*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 14, 2008

மீண்டும் ஒரு காதலர் தினம்...


வாழ்வு முழுதும்
காதல்...
வியாபித்திருந்தாலும்
காதலர் தினத்தன்று
அந்த...
ஒற்றை றோஜாவுக்குள்
அத்தனை அன்பையும்
திணித்துக்கொண்டு
மிக அழகாய்
மீண்டும் ஒரு
காதலர் தினம்.
எத்தனை காதலர் தினங்கள்
நீ என்னிடம் வந்த பிறகு.
எட்டவே இருந்தாலும்
என்னை
உனக்குள் பூட்டிக்கொண்டு
சாவியைக் கூட
தர மறுத்தபடி.
என்னை
நான் நேசிப்பதை விட
நீதான்
என்னை நேசிக்கிறாய்
முழுமையாக.
யாரையுமே காணவில்லை
உன்னப்போல.
உன்னோடு யாத்திரையும்
தொடர்கிறது வருடங்களோடு.
கொஞ்சம் அழுவேன்
பொறுத்துக்கொள்.
புரட்டிப் புரட்டிப்
புடம் போட்டுப்
பதம் பார்க்கிறது
வாழ்க்கை என்னை.
கடும் புயலின் வேகத்திற்கும்
சுனாமியின் கோபத்திற்கும்
ஈடுகொடுக்கும்
பக்குவத்தோடு நான்.
அடுத்து என்ன...
அடுத்து என்ன...
கேள்வியின் கைகளுக்குள்
என் வாழ்வு.
இதற்குள் ஏன்
அநியாயமாய் நீ.
வாழ்வின் வழியில்
வழியோடு நிழலாய்
ஒளி விடும் நிலவு கூட
சிலசமயம்
அண்ணாந்து பார்க்கையில்
காறித்துப்புவதாய்.
நேராக நடக்கையில் சமூகம்
அண்ணாந்து பார்க்கையில் நிலவு
நடக்கக் கூட
மனதில் திடமற்று
நாதியற்று
நடக்கும் ஜடத்திடம்
ஏன்... எதற்கு
இப்படியொரு காதல்!!!!

ஹேமா(சுவிஸ்)14.02.2008

1 comment:

விச்சு said...

என்னை
நான் நேசிப்பதை விட
நீதான்
என்னை நேசிக்கிறாய்
முழுமையாக.

Post a Comment