*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, June 02, 2015

என்னூர் இளவரசி...

"கொஞ்சம் கழனித்தண்ணி தாங்கோ
என்ர குஞ்சுகளுக்கு."

ஒரு போதும்
இரங்கியதில்லை தனக்காய்
நாமாய்ப் போர்த்திவிடும்
ஒருபாதிச் சேலை தவிர.

தெருவோரம் உருட்டிவிட்ட
சாராயப் போத்தலென
வெறித்தபடி லட்சியமாயொரு
ஆயாச நடை.

பெருமூச்சோடு
தெருக்கடக்கும் ஒருவன்
தீய்ந்த தேகத்தோடு ஒருவன்
எச்சில் வழிகிறான்
இன்னொருவன்
அவள் பெருமுலைகள்
மூட மறுத்த முந்தானை
முனையிலொருவன்.

உணராப் பிறழ்வோடு
உறைகிறது
உள்மனத் தீக்காடு
கருக்கொண்ட
அவள் தீக்குள்ளேயே.

இருத்தலும் தொலைதலும்
பிரியமென்றால்
ஏக்கங்களின் நிறங்களே
அவளின் நாய்க்குட்டிகள்.

ஒன்று இடுப்பில்
ஒன்று கையில்
இன்னொன்று
வயிற்றுச் சேலைக்குள்ளுமாய்
காவி...

தன் உயிருக்கும்
வாழ்வுக்குமிடையிலான
கருணையற்ற
கடவுளின் மௌனமாய்
நிராகரித்த மனிதருக்குள்
'மனுஷி' என்கிற ஒழுங்கறுத்து
'நாய்க்குட்டி விசரி'யாகி
நடக்கிறாள்
நேற்றின் தடத்திலும்
நாளையின் நவீனத்திலும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, April 23, 2015

கருப்பு வெள்ளைகள்...

மழித்த சொற்களின்
கண்களில் முளைக்கிறது
புது முடிகள் வீரியமாய்
கோணிக் கோணி.

எத்தனை துரோகங்கள்
எத்தனை நம்பிக்கைகள்
கடவுள் மீதும்கூட
யாருமறியவில்லை.

'ஆசை விட்டெறி'
அறிவித்தவன் புத்தனல்ல
வறுமை துரத்தும்
போதிமரத்தடி
பிச்சைக்காரனும்தான்.

புன்னகைத்து முகம் நிமிர்த்தி
வெட்டப்பட்ட விரல்கள்
வடிவான செம்பூக்களாய்.

அறுக்கத் தொடங்கியாயிற்று
வெட்கம் முதல்
வீண் கர்வம் வரை.

கடும் மௌன விரதத்தோடு
உயிர் உறுப்பின் முதல் போணியை
வாரி அள்ளி வீசின
பனி மேடுகளில்
அகல விரிந்த பனி வாரியல்கள்.

பிளந்த
கடைசிச் சொற்களைத் தவிர்த்திருக்கலாம்
கறள் பிடித்த
வீறாப்பின் வாரியைப் போலவும்
கோணிய சில எண்ணங்கள் போலவும்.

தீராப்பிரியங்களால் அழிவது
எப்படியென்பது பற்றியும்
மெல்லத் தீவாவது
எப்படியென்பது பற்றியும்
ஆராயத் தொடங்கலாம் இனி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 15, 2015

சாயும் சாயல்...

பிறவிச்சுழல் தொலைக்க
என் காலைச் சுற்றியே
மீண்டும் மீண்டும்
முளைத்தெழா ஆழக்குழி.

அதிதியொன்றின்
அநாகரிக வரவு.

கோளகையாய்
கோழையாய்
எரிச்சலாய்
என்னைப்போலவே
எனைச்சுற்றி
முன்னும் பின்னுமாய்...

தோற்றல் விதி
இழப்பும் விதி
வெறியாடும் வேக்காடு விதி
கதியின் விரைவும் விதியென
விருந்தும் பசியுமாய்
தன் நிழலே தன் கழுத்திறுக்க...

தொலைப்பது தோல்வி
தவிர
புதைக்க முடிகிறது
அது சாய்ந்த என் நிழலை
என் காலின் கீழ்.

என் குருதிக்கு
நீயே பொறுப்பெனக் கை நீட்டுமுன்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, April 04, 2015

கனவும் கடனும்...

கண் மூடினால்
கனவுகளில்
கனவுகளைத் துரத்தும்
பிரமாண்டப் பாம்பு
இடிந்து விழும் வானம்
புயல்
போர்
வன்முறை
வறுமை.

இன்றைய புதுக்கனவில்
என்றோ
தாத்தா சொன்ன
ஒற்றைக் கண்ணன்
துரத்த....

ஓடிய திசையில்
ஆழக் குழியொன்றில்
குப்பறத் தள்ளிய
நடு இரவில்
பிஞ்சுக் குழந்தையின்
கரங்களில் தஞ்சமாய்
தூங்கும் கனவில் நான்.

இனிப்புக்கள்
தேவதைகள்
நட்சத்திரங்கள்
பனிப்பாறைகள்
பளிங்கு மாளிகைகள்
மூக்கு முட்டும் வாசனையோடு.
வேண்டாக் கனவுகளை
அடித்து விரட்ட ....

பச்சைத் தவளை
டோராக்குதிரை
சிவப்புச் சிங்கம்
மஞ்சள் நாய்
சிவப்புப் பாம்பு
ஓடும் ஊர்தி
பறக்கும் விமானம்
குட்டிக் குட்டியாய்.

போர் நிறைந்த உலகில்
சிசுக்கள் நசுக்கும் பூமியில்
கை உயர்த்தி
அடிமைப் படா
ஓர் குழந்தை.

சிரிக்கும் கனவை
சிதைக்காமல் இணைகிறேன்
குட்டிப் புன்னகைக்குள்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, March 26, 2015

ஆசுவாசம்...

ஈரூற்றுக் குருதியின் பெருவலியோடு
வானம் கூடடைகிறது ஒற்றையாய்.

இந்நிகழ்வுக்குத் தேவையாய்
கண்களைக் குளிப்பாட்டித் திரும்ப
வானவில் சமைக்கும்
நிறுத்தல் குறிகளின் விளம்பல்.

தேவையற்ற அலங்காரமும்
பரப்பிய பூவும்
தட்டோடு காத்திருக்கும்
பழங்களும் பாவம்.

ஆதிமனிதன் தின்று
போட்ட விதையில்
முளைத்த முத்தக்கோட்பாடு
எச்சிலாய் வழியும்
அக்கினிக்குச் சாட்சியாய்.

ஏன் இத்தனை
ஆயுதக் கண்கள் கொக்கியாய்
இங்கவிழும் ஆடைக்குள்.

அவசியமற்றது.....

கனவுகளைத் தின்ற
இந்த இரவும் முடியும்
போதும்
மிச்சம் மிச்சமென
தாய் சேய் நலமென்பதோடு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, March 20, 2015

எட்டு முத்தங்கள்...

வதை முகாம்களில்
தூர நிற்கும்
முள்வேலியோர
அன்பு முத்தம் !

வானவில்லென
ஏமாறும் மீசையில்
பெருமழையென
வான் முத்தம் !

இரத்தநாளங்களைச் சீராக்க
மென்சகியாய்
வேப்பமரத்தடிக் காற்றின்
மூலிகை முத்தம்!

பூனையாய் பொய்யுடுத்தி
நாசி தேடி
பிரிய மூக்கில்
பால் குடிக்கும்
திருட்டு முத்தம் !

மாராப்புச் சேலைக்குள்
இல்லாத பால்தேடி
பல் செருகி வலிக்கவைக்கும்
பாச முத்தம் !

வனம் தொலைத்த ஓரிறகு
உலர்ந்துவிட்ட இரவுகளில்
வனாந்தரமென மடிசாயும்
உதிரா முத்தம் !

மகோன்னதப் போரில்
எம்பி வீசும் வாளில்
தோல்வி தரும்
வெற்றி முத்தம் !

நெருப்பில் வெடித்த
'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Friday, March 06, 2015

குழம்பி...

வரங்கள் வேண்டியொரு
வானம்
புத்தம் புது நிலவுக்காய்.

கைரேகைகளும் கற்சிலைகளும்
நிர்ணயிப்பதில்லை
கருமுட்டை உடைவதை
தன்னலகே தள்ளி வரும்
உலகுகாண.

முடியும் வாழ்வில்
முடிவற்றதாய் நீளும்
நம்பிக்கை நுனிகளில்
இருந்துகொண்டு
சபிக்கிறேன்
தெருவோர வெளிச்சங்களை.

சிந்தலாம் இன்றோ நாளையோ
சபித்த என்மீது
சில மழைத்துளிகள்
அதில்
எரிவதும் அணைவதும்
என் பொறுப்பு.

இப்போ....
தந்து போகும் இவ்வுலகு
எனக்கொரு பெயர்.

விட்டிலையும் விளக்கையும்
வேடிக்கை பார்த்தவள் நான்
நானே விட்டிலாயும்
விளக்காயும் ஒருநாள்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, January 04, 2015

முகவரி தேடும் முத்தங்கள்...

பெறுநரற்று
அந்தரத்தில் அலைகிறது
வான் மண்டலமெங்கும்
மெல்லிய முத்தங்கள்.

விசும்பலை
வேட்கையை
அன்பை
ஆசையை அடக்கிய
அட்டைப் பொதிகளுடன்.

காதலன் காதலியின்
பூர்த்தியற்ற வார்த்தைகளை
ஒரு தாயின்
அடிவயிற்றுப் பிரார்த்தனையை
ஒரு முதுமையின் அதீத அன்பை
ஒரு சிறுவனின் வேண்டுதலை
ஒரு இளம்பெண்ணின் இயலாமையை
ஒரு கடிதத்தின் அழுகையை
ஒரு கடவுளின் ஆற்றாமையையும்கூட
முத்தமாக்கி
உருட்டிவிட்டிருக்கலாம்.

ஆதூரத் தழும்புகளடைக்க
ஆதங்கங்கள் தேற்ற
இம்முத்தங்கள் களிம்பாகலாம்.

தனக்கான முகவரியடைய
வேண்டிக்கொள்வதைத் தவிர
வேறென்னதான் செய்யலாம்.

கேட்கிறதா
வெறும் கலயம் துளாவும்
ஒரு குழந்தையின்
அகப்பைச் சத்தமாய்
அலையும்
அம்முத்தங்களின் விம்மல்கள்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, January 02, 2015

இன்னும் ஒரு வருடம்...

வீலென்றழற
பிரசவித்துக்கொண்டது காலம்
இன்னொரு வருடத்தை.

பிரார்த்திக்கிறது
தனிமையும்
அறையின் மௌனமும்
பேரிரைச்சலும்.

பிறழ்வான ஒருவர்
கடலறியா மீன்
நெகிழிமரப் பறவை
உபவாசமிருக்கும் ஏழை
தீராந்திச் சுவரொட்டி
துருவேறிய அக்காலத்தை
விரட்டியடித்திருக்கலாம்.

புது வருடத்தின்
அலுவல்கள் கையழுந்த
நெளிகிறது ரேகைகள்.

இறுதியாய்
கசிந்த வார்த்தைகளில்
உடைபட்டுக் கிடக்கிறது
வாசல்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, December 22, 2014

இருட்டு இரவு...

முயல்குட்டியென
மிரட்சியுடன்
மிழற்றிக்கொண்டிருக்கிறது
ஸ்தலவிருட்சமாய்.

தொங்கு சதைகளில்
எதுக்களித்து
தெறித்த வாந்திபோல
முகம் சுளித்தாலும்
வயசுப் பொத்தல்கள்
தூர்வழி தெந்தனமாட....

பூக்களற்ற காலத்தில்
தேனும் வண்டுகளும்
பனிகுடைந்து
நுனிப்பாதம் விறைக்க
வெண்சுருட்டுப் புகையாய்.

காதலில் நலிந்தவன்
காமத்தால் நனைகிறான்.

துகிலாய்ப் போர்த்த
நுரை பூத்த
இலேசான இரவுகளை
வேண்டச் சொல்கிறான்
புதிரற்ற
ஒரு புதிய இரவிடம்.

கொத்திய கொக்கின்
நீர்வட்டமென வாழ்வை
எப்படிச் சொல்லலாம்
இறுக்கி வதைக்கும்...

பண்பாட்டுப் புடவை நுனியில்
தொட்டில் கட்டியசைத்து
பருவத்தை விழுங்கி
கூழாங்கல்லில்
கட்டித்தூக்கிய காமத்தை....?!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, December 14, 2014

*லாம்* களின் இருக்கை...

இருந்திருக்கலாம்
செய்திருக்கலாம்
கிடைத்திருக்கலாம்
சொல்லியிருக்கலாம்....

'லாம்....லாம்...'

படிமங்களில் நிலையழிந்த
இலையொன்று
தரைதட்டும் தரவாகிறது
சில 'லாம்' ங்கள்.

நெளியும் மண்ணுளியாய்
முன்னெப்போதோ
சேமித்த தர்மம்
கொடுப்பினைகள்
தொட்டு நீளும் கைகளில்
திசையறியாமல்.

மந்தார மரங்களுக்கும்
அலுவல்.

நிலையழிந்து
நிலம் தொடும் உடலுக்கு
உலுக்கித் தர ஏதுமில்லை.

மந்தணச் சொற்களையும்
மந்தாரப் புன்னகையையும் 
சேமிக்கிறது
தியானத்தின் பெருவெளி.

நீண்டு நழுவி
நடந்துகொண்டிருக்கின்றன
சில கொடுப்பினைகள்.

முழம் தள்ளித்
தனித்துறங்கும் குழந்தைமீது
முலைவெடித்துச் சீறும் பாலென.

கானல்நீர்க் குவளை
கொடுப்பினையாவது
கிடைத்துவிட்டுப் போகட்டும்
பட்ட மரத்தடியில்
நினைவுக் கனியுண்ணும்
பறவைக்கு.

அலட்சியமாய்
நிராகரித்துவிடாதீர்கள்
சில அங்கீகாரங்களை
மறந்தும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 11, 2014

இறுக்கிய அனத்தம்...

மனம் சலிக்கிறது
கை விடப்பட்ட நாடோடியின்
கனவுப் பாடல்போல் தனித்து.

பேசித் திட்டி
உக்கிரச் சண்டையின் பின்
வார்த்தைகள்
நிறம் வழிந்து வேலியோரமிறந்த
பட்டுப்பூச்சியின் சிகப்பாய்
வயிறு பருத்து.

குட்டிச் சாக்குகளுக்கும்
தன் தந்தைக்கும்
ஏதுமில்லா முலையை
சூப்பிச் சப்பும்
நாய்க்குட்டிகளுக்கும் நடுவில்
பின்னிரவில் காத்திருக்கும்
சிறுமியாய் சிலசமயம்.

கூடிழந்த பறவையொன்றின்
நகச்சிலிர்ப்பை உணர்வதில்லை
காடு தொலைத்தவர்கள்.

அகமும் புறமும் சலித்து
கழுமரப் பழங்கறை
நனைத்து நுழைய
ஏந்திக் கொள்கிறது
வார்த்தைக் கொலைவாள்.

எச்சரிக்கையற்ற சில நிழல்கள்
பின்தொடரும்
செவிமடல்ப் பேய்களாய் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, December 01, 2014

எனதிந்தப் பனியிரவு...

ஒரு மெல்லிசைப் பாடலிலோ
தாழப்பறக்கும் ஈசலின் இறகிலோ
வலசைப் பறவைகளின் ஒலியிலோ
கூட்டலையும் கழித்தலையும் சிலாகிக்கும்
என் நிலாவிடமோ
பனியடக்கி வேர்த்திருக்கும்
சுவர்க் கண்ணாடிகளிலோ
ஒரு கோப்பை பச்சிலைத் தேநீரிலோ
அடங்கா அர்த்தங்களுடன்
ழுழுவதுமாய் வியாபித்திருக்கிறது
எனதான இவ்விரவு.

ஒத்திகையில்லா வாழ்க்கை
ஒத்திகையில்லா மரணம்
நடுவே
ஒத்திகையில்லாக் கனவுகள்.

பிணங்களுக்கான முகங்கள் அவசியமற்றது
ஆனாலும் மனிதனுக்கு அவசியமானது
உறங்கப்போகும் எனக்கும்கூட.

எத்தனை தரம் தப்பித்திருப்பேன்
இந்த இரவிடம்.

நான் இங்கே இப்போ
தெளிவாயிருந்தாலும்
இப்பனியிரவு
பயங்கரமாயிருக்கிறது.

ஒருவேளை
கடைசியாய் இவ்வறையில்
மனித முகமொன்று இருந்ததென்று
சாட்சியும் சொல்லலாம் எனதிந்த இரவு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

சரி...

தவறுக்குள்ளும்
சரி பொருந்தியிருக்கிறது.

வாழ்வியலோடு
வளைந்தும் சரிந்தும் எழுபவர்கள் நீங்கள்
எப்போதும் சரியைச் சரியென
ஒத்துக்கொள்ளப்போவதில்லை.

மொழியற்று முடங்கிய மனம்
நிலையற்று ஒழுங்கற்றுப் பறப்பதையும்
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எனக்குப் பிடிக்கிறது அந்தச் சரியை.

தோள்தட்டி முத்தமிட்டு
அணைத்துக்கொள்கிறேன்
சரியென்பார் யாருமின்றி
என்னை நானே.

மறைவாய் ஒரு சரி இருப்பதை
ஒருக்காலும் உணர்ந்து சரியென்று
முகம் மலர்பவரல்ல நீங்கள்.

உங்களுகென
ஒரு சரியை வைத்துக்கொண்டு
போராடுகிறீர்கள்.

சிவப்பு மதுபற்றி சுவையறியா
உங்களுக்கு அது சரியல்ல.

நானோ அருந்தி அருந்தி அருந்தி அருந்தி
ஆனால் நீங்களோ
குடித்துக் குடித்துக் குடித்தென்பீர்கள்.

என்னைச் சரியென முத்தமிடுகிறது மது
ஆகச்சிறந்த சரியை போதை என்கிறீர்கள்.

சரியான சரியே என்னை
சரியாமல் வைத்திருக்கிறது.

சரியே
உன்னை மிகவும் பிடித்திருக்கிறது
எனக்கு.

விடு...விடு...சரி...சரி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 12, 2014

பட்டகம்...

நமைந்துகொண்டிருக்கிறது
நிலைக் கண்ணாடி.

அடிக்கும் மழையில் கரைகிறது
வரைந்த
சிவந்த குதிரையொன்று.

உறைபனிக் குதிரைகள்
உண்ண வைத்த கொள்ளில்
கண்களின் அசைவு.

பயன் அறுத்த பின்னும்
எகிறிக் குதித்தோடுகிறது எலிகள்
மீண்டும்
பதப்படுத்தப்பட்ட மண்ணில்.

உடைவதும்
தெறிப்பதும்
கரைவதும்
ஓடுவதுமான....

தூரத்து நினைவுகளைச் சரிசெய்து
களைத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது
இந்த வெண்பனிக் காலத்திலும் வேர்க்க வேர்க்க!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, November 02, 2014

வேறு வேறாய்...

எனக்கு அசதியாய் இருக்கிறது
ஊற்ற ஊற்ற நிரப்பமுடியா
உன் காலிக் குவளை.

நடுங்கும் என் விரல் ரேகை
போதுமெனச் சொல்லா
நிறைவுறா
உன் நிழல்களில் பதிகிறது
பதற்றமாய்.

உதிர்ந்து விழும் விநாடிகளை
பெண்டூலம் உதற
விழுகிறோம் தனித் தனியாக.

அரவமற்ற பொழுதொன்றில்
காத்திருப்போடு
நுரையீரல் சுவர்களை
தட்டித் திறந்தவன்
நீயா இப்படி நிரம்பாமல்.

என்னை நிரப்பி
உன் கையிலேந்த விடுகிறேன்
ஒவ்வொரு துளியிலும்
கனத்தோடு.

கையூட்டில்
உதிரம் வடிந்தாலும்
சிதறாமல்
களவாடிய
முத்தங்கள் ஒளித்த
உதட்டு மடிப்போடு
பொருத்திக்கொள்.

நிரம்பிய துளி நான்
திரும்பிடப் போவதில்லை
இனி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, October 16, 2014

மோட்சம்...

உரசிப்போனது
கரப்பான் பூச்சியொன்று
நேற்று ராத்திரி.

தோழியின் குழந்தை
முத்தத்தோடு
முகத்தில் பூசிப்போன
பனிக்கூழ் சுவைக்காகவோ

இல்லை...

சர்க்கரை பிசைந்த
கையைத் தேடியோ அல்ல
நிச்சயமாய்.

இறந்து கிடப்பதாயும்
தூங்குவதாயும்
பாசாங்கு காட்டி
ஒளிந்து விளையாடுகிறது
பேணிக்கடியில் சிதறிய
சீனித் துகள்களுக்குள்!!!

பேணி - குவளை

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Tuesday, September 30, 2014

சமிக்ஞைகள் மீறிய குற்றம்...

சுவடுகளை
அடையாளப் படுத்திக்கொண்டார்கள்
அவர்கள்.

சிலந்தி வாயில் பூச்சியென
நெருங்கிய
மரண விளிம்பினோரம்
அடர்நீலக் கண்களோடு
அந்நியப் பறவையொன்று
கருக் கலைதல் பற்றி
பேசிக்கொண்டிருக்க...

மின்னிப் பறக்கிறது
சுண்டிய
சிகரெட்டின் துண்டொன்று.

வெள்ளைப் புறாக்கள்
வாழும் கனவுகளோடு
தகட்டுக் குகை முகடுகளில்.

விநாடிக்குள்
கணநேரச் சிலிர்ப்பில்
எல்லாமே ஆகிவிட்டது
யாருமறியாமல்.

வாழ்வு...

புயலடித்தோய்ந்த மணல்
ஆசுவாசப்படுத்தியபடி
அதன் மேலேயே
ஏலாமையோடு படர்வதாயும்...

கருக்கலைந்தவள்
மீண்டும்
முதல்முறை புணர்ச்சிக்கு
ஆயத்தமாவதாயும்!!!

குழந்தைநிலா ஹேமா !

Saturday, September 27, 2014

நாயும் தவளையும்...

மூச்சிளைக்க
எதையோ உளறியபடி
போராடிக்கொண்டிருக்கிறது
அந்த நாய்
எதிர்வாதம் செய்யாத
அந்தத் தவளையுடன்.

ஆற்றுப்படுத்த
ஒரு மல்லுக்கட்டல் போதும்
அதற்கிப்போ.

இல்லை...

களேவர மனதை அடக்க
மெத்தெனெ
சிறு குறிப்பிசை.

மன்னிப்பின்
மன்றாட்ட
பிரதட்சணத் தாவல்.

அல்லது
பின்னடைவின் ஒடுக்கம்.

இல்லை
பெருங்கோபமடக்க...

ஒரு அடைமழைக்கான
கரகரப்பிரியாவும்
அமிர்தவர்ஷினியும்.

வாயால் கெடுவதே
அதன் விதியென்றால்
விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, September 16, 2014

அலை கக்கிய நிலா...

ஆதியிருப்புத் துளிகளை
அளாவி
அள்ளி வந்திருக்கிறது
இத்தாலியக் கடலுக்குள்
குழந்தைநிலா.

ஆக்கையழுந்த
ஆயிரம் விண்மீன்கள்
கண்களுக்குள் மின்ன
சுனாமி விழுங்கிய
சொச்சமாய்
என்னையும் விழுங்க
பெருங்குரலெடுத்து
மாரடித்தழுதது அலை.

முன்னெப்போதும் பார்த்திரா
வெள்ளைக்குதிரைப் பயணம்
கொங்காணிபோலொரு
கொம்போடு
புழுதி பறக்க..

ஆகரச் சுரங்கம்
நீர் வற்றிய தடாகம்
ஹா ஹா
என்றொரு கந்தருவன்
ஆகாசத்தாமரை
விதமான
செவ்வண்ணத்தில்
செம்பருத்தி
ஆக்கியோனின்
அழகிய கம்பீரக் கிரீடம்
என்காடு
அதில் தாவும்
தத்தம்மாக்கள்
தங்கவால் குரங்குகள்
அடங்காப் பெருங்காமத்தில்
கருகிய இரு வெண்புறா இறகுகள்.

இத்யாதி இத்யாதி....

வேகம்
சூடு பறக்கும் அதிவேகம்
காற்றேயில்லா
பூமி கிழித்து
மிதப்பதாயும்
நடப்பதாயும்
ஒரு வித்தை.

உயர்ந்த
கையுரசிய தூரத்தில்
ஆஸ்திரிய மலைகள்
கடந்துதான் வந்தேன்
அவைகளைக்
கேயிலேந்தும்
பலமெனக்கிப்போ.

ஜேர்மனிய
நிர்வாண மலைகளுக்கு
முடிந்தமட்டும் நீர்பீச்சும்
அலையுயர்த்திய வானத்தில்
மூழ்கிக்கிடக்கிறேன்.

கையேந்தி நிமிர்த்துகிறது
என் கால்களை
இரு கைகள்
சிருட்டித்த அத்தனையும்
அழித்ததாய் திட்டினேன்
நாசிக்குள் நிரவிய
உப்புக் கைக்க.

சாதிக்க ஏதுமில்லை
சாவதற்குப் பயமுமில்ல
ஆனாலும்
உயிர் போகும் தருவாயில்
வாழத்தான் பிடிக்கிறதோ ?

இல்லையென்றால்
உந்தி மூழ்கி
சிரசு சிலிர்ப்பும்
ஒவ்வொரு தரமும்
'பிடி....பிடி'
என்கிற சொல்மட்டும்
வந்தது ஏன்
என் வாயில் ?!!!


குழந்தைநிலா ஹேமா ! 05.09.2014