*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label கவிதை வாழ்வியல். Show all posts
Showing posts with label கவிதை வாழ்வியல். Show all posts

Thursday, July 24, 2014

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து...

சாபங்களைச் சுமந்துகொண்டே
சுகமாயிருப்பதாய்
சோடனைகள்.

வேர்களை அழிக்க
விஞ்ஞானத் தேடல்
நிழலில் நின்றுகொண்டே.

பலவீனமே பலமாகவும்
பலமே பலவீனமாகவும்
தைரியமில்லா
நாகரிகக் கோமாளிகள்.

எதுவானபோனதும்
தாத்தாவின்
வீபூதிக் குடுவைக்குள்
மஞ்சள் பூசிய துணியில்
ஒற்றை ரூபா
நேர்த்திக் கடனாய்.

வியர்வை துடைக்கும் மரங்கள்
விட்டெறிந்த பெருமூச்சில்
பட்டைகள் வெடித்து
தெறித்த குருதியில்
குழந்தைகள்
மூன்றாம் கையாய்
நான்காம் காலாய்.

"பூவரச மரங்களை
பூக்கவிடு
என் கல்லறை சுற்றி"

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து!!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6400

ஹேமா(சுவிஸ்)

Monday, June 23, 2014

நீ...நான்...கடவுள் !


’கடவுளே’ என
உடல்முறித்து
அலுத்துக்கொள்ள
முன்னாலிருப்பவன்
தன்னைக் கூப்பிட்டதாக
'நானா' என்கிறான்.

கடவுளை
அறிமுகப்படுத்தவில்லையே
அம்மா இப்படி.

சூலும் வேலும்
புலியும் மயிலும்
அகோரமாயும்
ஆயுதங்களோடும்...

சிலசமயம்
சின்னப்புன்னகையோடு
கே ஆர் விஜயா
உருவத்தில்
பெண் கடவுளாகவும்
சிவாஜி கணேசன் உருவத்தில்
ஆண்கடவுளாகவும்
நாகேஷ் உருவத்தில்
நகைச்சுவைக் கடவுளாகவும்...

பூக்களும் நகையுமாய்
பணக்காரச் சாமிகள்
பலவாய்
விதம் விதமாய்.

கடவுளிடம்
கிழிந்த சட்டையில்லை
கூரையில்லா வீடில்ல
பசியில்லை
கழிவறையுமில்லை
காலையில் எழும்பி
படிக்கவும் தேவையில்லையாம்
தானாகவே புத்தி அதிகமாம்
பொன்னையா மாஸ்டர்
சொன்னது ஞாபகம்.

நீதி சொல்ல
காதலித்த கடவுள்
களவாடிய கடவுள்
கதை சொன்ன கடவுள்
கோபித்த கடவுள்
மண் சுமந்த கடவுளென
ஆயுதம் இல்லாக்
கடவுள்களே இல்லை
காணாமல் போகமுடியா
கைதாக முடியா
தீவிரவாதக் கடவுள்களோ.

மீனுக்கும் குருவிக்கும்
கறையானுக்கும் பூனைக்கும்
யார் கடவுள் ?!

கடவுள் உலகத்தில்
ஆயுள் அகலமாமே
புண்ணியம் செய்தால்
பூச்சிகளும் பறவைகளும்
பட்டுச்சிறகோடு
பறக்குமாமே அங்கு.

சிவாஜி கணேசன்
சிவனாய் சிரிக்கிறார்
அட்டகாசமாய்.

விருத்தெரிந்தபின்
சிவாஜி நடிகனெனவும்
கடவுள்கள் ஆகாயத்திலும்
தேவலோகத்திலுமெனச்
சொன்னார்கள்.

அதன்பிறகு கடவுள்கள்
அட்டகாசமாய்ச் சிரித்தே
நான் கண்டதில்லை
எங்குமே.

முதன் முதலாய்
கடவுளென நான் நம்பும்
ஓருருவம் கண்டேன்
என் முன்னால்
சிரிக்கிறது
பார்க்கிறது
பேசுகிறது
அலங்காரமில்லா
குட்டிப்புன்னகை
கண்களில் தேக்கி.

’என்னையா கடவுள்’
என்றாய் என்றதால்
தோள் தொட்டு
’வா காப்பி குடிக்கலாம்’என்றேன்
எனையுரசி நடந்தே வருகிறது
தெருக்கடை தேநீர்ச்சாலைக்கு.

இனி....
கை குலுக்கி விடைபெறும்
கல்லாயும் போகாது
தொலைந்தும் போகாது
தொடர்பிலும் இருக்குமது!!!

ஹேமா(சுவிஸ்)

யாழ் ’உதயன்’ சஞ்சிகையில் வெளியாகிய கவிதை.நன்றி ஜெரா Jera Thampi !

Friday, June 20, 2014

கரையா வண்ணம்...

இப்போ...
சிறகுகளை ஒடுக்கி
வண்ணம் ஊற்றப்பட்டாலும்
வானவில்லாய்த்தான் இருந்தேன்
வாழ்வு எப்படியாயிருந்தாலும்.

பெண்ணைப்போற்றும்
பேச்சுக்களை மட்டுமே
நாடகமாய் வைத்திருக்கும்
என்னிடம்
நிலாவும் மழையும்
கோபம் கொண்டிருக்கிறது.

இனி
நான் உதிர்வதை
என் திசைக்காற்றே
அறிந்துவைத்திருக்கிறது.

இப்போதைக்கு
உயிரிறுக்கி வைத்திருக்கும்
இவ்வண்ணப்பூச்சின் இறுக்கம்
சிறையானாலும் கவசமாய்.

அதுவரை கவிதையோ
கதையோ எழுதுங்கள்
என் வாழ்வின்
பாவம் தீர.

உயிரை உறுதிப்படுத்த
உரையாடிக்கொண்டிருப்பேன்
நானும் அவ்வப்போது!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 29, 2014

ஒரு அரூபியும் ஒரு மீனும்...


புசுபுசு பூனைகளைத்தான்
நேசித்திருந்தேன்
ஒருபொழுதில்...

நெய்யும் கடலையும்
தின்று கொழுத்த பூனைகள்
என்னைத் தின்றபொழுதில்
முக்காடிட்டு
முள்வேலிகளே கிரீடங்களாய்
வடிவான அரூபியானேன்.

அறிவிக்கவிரும்பவில்லை
சமூகத்திடம் என்னை.

வெறுப்பின் இதயம் காடழித்தது
அன்போ அணைத்தணைத்து
பிரபஞ்சம் அளந்தது
ஆனாலும் போதவில்லை
கண்மூடிப் புத்தன்களுக்கு
அரூபிகளின் அலறல்.

வால் சுழற்றும் சிற்றசைவில்
உயிருள்ளதாய் நடிக்கும்
நெகிளிச் செடியென
இல்லா உயிரை
இழுத்து
மூச்சிட்டு வாழும்
தங்க நிற மீன் நான்.

சொண்டில் நிறமப்பி
தொட்டிக்குள்
உயிர் வாயுவை
விழுங்குவதுபோல
பசப்பி
குமிழிக்கனவோடு இறப்பேன்
மஞ்சள் நிறத்தோலுடன்.

தூக்கிப்போடுவார்கள்
பிளந்த போதிமர
வேர்களுகளுக்குள்
ஆயுதம் களைந்து
அப்போதும் என் முகம்
அரூபமாய்த்தான்
முள்முடியுடன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 05, 2014

பருவ ஆடை...


மெல்லக் கலைகிறது
குளிர்காலம்
தளிர்விடும்
மொக்குகளிடமிருந்து !

கையுறைகளும்
காலுறைகளும்
இனிப் பதுங்கிகொள்ளும்
பருவ வெயில்
நகரா ஊர்திகளில்!

ஒற்றைநாள்
பருவவெயில்
போதுமாயிருக்கிறது
கைகொடுத்து
தூரமாய்க் கடக்கவைக்க
பறவைகளையும்
பார உடைகளையும் !

சங்கடங்கள் தொடரும் இனி....

முக்கால் வருட அவதி
போதுமென
உலவிடும்
குட்டை உடைகள்
கண்கள் குளிர !

நானோ....

பார்த்துப் பார்த்து
சேமித்து வைத்திருக்கிறேன்
பத்துப்பதினைந்து
பனியுதிர்த்த
பழைய இலைகளை
பாட்டிக் கதைகள் சொல்ல !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 22, 2014

கூடுடையாக் கேள்விகள்...


கேட்கும்
கேள்வி தவிர்க்க
பதிலாய்
இன்னொரு கேள்வி
இரண்டுக்கும் இடையிலொரு
மௌன இடைவெளிவிட்டு
மிக அழகாய்.

அவ்வளவு சுலபமாயில்லை
பதில் சொல்வது
ஆனாலும்
பதில் இருக்கிறது
ஒத்தமாதிரியும்
ஒவ்வாமையாயும்.

பதில் வெளிப்படுகையில்
மனதின் வடிவங்கள்
ஒருசமயம்
வக்ரமாயும்
விரசமாயும்
விகாரமாயும்
வீணானதாயும்
வெகுளித்தனமாயும்
இருக்கலாம்.

கேள்விகள் குறித்த பதில்கள்
கேள்விகளுக்குள்ளும்
பதில்கள் குறித்த கேள்விகள்
பதில்களுக்குள்ளுமே
இயல்புகளை
ஆக்கிரமித்தபடி.

பதில்களும் கேள்விகளும்
கைகளுக்குள்
சாதாரணமாயில்லை
கைராட்டுக்கள்போல்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 25, 2014

பிறப்பும் பிழையும்...


குடைந்தெடுத்த சொற்களால்
குந்திய இடத்திலேயே
குற்றவாளியாய்க் கூனிக்குறுகிய
காட்சி கலையாமல்...

வாழ்வைத் தவமாக்கியதும்
பின் வரமாக்கியதும்
தப்புத்தானோ
நானே தப்புத்தானோ
அத்தனையும் தப்புத்தானோ...

அவிழ அவிழ அன்பாய் 
இறுகக் கட்டிய
தன் தந்தையின்
சாம்பலைக் கிள்ளும் தனயனின்
மௌனமும்
அச்சமும் நடுக்கமுமாய்...

தருணங்கள் தரும்....
அசதி
அவதி
சுமை
ஐயம்
நைவு
பிழை
மறதி
குன்று
வளைவு....ஆயாசம்....பிளவு

ஆக்கியழிக்கும்
கடவுள்களே
மன்னியும் என்னை
இனி ஒருபோதும்
பிழையேதும் செய்வதாயில்லை
நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 14, 2013

வாழ்வு (3)


நம்பிக்கைகளை நெரித்துக் கொன்று
தின்றுவிட்டு ஏப்பம் விடும் உலகம்
தின்னும் உணவென சமைத்தெடுக்கிறான்
மனிதன்  மனிதத்தை !

பெயர் குறித்த மரங்களிடை
பெயரில்லாப் பெருவெளியில்
பெயரற்று வருகிறோம்
பெயர்களுக்குள் நுழைந்துகொள்கிறோம்
பெயர்களை விட்டுச் செல்கிறோம்
பறவைகளுக்கும்
பாம்புகளுக்கும்
பூச்சிகளுக்கும்
பெயரிருக்குமா என்ன?!

சில நிமிடங்களில்
நடந்தேவிடுகின்றன
நாமறியா நிகழ்வுகள்
பின்வரும் விளைவறியாமல்
எதிரியின் துப்பாக்கியை
செயலிழக்க வைத்த
துருப்பிடிக்கா
துப்பாக்கி இவள்
என்னிடமும் உண்டு
ஒன்று
அவர்களிடமும்
ஜனநாயகம் வாழ
வாழ்த்துங்கள் ! (பெண்போராளி தமிழினிக்காக)

''ம்'' ல் தொடங்கி
''ம்'' முடிகிறது
காதலும் வாழ்க்கையும் !

கூடுகளோடு சில பறவைகள்
மரங்களைத் தேடியபடி !

அசையும்
சுவர் மணிக்கூட்டின்
பெண்டிலம்கூட
எரிச்சலாயிருக்கிறது
கருவறை அமைதி
தேவையெனக்கிப்போ !

இழப்புக்களின் பின்
மனம் போதுமென வறண்டாலும்
இன்னொரு அன்பால் ஈரமாகிக்கொள்கிறது
அடுத்த இழப்பிற்கான ஆயத்தத்தோடு
இதயமும் வாழ்வும் !

ஹேமா(சுவிஸ்)

Friday, August 16, 2013

வாழ்வு (2)


பிரபஞ்ச எல்லையில்
மீண்டெழமுடியா மனதோடு
சில வன்மங்கள்
எதையும் சாசித்துவிடலாமென்கிற
நம்பிக்கையோடு தம் குவளைகளை
நிரம்பிக்கொண்டிருக்கிறது.

சுயமிழந்து பழுத்துவிழும்
இலையின் நரம்புகளில் இறக்கும்வரை
பச்சையம் இல்லாமல்
போகாதென்றாலும்
வன்மங்கள் நசித்தால்
நானென்ன அவர்களென்ன.

வானம் நுழைந்து மறைந்த பருந்தென
பாதைகள் குழம்பினாலும்
சில அனுமானப் பாதச்சுவடுகள்
காட்டுகின்றன
சரியான வாழ்வின் அஸ்திவாரங்களை!!!




















விதிகளைக் கவிதையாக்க
முயற்சித்துத் தோற்றவள் நான்
எத்தனை முயன்றும்
இடைநடுவில்
சிறகு முளைக்கத் தொடங்கிவிடும்
என் விதிக்கு.

எழுத்தில் வடிகாலாய் கீறினாலும்
தாளில் விரிக்கத்தொடங்கும்
தன் சிறகை.

எனக்கான தலையெழுத்தை அழகாக்க
என்னுடன் இருத்தல் நலமென்றேன்
பறத்தலே தன் விதியென்று
உச்சந்தலை உழக்கிப் போனது
மாறாத சில கிறுக்கல்களை
மட்டும் விட்டுவிட்டு !!!


கீறிட்ட இடங்களை நிரப்பிச்செல்கிறது
வானில் முகில்கள்.

எனக்கான வார்த்தைகளுக்கு
இடம்விட்டுப் போக
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
நிரப்பும் முடிவோடு.

என் பார்வையில் வானை ரசிப்பதா
அவன் பார்வையில் நீலத்தை ரசிப்பதா
இரவு நாம் விட்டுவைத்த
மௌனங்களையும் கோர்த்து
கோடிட்ட இடங்களை நிரப்புவதா ?

நீங்களும்.....
அண்ணாந்து வானம் பாருங்கள்
அவரவர் ரசனைகளுக்கான
கற்பனைகள் எட்டலாம்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, July 13, 2013

வாழ்வு (1)


விழுந்தால்
ஏந்திக்கொள்ள இரு கைகள்.
பள்ளம் நிரம்பிய பூக்கள்
ஆற்றில் இழுத்தாலும்
அணைத்துக்கொள்ளப்
பாறைகள்.
கொத்தாமல்
துரத்தும் பாம்பு.
தயார்ப்படுத்தியபிறகே
கனவுகள்கூட
மிரட்டுகின்றன.

அந்த இரக்கம்கூட
சில மனங்களுக்கு
இல்லாமல் போனதேனோ !

சீரான
வார்த்தைக் கோர்வைபோல்
அழகாய்
அடுக்கடுக்காய்
எதிர்பார்த்த வண்ணத்தில்
அமைவதில்லை
வாழ்க்கை !

ஒவ்வொரு நிமிடங்களும்
விட்டுச் செல்கிறது
தேடலின் அதிசயங்களை
முடியாத கனவைத்
தொடர வரும்
அடுத்த இரவுக்கான
காத்திருப்புப்போல!

கடின தருணங்களை
கடந்துகொண்டிருக்கிறேன்
விளக்கம் தேவையில்லை
அவசியமற்றது
தெரிந்தவர்களுக்கு
மிச்சமிருப்பவர்களோ
நம்பமாட்டாதவர்கள் !

ஒற்றைப் புள்ளியில்
குந்தியிருக்கிறேன்
கனகாலம்.
எங்கு சுற்றிலும்
பெரிய முள்ளை
உரசிப்போகும்
சின்னமுள்ளை
நிர்வாணப் பகலிலும்
தேடுகிறதென் கண்
நேற்றைய கனவில்
தவறி விழுந்ததாய்
பின் வந்த செய்தி !

விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 08, 2013

கையாலாகாத்தனம்...


சுழற்சிக்காய் குறி சொல்லி
அதிஷ்டமென
நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது
நாட்காட்டி.

கவிழ்த்து வைத்த
கரப்பை
பூனை தட்டிவிட
குஞ்சுகள் கௌவும்
பருந்தெனக் காலம்
கை மாற
கழுத்தில் கட்டியாய்
அசிங்கப்படுத்தும் கழலையென
நாளொன்று வீங்கி வலித்து....

நாளொன்று
அதிஷ்டமானால்
ஆறு நாட்களும்
சங்கடத்தில் தடுமாறி
காலை தவறவிடும்
புகையிரதம் முதல்
இரவு விளக்கின் குமிழ்
பழுதாகியதுவரை.

மகர ராசிக்கு
முகராசியென
ராசிப்பலன் நம்பி
கருத்த நாளொன்றுக்குள் புகுந்து
முழித்த முகம்
யாரென்று யோசித்தால்
அப்பா அம்மா சமேதராய்
ஆனைமுகப் பிள்ளையார்
முருகன் ஆறுமுகன்.

ஒரு நாள்போல இல்லை
பல நாட்கள்
விடியாத நாட்களுக்குள் போராடி
விடிந்ததாய் நம்பித்தானே
பதுங்கு குழிகளை மூடினோம்.

விடியாத நம் நேரம்
வேளையா விதியா
காரணங்கள் காரியங்கள் எங்கோ
விடியா மூஞ்சியென்ற
காரணப்பெயர் எங்கோ.

வெள்ளியிலும்
மாதவிடாய் விலக்கிலும்
அழகாய் விடியும் சிலசமயம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 27, 2013

எனக்கானது இது...


மொட்டுவிட்ட பூவுக்கு
நீறூற்றுதல்
உமக்கு வாழ்வியலானால்
எனக்கென்ன.

வியாபார
ப் பொருளென்று
பேரம்பேச அரிதாரமிட்டு
இனி இவள்
காதல்வசப்படுவாளென்றும்
அறிவித்து
இன்னும் புதிது புதிதாய்
ஏதேதோ.

பருவத்தால்
உடல் மாற
மதத்தால்
மலர் அர்ச்சனையால்
உருமாற்றி
கடவுளின் காவல்காரர்கள்
வரலாற்று எழுத்தாளர்கள்
கலை வளர்ப்பாளர்கள்
கையில் என்னை
கற்பழிக்கக் கொடுக்க
புன்முறுவலோடு
இத்தனை
பூச்செண்டுகள் தந்தா
உங்கள் புனிதம் காப்பீர்.

என்னவோ....அது
இருந்துவிட்டுப் போகட்டுமே
எனக்கென்ன...

தொப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை
தீட்டாக இருக்கலாம்.

என்னையும்
தீட்டென்று ஒதுக்கி
துர்நாற்றக் கண்ணீரை
என் குழந்தைப் பருவமுடைத்து
ஏன் நிரப்புகிறீர்.

உமக்கென்ற சடங்குகள்
இருந்துவிட்டுப்
போகட்டுமே எனக்கென்ன...

பழமைவாதமும்
பாட்டி சொன்ன வடைக்கதையும்
புனிதமென்றால்
என் இன்றைய தெளிவும்
தேவையற்ற சம்பிரதாயச்
சடங்குகளும்
எனக்கு என்னோடு.

என் பறப்புகளுக்கு
இரு சிறகுகள் போதாதென்று
தவமிருக்கப்போகிறேன்
மண்ணுருண்டை
உடைத்து வரும்
சிற்றீசலுக்காக.

எனக்கான ஆசைகள்
கனவுகள்
சிறகு கொண்டு வரும்
ஈசலோடு
இருந்துவிட்டுப் போகிறேனே
உங்களுக்கென்ன!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 11, 2013

அடை மழை....


கால் நனைகிறதாம்
ஒரு ஓரமாய் ஊரும்
எறும்பின் கவலை.

தவளையின் மகிழ்ச்சி.

தேனீக்கு
தன் சிறகு நனைவதாய்
குற்றச்சாட்டு.

அப்பா கை விட்டோடும்
குழந்தைக்கு
சேற்று நடனம்.

கோடைகாலக் கூடு
கட்டிமுடியாக் கெடு
பறவைகளுக்கு.

மரமுதிர்ந்த
சருகுக்கோ பாதத்திலேயே
பசளையாகும் வரம்.

தெருப்பாடகனுக்கு
நாளைய கேள்வி.

மரத்துளிர்களுக்கு
குளிர்ச்சி.

தெருவிளக்கின் கோபம்.

பனி நனைத்த புல்லுக்கோ
பட்டுத் தெறிக்கும்
மழைத்துளி வலி.

கால்வரை
வழியும் மழைநீரில்
காதலின் இடப்பெயர்வு.

நேயர் விருப்பத்தில்
எனக்கான மழைப்பாடல்.

நிகழ்ச்சி ஒன்றாய்
கோணங்கள் பலவாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 19, 2013

சொல்ல மறந்து...


எழுத நினைத்த நேரத்தில்தான்
இறந்துகொண்டிருக்கிறது
அது....
தன்னைக்குறித்தும்
தன் தனிமை குறித்தும்.

ஈர மரக்கிளைகள்
பற்றிக்கொண்டு
சுரக்கும் கண்ணீரோடு
பச்சிலைக் கடனுக்கு
உடன்பட்டு
எச்சில் பறக்க
கதறியது ஒரு நாள்
ஓவென்று.

உருபு மயக்கத்தோடு
ஒரு வேற்றுமை
மற்றொரு வேற்றுமையின்
பொருளில் வருவதுகூட

பொருத்தம் இல்லையென
கருத்துச் சொல்லிப் போனார்கள்
தெருவைச் சிலாகிப்பவர்கள்.

தனித்துப் பேசுபவர்களை
விசரென்று அறிபவர்கள்
தாங்களும் ஒரு வகையில்
அவர்களேயென
சொல்லிவைக்கலாம்
எதுவிதத் தயக்கமுமின்றி
மலசலக்கூடச் சுவர்களிலோ
பள்ளிச்சுவர்களிலோ.

சிலுவைகளில் தனித்து
அறையாமல்
குருதி சுண்டிக் கருக்குமளவு
கதறிப் பின்
இறப்பவர்களுக்கு
புதிது புதிதான
சில ஆறுதல் வார்த்தைகளை
சொல்லி ஆசீர்வதியும்
எம் பிரானே!!!

ஹேமா(சுவிஸ்)


Tuesday, April 02, 2013

கொடுக்க'வா' குட்டிக் குருவி...


வந்து வந்து குந்திக்கொண்டிருக்கிறது
ஒரு குருவி
உண்டு கழித்த
நினைவுகளை மறக்காதோ.

பல்கனியில் தானியத்தை
பரப்பிவிட்டுக் காத்திருப்பேன்
அடிபட்டு
கொஞ்சிக் குலவி
சாப்பிடும் அழகை ரசிக்க
பசி போக்கிப் புசிக்க.

எச்சம் கழுவுவது
ரசனையை விட மோசமது
தமிழில் செல்லத்திட்டு வேறு
 'கக்கா இருந்தால்
சாப்பாடு போடமாட்டேன்
.......போ'.

மெல்ல மெல்ல
குவளைத் தேனீர்
என்னைச் சூடாக்க
இன்னும் பனி மழை
பூமியை வெள்ளைப்பூக்களால்
அலங்கரிக்க
குருவியோ குந்தியிருக்கிறது
பாவமென 

சற்றுத் தள்ளி
பரிதாபமாய்!!!


"கட்டித்தொங்கவிட உருட்டிய உணவு விற்பனையில்.பனிக்காலத்தில் பறவைகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு."

ஹேமா(சுவிஸ்)

Friday, February 22, 2013

மணிக்கு 300 கி.மீ...


காற்றின் இடுக்குகளில் புகுந்து
மிகவேகப் பயணம்
பசியின் கொடூர ஓசை
நடுவயிற்றுப்பகுதியில்
உருட்டிய தாயக்கட்டையாய்
உருண்டு திரும்பி
சிவப்பு மஞ்சளில்கூட
தரித்தலுக்கு நேரமின்றி...

வானம்
பரந்து விரிந்து
எல்லையற்றதென
படித்த ஞாபகம்...
ஒற்றை இறகைக்
கழற்றிவிட்டுப்
பறக்கிறதோர் பறவை...
தன் வாழ்வை உறுதிப்படுத்தியபடி
வானொலிச் செய்திகளேதும்
மகிழ்ச்சியாய் இல்லை...

பறக்கும் வேகத்தில்
எதிர்த்திசைக் காற்றில்
யாரோ.....
" 'ஓ' குறுப் இரத்தமாம்
சேமிப்பில் இல்லையாம்"
நிறுத்தல் தேவையற்று
ஓட்டம்
எங்கே.....ஏனெனத் தெரியாமல்...

பிந்திய இரவில்
கூட்டம் கலைந்து
ஓட்டம் ஓய்ந்து
கூடு வந்தடைய
செவி நுழைந்த செய்தியது
எனையறைந்து வெளிவர...

ஓ.........
'ஓ' குறூப்தான்
என் இரத்தம்....
கொடுத்தோ கேட்டோ
வந்திருக்கலாமோ !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, February 06, 2013

பனி தேசத்துக் குரல்...


நீண்ட.......
கண் சிவந்த இரவுகளை
தாலாட்டிக்கொண்டிருக்கிறேன்
பகலில்
பனி மேடுகளில்
பெய்யும் மழைத்துளிகளை
வேண்டிக்கொள்கிறேன் கரையாதிருக்க
இரவுப் பாடல்களை
பகலிலும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
பனிக்கரடிகள் நான் ரசிக்க
தேடிக்கொண்டிருக்கின்றன
அவைகள்
வான் ஊதும் வெப்பக்குழலை
எனக்குமாய்
இடைவெளி விட்டு விட்டு
எழுதிப்போகிறது
பனிக்குருவி
கவிதையொன்றை....

நடுங்கும் கைகள்
வெப்ப வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்க
இங்கு யாருமில்லையென
எல்லா இரவுகளிலும்
எழுதி வைப்பதே
பாதுகாப்பாயிருக்கிறது எனக்கு.

திசைகள் அசைந்தபின்னும்
இருண்டே கிடக்கும்
பகலிலும்
நாட்குறிப்புகள் தொடரும்
நீ.........
தனித்தவள் என்றபடியே!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, January 21, 2013

மனம்...

மனங்களைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
படித்த புத்தகங்களில்
ஏதும் இல்லை
இவர்கள் முகங்களின்
கிறுக்கல்கள்போல.

முகத்தில் பதியா குணங்களை
அடுக்கி வைத்திருக்கிறார்கள்
கையளவு இதயத்துள்
சேமிப்பறைகளில்
இலக்கமிட்டு.

உலகை மிஞ்சும் எண்ணங்கள்
மனமில்லா உடம்பிற்குள்
எப்படிப் புகும்
திணித்ததெப்படி ?!

பத்தியமிரு
நல்லதை நினை
மனம் கழுவு
புத்தனாய் வாழ்
பெரியாராய் மாறு
உன்னுள் நீயிரு
ஒழுங்கு படுத்தவாவது செய்
மறுபிறப்பெடுத்து
மீண்டும் வாழ்வாய்
இப்பிறவியிலேயே!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 17, 2012

பறக்கும் ரகசியங்கள்...

நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்
என் சுகங்களை
பக்கத்து வீட்டு முற்றங்களில்
பரப்பிவிட்டு.

புழுதிக்காற்றின் பேரிரைச்சலோடு
என் இரகசியங்கள்
என்னையே வந்து உரசிக்கொண்டன
வெப்பக்குழல் சூடேற்றினாலும்
குளிரில் அவதிப்படுவதாய்
சிலிர்த்துக்கொண்டிருந்தன.

இரவில் மட்டுமே
பாடும் பறவை குளிரிலும்
நவீனத்துவ மொழியில்
கேட்டுக்கொண்ட சுகதுக்கங்களை
பகிர்ந்துகொண்டிருந்தது
பிரபஞ்சத்தின் அடி இருளில்.

சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அவைகளுக்குள்
விஷப் பூச்சிகள் முட்டையிட
கிசுகிசுக் குஞ்சுகள்
என் தோளில்
அதி பாரத்தோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 30, 2012

வித்தை கற்றவளின் கனவு...

கனவுகள் போர்த்திய பகல்
குறைந்த வெளிச்ச இரவு
வகிடெடுத்து
வளைந்த தேவதையாய்
என்றும்
வாயில் சின்னப்புன்னகை கீறி
பூக்களையே பாரமென்று
சுமக்கும் பாவைச்சித்திரம்.

நாடு வீடு
நகரும் நகரம்
நரகமாகும் கனவு
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.

கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)