*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 31, 2008

புதியவன் தந்த"பட்டாம் பூச்சி"

சும்மாதான் கிறுக்கினேன்
புத்தாண்டுப் பரிசாய்
"பட்டாம் பூச்சி"விருது.
Get a Sexy, Colorful and Cute Comment from Commentsdump.com TODAY!
சும்மாதான் கிறுக்கினேன்
எழுத்துக்கள் கவிதையாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சுமைகள் சுளுவாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சொந்தங்கள் கூடியதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கனவுகள் சுகமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
தனிமை தொலைந்ததாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சிநேகிதங்கள் நெருக்கமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
உணர்வுகளின் சேமிப்பாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
இயலாததையும் சொல்வதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கோபங்களைக் கிறுக்கல்களாய்.

இன்னும்...இன்னும்
சும்மாதான்...சும்மாதான்
என்றாலும்,
வலிகளின் ரணங்களாய்
வாழ்வின் வரைபடமாய்
காதலின் தூதாய்
சந்தோஷங்களின் இறக்கைகளாய்
சமூகத்தின் சாட்டையாய்
சொந்தங்களின் பகிர்வாய்
என் தேசத்தின் ஏக்கமாய்!!!
பிறக்கிற தையில்
வயது ஒன்றாய்
பூத்தவள் குழந்தைநிலா.
அதற்குள் தட்டிய விருதோ மூன்று.
சேவியர் அண்ணா ஒருமுறை.
மலேசியா விக்கி ஒருமுறை

வியப்போடு நானிருக்க
புன்னகைக் குழந்தையாய்
புதியவன் ` இப்போ
"பட்டாம் பூச்சி"விருதாய்.
சிறகு முளைக்காத குறைதான்
ஆனாலும்...
பறக்கிறேன்...பறக்கிறேன்
புதியவன் தந்த விருதே சிறகுகளாய்.
சிறகு முளைத்ததாய்
ஒரு ஞாபகத்தோடு
பறக்கிறேன்... பறக்கிறேன்.

பகிர மனமில்லை.
எனக்கே எனக்காய்
புதியவன் தந்த பட்டாம் பூச்சி இது.
என்றாலும் பகிர்கிறேன்.

நூறாவது பதிவின் திளைப்பில் இருக்கும்
கடையம் ஆனந்த்
அக்கினிக் குஞ்சுகளாய் தரும்
எங்கள் மெல்போர்ண் கமல்
தமிழில் தத்தித் தவழ்ந்து
விழுந்து எழும்பும் இரவீ.
பகிர்ந்து கொள்வார்கள்
இனி அவர்கள் பதிவின் பக்கத்தில்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 26, 2008

சுனாமியும் ஓர் பெண்ணும்...

கை நிறையத் தந்த கடல்
நுரை கக்கி
கையோட அள்ளிப்போட்டுது
என்ர பிள்ளையை.
கண் நிறைஞ்ச புருஷனையும்
கருப்புக் காலன்
கொண்டு போட்டான்.
கடலுக்குள்ள தொலைச்சுப்போட்டன்
என்ர வாழ்க்கையை.
காத்திருக்கிறன் இப்பவும்தான்.
வருவினமோ இரண்டு பேரும்.

வானம் தொலைச்ச நிலவைப்போல
தேடுறனே நித்தம் நித்தம்.
நிறைய உயிரைக் குடிச்ச கடல் எண்டா
"உம்"எண்டு உறங்குதெல்லோ
கல்லுளி மங்கன் போல.
கரையில ஒதுங்குவினமோ
கடலுக்குள்ளேயே புதைஞ்சிட்டினமோ
காணேல்லையே.

வருஷமும் நாலாச்சு
காத்த வழியிலயும்
பூவும் பூத்திட்டுதே.
வந்திட்டுப் போங்கோவன் ஒருக்கா
பாவம்தானே பாவிப் பெட்டையும்.
பொட்டும் அழிக்கேல்ல.
பூவோட காத்திருக்கிறன்.

அம்மாளாச்சி சொன்னவ கனவில
காலம்புற வருவியள் எண்டு.
கனக்கக் காலையும் கடந்தே போச்சு.
பொய்யும் சொல்லிட்டா அவ.
போகமாட்டன் இனி அவவிட்டயும்.

மீன் சந்தையில
சந்தடிக்க கதைக்கினம்.
பேச்சியின்ர பெடியனும்
பத்தைக்க கிடந்தவனாம்
பதினைஞ்சு நாளா உயிரோட.

அப்பிடியெண்டாலும் வந்திடுவியள்
எண்டெல்லோ
பரதேசி நான் பாத்துக் கிடக்கிறன்.
ஏமாத்த மாட்டியள் நீங்கள் எப்பவும்.
இப்பவும் வந்திடுவியள்.

கொல்லைக்க நிக்கிற கிடாயும்
கூட்டுக்குள்ள
கொப்பர் தந்த கொண்டைச் சேவலும்
தேடுகினமெல்லோ.
கிடுகுப் படலையும் அசையுமெண்டு
அசையாமல் கிடக்குது மனசும்தானே.

குசினிக்க சிலந்தியும்
கூடு கட்டிப் படுத்திருக்கு.
சாராயம் உன்னை எரிச்சிப்போடும் எண்டு
கள்ளு வாங்கி வச்சனான்.
பூஞ்சணமும் கட்டிக்கிடக்கு அதில.

கொம்மாவும் புலம்பினபடி.
கொப்பருக்கோ விசர் பிடிச்சிட்டுது.
கொக்காத்தை கதைக்குதே இல்ல.
எப்பத்தான் வருவியள்
இரண்டு பேரும்.


சொல்லிட்டுப் போயிருந்தால்
கலண்டரில கணக்குப் பாப்பேன்.
வருத்தம் வந்து போனாலும்
விதி எண்டு வெந்திடுவன்.
"தேத்தண்ணி வை வாறன்"
எண்டுதானே போனியள்.
திரும்பவேயில்லையே.


காசு பணம் கனக்க இல்ல.
உழைப்பும் கொஞ்சம்தான்.
அப்பரும் தரேல்ல சீதனம்.
எண்டாலும்...
நாலு றால் போட்டு
கஞ்சி காச்சினாலும்
பகிர்ந்தல்லோ குடிச்சம்.


கொண்டு வாறதை
பொத்தித் தருவியள் கைக்குள்ள.
சில்லரையை அப்பிடியே கொட்டிப்போட்டு
சிரிக்குதடி காசும் உன்னைப்போல
என்று ரசிப்பியள்.
சின்னக்குட்டியும்
உங்களோட சேர்ந்துகொண்டு
கையை ஆட்டும்.
பசியும் பத்தும் பறந்தே போகும்.

கண்ணுக்குள்ள வச்சுக் காத்துப்போட்டு
இப்போ...
கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ள
விட்ட மாதிரியெல்லோ தவிக்கிறன்.
கேள்விக்குறியை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கிறன் வருவியள் எண்டு.
நம்பிக்கையோட
நானும் தேய்ஞ்சு போறன்.

நாலு வருஷமும் பறந்து போச்சு.
மூச்சு முட்டி நிக்கமுந்தி வந்திடுங்கோ
இரண்டு பேரும்.
இல்லாட்டி...
என்னையும் கூட்டிக்கொண்டு
போங்கோவன் வந்து!!!

ஹேமா(சுவிஸ்)

1)என்ர-என்னுடைய 2)எண்டெல்லோ-என்றெல்லோ
3)வருவினமோ-வருவார்களோ 4) கனக்க-நிறைய
5)கதைக்கினம்-பேசுகிறார்கள் 6)கொல்லை-பின்பக்கம்
7)தேடுகினம்-தேடுகிறார்கள் 8)காலம்பற-காலையில்
9)கொப்பர்-அப்பா 10)கொம்மா-அம்மா
11)கொக்காத்தை-அக்கா 12)விசர்-பைத்தியம்
13)படலை-வாசல் கதவு 14)குசினி- சமையல் அறை
15)வருவியள்-வருவீர்கள்

சுனாமியான கடல்....

தொலைத்துவிட்ட உறவுகளை
மீண்டும் காணவே முடியாது
என்று தெரிந்தபோதும்,
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
அடித்துக் கொள்(ல்)கிறது மனம்.

ஞாபகங்களைக் கிளறி
கோடு கிழிக்கும் நண்டாய்
சொந்தங்களில் சிரிப்பலைகள்.
கரை ஒதுங்கும் நுரையாய்
வந்து மறையும்
அவர் முகங்கள்.
பங்கருக்குள் காத்த உயிரை
நொடிக்குள் பறித்தாயே.

அகோரப் பசி தீர்ந்து
அமைதியாக நீ இப்போ.
அன்றிலிருந்து
அமைதி கலைந்த உறவுகளை
அறிவாயா நீ.
போற்றிய வாயாலேயே
தூற்றும் பொல்லாதவராய்
நாம்தான் உன் முன்னால்.

ஆறி மறக்கக்கூடிய நிகழ்வையா
நடத்தி மறைந்தாய் நொடிக்குள் நீ.
வெள்ளைச் சேலையில் அக்கா
அப்பாவைத் தேடும் குழந்தைகள்
மனம் குழம்பிய ஒருவர்
அனாதையான பாலகன்.

ம்ம்ம்.....
காணும்போதெல்லாம்
சபிக்கப்படுவது நீதானே.
கடல் சூழ்ந்ததால்
அழகானது எம் நாடு.
அதே கடலாலே
அழகிழந்தோர் ஆயிரம் ஆயிரம்.

மீன் வாங்கக் காத்திருந்த நாங்கள்
பிணங்களுக்காய் காத்திருந்தோமே.
கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாங்கள்
ஒதுங்கிய பிணங்களப் பொறுக்கினோமே.

மரணத்தை மொத்தமாய்
கூட்டி வந்த
கடலே...பேரலையே
மறவோம் உன் கோபத்தையும்
எம் உறவுகளையும்!!!
ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 23, 2008

அவலம்...

மானுடம் மரித்து
மீண்டும்...
மரம் தாவுவதாய் ஒரு பதட்டம்.
நாகரீகம் எல்லை தாண்ட
யுகங்கள் கோடி தொட்டுஇ
நெருப்புத் துண்டங்களை
தன்னுள் புதைத்துக் கொண்டு
காற்றிலே சாவரி செய்பவனாய்.

முகப்புண்ணை
கைத்தடியால் விறாண்டியபடி
சீழ் வடிய வடிய.
மறந்தே போயிற்று அவனுக்கு
தாலாட்டுப் பாடலும்
அவன் வளர்ந்த திசையும்.

கூடு கட்டிப் புளு வளர்த்து
சிறகு முளைத்த சித்திரவதைகள்
தவற விட்ட கணங்கள்
புரியாத தவிப்புக்கள்.

தேவை என்பதற்காய்
மூன்றாவது காலும்!
தேவையில்லை என்பதற்காய்
சில சமயம்
காலே இல்லாமலும்!

சொர்க்கமோ...நரகமோ
வேண்டும் என்றாகிவிட்டால்
தலை கீழாகவோ
முட்டி மோதியோ
அடுத்தவனை வீழ்த்தியோ
சுதந்திரம் தரிசிப்பவனாய்.

காலம் தாழ்த்திய குரலில்
பணிவாய்...
கேட்டதெல்லாம் செய்வேன்
என்று சத்தியம் செய்தால்
நிர்வாணமே மிஞ்சுவதாய்.

வானரக் கொடியில் காய்ந்து
மனிதனாய் உலர்ந்த பின்னும்
பரம்பரை மறக்காமல்
செயல்களில்
சாயலாய் தனைக்காட்டி.

திசைகளைத் தவறவிட்டு
தொலைவு நீள
முழு நிர்வாணத்தோடு
கூச்சம் சிறிதுமற்றவனாய்.

முற்றுப்புள்ளி திட்டுமென்று
வெற்றுக் கடதாசி எங்கும்
கீறியும் எழுதியும்இ
தொடரும் என்பதால்
வெல்லவே முடியாது
சில நிரந்தரங்களை.

காற்றும் புயலும்
சுறாவளியும் வருமுன்
இறுக சாரளங்களைச்
சாத்திக்கொளவதே நல்லது.
மீண்டும் குரங்காக மாறி
மனிதனை இம்சிக்க முன்.

ஏனென்றால்...
சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 15, 2008

என்னடா நீ...!

அவகாசங்கள் தந்திருக்கிறேன் உனக்கு.
தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
ஒன்றுமே தெரியாதவன்போல்
அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
கதைபேசியபடி நீ.
பிறகு எதற்கு நான் உனக்கு.
கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
உன்னை நான்.

சொல்...முதலில் சொல்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
ஒரு போதுமே சொன்னதில்லை
இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
முத்தத்தின் சத்தத்தால்
என் அறை நிரப்பும் உனக்கு
என் செவிப்பறை புகுந்து
அன்பே என்று சொல்ல மட்டும்
தயக்கம் ஏன்?

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
முட்டி மோதி...முட்டி மோதி
மீண்டும் மீண்டும் முனையும் அலையாய்
மனதைத் தந்தவன் நீதானே!

கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை.
கடதாசியில் கண்டதில்லை உன் காதலை.
வார்த்தைகளில் பார்த்ததில்லை.
வரும் குறும் செய்திகளிலும் வருவதில்லை.
என்றபோதும்...நீ
என்னை விட்டு விலகியதும் இல்லை.

காதலின் மொழி தெரியாத
மூடனா நீ...முட்டாளா நீ.
அன்பே...
நீ மட்டும்
இதய இருட்டறைக்குள்
தனியாய் பேசிக்கொண்டால்
எட்டுமா என் செவிவரை.

இனியவனே சொல்.
இனியாவது சொல்.
என் செவியோடு ஒரு முறை சொல்.
நீயே என் இதயம் எனச் சொல்.
நீயே என் உயிரடி என்று சொல்.
சொல்லிவிடு என் செல்வமே.

இதயக் கூட்டைவிட்டு
என் பிராணன் பிரியும் முன்
சொல்லிவிடு.
பிரியமானவனே காத்திருக்கிறேன்.
காத்திருப்பின் அவகாசங்களும்
சில சமயம் தூரமாக முன்!!!

(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்.சொல்லுங்கோ...எங்க போய் நான் முட்டிக்கொண்டு அழ!)

ஹேமா(சுவிஸ்)

Friday, December 12, 2008

ஏன்...

சுமந்து சுமந்து
முதுகுதான் கூனியதே
தவிர....
காவுதலும்... இறக்குதலும்
குறைந்தபாடாயில்லை
களைத்துவிட்டேன்.
இனியும் முடியாது.
ஓடுதலும்... ஒளிதலும்
எத்தனை காலங்கள்தான்
இப்படி?

யார் கலைக்கிறார்கள்
ஏன் ஓடுகிறோம்
என்று தெரியாமலேயே
ஓடுதல் மட்டும்
சிலசமயம்
ஆமையாகவும்...
சிலசமயம்
முயலாகவும்...

சம்பந்தமேயில்லை
எனக்கும் அரசியலுக்கும்.
விடிந்தால்
வேலை.....கூலி
அன்றைய வயிற்றுப்பசி
என் பிழைப்பு.

குண்டும் குழியுமான
எங்கள் தெருக்கள்
போல
நீண்டு கொண்டே
நகர்கின்றன
வருடங்கள்.
தவிர...
எம் அரசியல் மட்டும்
பேச்சோடும்
வார்த்தையோடும்
மட்டும்தான்
எப்போதும்.

எப்போது....
காவுதலும்... இறக்குதலும்
ஓடுதலும்... ஒளிதலும்
இல்லாமல் போகும்.
களைப்பாயிருக்கிறது.
இன்னும் நான்
புரியாமலேயே
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)21.01.2007

Tuesday, December 09, 2008

மீண்டும் பிறந்தால்...

நம்பிக்கையே இல்லை
மறுபிறப்பு என்பதில் எனக்கு
நம்பிக்கையே இல்லை.
ஆயினும்
கேள்வியோடு துளைத்து
நச்சரித்தபடி நீ.
விட்டு வைக்க விரும்பாத
ஆதங்கமாய் அது
கேட்டுக்கொள்.
உனக்குள்ளும் பதில் இருந்தால்
எடுத்து வை.

மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால்....?
எனக்குள்...நீ...எனக்குள்
எல்லாமுமாய் எப்போதும்.
என்றாலும்
என் ஆசை
நான் உனக்கு அன்னையாய்.

பாரம் சுமந்த உன்னை
நான் சுமக்கவும்,
உன் மடி சேர்ந்த நான்
உன்னை
என் மடி சேர்க்கவும்,

மிதிபட்ட பாதங்களிடை
முரட்டுத்தனமாய்
இழுபட்ட என்னை
சிறகுகளாய் ஆக்கிய
கைகளுக்குள்
காத்த உனக்கு,

வயிற்றுக்கு வெளியில்
கருவறை கட்டி,
காயங்களைக் காயப்படுத்த
கல் எறிந்தவரைத் தூரவிரட்டி
போர்த்தி அணைத்த உனக்கு,
பண்டமாற்றாய் பகிர்ந்து தர
எதுவுமேயில்லை என்னிடம்.

உள்ளதெல்லாம் தொலைத்து
முற்றும் அற்றுப்போய்
குட்டப்பட்டு...குற்றப்பட்டு
கூனிக்குறுகி நின்றபோது
அன்பின்
நிழலாகினாய் நீ.

நெருங்கிக் கேள் அன்பே!
எனக்கென்னவோ
நம்பிக்கையே இல்லை
மறுபிறப்பில்.
வேண்டவும் வேண்டாம்
மீண்டும் பிறப்பு ஒன்று.

என்றாலும்
இனிமை தரும்
பருவத்துக் காதலன்
என்கிற பருவம் தாண்டி
என் உயிர் காவலன்
உனக்காய்
உன் அன்பின் நிறைவோடு
நான் பிறந்தால்
மீண்டும் பிறந்தால்...
தாயாய் ஆவேன்
உனக்காய் மட்டும்
உன் தாய் நானாய் ஆவேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 01, 2008

கரம் கொடுத்தீர்....நன்றி.

தமிழின் தாயகமே...
தாய் தமிழின் தேசமே...


நீ...
எங்கள் ஈழத்தாய்
முகவரி தேடி வந்துவிட்டாய்.
"பாரதமே கொஞ்சம் கைகொடு"என
நீட்டிய கைகளுக்குள்
நம்பிக்கையின்
கரங்களையே தந்துவிட்டாய்.
சோர்வின் கற்களைத் தகர்தெறிய
படையோடு திரண்டுவிட்டாய்.
அண்ணணாய் தம்பியாய்
இணைந்துவிட்டாய்
இனி எதற்கும் அஞ்சோம்.

ஓ...
யுகம் யுகமாய் காத்திருந்த
உங்கள் கரங்களின் பெருமிதத்தோடு
ஈழத்தாய் இப்போதே
சுதந்திரமாய் மூச்சு விடுவதாய்
ஒரு உணர்வு.

ஆருடம் பார்த்துப் பார்த்துக்
களைத்த வேளை,
காத்திருப்பின் காலம்
களைத்த வேளை,
"வந்தோம் இனி இருப்போம்
என்றும் உம்மோடு"என்று
களைத்துவிட்ட உடலுக்குள்
உந்துசக்தியாய்
மனதோடு உரசியபடி நீங்கள்.

கடந்த காலத்தின் சோகங்கள்
சொடுக்கும் கணத்தில்
விட்டுப்போனதாய்.
அவலங்களே சுகங்களாய் மாறி
குயிலின் கீதமாய்.

பதுங்கு குழிகள்
தேவையில்லை இனி எமக்கு.
பூக்களோடு புன்னகை வளர்ப்போம்
இனி அதற்குள்.

வானமெங்கும்...
சந்திரனும் சூரியனும் நட்சத்திரங்களும்
குந்தியிருந்து கூடிக்குலவும் சத்தங்களும்,
சந்திக்க வரும் பறவைகளும் தவிர
வேறு பறப்புக்கள் கிடையாது இனி அங்கு.

ஓ...
வார்தைகள் கூட வலி மறந்து
இறக்கைகள் முளைத்தனவாய்.
எத்தனை தசாப்தங்கள்
எத்தனை எத்தனை இழப்புக்கள்
எம் தேசத்தில்.
அத்தனையும்
எம் தசை நார்களோடு
பின்னிப் பிணைந்தவையாய்
மறக்கவே முடியாத
உறவுகளின் பதிவுகளாய்.

இனி அஞ்சோம்...இனி அஞ்சோம்.
உங்கள் கூட்டுக் குரல்களின்
அதிர்வு இடிக்கு
அசையவே வேண்டும்
எந்த ஒரு வானகமும்.
ஆயுதம் தூக்காத
அதிர்வின் ஆர்ப்பாட்டம் உங்களது.

அப்பாவுக்கும்...அம்மாவுக்கும்
அண்ணணுக்கும்...அக்காவுக்கும்
நன்றி சொல்லத் தயாராயில்லை நாம்.
சோழனும் ஈழவனும்
இணைந்துவிட்டான்.
இனி...!!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 27, 2008

நினைவின் நாள் 2008

ஈழமதில்...
மண்ணுக்காய் மரணித்தீர்
மறவோம் உங்களை நாம்.

மிருகங்கள் முதல்
பறவைகள் வரை
பூச்சிகள் முதல்
புளுக்கள் வரை
விடுதலைக்காய்
விட்ட சுவாசத்தில்தான்
விட்டு எடுக்கும்
எங்கள் சுவாசம்.

மறந்துவிட்டால்
மனிதரல்ல நாம்.
தெய்வங்களாய்
துணையிருந்து
பெற்றுத்தாரும்
எம் விடுதலையை!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 26, 2008

ஞாயமா?

விதியாம்...வேளையாம்
என்ன ஐயா வேடிக்கை!
விண்ணர்களின் வன்முறையால்
விளையாடிய வாழ்க்கை
விதியின் விளையட்டா?
வேளையின் பொழுதுபோக்கா?

குடிசை மேல் குண்டு மழை
தஞ்சமென்று குடிபுகுந்த
கோயில் வீதியெங்கும்
கண்ணி வெடி
படிக்கும் பள்ளியை
அழிக்கும் புக்காரா.
பறக்குது இலவசமாய்
ஈழத்தில்
பல உயிர்கள்.

பிய்க்கும் பசிக்கொடுமை
கொய்யாபழம் பறிக்க என்று
கையை நீட்டிய
பாலகன் கால் பறக்கிறது
கண்ணி வெடியில்.

பாலுக்காய்
பச்சைக் குழந்தையொன்று
கதறித் துடிக்க
பக்கத்துப் படலை தாண்டி
வேண்டப்போன தந்தையோ
பாடையிலே பயணமானார்.

வருங்கால எம் பூ ஒன்று
பள்ளிக்குப் போகையிலே
பாதை நடுவினிலே
அரக்கர்களின் கரம் பட்டு
பட்டுபோகிறது புதைகுழிக்குள்
ஆனால்....
காணாமல் போகிறவர் பட்டியலில்.

வயது போகவில்லை
வருத்தம் வாதையில்லை
மலர்ந்தும் மலராத
மொட்டுக்கள் எல்லாம்
இரத்தக் காட்டேரிகளால்
கொத்திக் குதறும் அவலம்
விதியாம்...
இது வேளையாம்.

காலநேரம் இல்லாமல்
அரைகுறையில் பறித்துப்போக
அப்படியென்ன
ஈழத்தில்...
தமிழன் உயிர் மட்டும்
காலனுக்குக்
காலின் தூசோ!

பழிமட்டும்
விதிக்கும் மேலும்
வேளையின் மேலுமோ!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 23, 2008

மடி கொஞ்சம் தருவாயா...

மகளே மகளே...என் செல்வமே
கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!

உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!

ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!

நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!

கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!

நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்
போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!

நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 17, 2008

போர் முகம்...

தூக்கம் தொலந்த
இரவுக் கோடிகளில்
எங்கள் பிரயாணங்கள்.
பசியும் தூக்கமும் பாரமாகி
தூக்கி எறியப்பட்ட பிசாசுகளாய்.
இலட்சியங்களுக்கு நடுவில்
சாத்தான்களாய் அவைகள்.

சிலசமயம்...
இதோ அருகிலேயே என்பதாயும்
சிலசமயம்...
கொஞ்சம் பொறு என்பதாயும்
நம்பிக்கை
நடைகள் தளராமல்.

கல்லறைச் சிநேகிதரோடு
பேசியபடியே
சின்ன உறக்கம்.
வெற்றிப் பூக்கள்
கொண்டுவரத் தட்டி எழுப்பிவிட்டு
மீண்டும் உறங்குவான் அவன்.

சின்னதாய் பெரிதாய்
எமக்குத் தேவையான
காலவரயறை அற்ற
காவியங்களை
இழந்து நிற்கிறோம்.
பள்ளிப் பாடம் சொல்லித்
தராத...தரமுடியாத
சரித்திரங்களாய் நாங்களே
சரித்திர ஜாம்பவான்களாய்.

பாலடையில் மருந்து பருக்க
அருவருத்த நாங்கள்
விருப்பத்தோடு விரல் நுனியில்
குப்பி மருந்தோடு.
நீலகண்டன் விழுங்கிய நஞ்சு
கழுத்தோடு மட்டும்தான்.
நாங்களோ நஞ்சு மாலையை
நெஞ்சோடு சுந்தபடி.
சில பொழுதுகள்
நாங்களே நஞ்சாகி.

யார் கொடுத்த சாபமோ
அகதிகளாய் அநாதைகளாய்
எம் மக்கள்.
மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய்.
நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!

(ஹேமா சுவிஸ்)

Friday, November 14, 2008

ஞாபகச் சின்னம்...

ஞாபகச் சித்திரங்களை
காலக் கருடன்
மெல்ல மெல்லக் காவி
குதறித் தின்றபடி.

சின்னச் சின்னக்
கீறல்கள் கோடுகள்
இன்னும் இதயத்துள்
சன்னங்களாய்
கந்தலாகி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அழிந்தும் அழியாமலும்.

பங்கருக்குள்ளும்
விமானப் பரிசோதனைக்குள்ளும்
பாதுகாத்துக் கொண்டுவந்த
ஆறு புளியங்கொட்டையும்
ஒரு சிரட்டையும்
காதலின் நினைவோடு
கட்டிய பழைய சாமான்களோடு
தூசு படிந்த
என் மனமாய்.

அதையும் கண்டு
அடம் பிடிக்கிறாள்
என் குழந்தை
விளையாடக் கேட்டு.
இந்த நாட்டில்
புளியங்கொட்டையும்
சிரட்டையும்
புதுமையாய் அவளுக்கு.

கண்ணுக்குள் நிழல் வலிக்க
மூளை விரும்பாமலே
தலை மட்டும் விருப்பமாய்
ஆடுகிறது மெதுவாய்.

தொலைத்த காட்சிகளை
எதிர்காலச் சாட்சிகளின்
கைகளில் கொடுத்தபடி
"இஞ்சாருங்கோ"
கூப்பிட்ட குரல் கேட்டு
"என்னப்பா"
என்றபடி நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 11, 2008

வானவில்...

மரத்தில்
குரங்காய் குந்தியிருந்து
வானவில் ரசிப்பு.

சிம்னி விளக்கருகே
குப்புறப் படுத்தபடி
குங்குமம் வார இதழ்.

முற்றத்து மணலில்
அம்மா கையால்
நிலாச் சோறு.

தலையில் பேன்.
காலில் சேற்றுப் புண்
தலயணைச் சண்டை.

எதிர்வீட்டு ஓரப்பார்வை.
தூவான நனையல்.
துலாக் குளியல்.
அணிலின் ஸ்பரிசம்.

ம்...அப்போ
எல்லாம்...எல்லாமே
இருந்தது.
அனுபவித்த சுகங்கள்
நினைவோடு.

இப்போ இருப்பது
பணம் மட்டுமே.
சுகங்கள்
வானவில்லாய்!!!
மழை மேகத்து வானம்.
அந்தரத்தில் தொங்கும்
மழை முகிலின்
வர்ணச் சேலை.
வானமங்கை நெற்றியில்
நிற நிறமாய் குங்குமம்.

மேக மங்கையையை
முகம் சிவக்க வைக்காமல்
தூக்கமே வராது
முத்தமிட்டுக் கொள்ளும்
இடிக்கும் மின்னலுக்கும்.

பல வர்ண மாலை கோர்த்து
மழையை வரவேற்கும்
வழக்கத்தை விடாது வானம்!!!

ஹேமா(சுவிஸ்)
கடையம் ஆனந்த் தளத்திற்காக போட்டோக் கவிதை.

Friday, November 07, 2008

வெளிநாடு...

குளிர் கால ஆலாபனைகள்.
மரங்கள் மஞ்சள் ஆடையில்
ஆதவன் ஒளிந்து காணவில்லை.
வானமோ அழுது வழிந்தபடி.
முக்காடு போட்ட
முகமூடி மனிதர்கள்.
இதுதான் வெளிநாடு...

வெளிறிய அவிந்த முகங்கள்.
ஆணா பெண்ணா அறியமுடியா
அறிமுகமற்ற
அரை குறை அளவலாவல்.
காதிருந்தும் கேட்காத
வாயிருந்தும் பேசாத
நாடு இருந்தும்
நாடோடிகளாய் நாம்.

திட்டுகிறானா பேசுகிறானா
அணைக்கிறானா அழைக்கிறனா
புரியாத புதிய பத்துப் பாஷைகள்.
இதுதான் வெளிநாடு...

நாய்க்கு உணவா
நமக்கு உணவா
நாலு பாஷையில் எழுதியிருந்தும்
புரியவில்லை யாருக்கு என்று.
பனியில் உறைகிறோமா
மழையில் குளிக்கிறோமா
மூக்கும் காதும் விறைத்துவிட
பாதத்தில் பாரமாய்
பாதணிகளைச் சுமந்தபடி.

மனம் விம்மினாலும்
பணம் பணம் என்று
பிணமாய் திரிகிறோம்.
மாத முடிவில்
மொத்தமாய் கட்டுகின்ற
வீட்டு வாடகை முதல்
காப்புறுதிகள் வரை.
மிஞ்சுவதோ மொய் எழுத.
இதுதான் வெளிநாடு...

மின்சார மயத்தில்
இரவும் பகலும் கூட
இரவல் பொழுதாகி
மணிக்கூட்டு முட்களோடு
நாமும் முண்டி ஓட
தொலைந்த நேரங்கள்
கலைந்த நின்மதிகள்
வராத வசந்தங்கள்
தேடினாலும் கிடைக்காமல்
தூர நின்று கை காட்டும்.
வெளிநாடாம் இது!
இங்குதான் சொர்க்கமாமே!

சொந்த நாட்டில்
சுகங்களைத் தொலைத்துவிட்ட
பரதேசிகள் நாம்.
ஈழத் தமிழனின் விதியில்
திணித்துவிட்ட
சங்கதியில் இதுவும் ஒன்று.

இதுதான் வெளிநாடு!!!

ஹேமா(சுவிஸ்)(14.11.2000)

Sunday, November 02, 2008

என் தேசம் ரஹ்மான் குரலில்...

Friday, October 31, 2008

தீபாவளி...

எமக்கென்று ஒரு தேசம்.
எமக்கென்றே அதில்
நிறைந்த கனவுகள்.
கனவுகள் கனவுகளாகவே
இன்னும்....

இருட்டில் நாம்.
பற்ற வைத்த
நெருப்பு மாத்திரம்
இன்னும்
அணையாமல் உள்ளத்துள்.
தீபத்தை விட வீராப்புடன்
விளாசி எரியும் வெளிச்சமாய்.

மூன்றாம் நாள் பால் வார்ப்பு
இன்று எம் தமிழ்செல்வனுக்கு.
செல்லுமிடமெல்லாம்
தன் செல்லப் புன்னகையால்
பேசிப்பேசி புவியையே
வலம் வந்தான்.
இன்று...... ஆறாத்துயரில்
எம்மை ஆழ்த்திவிட்டு
ஆறித் தூங்குகின்றான்.
பேச்சுவார்த்தைக்கு
ஆலோசனை போதாமல்
பறந்தே போய்விட்டானோ
பாலா அண்ணாவிடம்.

வெள்ளியன்று
வெளியேறியது எம் ஒளி.
பிறகு எமக்கெதற்கு
தீப ஒளி.
வயிறு எரிகிறது...
மனங்கள் எரிகிறது...
நாம் பறி கொடுத்த
தியாகத் தீபங்களின்
நம்பிக்கைத் தீப்பந்தங்களின்
ஒளி இன்னும் பிரகாசமாய்.
தீபாவளி எம் தேசத்தில்
இப்போ அல்ல.

காத்திருப்போம்
இருள் களைந்து
சுதந்திர வெளிச்சம்
ஏற்றுவார்கள்
எம் தோழர்கள்.
அன்றே எம்
தமிழ் ஈழத்தில்
தீபத் திருநாள்!!!


ஹேமா(சுவிஸ்)06.11.2007

Tuesday, October 28, 2008

அவசரம்...

சிந்தனைகள் நொண்டியடிக்க
யோசிக்கக்கூட
நொடிகள் இல்லாமல்
இன்று வாழ்வு வேகமாய்
விருவிருவென்று.

புதிய புதிய யுக்திகளுடனும்
கண்டுபிடிப்புகளுடனும்
அழிக்க ஒரு கும்பலும்
ஆக்க ஒரு கும்பலுமாய்.
கடவுளை வேண்டித்
தேடிய பயணம்
மிக விரைவாய்
விஞ்ஞானம் தேடியபடி.

சூரியனை வணங்கிப்
பணிந்த மானிடன்
விஞ்ஞானம் அறிந்தவனாய்.
நிலவில் காண்கின்றான்
நீர்க் குன்றாம்
அழகிய குமரிப்பெண்ணாம்.

எதிர்காலத்தில்
அகதிப் பதிவும் கூட
வரலாம் அங்கு.
கைத்தொலை பேசியிலும்
கணணியிலும்
வைரஸ்...கரப்பான் பூச்சியாம்.

நெடுவானிலும் ஆழ்கடலிலும்
துளை போட்டு
அவசர அவசரமாய்
விஞ்ஞான விருத்தி.
மூளை விருத்தியடைய அடைய
மனிதம் செத்தபடி.

என்றோ...
அஞ்ஞானம் சொன்னதையே
சொல்கிறது விஞ்ஞானம்
புதுமையல்ல எதுவும்.
ஞானிகளும்... தெய்வங்களும்
சித்தர்களும்... சரித்திரங்களும்
சொல்லாததையா இப்போ.

அவசர உலகில்
ஆழ்தளம் அறிவது
அழிவை நோக்கியா?
மனிதமும் சத்தியமும்
அழிந்து மெலிந்து
மருந்துக்கும் மறந்த
துர்ப்பாக்கிய உலகம்
இன்னும் இன்னும்
ஏன் அவசர அவசரமாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 23, 2008

உன் நினைவோடு...

வேலைப்பளு
தலையை அழுத்த
கடமை என்கிற
பூங்கொத்தோடு
எப்போதாவது
தொலைபேசியில் நீ.

கிடைக்கின்ற
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறும்
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்னச் சின்ன
விசாரிப்புக்களை மாத்திரமே
சேர்த்து அள்ளியபடி நான்.

மெல்ல மெல்ல
என்னை விட்டுத்
தூரமாகிறாயோ
என்கிற நினைவிலேயே
அழுதுவிடுகிறேன்.

வருடம் முழுதும்
வரும் ஏதாவது
நினைவு நாட்கள்
தீபாவளி...பொங்கல்
வருடப்பிறப்பு...பிறந்தநாள் என்று
நாட்களை எண்ணி எண்ணி
உற்சாகமாய்
நீ கொண்டாடிய தினங்கள்
நினைவுக்குள் இனிமையாக.

இன்று..
லண்டன்
பிக்பென் கடிகாரத்தோடு
கூட நீயும்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
பசியாறக்கூட நேரம் அற்று.

நானோ
தனிமைகளோடும்
உன் நினைவுகளோடும்
கவிதைகள் என்கிற பெயரில்
எதையாவது கிறுக்கியபடி.

ம்ம்ம்....
கூட ஒரு மணி நேரம்
வேலை செய்தால்
கைச்செலவுக்குத்
தாராளமாய்தான்.

வாழ்வின் கனவுகளோடு
நீ அலுவலகத்திலும்
நான் கனவே வராத
விழிப்போடுமாய்.

கனிகின்ற காலத்தில்
நீயும் நானும் கை சேர
அன்று சேரும்
அத்தனை நாட்களையும்
சந்தோஷ ஊஞ்சலாக்கி
அருகிருந்து
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய்
வாழ்த்திக் கொள்வோம்.

அதுவரை...
எப்போதாவது
தொலைபேசியில்
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறுகின்ற
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்ன சின்ன
அந்த விசாரிப்புக்களோடு
மாத்திரம் தொடரட்டும்
அழகான
நம் காதல்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 20, 2008

இரும்புப் பறவை...


ஞாபகத்திற்குக் கூட
எதையும்
விட்டு வைக்கவில்லை அது.

யதார்த்த இயக்கங்கள்
அத்தனையுமே தாக்கி
அழித்து மூடிய
இயந்திரப் பறவையாய்
அது வானில்.

பனை மரத்தின் உச்சியையும்
பச்சைக் குழந்தையின் பேச்சையும்
இரக்கமில்லாமல்
நறுக்கி நிறுத்தி நிப்பாட்டிய
ராட்சத இரும்பு அசுரனாய்.

வியர்வையில் நனைந்த
மனிதனையும்
வீறாய் குரைக்கும்
நாயையும் கூட
விட்டு வைக்கவில்லை
அந்தப் பிசாசு.

வான் அழுதாலும்
என்றுமே சிரித்திருக்கும்
விண்மீன்கள் கூட
அழுவதாய் ஒரு கணிப்பீடு.

காக்கை குருவி அழுதால்
அலட்சியம்.
ஆடும் மாடும் அலறினால்
போகட்டும்...
அற்ப உயிர்.

புல்லும் பூண்டும் கணக்கில் இல்லை.
மரங்களுக்கும் பூக்களுக்கும்
கேள்வியே இல்லை.
இதற்குள்...
மனிதனின் கூக்குரல் மட்டும்!

குற்றம் சொல்ல
யோக்கியம் இல்லா
மனங்களை விற்று இயக்கும்
கரங்களின் வீரப் பிரதாபம்.

எய்தவன் எங்கோ இருக்க
அம்பை நொந்து ஏன் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 18, 2008

வாரங்கள் மூன்றில்...

கண்கள் காண
உடலுக்கு வெளியில் கருக்கொண்டு
உருவான புது உடலோடு
ஜென்மம் புதிதாய்.
மூன்று வாரங்கள்தான்
முழுதான குழந்தையாய்.
முந்தைய பிறப்பில் உணரமுடியா
அன்பின் மைதானத்துள்
போட்டியே இல்லாமல்
நான் மட்டுமே.
அம்மாவோடு
முரண்பட்டுக் கொண்டாலும்
இன்னும் ஒரு ஜென்மம்
வேண்டும் என்று
ததும்பிய கண்ணீருக்குள்
வரமாய் வேண்டி
இறைவனிடமும் இறைஞ்சியபடி.

பகிர்ந்த பாசத்தில்
பங்கு கொண்டவன் அவன்.
பதினைந்து நாட்கள்
தவறவிட்ட அவன் குரல்.
பொழுதின் விடிதலும் படுதலும்
அவன் குரலிலேயே.
தேவாரமும் தாலாட்டும் அவனாய்.
என் மௌனங்களும்
அவசரங்களும் ஆத்திரங்களும்
அறியும் ஞானியாய் இனியவன்.
தலைமேல் குந்தியிருக்கும் மந்தியாய்
விந்தைக் குழந்தையாய் அவன்.
பிரச்சனையும் அவன்.
தீர்வும் அவன்.
இரகசியச் சிநேகிதனாய்
எனக்குள் உயிராய்.
கண்களுக்குள் விழுந்த தூசாய்
இருந்தாலும் எடுத்தாலும் வலிப்பவனாய்.
பக்கத்தே உணராத காதல்
பதினைந்து நாட்களில்
பால் தேடும் பச்சைக் குழந்தையாய்.

மூன்று வாரத்துள்
மாற்றம் தரும் அரசியல் சந்தோசம்.
சூரியனின் பார்வை
கனிவோடு ஈழம் நோக்கி.
கசக்கிய கண்களோடு
தூக்கம் விட்டுத் தமிழகம்
தவிக்கும் தமிழருக்குத்
தாகம் தீர்க்கும் தண்ணீராய்.
சுடுகாட்டுத் தேசத்தை
பூக்காடாய் ஆக்க
பேரம் பேசும் சூரியத் தேவன்.
இலங்கயின் ஹிட்லர்
ராஜபக்சவின்
அராஜகம் அடக்க
இறக்கைகள் விரித்த
தொப்புள் கொடி உறவுகளாய்.
தமிழின் தாயகத்திற்கு
நன்றியோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 16, 2008

நட்போடு நலம் கேட்டு...

மனம் மண்டிக் கிடக்கிறது பாரமாய்.
கையிலும் பாரத்தோடு
நுழைவாயில் நலம் கேட்க,
நுழைகிறேன்
சூழ்நிலைக் கைதியாய்
அலுப்பின் துணையோடு.

தனிமையின் இருட்டுக்குள்
தள்ளிவிட்டுக்
கதவடைத்துப் போகிறது
கரையும் கால அட்டவணை.
என் நிழலே
என்னை அழுத்தி அழவைக்கிறது.

நகரவிடாதபடி
நூல்கட்டி இழுக்கிறது
பெற்றோரின் இனிய அணைப்பு.
மீண்டும் மீண்டும்
பிரிகிற அந்த விநாடிப் பொழுதை
வெறுக்கிறது மனம்.

ஐரோப்பியக் குளிரும்
இருண்ட வான்நிலையும்
விரட்டுகிறது
வேண்டாம் போய்விடலாம்
இப்பொழுதே என்பதாய்.
நிழலுக்காய்
மரத்தடி ஒதுங்க,
மரநிழலே என் மேல் பரவி
அழுத்தி அமுக்குவதாய்.

கடமைகளுக்குள் கட்டி அழ
காலம் கலைத்துக்
காவல் காக்க,
ஓய்ந்த மனதில்
வெறுப்பின்
சுவாலைக் கனல்
அனலாய் அடிக்க,
கணணியை அழுத்த...
வலை தந்த நட்புக்களின்
நல்ல வார்த்தைகள்
மருந்தாக...
மீண்டும்
நலம் கேட்டுத் தொடர்கிறாள்
குழந்தைநிலா!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, October 03, 2008

வரம்...

Friday, September 26, 2008

அண்ணா திலீபா...

உணர்வு கலைந்து
உயிர் உருகும் வேளையிலும்
யாழ் கோட்டைத் திசை
கை அசைத்துஇ
"புலிக்கொடி பறக்கும் ஒரு நாள் பார்"
என்ற பார்த்திபனின்
நினைவின் நாள் இன்று.

கலங்கித் தவிக்கிறோம் திலீபா.
வா ஒரு கணம்...
எம் முன்னால்.

திருத்தப்படா தேசம் திருத்த
நேசம் கொண்டு உன்னையே இழந்த
சிநேகிதனடா நீ.
தன் இனம் சுவாசிக்க
சுதந்திரமாய்
தன் சுவாசம் நிறுத்திய
நாயகனாய் நல்லவனே.

சித்தார்த்தன்
எழுதத் தவறிய போதனைகள்
பார்த்திபனால்
திருத்தி எழுதப்பட்டதாய்.

காந்தீயம் மறந்த பாரதம்
மீண்டும் ஒரு முறை
அகிம்சையை அசை போட
பறை தட்டிய அறிவாளியாய்.

உலகம் அழியும் முன்
அழிக்கப்பட்டவனாய்.
ஈழம் தளைக்க...முளைக்க
தானே
முன் விதையான சத்யவான்.

நம் மண் நனைய
முகிலோடு உரஞ்சிய சிரஞ்சீவியாய்.
முத்தாய் உருவாகச்
சிப்பிக்குள் துளியான
தியாகி திலீபன்.

மரணம் துரத்த தூரதேசம் பறந்த
நாங்கள் எங்கே...
நீ எங்கேயடா!
விந்தைக் குழந்தையடா நீ.

ஈழத்து வானின்
விடிவெள்ளியாய் வடிவானவன்.
யாழ் மக்களின்
செல்லப் பெடியன் அவன் சின்னவன்.
மரணத்தையே மலர் தூவி வரவேற்று
வாகனத்தில் ஏற்றி வலம் வந்த
வீரத் தாயின் தமிழன்.

சட்டங்கள் சரி செய்ய
தானே சரிந்த செம்மல்.
வல்லரசுக் களத்தினிலே
வாளாய் மாறிய சிறுத்தை.
சுதந்திர வேட்கைப் பசிக்கு
தானே உணவான உத்தமன்.

தமிழ் ஈழம் சமைக்க
தன்னைத் தானே
சமைத்துக் கொண்ட சூரியன்.
தாயகம் காக்க
துணிவையே ஆயுதமாக்கித்
தீயாகித்...தீபமான தங்கமகன்.

பொய் அரசியல்
பேசிப் பேசியே
காலம் கடத்திய கயவருக்குள்ளும்
சரித்திரமாய் வாழும்
புத்தகமான அற்புதன்.

இயமனுக்கே
நாட் குறித்துக் கூப்பிட்ட
நாட்டுப் பித்தனாய் சித்தார்த்தன்.
தன் நோய் மறந்து
தாய் தேசம் நினத்த
தாயாய் திலீபன்.

எங்கே....எங்கே
இருபத்தொரு வருடங்களாய் அவன்?
நல்லூர்க் கந்தன் காலடியில்
மயிலான மாயன்
அவன் எங்கே?
மன்னன்...மாவீரன்
மருத்துவப் பீடத்து
மருந்தான போராளி.

யார் சொன்னார் இறந்தானென்று?
இறந்தால்தானே பிறப்பொன்று.
ஈழம் பிறக்கையிலே
இன்னொரு பக்கத்தில்
பூத்திருக்கும்
கார்த்திகை மலராய்
பக்கத்திருப்பனாய்
பார்த்திபன்
எம் திலீபன்.

மறவோம் நாம்
மறவோம் நல்லவனே.
வாழும்
உன் நினைவோடு
உன் புகழும்.
தமிழன் என்றொரு
இனம் வாழும் வரை!!!

21 ம் ஆண்டு திலீபனின் நினைவோடு

ஹேமா(சுவிஸ்)

Monday, September 22, 2008

உறவுகள்...


நீ....
தந்த ரணங்களை மாற்றாமலேயே
இன்றைய ரணங்களோடு
புன்னகைத்தபடி
என் பயணம்.

சில ரணங்கள்
ஞாயப்படுத்தத் தேவை இல்லாதவை.
சில ரணங்கள்
ஞாயப்படுத்த முடியாதவை.

உறவுகள் மறக்கப்படுபவை அல்ல.
சிலசமயங்களில்
மறுக்கப்படுபவை மட்டுமே.

கண்ணாடி மனமதில்
நீ...எறிந்த கல்
என் கைகளுக்குள் வலியோடு.

மலையில் இருந்துகொண்டு
கல் உடைப்பதாய் நீ புலம்ப
இல்லை...இல்லை
மலையையே உடைப்பதாய்
நான் வாதாட
வேண்டாமடி விடு.

எல்லோருமே
ஞாபகங்களோடுதான்
உண்டு...உறங்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பூமியின் வேகத்தோடு
விரைவாகச் சுற்றினாலும்
சற்று நிறுத்தி...
உன்னைத் திரும்பிப் பார்க்காத நாள்
எனக்கில்லை.

மறக்காது பெருமரம்
தன் கிளைகளை இலைகளை பூக்களை.
என்றாலும்...
வேண்டாமடி விடு.

தூசு தட்டித்
திரும்பவும் கிளற விரும்பாத
பழைய எதையும்
மறக்க முடியாத மனதோடு நான்.

மகரந்தச் சேர்க்கையால்
இனம் மாறும் பூக்களின் நிறம் போல்
சகோதர பாசமும்
மாறச் சந்தர்ப்பங்கள்
ஒரு பருவத்தின் பின்.

யதார்த்தத்தின் இயல்போடு
வாழ்வை....
வலம் வரப் பழகிக் கொள்வோம்.

திசைகள் வேறானாலும்
வீசும் காற்றும்
உறவும் ஒன்றுதானே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 17, 2008

ஈழம்...


ஈழமண்ணில்...

மூலைக்கு மூலை
மொழிக்கலவரம்.

இண்டு இடுக்கெல்லாம்
இனக்கலவரம்.

தெருக்கள் காயாத
இரத்த ஆறு.

காற்றில் பரவிப் பறக்கும்
பிணவாடை.

காலி வயிற்றோடு உலவும்
எலும்புக்கூட்டுக் குழந்தைகள்.

இருந்தும்...
தெய்வங்களோ
மூலஸ்தானத்தில்
மிக அமைதியாக!

இடையில்...
எதையுமே கண்டுகொள்ளாமல்
நிறையப் பேசியபடி
அரசியல்வாதிகள்!

மக்கள்?????

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 14, 2008

தொடரும்...

வானம் உடைந்ததாய்
ஒரு கனவு.
கலைந்த கனவோடு
மீண்டும் ஒரு நிமிடம்
படுக்கையோடு போராடி
கனவுக் கருவுக்குள்
இருளும் ஒளியுமாய்
பல முகங்கள்.

புன்னகை நிரவி
அழுகை துடைத்து
அடம் பிடிக்க
அமளி துமளியாய்
அடங்கும்
ஆணவ இரகசியங்கள்.

அடிமைப்பட்ட விலங்குகளின்
சத்தங்கள் இன்னும் செவிப்பறையில்
வலி கொண்டதாய்
அந்த வாசகம்.
வெளிச்சம் காணா
மஞ்சள் புற்களின் ஏக்கம் போல

வெளிறிய மனங்களாய்.
காலை மாலை ஊர்ந்து
கசிந்து பரவும் ஒளி பட்டுக்
கண்கள் வெட்கப்பட
இருந்தும் மறைந்தும்
இருந்தும் மறைந்தும்
மறைவாய் இருக்கும் அது.

மீண்டும் முயற்சி
சிறு தூக்கத்திற்காய்.
மறுப்பது கண்களா....மனமா!
குழந்தையின் பிடிச்சிராவித்தனமாய்
சீ....போ....

பொழுதை விரிக்கும்
பகலைப் பிடிக்க
இரவுப் படுக்கையை
மூலையில் நிறுத்தி
இன்றைய அலுவல்களையும்
சேர்த்து எடுத்துகொண்டு
நேற்றைய மிச்சத்திலிருந்தே
தொடங்கும் இன்றைய பயணம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 11, 2008

கானம் இழந்த ஈழம்...

கானம் இவன் கண் மூடினான்.
மூர்த்தியோடு ஜோதியாகினான்.

கானம் ஒன்று கண் மூடியது.
நாதம் ஒன்றை ஈழம் இழந்தது.
தோடி தொட்ட நாதஸ்வரம்
மூர்ச்சையுற்றுப் போனது.
குழலுக்குள் மூச்சைக் கொடுத்து
உலகையே மகுடியாய் மயக்கியது.

இன்று...

ஊரே கலங்கி நிற்க
ஊமையாய் உறங்கியது.
நாதக் குழலின் காற்றும்
திசை மாறிப் பறந்தது.
குன்னக்குடிக்குச் சோடியாய்
இறைவனடி வாசிக்க
இருவராய் விரைவோம் என்று,
திரும்பாத தேசம் ஒன்றில்
மேடையும் கண்டு பிடித்தது.

பெரிய அண்ணாவாய்...தந்தையாய்...ஆசானாய்
என்னை வளர்த்த என் அண்ணாவுக்கு,
பூத்தூவி என் கண்ணீரோடு என் இதய அஞ்சலி.
என்றென்றும் மறவோம் நாம்.
தூரம் இருந்து தவிக்கிறோம் அண்ணா.
நாதஸ்வரத்துள் நாதம் வாழும் வரை
நீங்களும் எங்களோடு.
அண்ணா...அண்ணா...அண்ணா!!!

(நாதஸ்வர வித்வான் கோண்டாவில் V.K.கானமூர்த்தி)

அன்புத் தங்கை ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 09, 2008

இசைக்கு இதய அஞ்சலி...

ஊரும் உறவும் உருண்டு புரள
சொந்தமும் பந்தமும் சோர்ந்து போக
பெற்ற பிள்ளை பிதற்றி அழ
உற்ற நண்பன் உயிர் துடிக்க
தூரத்து நண்பன் துவண்டு விழ
தொலை பேசி அலறி அடிக்க
மின் மடல்கள் நிறைந்திருக்க
உற்றவர்கள் ஓடி வர
பக்க வாத்யங்கள் பரிதவிக்க
ஸ்வரங்கள் ஸ்தம்பிக்க
திருநீறும் குங்குமமும் நெற்றிக்காய் ஏங்க
தாளமும் பாவமும் தடம் புரள
ஊமையாய் மூலையில்
அவர் விரல் தொட்ட
வயலின் மாத்திரம்!!!!

இசைமேதை குன்னக்குடி அவர்கள்
காலத்தோடு என்றும்
இசையாய் வாழ்வார்
எம்மோடு.
கலங்கும் இதயத்தோடு கண்ணீர் அஞ்சலி.

ஹேமா(சுவிஸ்)

Monday, September 08, 2008

புன்னகை...

baby,  Image Hosting
புன்னகை மறந்த
என் தேசமாய்
என் புன்னைகை
தேடியபடி நான்.
சுவரில் தொங்கிய
குழந்தைச் சித்திரம்
சிரித்தது தினமும்
பார்த்து என்னை.
கேலியாய் கூட இருக்கலாம்.

எண்ணிய நானும்
எட்டிப் பார்த்தேன்.
யன்னலினூடே
முட்டி ஆடிய
பூக்களைக் கேட்டேன்.
நித்தமும் புன்னகைக்கும்
இரகசியம்தான் என்ன?
விசாரிப்பில் இறங்கினேன்.
மாலை வர வாடினாலும்
இருக்கும் வரை புன்னகையோடு
வாழ இறைவன் தந்த வரமாய்
புன்னகை என்றன.

இறங்கி நடந்தேன் தெருவோரம்.
"மியா"என்றழைத்து
என் நடை நிறுத்திய பூனைக்குட்டி
நட்போடு பார்வையால்
புன்னகைத்தே போனது.

உழன்று புரண்டு படுத்தேன்.
ஏன் தொலைத்தேன்
என் புன்னகை மட்டும்.
மனதில் கலவரம்.
இருண்ட மேகமாய் என் முகம்.
சிரிக்கத் தெரிந்த
மர்மம் அறிந்தவன்
மனிதன்தானே!
நான் ஏன்???

சுவரில் தொங்கிய குழந்தை
"குப்"எனச் சிரித்து
இன்பமும் துன்பமும்
எம்மைச் சமைக்காமல்
நாமே அவற்றைச்
சமைத்து விட்டால்...
சந்தோஷம் குடில் கட்ட
புன்னகை தானாய் புகுந்துவிடும்.

புத்தகங்கள் படித்தென்ன லாபம்
கட்டுக் கட்டாய்.
புன்னகைக்க மறக்கிறாய் எப்போதும்.
மனதை இலேசாக்கு
மந்திரமாய் கொஞ்சம் பற.
பற்றிக்கொள் என் கரத்தையும்.
கற்றுத் தருவேன்
வாய் விட்டு
மனம் நிறைந்து சிரிக்கலாம்.

அறைந்தது முகத்தில்
ஆணியாய் ஏதோ ஒன்று
இரத்தம் வராமல்.
மெளனமாய் நன்றியோடு நான்
மறக்காத புன்னகையோடு !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, September 06, 2008

நினைவுக்குள் ஒரு நிழல்...

கணணி காவி வந்தது
"கனவில் எப்போதும் நீ மட்டுமே"
என்கிற வரிகளை.
யார் நீ எங்கிருக்கிறாய்.
எப்படி எனக்குள் இத்தனை ஆழமாக.

அதிசயம்தான் பிரியமானவனே!
உன்னை அறியவில்லை நான்.
கனவின் காடு தாண்டிய
ஒரு தொங்கலில் என்கூடு.
காலச்சக்கரம் ஓடிய திசையின்
வேகத்தில் சந்தித்ததாய்
ஒரு ஞாபகம்.
பின்னர்
ம்ம்ம்....
இல்லவே இல்லை.

என்றாலும்
சில சமயங்களில்
நக இடுக்குச் சறுக்குகளிலும்
நினைவு மேட்டு
வழுக்கல்களிலும்
விழுந்து எழும்பும்போது
முட்டி மோதிப் போவாய் நீயும்.

கவனிப்பார் அற்ற குடிசையில்
கிடக்கும் சிம்னி விளக்கிற்குள்,
அழுது களைத்த குழந்தையை
ஆசுவாசப்படுத்த
இரங்கிய தாயின் முலைக்குள்,
பருவ வயதில் திணறித்
திக்குமுக்காடும்
பருவங்களுக்குள்
உன்னைக் கண்டதாய் ஞாபகங்கள்.

சொல்லிக் கொள்ளாமலேயே
கதவு தட்டும் விருந்தாளியாய்
வந்து விரட்டும் உன் நினைவுகள்.
ஏன் என்று கேட்காமலேயே
வரவேற்றும் கொள்கிறேன்.

என்றாலும்...
வாழ்வுச் சகதிக்குள்
அமிழ்ந்து போகாமல்
காத்துக் கிடக்கிறேன்
உன்னைக் காண.
யார் நீ எங்கிருக்கிறாய்
ஏன் எனக்குள்
இத்தனை ஆழமாக!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 03, 2008

சலிப்பு...

காலம் கலைத்த வேகத்தில்
வாழ்வின் விளிம்புப் படிகளில்
விழுந்துவிடாமல் நான்.
முயலின் வேகத்தில் ஓடி
வியர்க்க வைக்காமல்,
ஆமை வேகத்தில் ஊர்ந்து
ஏமாற்றியதால்
பற்றிப் படர ஏதுமற்று
எவருமற்று
பற்றுதலே இல்லா வாழ்வாகி
கற்றது பாடம் நிறைவாகி
மற்றவர் கற்கப் பாடமாகி
தோற்றம் வெளியில் அழகாய்
உள்ளுக்குள் இற்ற மரமாகி
இன்னும் சரியாமல்.


இப்போதெல்லாம்
எதையும் கண்டு கொள்ள
விரும்புவதில்லை.
கவலைப்படுவதும் இல்லை.
வான் தகர்ந்தால் என்ன
பூமி நகர்ந்தால் என்ன.
அமிலம் கக்கும்
மனிதர்கள் நடுவில் வாழ்வதைவிட
மனிதனை
முழுதுமாய் புரிந்துகொண்ட
மிருகங்கள் இடையில்
வாழப் பழகிக் கொண்டவளாய்.


என்றோ பகலில்
தொலைந்த ஒன்றிற்காய்
இரவில் மட்டுமே
வருந்திப் பயன் ஒன்றுமேயில்லை.
விதியின் கையில் சாட்டைக் கயிறு
என்றான பின்
நடைபாதை மிக மௌனமாக.
நெஞ்சக் குழியை
விதி நெருக்கி இறுக்கும் மட்டும்
வாழலாம்
என்ற இயல்போடு!!!


ஹேமா(சுவிஸ்)