்கையில்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Monday, May 18, 2015

அடங்காதவதர்கள் மாதமிது...

நீறாக்கப்பட்டது நிமிடத்தில்
தமிழனின் நிம்மதி
முள்ளிவாய்க்கால்
நீங்கா நினைவு நாளின்று.

கடக்கிறது காலம்
காவுகொடுத்த அக்கணம்
கடப்பதில்லை இம்மியளவும்
தமிழர் மனங்களில்.

இரத்தவாடைப் பூக்களை
தலையிலும் சூடாமால்
இறைவனுக்கும் படைக்காமல்
மண்கிளறி
மனப்பிறழ்வானவளாய்
தீ வார்த்துக்கொண்டிருக்கும்
என் குழிக்கு நான்.

தொலைத்த அவர்களின் குறிப்புக்கள்
வானுக்கும் மண்ணுக்குமாய் தொங்க
வழியேதுமின்றி
வாய் சளசளக்கும் விமர்சகர்கள்.

குடியிருக்கும் இடத்தில்
கோவில் வைப்பவர்கள் நாங்கள்.

இருப்பைக் கலைத்து
எல்லைகளை நகர்த்தி
கைகளில் எரிகற்களோடு
குற்றங்கள் ஏதுமற்ற மனிதர்களென
பலியிடும் விலங்குகளுக்காய்
வழக்காடும் அவர்கள்
கோயிலை வைத்துவிட்டு
குடிகளை இருத்துபவர்கள்.

நினைவு விளக்கில்
நிழல் காட்டும்
என் மக்களின் முகங்களை
உரக்க விசாரித்து
எழுதிக்கொண்டிருக்கிறேன்
பெயர்களை.

எவராலும்
எதுவும் செய்யமுடியாது
என்னை இப்போ!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

மே 18 2015 !

பூக்களை
பூக்களே கொன்றதாய்
பூக்களே குற்றம் சாட்ட
இடைநிறுத்தி
முடிவடையா வாசனைகளை
அடைத்துக்கொண்டது காற்று.

துவக்கைத் தூக்கினாலும்
பொத்திப் பொத்திப் பக்குவமாய்
தன் கதிருக்குள் அடைகாக்கும்
நம் சூரியன் பூக்களை.

சூரியகாந்திகளாய்
கார்த்திகைப் பூக்களாய்
வாடா மல்லிகைகளாய்
மண் மணக்கும்
வான்காவின் காவியமாய்.

கடவுள்கள்
நம்மோடு வாழ்தல் வரம்
வாழ்ந்தோம்
வாழ்கிறோம்.

துவக்கில் பூத்த இப்பூக்கள்
வானிலும்
வரப்பிலும்
தரையிலும்
தண்ணீரிலும்.

அக்காக்களாய்
அண்ணாக்களாய்
தம்பிகளாய்
தமிழச்சிகளாய்
கண்ணம்மாக்களாய்
இசைப்பிரியாக்களாய்
பிரசாந்திகளாய்
விபூசிகாக்களாய்
இப் பூசணிப்பூக்கள்
நம் வீட்டுக் கோலங்களில்.

எப்படி...எப்படி...எப்படி அழைக்கலாம்
இப்பூக்களை...

தீயாய் பூ கக்கும்
துவக்குகளை
கூட்டுப் பூக்களை
களை கொல்லும் புழுக்களை
எப்படி அழைக்கலாம் ?

நீந்தலறியாதவன்
வெளியில் நின்று
மீனை அழகென்பான்
தரையின் நீந்துவான்.

நாமோ.....
நீந்தும்
கடல் வேங்கைகளென்போம்.
மிதக்கும் பூக்களை.

தாங்கியே தேங்கியிருக்கிறது
நந்திக்குளம்
நம் தாமரைகளை
அள்ளிக்கொள்வோம்
சுதந்திரப் பூக்களென
ஒருநாள்....ஒருநாள்.

அதுவரை
ரசிக்கப்போவதில்லை
மகரந்தம் தின்னும்
பட்டாம்பூச்சிகளையும்
பிரயோசனமில்லா
எந்தக்
காட்டுப் பூக்களையும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Friday, April 10, 2015

தொடரும் விதி...

திகட்டத் திகட்ட
போதும் போதுமென
இழப்புக்களை
இரத்த வாசனையோடு
குடித்தவள் நான்.

இழப்புக்களும்
மரணங்களும்
ஒன்றும் செய்யாதிப்போ
மரத்த என் மனம் தாண்டி.

தறித்தது
வீழ்ந்தது
வீழ்த்தியது
மரமா
மனிதனா
மனமா ???

கடல்
தாண்டியும்
உயிரை
உரிமையை
மயிராய் மதிக்கும்
மாக்கள் மத்தியில்
இவன்
பிழைத்தென்ன பயன்.

நினைவின் நாசியில்
நைந்து நாறிய
ஈழத் தமிழனின்
வாசம் குறையாமலே.

அமிழ்தென
நெஞ்சை
நனைக்குமொரு
மழைத்துளி
தமிழை
தமிழனைத்
தாங்கும் வரை...

உலகம் மாறாது
தொடரும்
நஞ்சின் வீச்சம்
நமக்கே நமக்காய்!!!

தமிழகக் கூலித் தமிழ்த் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல்...

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 17, 2015

வேண்டுமொரு கண் திறந்த புத்தன்...

பழைய சொற்களோடுதான்
அவர்கள்
ஆட்கள் மாறிக்கொண்டு
எங்களையும் மாற்றாமல்
மாற்றிக்கொண்டு.

பிரகாசமாய்
புத்தனைக் கண்டேன்
பாதுக்காக்கும் தன் பல்லால்
பழைய சொற்களை
அவர்கள் தீட்டிப் புதிதாக்க
வாய்திறவா
தன் சொற்களோடு
மத்தியில்.

நித்திய பாவனையில்
கண்ணை மூடி
பெருங்காதுகளில்
சேமித்த படிமங்களோடு
தனித்திருந்தான்.

எப்போதோ....எப்போதோ
புத்தன் கண்ணொளி பறித்து
பரணில் பதுக்கியதாக
தேசியம் பேசும்
ஒரு பிக்கு.

சமத்துவம் சொல்லும்
'மைத்திரி' க்களும்
'சிறீ' க்களும்
புத்தனின் ஒளிவட்டத்தை
தம் தலையில்
பொருத்தியிருக்கிறார்கள்.

துவக்குகளற்ற தேசத்தில்
'துட்டகைமுனு' க்களும்
'காமினி' க்களும்
'ரணில்' களும்
இந்திய
'மோடி' க்களும்
மாடி உலகமும்
புத்தனை பேசவிடாமல்
பேசிக்கொண்டிருக்க...

அவன் கண்மூடியபடிய
திறந்த பெருங்காதுகளோடு
எப்போதும்போல
வேறு வழியின்றி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 06, 2015

மரணத்துள் வாழ்பவர்கள்...

'வடக்கில் வசந்தம் சொந்தங்களே
பாதுகாப்பேன்
பயம் வேண்டாம்'

அழித்த பேயே
அறங்கூவி
அச்சம் விட்டு
அசிங்கமாய்
நம் வீட்டு வாசலில்
வெட்கமற்று
ஓட்டுப் பிச்சை கேட்டு.

நம் முகம் மூடி
மூடுண்ட வட்டத்தில் அமுக்கி
சாமர்த்தியமாய்
இரத்தம் குடித்த பேய்கள்
பிறழ்ந்த நாக்குகளோடு
நம்முன்.

இடுங்கிய மனங்களில்
நடுக்கம் இன்னும்.

பிசாசுகள்
துளைத்த கதவுகளில்
பூட்டில்லை இப்போதும்.

மறக்கவில்லை
வானத்திற்கும் பூமிக்குமிடையில்
நின்று நிலைத்த விழிகளை.

எங்கள் நகரங்கள்
ஏன் எரிந்து போயின ?

கோயில் முதல் நூல்கள்வரை
கொள்ளை போனது ஏன் ?
ஏன் எங்கள் குஞ்சுகளை
குண்டுகள் பொசுக்கின ?

இரத்தக்குழிகள் பூத்ததே
பெருமூச்சின் குமிழிகளை
எப்படி எப்படி ஏன் ஏன் ???

தெரியாதாம் தமக்கொன்றும்
'தம்ம பதம்' கூட
மறந்து போயிற்றாம்
புத்தனை எரித்த நாளிலிருந்து.

எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே
மறந்துவிடலாம்
ஆனால் ஆனால்...

நாச்சாரம் வீடுகளுக்குள்
வெயில்கூட தீய்க்காமல்
பொத்தி வளர்த்த
குழந்தைகளின்
கொங்கைகள் அறுத்து
போரென்று எரித்ததும்
போவென்று பரதேசம் துரத்தியதும்
பொங்கிய பாத்திரம் உடைத்ததும்
சிதறிய பருக்கைகளையும்
எப்படி எப்படி ???

பேயாளும் திருநாட்டில்
திரு திரு விழிகளோடும்
திருவோட்டோடும்
ஓட்டுப் போடும்
மிஞ்சிய திரு தமிழன்!!!

”தேர்தல் காலம் “ 08.01.2015

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, December 19, 2014

பொம்மைகளற்ற பூமி...

போர்களின் துவம்சம்
முடியவில்லை
மண்புயலில் அமிழும்
கைக்குழந்தைகளோடு.

வேகத் தெருக்களில்
கையசைக்கும் சாத்தானை
வறுமையை
காற்றை
மழையை
எதிர்ப்படும் கடவுளை
அறியப் பிரியப்படவில்லை.

மனம் மரத்தாயிற்று
எப்போதோ.

அழுகுரல்களும்
இரத்தப் பிசுபிசுப்பும்
இன்னும் பிற ஞாபகமூட்டும்
வாசனைகளும் நாற்றங்களும்
நாசியோடு நின்றாயிற்று.

நாட்குறிப்புகளின்
விளிம்புகளிலும்
எச்சங்களின் சேடம்.

ஒரு வேளை
போரினால் இறந்த
குழந்தையொன்றறியலாம்
பாவமும் தர்மமும்
அதன் கொள்கையும்
மதம் சாரா
புதுக் கடவுளின் வருகையையும்.

போர்களும்
மதவெறித் துவேசங்களும்
கொன்றுவிட்டே செல்கின்றன
குழந்தைகளை.

எதற்கும் அசைவதில்லை
இப்போதெல்லாம் நான்
சத்தமிட்டுக் கூக்குரலிடுகிறது
தெருமுனை விலங்கொன்று!!!

 குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, November 23, 2014

முற்றில்லா நம் நாட்கள்...

அடித்துச் சொல்கிறார்கள்
போர் இல்லையென்று.

ஏன் இன்னும் ஊருக்குள்
இராணுவம்
சுற்றிவளைப்பு
இறக்கவே முடியா
பாரப் பொதிகளுடன்
கழுதைகளாய் நாம் ?

உச்சுக்கொட்டும்
அவர் அழைப்பு
வீடில்லா நாய்களாய்
மொழியில்லா நாய்களாய்
தலைவனற்ற தேசத்தில் நாம்.

பதுங்கு குழிகள் மூடினாலும்
சீராகாப் பள்ளிகளும்
நீக்கா முள்வேலிகளும்...

தொடரும்
கேள்விகள் பதில்களும்
விசாரணையும்
மண்டியிடுதலும்...

வஞ்சம் தீர்க்க
வடிவான பொறிகளை
வாசனைப் பூக்கள் மறைக்க
பசிக்காமலே புசிக்கும்
உடல் முழுதும் புணர விரும்பும்
புத்தமக(கா)ன்கள்.

யார் சொன்னார்கள்
போர் ஓய்ந்ததென்று ?

கருவறைக் காய்ச்சல்போல
யாருக்கும் தெரிவதில்லை
எம் அவிச்சல்!!!

புகைப்படம் - ஜெரா Jera Thampi

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, November 07, 2014

பதுளையிலயும் புழுவானான் தமிழன்...


முத்தின மூணு இலையை
முணுமுணுக்காம
தோளில சுமந்து சுமந்து
சுகமா வாழக் குடுத்திட்டு
சொர்க்கம்ன்னு
சாணி மெழுகி
நாலு மூங்கில் கம்பு நட்டு
வீடாக்கிக் குந்தும் வச்சு
குபேரன் நினப்பா
வாழ்ந்திட்டு இருந்தவங்களை
மனுசரா மதிக்காம
மண்ணுக்குள்ள மூடிட்டாங்க.

சிராய்க் கட்டையா
விறைச்ச கை கால்ல
பாம்பு குடிச்சு
அட்டை குடிச்சு
மிஞ்சின ரத்தத்தை
கொஞ்சமும் அஞ்சாம
மிச்சத்தையும் குடிச்சுப்புட்டு
குஞ்சுகளை அநாதையாக்கி
எத்தனை பேர்ன்னு
எண்ணிக்கைகூட தெரில்லன்னு
தமிழனுக்கு
இதுதான் விதின்னு
பதுளைல மூடிட்டாங்க.

நாசமா போன இயற்கைகூட
எப்பவும்
நம்மளுக்கே நாசம் செய்து
மனுசப் பச்சயம் தேடிப் புதைக்குது
அழிச்சவங்க வருங்காலம்
வளமா வாழ.

மாரியம்மா பாப்பாத்தி
வெங்கடாசலம் காத்தையா
தங்கம்ன்னு
பொன்னு பொன்னா
புசுக்குன்னு வெத்தில எச்சி துப்பி
பொய்யில்லாக் கழுதைங்க சிரிச்சது
போக்கடி அம்மனுக்கும் பிடிக்கல.

குண்டு போட்டுக் கொன்னாங்க
ஈழத் தமிழன்னு.

இப்ப......
இலங்கைக்கே
லாபம் தரும்
இல்லாத ஏழைங்களை
அழிஞ்சிடுவாங்கன்னு தெரிஞ்சுமே
காப்பாத்த மாட்டாம
தழையாக்கிப் புதைச்சிட்டாங்க.

தேயிலை பறிப்பவங்க அடுப்பில
கடநிலைத் தேத்தண்ணியோட
மனசும் சேர்ந்து கொதிக்கிறதையும்
கண்மாயைப்போல கண் கலங்குறதையும்
கண்டாங்களா கதிரையில குந்தினவங்க.

ஏகாதிபத்தியக் காரங்களுக்கு
நம்ம குழந்தைங்க
நவீனக் குழந்தைகளா ?
குப்பைகளா ?
தீட்டுப்பட்ட சாதிகளா ?

வாழணும்ன்னு
விதிச்ச விதி சொல்ல
தமிழனா பிறந்த
விதி விதிச்ச சொல்ல
நாசமாப்போன சாமியை
நாக்கில வந்தமாதிரிக்கு
திட்ட வருது.

ஓட்டுக் கேக்கும்
கும்மாரிகளுக்கென்ன
கொன்னு புதைச்சிட்டாங்களே
விருத்தி கெட்ட தமிழனை
’பதுளை’யிலயும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, October 06, 2014

குருதி வழிகின்ற குறியீடுகள்...

குழந்தை வெள்ளையாகவும்
கண் நீலமாக இருப்பதாகவும்
பலத்த சர்ச்சை அவர்களிடம்.

இருள் மண்டிய
கர்ப்பத்தின் திரவத்தால்
மூடப்பட்ட குழந்தைக்காக
பயம் கொள்கிறது
சுற்றமும் சூழலும்.

தந்தைக்கு
மெல்லச் சந்தேகம்.

ஆழ்கிடங்கிற்குள்
ஆதவன் கண்படா
பச்சையமற்ற அவிந்த குழந்தைக்கு
உயிர்ச்சத்துக்கள்
கிடைக்காக் கவலை தாய்க்கு.

மறுத்தலும் குறுகுறுத்தலும்
வேண்டாம் பிரச்சனையென்று
ஒதுங்கிக்கொள்கிறார்கள் பலர்
பேசப்போனால் வில்லங்கமென
ஒத்திவைக்கிறார்கள் சிலர்.

தெருவோர மதிலில் ஒருவன்
எதையோ எழுத முயற்சிக்க
தீவிரவாதியென்ற பட்டத்தோடு
காணாமல் போய்விடுவானென
கரிக்கட்டை பறிக்கிறார்
பாவப்பட்ட தந்தையொருவர்.

ஊடகவியலாளன் தன் குறிப்பில்
"அவிந்த குழந்தையும்
அதன் அவதியும் அங்கீகாரமும்"
எனத் தலைப்பிடுகிறான்
கைதாகும் சாத்தியக்கூறுபற்றி
அவன் பயந்திருக்கவில்லை.

கர்ப்பம் விட்டு வருமுன்னமே
சர்ச்சைக்குரிய
குழந்தையாகிவிடுகிறது அது.

எழுதுபவர் எழுத
உறவினர்கள் குசுகுசுக்க
வைத்தியர்கள் ஆராய
தந்தை முகம் சுளிக்க
தாய் தவிக்க
தூரங்கள் துண்டித்துக்கொள்ள
பிறக்குமுன்னமே
தோல் முளைக்காமல்
பிறக்கலாமோவென
எண்ணிக்கொள்கிறது அக்குழந்தை.

நாடுகடத்தப்பட்ட சூழ்நிலையில்
அதிகாரிகளால்
சட்ட ஒழுங்குகளுக்குள்
மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறது
அக்கர்ப்பம்.

நாடில்லா அகதிகளென
முத்திரை குத்தப்பட்டு
பிறக்கவும்
இறக்கவும் விரும்பா
உடலைச் சுமக்கிறது
ஒரு தாயின் வயிறு.

அந்நியமாக்கப்பட்ட
அது
அதுவாகவே
அடங்கிக்கொள்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

Friday, September 26, 2014

திலீபன் தினம் 2014...

வறுமையில் சாகவில்லை
வாடவைத்து
வஞ்சத்தில் சாகடித்தது.

வயிற்றில் பசி அல்ல
மனதில் விடுதலைப் பசி.

விழுந்தாலும் முளைப்பேனென
யாசகம் கேட்டிருந்தவன்
தலையில்....
ஏன் நம் தலையிலும்
இடி வீழ்த்தியது
காந்தி தேசம்.

இருக்கட்டும்
இருக்கட்டும்

கற்பனையில் வாழும்
குழந்தைகளாக
மணல் வீடு கட்டி அழித்த
அண்ணா அக்காக்களாக
இருந்துவிட்டு
அப்படியே சாவோம்.

மகிழ்ச்சிதானே
இப்போ ?!!!

குழந்தைநிலா ஹேமா !

Sunday, September 21, 2014

தலையாட்டிகள்...

யுத்த பூமியில் இரத்த ஓய்வு
ஆனாலும்
அழுத்தும் அதிகார அரசியல்...

காவலில்லா பூமியில்
காலம் பிரசவித்த
தலையாட்டி பொம்மைகள்
தாளடி நிலம் தடவி
உறவுகள் தேடிக் களைத்து
தாவளக் கழிவில்
தான் விளையாடிய
உடைந்த பொம்மைத் துண்டோடு.

கனத்தளவும் முடியாமல்
கந்தக நெடிக்குள் வினாக்களும்
குண்டுகள் துளைத்த தூண்களுக்குள்
ஒளிந்த பதில்களுமாய்.

விதி வரைந்த கரிக்கோடுகள்
சுயமிழந்த வலியோடு
பொம்மைக் குடிலுக்குள் நிலமளைய
தம் வேலி தின்னும் ஆடென
சாக்குருவியாய்
அழவைக்கிறார்கள் எம்மை.

அப்போதும்
முழுமையான என் கோபத்தையோ
வெறுப்பையோ
அதிகாரத்தையோ
அலட்சியத்தையோ காட்டமுடியாமல்
மாறாத தலையாட்டலோடுதான்.

பொம்மைகளுடன் படுத்து
பொம்மைகளுடன் கட்டிப்போட்டு
பொம்மைகளுடனான வாழ்வு
பொம்மையாய்ப் பிடிக்கவில்லை.

கொடூரமாயிருக்கிறது
ஒவ்வொன்றிற்கும்
பொம்மையென தலையாட்ட
பிடிக்கவில்லையென
உணர்த்தவோ சொல்லவோ
முடியாதிருப்பதன் சாபம்.

இன்றளவும்
நான் தலையாட்டிக் கொண்டேதான்.

காட்சிகளை மாற்றிக்கொண்டு
அவர்களும்
அப்படியேதான் இன்றளவும்!!!

பனிப்பூக்கள் பத்திரிகையில் பிரசுரமானது
www.panippookkal.com
நன்றி தியா......
Rasaiya Kandeepan

குழந்தைநில ஹேமா !

Thursday, August 14, 2014

குழந்தைகளற்ற தேசம்...

நிலாக்குட்டி....
உனக்கென்ன
விடுமுறையும் அதுவுமாய்
குட்டியானை
அதுதான் உன் அம்மாமேல்
உருண்டு பிரண்டு சண்டைபோட்டு
பிஸ்ஸாவும் சினிமாவுமாய்
பொழுது போக்குவாய்.

நிலா....
மூச்சை முழுதாய் உள்ளிழுத்து
மெல்ல அனுபவித்து
வெளிவிடுவது போலானது சுதந்திரம்
நிச்சயம் நீ அனுபவிப்பாய்
வேற்று நாட்டில் பிறந்தாலும்.

நம் ஊரிலேயே எத்தனை முறைதான்
அடையாள அட்டையை
முழத்துக்கு முழம் காட்டுவோம்
எப்போதாவது எப்போதாவதுதானே
இங்கு அந்த அடையாளம்
தேவைப்படுகிறது.

அழிந்த வீதி
இறந்த ஊர்
அலையும் ஆவிகளின் அழுகுரல்
நச்சுக்காற்றைச் சுவாசிக்கும்
உன் இனச் சகோதரர்கள்
போரில் இறந்த
முதல் விரலையும்
கடைசி விரலையும் கோர்த்த
உன் அண்ணா அக்காக்கள் வாழ்ந்த
அடர்ந்த சூன்ய பூமி
அடையாளக் கல்லறைகள்கூட
அற்ற அரூபம் அறிவாயா ?

குழந்தைகளை அழிப்பதே
அடக்குமுறைக்கான யுக்தியாய்
ஆயுதமாய் கையாளுகிறார்கள்
நிலா இப்போதெல்லாம்.

இனத்தை அடியோடு ஒழிப்பதை
சரிவரச் செய்கிறார்கள்
காஸாவிலும் ஈழத்திலும்
நல்லவேளை நீ
அங்கு பிறக்கவில்லை.

கோவிலில்லா ஊரில்
குடியிருப்பதுபோல
குழந்தைகளில்லா
ஊரும் வீடும்
எப்படியிருக்கும்
நிலா ?

நீ கேட்ட பார்பிக் கிலுக்கி
அங்கு இனிக் கிடைக்காது
பார்பிகளும் தம் தாய்களை
சூழ்ச்சி அரசியலிலிருந்து
காப்பாற்றும் கவலையில்தான்.

தாயின் குறியில் குண்டு வைத்து
கருவிலேயே கொன்றார்கள் ஈழத்தில்
காஸாவில் ஒவ்வொரு இஸ்ரேலியனும்
குண்டாகி
கொன்று தின்கிறான் குழந்தைகளை.

நிலா....
உனக்கு அம்மா சொன்னாளா ஒரு கதை ?

அரசியல் கிலோ என்ன விலையென்று
ஏதுமேயறியாச் சிலரையும்
இராவணுவக் குண்டுகள் துளைப்பதுண்டு
உன் தாத்தாவைச் சிதறடித்ததுபோல.

ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும்
அப்படித்தான் நிலா
உன்னைப்போல
பாலும் சொக்லேட்டும்
அம்மாவின் மடியும்
ஒரு கரடி பொம்மையுமே
உலகமாயிருக்கும்
அதற்கெப்படித் தெரியும்
அரசியலும் துப்பாகியும்
இனமும் மதமும்.

கண்முன்னால் பறிகொடுத்து
பதுங்கு குழிக்குள் பரிதாபமாய்
புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள்
குழந்தைகள்
பெற்றுக்கொள்வார்களா இனி ?
சாத்தியமில்லையே நிலா
இப்போதைக்கு.

இன அழிப்பின் உச்சத்திட்டம்
இதுதான் நிலா
அறிந்துவை
நம் இனத்தின் பாடுகளை நீயும்
இன உணர்வு ஓர் நாள்
உன் மனதோடு
கேள்வி கேட்கும் நிச்சயம்!!!

செஞ்சோலைச் செல்வங்களின் நினைவுநாளில்....

குழந்தைநிலா ஹேமா !

Thursday, July 31, 2014

நிமித்தமான இரங்கற்பா...

ஒரு மாறுதலுக்காக
யசோதரைகளுக்கு
முள்கிரீடம் அணிய
உத்தரவிடுகிறார்கள்
சித்தார்த்தன்கள்.

போதிமரங்களுக்குப் பதிலாக
சிலுவைகளை நிலைநிறுத்தி
ஆணிகளும்
அங்கே ஆயத்தமாய்.

நீதியும்
மறுதலிப்பும்
தண்டனையும்
மறுபரிசீலனையற்றே
சிவனின்
இறுக்கிய குரல்வளைகளில்
நீலம்பாரிக்க...

சித்தார்த்தனின் கருணை
பலிக்கான ஆயுதங்களுக்காக
தேர்வெழுதுகிறது
அடிக்கடி
காலாவதியான
திகதிகளில்...

இரக்கம் கேட்டவர்களுக்கு
இரத்தம் கொடுத்து
தற்காலிகமாய்
தள்ளிப்போடுகிறார்கள்
புத்தனாகாமல்
16 முதல் 30 வயதான
விடலைச் சித்தார்த்தன்கள்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 27, 2014

முகவரியில்லாப் புழுதிகள் ...

எனதான முகவரி
என்னிடமில்லை இப்போ
ஒரு முடக்கில்
வைரவர் கோயில் பின்புறத்தில்
என் வீடென ஞாபகம்.

நான் அளைந்த புழுதிகளையும்
கூழாங்கற்கள் நிறைந்த
சிரட்டையையும்
தாத்தா அம்மம்மாவின்
புகைப்படங்களையும்
றங்குப்பெட்டியில்
சேர்த்துவைத்திருக்கும் அது.

ஒவ்வொரு சந்தியிலும் தரித்து
பயணிக்கிறது என் கால்கள்
கை நீட்டி அழைக்கும்
உறவுகளுக்குள்
என் கண்களை
தேடி அலைந்தாலும்
எதுவும் எனதாயில்லை.

பரவாயில்லையென
தொடரும் பயணத்தில்
சந்திகள்
பழக்கபட்டதாயில்லாமல்
கிளைகள் விட்டு
வலம்சுழிவிட்டும்
குச்சு வேலிகளில்
பொட்டு விட்டும்.

வானங்களுக்குள்
தவறவிட்ட
சிறு சிறகுகளுக்காய்
என் தேடல்கள்
நனையும் கண்களை
காயவைத்தபடி.

பற்றி எரியும் என் மனம்
குரங்கு வம்சமாய்
காற்றை
எரித்தபடி
முடியாத தேடல்களோடு
சந்திகளில் மட்டும்
நிறுத்திப் பின் தொடர்கிறது
கால்கள் புதைய!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 16, 2014

எவனோ ஒரு மனிதன்...

இறப்பைப் பசித்திருக்கிறேன்
எவரும் கவனிக்கவில்லை
கடல் தின்னும் அலையேதும் கூட.

பெருமூச்சின் சுவரில்
களைத்திருக்கிறது ஆன்மா
கால்களில் கண்களையெழுதி
உயிரிழை பொரித்த துளையில்.

ஆதியிருப்புத் துளிகளை அளாவி
புல்வெளிகளை நிரப்பிவிட்டு
உந்தித் திரும்புகிறது
உதிரப்போகுமொரு இலை.

மீசையில் ஒட்டா இனிப்பை
காவிச் செல்லும் எறும்பின்
புற்றைச் சிதைக்க
பாதையோர ஜந்துக்கள்.

புத்தனுக்குமுன் பிறந்திருந்த
புத்தனை
யாரும் இத்தனை
வதைத்ததில்லையென
அரசமரங்களின் கிசுகிசுப்பு
மெலிகுரலில்.

இனவிருத்திக்காய்
பகலில் மூதாதையருக்கும்
இரவில் இளையோருக்குமாய்
உணவிட்டுப் பிண்டம் வளர்க்கிறது
பலியாட்டுக் களவிளையாட்டோடு
இறப்புக்கான பசி !!!

ஹேமா(சுவிஸ்)

"எவனோ ஒரு மனிதன்'' என்றொரு கவிதை எழுதவேணும் என்னால் ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு வாய்க்கலாம். புனைவுகள் இல்லாமல் எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது மிக அரிதான வாய்ப்பல்லவா..!
Vasu Murugavel.... நன்றி வாசு

Saturday, July 12, 2014

ஈழம் இப்போ காஸா...

நிலா...நீ
கனடாவில்
காவலரண்களற்ற பூமியில்
எண்ணங்களை
விரித்துப் பறக்கவிடுகிறாய்
ஓவியமாய்.

எனக்கும் ஆசை
வானம் கீறி
பஞ்சுத் தேரைப் பறக்கவிட.

ஆனால்...
இங்கும் (ஈழம்)
இஸ்ரேலிலும்
கடத்திப்போகிறது
காவல்களே
பறவைகளையும்

வானத்தையும்.

பதுங்குகுழிப் பாம்புகூட
பாவம் இவர்களென
ஒதுங்கி ஊர
இஸ்ரேலரின் துவக்குகள்
இரக்கமேயில்லாமல்.

இலை தறித்து
கிளை தறித்து
அடிமரம் தறிப்பதைவிட
வேர்களைத் தறிப்பதுதான்
முழு அழிப்பின் தந்திரம்.

அம்மாவின் மார்பை
கடத்திவிட்டார்கள் நிலா.

பாலிரங்கும்
உறிஞ்சிய மார்பில்
இலையான் மொய்க்க
அம்மா அழுதுகொண்டிருப்பாள்
எங்கோ ஏதோவாய்
பசியோடு பதுங்கியிருக்கும்
என்னையெண்ணி.

சுடலை மாடர்கள்
குழந்தைகளைக்
கொன்று காவுகையில்
பாரம் சுமக்காதோ மனம்
ஒருகணம்.

என்னையும் கீறிக்
காற்றில் பறக்கவிடேன்
நிலா ஒருமுறை.

தூரம் தின்னும்
நம்பிக்கைகளைச் சுமப்பேன்
உதறிச் சிதறுமுன்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, July 05, 2014

கரும்புலிகள் நாள்...

கருப்பொன்றும் இருட்டல்ல
கருப்புடையும்
வெள்ளை மனமுமாய்
நம்முள் வாழும்
வரலாற்றுத் தெய்வங்களின்
வண்ணமது.

கொள்ளையடிக்கும் மண்காக்க
வெந்து வெடித்தவர்
சிந்தும் சதையைக்கூட
சிநேகிதர்கூடக் காணாமல்
சொந்த மண்ணில்
சாம்பலோடு சங்கமித்தவர்.

ஈழம்தான் வாழ்வென்றார்
ஈழம்தான் கனவென்றார்
சாத்தான்களோ...
கனவுதான் ஈழமென்றார்
கனவுகளை ஒத்திவைத்தார்.

காலம் பதில் சொல்லும்
நமக்கும்
அவர்களுக்கும்.

கருப்புக் கடவுள்களை
நினைப்போம் தொழுவோம்
மறவோம் மூச்சுள்ளவரை!!!

ஹேமா(சுவிஸ்

Sunday, June 29, 2014

மதம் பிடித்த புத்தம்...

ஆடு கடித்து மாடு கடித்து
புல் பூனை கடித்து
மனிதனைக் கடித்து
மதத்தைக் கடித்து....

பள்ளிவாசல் முனையில்
பாடிக்கொண்டிருந்தான்
தெருப்பாடகன் நமந்த நாயிடம்.

இப்போதெல்லாம்
காடுகளே கொல்கிறது
தொலைவானப் பறவைகளையும்
மான்களையுமென
நாயும்....

சூரியனைக் கடித்து
நிலவைத் தின்ற பிசாசுகளென
அவ்வழி பறந்த
ஆட்காட்டியும் அலறியது.

மதக்கிடங்கில்
பேதமற்றுக் கடித்துக்குதறும்
மஞ்சள் நரிகள்
பயங்கரவாதியென்றது புலிகளை
உலகமும் ஆட்டியது
பெருந்தலைகளை.

வீடற்றுக் கல்வியற்று
கோயில்கள் பள்ளிகள்
பாடசாலைகள்
ஏன் கல்லறைகளைக்கூட
தம் நிலத்தில் ஆகாதென
உடைத்தும் சிதைத்தும்
மரக்கீழ் வாழும்
ஆதிமனிதர்களென
புத்தன் தவிர
அத்தனை பேரும்.

வீடற்ற வலிகளும்
வேலி நுழைந்த கதைகளும்
பசியும் பண்பாடழியும் கோபமும்
தெரியுமெனக்கு.

அடங்கிவிடுமா
வீரமும் விடுதலையும்
வேண்டுதல் தலங்கழித்தால்
அடங்கிப்பூத்த கண்ணீரும்
காய்ந்த குருதியும்
வழிகாட்டும்
நமக்கான இருப்பிடங்களை.

தேடிக்கிடைக்காதது எதுவுமில்ல அமீன்
கிடைக்காமலா போகும் எமக்கானது!!!

ஹேமா(சுவிஸ்

Tuesday, June 24, 2014

பிடி நழுவா முகச்சில்லுகள்...

கவித்துவமாய்
மந்திரக்காரியின் அலறல்
என் காலில் கோலுடைத்தபடி.

மஞ்சள் நீரில்
முக்கியெழும்பி
கொம்பில்லா விலங்கு பற்றி
பண் அள்ளித் தெளிக்கிறாள்
கண்ணில்லா
ஆந்தையின் சாம்பலோடு.

அஞ்சி நகர்ந்து
கரம் குவித்த மார்மேல்
மலர்குற்றிய கூனல் கிழவி
கூர்வாளால் திருப்பி
கெக்களித்த கோரமுகத்தில்...

நீ நனைந்து நாளாயிற்று
உன் இதயம் சாக்கடை
உனதல்லா முகமும்
ஈரமில்லா இதயமும்
ஏனுனக்குச் சனியனே...

கோலித் திரும்பிய
கொக்கிப்புழுவென
தாயும் நாயும் காக்கவியலா
உன்னை
திருகுவது தவிர வேறில்லையென
கொக்கரித்து
குரல்வளை அழுத்த...

மண் அழுந்த
மரமாகியிருந்தேன்
வேருக்கு விழிநீர் வழிய
ஊன்றிய கால்களோடு!!!

ஹேமா(சுவிஸ்)