*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, June 04, 2008

காணவில்லை...

ஆண்டவனும் இல்லையோ
ஆதரிக்க யாருமின்றி
அகதியாய் போனானோ
அயல் நாட்டில் தஞ்சம் கேட்டு!
பேய்களின் ஊழியாட்டம்
பெரும் பாடாய் இருக்கையிலே,
ஆண்ட தமிழ் இனம்
அவதியுறும் ஈழத்தில்...
ஆண்டவனும் இல்லையோ
ஆதரிக்க யாருமின்றி
அகதியாய் போனானோ!
யாரிடம் போயுரைக்க.

சின்னதாய் கூடு கட்டி
அன்றிலாய் வாழ்ந்திருந்தோம்.
பெற்றவர் உற்றவர் என்று
அன்புக்குள் அடைகாத்தோம்.
உயிர் காத்து பயிர் வளர்த்த
கதிர் நாங்கள் பதர் ஆனோம்.

இலங்கையில்,
வெலிக்கடை...களுத்துறை
கலிகால காவல் கூடங்கள்,
பலிகள் கேட்கும் கிலி கொண்ட
கொலைக் கூடம் ஆனதே.
செங்கீரை ஆடிய
எம் செல்வக் குஞ்சுகள்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
செஞ்சோலைச்
செல்வங்கள் ஆயினரே.

எம் இனத்தின் விடுதலைக்கு
தம் உயிரைத் தானம் செய்த
விம்முகின்ற தலைமுறைக்கு
நம்மவரின் விலை இது.
வன்னி மலைக் காட்டின் இடையே
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய ஒளியோடு,
பொன்னான நாள் ஒன்றை
சின்னதாய் நினைத்து ஏங்கும்
கண்ணான நம்மவர்
உண்மை நிலை காண...
ஆண்டவனும் இல்லையோ
ஆதரிக்க யாருமின்றி
அகதியாய் போனானோ
அயல் நாட்டில்
தஞ்சம் கேட்டு !!!

ஹேமா(சுவிஸ்)2003Feb

1 comment:

தமிழன் said...

கண் இல்லாதவன் கடவுள், அவன் பாறை மனம் ஒருநாள் உருகும், பார் புகழ பார்ப்பவர் வியக்க ஈழம் ஒருநாள் உதிக்கும்.உங்களுடன் சேர்த்து நானும் இறைவனை பிராத்திக்கிறேன்.இந்த தமிழ் சகோதரனால் இதுதான் முடியும்.

Post a Comment