*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Wednesday, July 08, 2015

அப்பா...அப்பா...

கவியாய்
எனைப் பிரசவித்த
என் குழந்தை...

தன் பெயரையே
என் கவிக்குப் பெயராக்கிய
என் அப்பாக் குழந்தை...

பறையோசையின்
அதிர்விலும் உறங்குகிறது
இறுதிக் கவிதைக்கான
வார்த்தைகளை
என் கண்ணீரில்
நனைத்துவிட்டு.

எனக்கான குறிப்பேதும்
விட்டுச் சென்றதாய்
எந்தத் தடயமுமில்லை
என்னைத்தவிர.

அடிவயிற்றில்
கயிறிறுக்கி
காலன் உயிர் பிடுங்கையில்
அவர் எழுதி ஒடிந்த
பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர்
மூடிய விழியில்.

எழுத்தறிவித்த
என் இறைக் குழந்தை
என்'அப்பா'
'குழந்தை நிலா' வின்
இக்குழந்தை...

இனியொருபோதும்
திறக்கா அவ்விழி
இனியொருபோதும்
'அம்மா' வென அழைக்கா
அப் பாசமொழி.

எரிந்த சிதையிலிருந்தும்
புரண்டு விழுந்திருக்கும்
ஒற்றை விறகு
எனக்கே எனக்காய்!!!

குழந்தை நிலாவின் குழந்தை குழந்தைவேலு என் அப்பா யூலை 1 ல் என்னை விட்டு இறைவனடி சேர்ந்தார்.

Thursday, September 11, 2008

கானம் இழந்த ஈழம்...

கானம் இவன் கண் மூடினான்.
மூர்த்தியோடு ஜோதியாகினான்.

கானம் ஒன்று கண் மூடியது.
நாதம் ஒன்றை ஈழம் இழந்தது.
தோடி தொட்ட நாதஸ்வரம்
மூர்ச்சையுற்றுப் போனது.
குழலுக்குள் மூச்சைக் கொடுத்து
உலகையே மகுடியாய் மயக்கியது.

இன்று...

ஊரே கலங்கி நிற்க
ஊமையாய் உறங்கியது.
நாதக் குழலின் காற்றும்
திசை மாறிப் பறந்தது.
குன்னக்குடிக்குச் சோடியாய்
இறைவனடி வாசிக்க
இருவராய் விரைவோம் என்று,
திரும்பாத தேசம் ஒன்றில்
மேடையும் கண்டு பிடித்தது.

பெரிய அண்ணாவாய்...தந்தையாய்...ஆசானாய்
என்னை வளர்த்த என் அண்ணாவுக்கு,
பூத்தூவி என் கண்ணீரோடு என் இதய அஞ்சலி.
என்றென்றும் மறவோம் நாம்.
தூரம் இருந்து தவிக்கிறோம் அண்ணா.
நாதஸ்வரத்துள் நாதம் வாழும் வரை
நீங்களும் எங்களோடு.
அண்ணா...அண்ணா...அண்ணா!!!

(நாதஸ்வர வித்வான் கோண்டாவில் V.K.கானமூர்த்தி)

அன்புத் தங்கை ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 09, 2008

இசைக்கு இதய அஞ்சலி...

ஊரும் உறவும் உருண்டு புரள
சொந்தமும் பந்தமும் சோர்ந்து போக
பெற்ற பிள்ளை பிதற்றி அழ
உற்ற நண்பன் உயிர் துடிக்க
தூரத்து நண்பன் துவண்டு விழ
தொலை பேசி அலறி அடிக்க
மின் மடல்கள் நிறைந்திருக்க
உற்றவர்கள் ஓடி வர
பக்க வாத்யங்கள் பரிதவிக்க
ஸ்வரங்கள் ஸ்தம்பிக்க
திருநீறும் குங்குமமும் நெற்றிக்காய் ஏங்க
தாளமும் பாவமும் தடம் புரள
ஊமையாய் மூலையில்
அவர் விரல் தொட்ட
வயலின் மாத்திரம்!!!!

இசைமேதை குன்னக்குடி அவர்கள்
காலத்தோடு என்றும்
இசையாய் வாழ்வார்
எம்மோடு.
கலங்கும் இதயத்தோடு கண்ணீர் அஞ்சலி.

ஹேமா(சுவிஸ்)

Monday, July 21, 2008

நடிகர் திலகம்...

மனதைக் கழற்றி
முகிலுக்குள் முடக்கி,
மேடையேறிப் பாட்டும் கூத்துமாய்
காற்றோடு கதைப்பவனாய்...

சொந்த நினைவுகளை
ஓட்டுக்குள் ஆமையாய்
உள் இழுத்து,
வெள்ளைச் சிரிப்போடு
கலைக்குள் தொலந்தவனாய்...

இயல்பைத் தொலைத்து
நெருஞ்சி முள்ளுக்குள்ளும்
கண்ணில் நீர் மறைக்கும்
கலைஞனாய்...

எதைக் குறித்தும்
அக்கறை தவிர்த்து
தன் தொழில் ஒன்றையே
குறி வைத்து,
கூர்க் கோல் எறியும்
நடிகன் இவனாய்...
சிவாஜி கணேசன்.

இயற்கை அழியும் வரை
எமக்குள் நினைவோடு வாழும்
எங்கள் நடிகர் திலகத்தின்
நினைவோடு
இன்று ஒரு கணம்!!!

ஹேமா(சுவிஸ்

Friday, March 14, 2008

"இளவரசி"


சிட்டுப்போல... பட்டுப்போல...
சின்னதாய்...
அழகானதாய்...
தொட்டால் கசங்கிவிடும்
பஞ்சுப்பெட்டகமாய்.
தொட்டுப்பார்
என் கன்னத்தை
தட்டித்தடவும்போது
விட்டு வெளியில் ஓடி
ஒளிந்திருந்து
"அம்மா"என்று
அழைத்திடும் அழகு.
சங்கத்தமிழில் சொல் கோர்த்துத்
தனக்கென்று ஒரு மொழியில்
மொழி பெயர்த்து
செவ்விதழ் விரித்து
"அம்மா"என்று
அழைத்திடும் அழகு.
இரு வர்ணம்
கலந்து தீட்டிய ஓவியமாய்
இரு பவளம் பதித்து
ஒளி கொடுக்கும் கண்ணிரண்டாய்
தாமரை இதழ் மடித்து
இரு காதுகளாய்
சின்ன வெண்கற்கள்
கோர்த்தெடுத்த பல்வரிசையாய்
குதறும் கூர்மையாய்
போதைச் சிரிப்பொடு
"அம்மா" என்று
அழைத்திடும் அழகு.
எட்டி நின்று ஜாலம் காட்டி
உருட்டி விட்ட பந்தைக்
கட்டிப்பிடித்து உருண்டெழும்பி
திரும்பவும் உருட்டக் கேட்டு
கண்ணால் கதை சொல்லி
"அம்மா" என்று
அழைத்திடும் அழகு.
கள்ளமில்லாப் பிள்ளையவள்
கொள்ளையின்பம் காட்டுபவள்.
குழந்தையும் தெய்வமும்
கொண்டவர் உள்ளம் வாழும்.
சூதில்லை வஞ்சகமில்லை
பொறைமையில்லை
பொச்செரிப்பில்லை
குறை நிறை சிறிதுமில்லை
சுட்டெரிக்கும் பார்வையில்லை
விளக்கங்கள் குழப்பங்களில்லை
வேஷமில்லை கோஷமில்லை
உன்னது என்னது இல்லை
பொய் பிரட்டுப் போலியில்லை
புரியாதது எதுவுமில்லை
இத்தனையும் இல்லையென்றால்
இக்குழந்தை ஜடமுமில்லை.
என்னை முகம் பார்த்துக் கனிவோடு
"அம்மா"என்று
அழைக்கும் அழகு.
ஆனால் இன்று
"அது"அதுதான்
அன்பு தந்த அந்தக்
குழந்தைக்கு உயிரில்லை.
ஆறுதலாய் நான் அணைத்த
அந்த உயிருக்கு உயிரில்லை.
முன்னைய இரு நாட்கள் முந்தி
என்னோடு உண்டு உறங்கி
அழகாக என்னை
"அம்மா"என்றழைத்த
அச்செல்வம் இன்றில்லை.
முந்தை நாள் அடுக்களை
நான் துடைக்க... தன் வாலால்
தானும் துடைத்து
வாய் நிறைய"அம்மா"என்றழைத்து
பால் குடித்துப் படிக்கட்டுக் கடந்த
என் "இளவரசி"
இருபது நிமிடங்கள் கடந்திருக்கும்
திடீரென்று ஓலமிட அவலப்பட்டு
அருகில் வர"அம்மா"என்று
அழகாக அழைத்து
அடங்கியே போனது.
"இளவரசி" என்கிற
என் அன்புப் பூனைக்குட்டி!!!!!!

ஹேமா(சுவிஸ்)
29.01.2003 Mr & Mrs Lüthi Markus & Sybille Swiss Bern.