*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 30, 2012

வித்தை கற்றவளின் கனவு...

கனவுகள் போர்த்திய பகல்
குறைந்த வெளிச்ச இரவு
வகிடெடுத்து
வளைந்த தேவதையாய்
என்றும்
வாயில் சின்னப்புன்னகை கீறி
பூக்களையே பாரமென்று
சுமக்கும் பாவைச்சித்திரம்.

நாடு வீடு
நகரும் நகரம்
நரகமாகும் கனவு
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.

கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 26, 2012

காதல் துளிகள் (2)...

பார்வையால்
பசிக்க வைப்பவன்
காதலைத் தருகிறான்
'தின்' னென்று !

உன் சபித்தல்கூட
வரமாய்த்தான்
வந்தணைக்கிறது என்னை
எதற்காகவோ
யாருக்காகவோ
நீ...சிரித்த சிரிப்பை
எனக்கென்று ஏற்றுக்கொண்டு
இன்றைய நாளை
நிறைத்துக்கொள்கிறேன் !

ஏன்....
என்னை விலக்கினாயென்று
புரியவில்லை
இன்று விலகியிருக்கும்
இந்த
மூன்று நாட்களில்தான்
உன்னைக் கூடுதலாக
நினைக்க வைக்கிறது
நீ சொன்ன...
பாட்டி வைத்தியம் !

பூமியாய் குளிர்ந்து
உறைந்து கிடக்கிறேன்
காரணத்தோடு
செயற்கைச் சூரியன்கள்
உருக்கமுடியா
சூரியகாந்தி நான் !

பூட்டியிருக்கும்
வீட்டின் பூட்டை
யாரோ
இழுத்தசைக்கிறார்கள்
நாசித்துவார இடுக்கில்
என்னவனின் வாசனை
அவன்...
இப்போ...
இங்குதான்...!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 23, 2012

இற்ற சருகிலும் நீ...


பச்சையம் தொலைக்கும்
மஞ்சள் இலைகளுக்குள்
கூடொன்று கட்டி
தந்துவிட்டு
போயிருக்கலாம்
நீ....
சருகாகினாலும்
கூட்டுப்புழுவாய்
ஒட்டியிருந்திருப்பேன்
இறகு தர
வருவாய் என்கிற
நப்பாசையோடு.

இப்போதும்
அங்கொன்றுமான
இங்கொன்றுமான
உன் நினைவுகளை
சேர்த்தெடுத்து
இற்றுத் தளர்ந்து மடியும்
அதே சருகின்
நரம்புகளில்
ஒட்டிக்கொண்டுதான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 20, 2012

அப்பாவின் அழகு பொம்மை...

அப்பா...
நிறைய அழகு பொம்மைகளைச்
சேர்த்து வைத்திருப்பதாக
சொன்னார்.

ஒரு பொம்மையை மட்டும்
கொஞ்சம் துப்புரவாக்கி
கொஞ்சம் அழகாக்கி
அடுக்களையில்
வைத்திருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவைத்தவிர
எதையும் எவரையும்
கண்டதில்லை நான்
அடுப்படியில்.

சும்மாதான் கேட்டுப் பார்த்தேன்
ஒரு பொம்மை
விளையாட வேண்டுமென
கை காட்டினார்
அம்மாவின் பக்கம்.

இப்போ...

அப்பாவும்
அவர் பொம்மைகளும்
இல்லாமல் போயிருந்தன.

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
அம்மா புறுபுறுத்தபடி.
வேறும் சில பொம்மைகள்
இருக்குமோ
அப்பாவின் அறையில்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 17, 2012

வா...வா !

எதிர்பார்ப்புக்கள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ....எங்கோ
யாரோ ஒருவரிடம்
கைகுலுக்கிக்
காதல் சொல்லும்
ஏமாற்றம் வேண்டாம்
என்பதற்காகவே
கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

அப்பப்போ
நாம் பரிமாறிக்கொண்ட
சொற்களைச் சேர்த்தொரு
அன்புக் கோட்டை
தகர்த்தெரியாத
உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 13, 2012

புலம்ப விடுங்களேன்...

குற்றங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறவன்தான் நியாயப் புத்தகங்களை சுமந்து திரிவான்.நான் சுமையற்ற சிறு மரமாய் எனக்குப் பிடித்த காற்றில் தலை கோதிக் கொள்கிறேன்.அதே காற்று உன் வீட்டுக்கும் வரும்.உன் அறையின் திரைச்சீலையையும் தென்றலாய் அசைக்கும்.வலது உள்ளங்கையில் தானாக வந்து அமர்ந்துகொண்ட காற்றைப் பறிகொடுத்தாலும்....எத்தனை கல்வீசினாலும் கலங்காத குளத்தில் பூவொன்று விழுந்து கலங்கிப்போனது...!

......க்காரன் என்றே பெயர் வைத்திருந்தேன்......பெயர் தெரியவில்லை.தெரிந்தாலும் சொல்லப் பிடிக்கவில்லை.முதலில் அவன்தான் ”தாமதாய் வந்த பல்கலைக் கழகம்! ஆசையோடு படிக்கிறேன்!பாஸ் பண்ணுவேனா???” என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.மகிழ்ச்சிகளை அள்ளிக்கொடுத்தே பழக்கபட்ட நான் என......இன்னும் ஏதோ ஏதோ...கவிதையாய்ச் சொல்லிச் சிரித்தான் !

குற்றமென்று எந்த வரைமுறையும் எனக்குக் கிடையாது.....ஆக அதற்குண்டான நியாயத்தைப் பற்றி சிந்திக்கிறவளும் நானில்லை.ஆனால் எதற்காகவோ தண்டிக்கப்படுகிறேன்.அன்பே கிடைக்காத காட்டில் திரிந்த வேளை தெரிந்த குட்டி மின்னலென வெளிச்சம் தந்து என்னைத் தன் கைக்குள் பொத்திய அந்த நிமிடங்கள்....!

நிச்சயம் இது ஆயுள் தண்டனை.இந்தத் தண்டனை....தன்னை மறந்துவிட்டேனா என என்னைப் பரீட்சித்த அந்த ஒற்றை உயிருக்கு மட்டுமே வெளிச்சம்!


முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.
பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 07, 2012

பெரிதாய் சிறிதாய்...

நீண்டிருக்கும் அது
சிலசமயம்
பெரிதாயும் சிறிதாயும்.

தவறுகள்
தேவைகளுக்கேற்ப
கனவுகளை இழுத்துத் தகர்த்துவிடும்.
முன்னால் நிற்பவன்
அலுகோசா அன்பானவனா
நீதியானவனா நெறிகெட்டவனா
அதற்குத் தேவையற்றதாய்.

"உனக்கு நீயே கடவுள்"
தத்துவம் இங்கே பொய்யாகி
உயிரின் தீர்மானம்கூட
இன்னொரு கையிலாகிறது.

விஞ்ஞான யுகம் தந்த
வரங்களில் இதுவுமொன்று.
உயிருள்ளவை
உயிரற்றவை
விஞ்ஞானம்
பகுப்பாய்வு முடிவுகள்
சிரிப்பாயிருக்கிறது நினைக்க.

பிரபஞ்சத்தை
நிர்ணயிக்கிறதாம் செயற்பாடுகள்
ஹிரோஷிமா நாகசாகி
உலக யுத்த
அழிவிலும் ஆரம்பம்
இன்றைய யப்பான்.

பேச்சுள்ளவனை ஊமையாக்கி
அந்த ஊமையுடன்
பேச....
நட்புடன் சிரிக்க
நினைத்ததைச் சாதிக்க
சிலசமயம்
நீட்டிய முகத்துடன்
சிறிதாயும் பெரிதாயும்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, August 04, 2012

காதல் துளிகள் (1)...

வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுபோல
பெயெரில்லாப் பூ
நீ...

தலை கோதும் விரலும்
தாலாட்டும் உன் குரலும்
இன்றெனக்கு
இல்லையென்றால்
இயற்கையில் ஏதோ
இன்னலே தவிர
உன்னாலாயிருக்காது.

என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
எனக்குள் நீயா
உனக்குள் நானா
என்று !

மேகம் விட்டிறங்கிய
பூவொன்று
நேற்று
காற்றின் வரவுக்காய்
திறந்தே கிடந்த
என் வீடு புகுந்து
மௌனம் உடைத்த
மொழி திரட்டி
என் பெயரை
உரசிப்போனதால்
இன்றுமுழுதும்
புதுகாற்றைச் சுவாசித்ததாய்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
என் உள்ளுயிர் !

ஒரு பிரிவின்
சுவடென்றறியாமல்
அவன் பார்வை வரித்திழுக்க
மேலிருந்து கீழாக நகர்ந்தேன்
அழுத்தப்பரப்பில்
அவன் நீராய்
அவன் கண்ணில்
மிதக்கும் மீனாய் நான் !

'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்'

ஹேமா(சுவிஸ்)