*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 30, 2013

பெருங்கடலொன்றின் வார்த்தைகள்...


பாதி எரிந்தணைந்த
உடலொன்றொன்றுக்கான
இருப்பிடமாகிறது
என் பாறையிடுக்கு.

ஊத்தைச் சொற்களையும்
தின்றொழிக்கும்
சாலமோன் மீன்கள் ஒட்டிய
என்னில்
ஒரு கூச்ச நெருடல்.

தன் குஞ்சுகளை மூடி
மணலிடும் தாய் நண்டில்
கிளிஞ்சல்களை அள்ளியெறியும்
வலைவீச்சுக்காரனாய்
ஆதிக்க ஆர்ப்பாட்டங்கள்.

பேரூழியக்காரர்களின்
சாம்பல் கரையும் கடலில்தான்
இனம்பெருக்கும்
பெரும் சுறாக்களும்.

ஆடி அடங்கும்
ஆழக்கடலின் பாசிச்சிக்கலுக்குள்
பிறந்திறக்கும்
சாபப்பாறைகளின் நடுவேதான்
இத்தனை வாதைகளும்
நடப்புக்களும்
பரிமாற்றாங்களும்
படுகுழிகளும்
ஆசைகளின் பேரவலங்களும்.

பக்குவமில்லாப் பிறப்புக்களை
இனியும் அனுமதிப்பதில்லையென்கிற
விதியொன்று செய்ய
கடலூரிகள் முதுகில்
எழுதி வைத்துவிட்டே
காத்திருக்கிறோம்.

இம்மீதி உடலைக் கொழுத்த
நீளும் ஒரு கை.

அக்கை பற்றி விதி சொல்ல
ஒரு மொழி சொல் அலையே
ஆயிரமாயிரம் உடல்கள் கரைத்த
வாசனைக்குச் சாட்சி நானென!!!

 http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

ஹேமா(சுவிஸ்)

Friday, December 27, 2013

காதல் துளிகள் (11)

முந்தானை பிடித்திழுக்கும்
குழந்தையாய் தொடர்கிறேன்
தாயுமானவனே......
சுவை காட்டி
வெடுக்கென
இழுத்த இனிப்பானாய்
நீ எனக்கு !

நொடியொன்றில் கொல்லவும்
அதே மறுநொடியில்
உயிர்ப்பிக்கவும்
முடிகிறது உன்னால்

நீ...என்ன
கடவுளை வென்றவனோ
எத்தனை முறைதான்
இறப்பதும் பிறப்பதும் !

தெருவில்...
தொலைக்காட்சியில்...
தெருவில்...
வரும்...
போகும்...
முகங்களோடு
சமப்படுத்தித் தேடுகிறேன்
எவரெவரையோ
ஞாபகப்படுத்துகிறார்கள்
உன்னைத் தவிர....

நாளின் வேகப்புள்ளியில்
உன்னை
நினைக்காத நேரமில்லை
நினைத்தாயா
நீ இன்று என்னை !

நீ.....
எழுதி விட்ட
பாதிக் கவிதையில்
தொடருமென்று
புள்ளிகளிட்டு
முற்றுப்புள்ளி வைக்கா
பெரு விதி
வீதியில் நான் !

எதாகிலும்
ஏதாகிலும்
ஏதாகிலும் சொல்லிவிடு
உயிர்வாழ
நரம்பறுத்த கைகளில்
உன் பெயர் மிஞ்சியிருக்கும்
குருதி சொட்டச் சொட்ட !

ஹேமா (சுவிஸ்)

Wednesday, December 25, 2013

ஜீவஒளி...


சூரியக் கடவுளை நம்பிய
அகங்காரத்தில்
நம்மருகில்
விளக்கேற்றும் கடவுளை
ஒளித்து வைத்திருந்தான்
மனிதன்.

விளக்கேற்றிய
பத்தினிப் பெண்கள்
வீட்டு விலக்கென்றார்கள்
ஆனாலும்
வீட்டு விளக்குகள் ஒளிர்ந்தன.

கடவுள்...
களவு போன நாளிலிருந்து
கோயில்களில்
தஞ்சமடைந்திருந்தன இருள்.

விளக்குகளோ திரிகளோடு
ஒரு துளி நெய்யுக்காய்
தவமிருந்தன.

பின்னொருநாளில்
கடவுள் வந்தார்
கையில் ஒரு
செத்த மின்மினியோடும்
திரியில்லா
வெறும் விளக்கோடும்.

விளக்கில்லா ஈசல்கள்
சூரியனைச் சுற்றிச்
செத்துக்கிடந்தன!!!

ஹேமா (சுவிஸ்)

Monday, December 23, 2013

அழுக்குக் கடவுள்...


பாதாளக்கரண்டியொன்றுக்கான
கவிதைதான் ஞாபகம் வருகிறது.

தொலைத்து விட்ட
உன் வாழ்வைத் தேடியெடுக்கிறேன்
நீ வளர்த்துவிட்ட உறவுகளுக்குள்.

பாதங்களைக் கிழிக்கிறது
காலமுட்கள்
நம்பிக்கைகளைப் பதம் பார்க்கிறது
வார்த்தைச் சம்மட்டிகள்.

கொஞ்சம் அண்ணாந்து பாரேன்...

விண்மீன்களை ஓடிப்பிடித்தும்
நிலவுக்குள் பாட்டியைத் தேடியும்
பறவை விட்டுப்போன சிறகோடு
வானலையும் உன்னையும் கண்டு
எத்தனை காலம் நீ....?

நிசப்தக் கற்களால் வீடமைத்து
நிலா வழிய ஒரு சிறு துவாரமிட்டு
சாணக வாசனை நாசிக்குள் நிரப்ப
உயிரசைக்கும் இசை ரசித்து
எத்தனை காலம் நீ....?

கற்களைக் கடவுளாக்கி
நேர்த்திகளை
மரங்களில் ஊஞ்சலாக்கும்
மனிதர்கள் நடுவில்
அழுக்கான கடவுள் அழகற்றவர்தான்
ஒத்துக்கொள்.

ஒரு இரவின் பெருவெளி நிரப்பும்
என்றோ பாடிய
தெருப்பாடகனின் பாடலொன்று.

பறவையின் பசியையும்
எண்ணிக் கசியும் குழந்தையின் மனம்.

கொஞ்சம் பொறு
அன்பின் நீள்சுவரில் உன் பெயர்.

என்றோ தொலைந்த
நெடுங்கனவொன்றில்
சற்று நேரம்
உன் இரவை அகலப்படுத்தி
உறங்கிக்கொள்.

உனக்கான சவப்பெட்டியின்
இறுதி ஆணி
உன் உள்ளங்கையிலேயே
இருக்குமென்று
ஒப்பமிட்டு வாழப்பழகு
இனியாவது!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 18, 2013

குளிர்க்காதல்....


நோயாகிப்போகிறேன்
பனி மிரட்டும் தேசத்திலும்
அனல் பறக்கிறது
அவன் ரகசிய
வார்த்தைகள்.

கருத்த நினைவுகள் முனக
மெல்ல மெல்ல
எலும்புடைத்து நொருக்கி
மாத்திரைத் துகளென
இறங்குகிறது
அவன் குரல்
நினைவு மீட்டலோடு.

தொன்மத்தின் படிமமென
உறையும் சுவாசம்கூட
தீயாக
நெஞ்சுக்குள் உருளும்
உருளையொன்று
சொல்லிவிடு
கேட்டுவிடேனென
உயிரிடித்து உடைக்கிறது.

வதைகள் வேண்டாமே...

முத்தங்களைக் கேட்டு வாங்க
நானென்ன சும்மாவா
அவனைவிடத் திமிரானவள்
அட.....போடா !

ஹேமா(சுவிஸ்)

Friday, December 13, 2013

இந்த வேளையில்....


அறுத்து விடப்பட்ட காற்றலையில்
சுவாசிக்கவியலா அழுத்த அடர்வில்
மூச்சுக்குழல் புகுந்த உணவென ஒரு குரல்
இருண்ட பனைமரச் சுவர் உடைத்தெறிகிறது.

ஒரு சொல்லை
மனதில் புகுத்தவும்
பின் வாயால் கக்கிப் பறிக்கவும்
கற்றுக்கொடுத்திருந்தது சமூகம்.

கூதிர்கால நிலம்
கொஞ்சம் விறைத்து
வேர் மறந்த நிலையில்
இணக்கமற்ற ஒரு பனிநிரம்பிய
அதிசீதக் குளிரில் மலங்கி
பள்ளத்துள் தள்ளவைக்கிறது அது
உருப்போட்டு உருப்போட்டு
வளர்த்த ஆசையை.

பொழுதுகளைச் சுவீகரிக்கும்
சுவர்க்கோழியென
ஒக்கப்பாட்டற்ற அத்தியாயத்துள்
கூவத்தொடங்கும் கூத்தியாகி
ஒட்டடைக்குள்
கர்ப்பமற்ற அடைகாத்தல் ஆரம்பம்.

நேற்று இன்று நாளையென
பருவகாலங்களைப்
பிரித்திடா நிலையில்
அதீத துரவு மையப்புள்ளியொன்றில்
கேட்டுக்கொண்டிருக்கிறது அக்குரல்.

தொடர்ந்தும் துரத்தும்
துரக(த)த்தின் முதுகில்
உறவுகளை விட்டுவிட்டு
தீவொன்றில் ஊன்றிக்கொள்கிறது
இரண்டு வேர்கொண்ட மரம்
மீண்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 11, 2013

யுகம் மாறாதவர்கள்...


அடித்துடைக்கும்
ஏழையின் தகரவீடென
வார்த்தைச் சிதறல்களைப் பொறுக்கி
சமாதான முயற்சியில்
வீட்டெறும்புகள்.

இறுக்கிக் கட்டும்
வார்த்தைகளை முறித்து
நொருக்கி
மிதக்கும் தக்கைக்கு
காரணம் தெரிந்தும்
விளக்கவியலா ஆணதிகாரம்
'மிதக்கிறது
அவ்வளவேதானென' அறிவிக்கும்.
அகங்கார கர்வம்.

இருள் கிழித்தெரிக்கும்
அக்கினியை
நிமிடங்களில் கையேந்தி
தட்டிலும் கட்டிலிலும்
தன்னை நிரப்பி
தடம் மாறி
சுயம் கடக்கும் பெண்மை
பார்வையிருந்தும்
பார்வையற்றவனைக்
கடக்கும் பாவனையில்.

யூகத்தில் கடக்கும்
ஆயிரம் ரகசியக் கேள்விகளை
"எல்லாம் என் விருப்பம்
வாதமிடாதே
சொல்வதைக் கேள்"
எதிர்க்கேள்விகள் இல்லா
பிரேதப்பெட்டியின் மூடியென
அடங்கும் பதில்களற்று.

கைகுலுக்கும் வெள்ளைச் சமூகத்தில்
படிப்பும் பொருளாதாரமும்
நிறைத்தாலும்
மனமென்னவோ
பெண்ணுக்கு ஆணியறையும்
ஆணாதிக்க சமுதாயத்தில்
ஆனாலும்....
உணர்வுகளை மதிக்கும்
மனிதராய்.

இயலாமையை
ஏங்கும் அன்பை
நசித்து புசிக்கும் பசியோடு
ஒரு வாழ்க்கைப் புரிதல்.

அன்றிலிருந்து இன்றுவரை
ஆதிக்க வர்க்கம்
இப்படியாகத்தான்
புதிரறுக்கும் சொற்களை
அவிழ்க்கும் அவளிடம்
சட்டென்று பறித்திழுக்கும்
உரிமையை .

பிரியங்கள்
வன்மையின் காயங்களைச் சரிசெய்யும்
நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும்
நிலைமை அதுவேதான்.

சொற்பமாவது பேசவிடுங்களேன்
புரிதலின் காற்று உள்வரட்டும்....!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 09, 2013

நிழல் சுருவம்...


சுருவங்களால்
ஆன வீடொன்று 
அடிக்கடி கனவில்
பச்சையம் தின்று 
காற்றைக் குடித்தவளிடம் 
ஏது இப்படியொரு வீடு
மீசை வைத்த 
ஒரு புள்ளி நகர்ந்து
பாரமாக்குகிறது நிகழ்வை.

சருகாகி வீழும்
இலையொன்றை 
ஏந்திப்பிடித்த அப்புள்ளி
தனக்கான 
கூரையின் இறப்பில்
செருகியும் கொள்கிறது
நான் பச்சையம் தின்று 
செத்த இலையாகவும் 
இருக்கலாம் அது.

உடைந்த நிலா 
நகரும்  வேளையில்
நம் உடல்கள் 
மெல்ல முளைக்க 
வெளிச்சத்தில்....
சவரக் கத்தி கண்டு 
கனகாலாமான ஒரு முகமும் 
தவளைகளை ஞாபகப்படுத்தும்
பச்சையம் தின்ற என் தோல்களும்.

புதிது புதிதான வாசனைகள் பரவ 
அனிச்சையான தொடுதல்கள்கூட 
அந்தரமாய்.....ஆசுவாசமாய்
நிச்சயமில்லா உறுதிகளைத் தர
இடைவெளிகளை 
பெருமூச்சால் நிரப்பி 
விலகிக்கொண்டிருந்தேன் 
தவளைத்தோல் செந்நிறமாக
சுருவங்களாலான வீடு 
அவனுடையதாகவுமிருக்கலாம்!!!


இறப்பு - வீட்டுக்கூரையின் கீழ்ப்பகுதி.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6096

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 27, 2013

தொலைந்த பின்னும்...


சேடமிழுத்த
செவ்வரிப் பாம்புக்கு
இலையுதிர் காலத்து
பால் வார்ப்பு...

கிளறிய சோற்றில்
திரண்ட
வைக்கோல் குதிர்...

கரித்தட நீர் உறிஞ்சி
கைக்குழந்தை
பசி விரட்டி
உப்பிய வயிற்றில்
மொழி முத்தம்...

பிணங்கள் தாண்டி
இறந்த கடவுள்களை 
விரல் எண்ணிய
அசாதாரண மனிதர்கள்...

பாதுகாப்பை
பதுங்கு குழிகளில்
படுக்கவைத்து
நிலவேர் துருத்தும்
அரவமெனப் பின்னி இறுகி...

நுண்ணிய இசை மறந்து
அதிரும் போரில்
நினைவு தப்பி
நுடங்கி வளைந்து
செவி பொத்திய வான்பூதம்...

அடகிட்ட ரசனை
நீர்கடுக்க
விழுங்கிய எச்சிலோடு
மூத்திர இருள் கௌவ...

சுமத்தலை விரும்பி
உணர்வில்லா
பல்லக்கு மனிதர்களை
உறவாக்கி ஆயுள் கூட்டி...

பல்லியக் கோடாய்
சொல்லில் புகா வார்த்தை
கதைகளுக்குள்
இரத்த மண்மேட்டுத் துயரம்...

அகதிச் சமையலில்
உப்புறிஞ்சிய மேகம்
ஈழத்து இசையென
பொழியும்
மரண ஓலம்...

சாரளமில்லா வீடுகளில்
அகதியாகா
நம்பிக்கைக் கம்பிகள்
அடித்தள
அடுக்கு மணலில்
கறளில்லா மனிதர்களாய்!!


நமக்காய் உயிருதிர்த்த அத்தனை மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும் என் தலை சாய்ந்த வீரவணக்கம் !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 26, 2013

அடங்காத் தமிழன்...

 
தமிழின் சொற்களுக்குள்
அடங்கா வீரன்
அண்ணா நீ....

வருவாய்....
இனம் வாழ்ந்து பெருக
காத்திருப்பின் காந்தள் பூக்களுக்குள்
மகரந்தம்
எடுத்துப் போயிருப்பாயென்ற
நம்பிக்கை.

கார்த்திகைப் பேரலையின்
கிளிஞ்சல்களை
கிழித்தெழுதிக் காத்திருக்கிறோம்
அழுத கண்ணீரோடு.

ஆதிக்க அழுத்தம்
எதுவரை அண்ணா
அடங்கியே போகிறோம்
அமுங்கிக் கிடக்கிறோம்
எல்லாம் சொன்னாய்
எல்லாம் செய்தாய்
இல்லாமல் போவேனென
சொல்லாமல் போனதென்ன
என் அண்ணா.

வருவாய்....
தளரா நம்பிக்கை
காலம் தவிர்த்தாலும்
வந்துவிடுவாய்
விடுதலைச் சூலமேந்தி
யாரோவாய்
வந்துவிடுவாய்...

எதிர்காலமாவது
தலை நிமிர்ந்து நடக்கட்டும்
உன்னைப்போல.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரபா அண்ணா
தம்பியண்ணா!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 25, 2013

பிரத்தியேகக் கொலைகள்...

என் பற்கள் பிடுங்பட்ட நிலையில்
என் தமிழைக் காவுகிறது
பெருங்கடலொன்று
உன்னை நீயே காத்துக்கொள்ளெனவும்
உன் இருப்புக்களை
நான் விட்டு வைத்திருக்கிறேனெனவும்
சொல்லிக் கடக்கிறது
ஈவு இரக்கமில்லாமல்.

என் இருப்பு என்னைச் சாகடிக்க
என் தமிழை
காவிச் செல்லும் கடலை
தீராச் சாபக் கற்கள்
கொண்டெறிந்துகொண்டிருந்தோம்
பலர் கூடி.

அலைகள் கண்டறியும்
இருள் சுமக்கும் இரவுமறியும்
கடலின் நாவுகள் ஓர் நாள் சிதையும்
என் வதையில் நான் தோற்கமாட்டேன்
கடலும் வதையும்
பக்குவப்படாயிற்று எனக்கு !

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 14, 2013

வாழ்வு (3)


நம்பிக்கைகளை நெரித்துக் கொன்று
தின்றுவிட்டு ஏப்பம் விடும் உலகம்
தின்னும் உணவென சமைத்தெடுக்கிறான்
மனிதன்  மனிதத்தை !

பெயர் குறித்த மரங்களிடை
பெயரில்லாப் பெருவெளியில்
பெயரற்று வருகிறோம்
பெயர்களுக்குள் நுழைந்துகொள்கிறோம்
பெயர்களை விட்டுச் செல்கிறோம்
பறவைகளுக்கும்
பாம்புகளுக்கும்
பூச்சிகளுக்கும்
பெயரிருக்குமா என்ன?!

சில நிமிடங்களில்
நடந்தேவிடுகின்றன
நாமறியா நிகழ்வுகள்
பின்வரும் விளைவறியாமல்
எதிரியின் துப்பாக்கியை
செயலிழக்க வைத்த
துருப்பிடிக்கா
துப்பாக்கி இவள்
என்னிடமும் உண்டு
ஒன்று
அவர்களிடமும்
ஜனநாயகம் வாழ
வாழ்த்துங்கள் ! (பெண்போராளி தமிழினிக்காக)

''ம்'' ல் தொடங்கி
''ம்'' முடிகிறது
காதலும் வாழ்க்கையும் !

கூடுகளோடு சில பறவைகள்
மரங்களைத் தேடியபடி !

அசையும்
சுவர் மணிக்கூட்டின்
பெண்டிலம்கூட
எரிச்சலாயிருக்கிறது
கருவறை அமைதி
தேவையெனக்கிப்போ !

இழப்புக்களின் பின்
மனம் போதுமென வறண்டாலும்
இன்னொரு அன்பால் ஈரமாகிக்கொள்கிறது
அடுத்த இழப்பிற்கான ஆயத்தத்தோடு
இதயமும் வாழ்வும் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 10, 2013

தமிழ் இசைப் ப்ரியங்கள்...


அவகாசமேதும் தந்து
பேசவில்லை அவர்கள்.

புணர்தல்
அதுவும்....
இவள்
'பிரபாகரனின் மகள்'
என்கிற நோக்கிலேயே
எத்தனை தரம்
எப்படிப் புணரலாம்
என்பதில் மட்டுமே
குறிக்கோளாயிருந்தனர்
புத்தனின் புத்திரர்கள்.

’நான் அவள் இல்லை’
என்பதை ஏற்கக்கூட
அவர்களிடம் நிதானமில்லை.

புதைகுழி மூடமுன்
விழும் துளிக் கண்ணீரை
அழிக்கும் மழைபோல்
தாட்சண்யமற்றுக் கிடந்தது
அவர்களின் திட்டும்
ஏச்சும் நடத்தையும்.

ஒவ்வொருவனின்
புணர்தலையும்
காறித்துப்புதலில்
வீணானது என் சக்தி.

ஒரு கோழிக்குஞ்சின்
பலம் கொண்டமட்டும் கொத்த
முத்தமிட முயல்வதாய்
டிக் டக் வார்த்தைகள்.

சமாதானத்துக்காய் ஏந்தி
சமாளிக்கப் போர்த்திய
வெள்ளைத்துணியில்
என் பரம்பரைக்கான
முட்டைகள் செத்திருக்கலாம்
சில உயிரணுக்கள்
மண்மூடிய
ஏதோவொரு மடியில்
நிறைந்திருக்கக்கூடும்.

நான்....
என்னைத் தின்று தின்றுதான்
செத்துக்கொண்டிருந்தேன்
யாரும் என்னைக்
கொல்லமுடியாதென்பதை
அறியாத சாத்தான்கள்
புணர்ந்தது
அவர்களின் காய்ந்த நாட்களை.

சேற்றில் கலைந்த
என் மானம் காத்திருக்கும்
சிவப்புச் சால்வைகளின்
கழுத்து வாசலில்.

அவர்கள்
வீட்டை நக்கும்
வளர்ப்பு நாயல்ல நான்
நான் நானாய்த்தான்
தமிழ் காத்த
தமிழச்சியாய்த்தான்
செத்துக்கொண்டிருந்தேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 29, 2013

ஒளிகாட்டும் வழி...


சூரியன் திசை தவறிய தேசத்தில்
எமக்காய்
உருகி வழிகிறோமென
சில மெழுகுவர்த்திகளின்
கூக்குரலில்
விழித்தெழுகிறோம் நாளும்.

மனக் கல்லறைக்குள்
உயிர் உருக்கி
ஏற்றிய தீபங்களோடு
கார்த்திகைப்பூக்களை
கரிகாலர்கள் நடந்த
காடுகளில் விட்டெறிகிறோம்.

காலம் சபித்ததால்
விளக்குகள் அணைந்த
அநாதை மரங்களுக்கு
மின்மினிகள்கூட
ஒளிதர மறுத்த உலகிது.

பார்த்துப் பார்த்து
அழித்தொழிக்கப்பட்ட
என் சனத்தில் கையில்
கருத்த சூரிய
பொம்மையொன்று திணித்து
சண்டை முடிந்த பூமியின்
சமாதான பொம்மை
இதுதான் என்கிறார்கள்.

குருதி குடித்த தேசம்
விட்டகன்றபோது
கடைசியாய்
ஓடிய ஓடத்தில் கிடைத்தது
ஒரு குப்பி விளக்கு மட்டுமே.

பயங்கரவாதியொருவன்
பயங்கர ஆயுதங்களுடன்
தப்பிவிட்டதாய் செய்தி.

ஏதுமறியா விளக்கொன்று
புலம்பெயர்ந்து தவிக்கிறது
யாராவது
தீராத்தாகம் தீர்த்தெரிந்து
ஒளிபரப்ப
எண்ணெய் ஊற்றும் வரை!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 24, 2013

அதி'காரம்'...


தடித்த எருமைத்தோலுக்குள்
குத்தியெடுத்த ஆணியென
சொற்கள் கடுக்க
பிறப்பின் கர்வமாய் 
ஆண் அதிகாரங்கள்.
 
தண்ணியில்லா
ஆழ் கிணறு விழுத்தி
அடக்கி மறுக்கும்  
ஆணவத்தை
அண்டம் அமுக்க   
புகைச் சுளியங்கள்
ஆழக்கிணறு கடந்து  
மேலெழும்பி வந்து 
நிலம் பரவும்.
 
ஒற்றைப்படைப் பூச்சில்
முகம் மட்டுமே அழகாய்
உள்ளிருந்து அசிங்கமாய்
ஆணாய்... 
அதிகாரம் சுட்டெரிக்க
விழுத்திய கிணற்றுக்குள்
கிடக்குமெனக்கு
பலநாள் சந்தேகமொன்று....

பகல்கள் கலங்க
கதிகலக்கும் உன்னால்
என்னதான் முடிகிறது   
இரவுப் பொழுதுகளில் 
மாத்திரம்!!!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5944

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 19, 2013

மாத்திரைச் சொற்கள்...


தப்பிப்பிழைத்தல்
என் வாழ்க்கையில்
பலமுறை
உங்களைப்போல்.

சிரித்தது கொஞ்சம்தான்
கடத்தலும் காவுதலும்
இழப்பும் இல்லாமையும்
அழுகையும்தான் அதிகம்.

காலத்தினிடை
காதலும் கற்றுமறந்தேன்
வயதும் வர
வழுக்கி நகரும் கூழாங்கல்லாய்
பல காதலைக் கடந்தோடியது மனது.

நானும் மனுஷிதானே....

மறத்தல்......
எனக்கு மட்டும் வரமா என்ன
பார்த்த சில முகங்களும்
பழகும் தமிழும்
மறக்கவிடவில்லை
சிறகு தந்தவனை.

இன்று.....
தெருவில் ஒரு முகம்
எனக்குத் தெரிந்ததாய்
திக்கிய வாய் அசைத்து
நீ....ங்க......ள்.

அடையாளமற்றுப் போனேனோ
ஒருவேளை.....

நிராகரிப்பின் அமிலத்தை
அள்ளி வீசியது
வார்த்தைகளால் அது.

மெல்லக் கொல்லும்
ஒவ்வொரு சொற்களையும்
மாத்திரையாக்கி
மெல்ல மெல்ல
இறப்பதே மேல்.

கனக்கிறது மனசு.....

மனமுருட்டும் மல உருண்டை
உணர்வற்ற மனதில்
இதுவரை நாற்றமில்லாமல்.

இப்படியே....
உணர்வுக்குள் தப்பித்தலும்
உணர்வற்று நாறுதலும்
எதுவரை.

அமிலச் சொற்கள்
தந்தவனுக்கொரு நன்றி
மீண்டும்
சந்திப்பதின் விபரமிருக்கிறது
என் இடக்கை ரேகையில்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 15, 2013

லவண்டர் முத்து...


நீ...
உறிஞ்சியதுபோக
மீந்து சிதறிக்கிடக்கிறது
இரவுப்படுக்கையில்
சில மின்மினி முத்தங்கள்.

தலையணையில்
ஒட்டிய முத்தம்
வெட்கிச் சிரிக்க...

மொக்குடைக்கும்
லவண்டர் பூவொன்று
செடியிலும்
உன் மடியிலுமென
கண்ணடித்து
தொட்டு தடவ
அடிவயிற்றில்
அதீத அலையொன்று
சேமிக்கிறது
சிறு முத்தொன்றை!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 14, 2013

போர்க்காலக் காதல்...


போர் ஒழிந்தபின்னும்
சிதைந்த காவலரணாய்
நிகழ்வுகளின் சாட்சியாய்
நம் காதலில் நான்.

ஆயுதங்களைக் கொள்ளையடித்தவர்கள்
உன் ஷெல் பார்வையை
விட்டு வைத்திருக்கிறார்கள்
நன்றி.

எறிகணை இலக்குகளை ஏவி
உச்சப் பனையில் புகையெழும்பும்
இரசாயனக் குண்டுகள் துளைத்த
திசைக்கூடாரமென
மனம் சல்லடையாய் கிடந்தாலும்
உன்னுள் மீள்குடியேற
13 ம் திருத்தச்சட்டமென
ஒப்பமிடுகிறேன்.

கிடப்பு அரசியலில்
அமைதிக்காலப்பணியென
நம் காதலும்
வெடிக்காத கண்ணிவெடியென
உன் மௌனமும்.

நீ....
சோதனைச்சாவடி
இராணுவமல்ல
நான்....
அடையாள அட்டை
காட்டிப் பல் இளிக்க.

முச்சந்தி தாண்டும்
கனரக வாகனத்துள்
உறங்கும்
மரணித்த போராளியாய்
A 9 பாதை
மிதிவெடிகளையும்
குடிசைகளின்
இடப்பெயர்வுகளையும்
மாவீரர் கல்லறைகளையும்
உணர்வற்றுக்
கடந்துகொண்டிருக்கிறேன்
உன் ஒவ்வொரு
ஆட்டிலெறிச் சொற்களையும்
தாங்கியபடி.

ஊரடங்குச் சட்ட காலத்தில்
தஞ்சமாய்
புகுந்தே கிடக்கும்
குழந்தைகளின் பங்கருக்குள்
தவறி விழுந்த பாம்பென
அலறியடிக்கிறது உயிர்.

நீ....
புலம் பெயர் தேசமல்ல
நான்....
அகதியுமல்ல
நிவாரணங்களை அள்ளி வழங்க.

நிச்சயம்
போரற்ற காலத்தில்
சமாதானப் பேச்சுவார்த்தைக்
குழந்தைகளோடு
நீ என்னுடனும்
நான் உன்னுடனும்தான்.

ஒரு சொல் சொல்லிவிடு
தீர்ப்பில்லா
காலவரையறையற்ற
வதைமுகாமாகிக்கொள்கிறேன்.

புரிந்துகொள்....
போர்க்காலம் தாண்டியபின்
இன்னொரு சொல் வேண்டாம்
நம் இலங்கை அரசாங்கம்போல்!!!

http://kaatruveli-ithazh.blogspot.ch/2013/10/blog-post.html?spref=fb

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 13, 2013

காதல் துளிகள் (10)

தனிமை
இரவின் பாடல்கள்
ஏதோவாய்
வானொலியில்
ஒற்றை மெழுகுதிரி
எரிய
முகமற்ற ஒருவனின்
அன்பின்
சுவாசம் மட்டும்
என்
அறை நிரப்பியபடி !

கேள்விகளால்
நிரம்பியிருந்தான் அவன்
எனக்கான
குவளைகள்
போதாமலிருக்கிறது
நிரம்பியும் வழிந்துமாய்
தளம்பிக்கொண்டிருக்கிறேன்
நான் !

அலட்சியமாய்
சாகடிக்க
நஞ்சு வேண்டாம்
தஞ்சம் கேட்கும்
மெல்லிய அன்பு போதும் !

சிலசமயங்களில்
சிறு தூரலாய்
தூவி
என் ஈரலிப்பை
காக்கிறானே தவிர
பெய்வதென்னவோ
மிதமிஞ்சிய
சதுப்பு நிலத்தில்தான் !

அன்பால்தான்
கொண்டான்
என்னை.....
அதே அன்பால்
கொல்கிறான்
என்னைத் தவிர்த்து !

சிலுவை வலிகளுக்கு
மருந்தாய்
இயேசு சொன்ன
ஏழு வாசகம்போல்
என் வலிக்கு
அவன் பெயர் !

ஹேமா(சுவிஸ்)

Wednesday, October 09, 2013

கடக்கும் வாழ்வில்...


கிஞ்சித்தும்
அஞ்சாமல் விளையாடும் வாழ்வு
காற்புள்ளி தள்ளியாடும்
ஊஞ்சலென...

செரித்த உணவிலெங்கு
ஏப்பமும்
தொண்டையில் கரகரப்பும்...

பிந்திய நாட்களில்
ஹோர்மோன்களின் நடனம்
தாளா வயிறு
துர்நாற்றத் தீட்டாய்...

சஞ்சலத்துடன் ஆடும்
காற்றாடிப் பட்டம்
பொருந்தியிருகா
கயிற்றை நம்பி....

இறப்பில் செருகியிருந்த
கூர்ம புராணம்
கூலிக்காரன் மெலிந்த இடுப்பில்
அபத்தமாய்...

சுயம்புவாள்
குற்றமில்லாச் சுமங்கலி
கடவுள்
தன் கணவன்தானென...

அக்கினித் தீர்த்தமருந்தி
அடம் பிடித்த என்னை
ஆடடியென
பாடி வீரம் வளர்த்த
என் ஈழதேசம்...

புற்றாஞ் சோற்று
கறையான்களாய்
கூட்ட நெரிசலற்று
பூட்டிய சுவர்களுக்கு
ஓட்டையொன்றமைத்து
புறக்கடையாம் புலம்...

புறக்கணியாப் புட்கள்
புழையிட்ட மனிதர்களிடை
நுழையும் நிலாவாய்
புற்கை வேகும்
நீர்க்குமிழி வாழ்வில்...

போலிப்
புளகிதம்தான் வேறில்லை
புவனம் என்வசமே
புழைக்கடையில்
சில புண்ணிய காரியம்...

நான் நானாயிருக்க
இதுவும் கடக்கும்
இனியும் கடக்கும்
எல்லாமே கடக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 06, 2013

ஏய் ...பாடலொன்று...

Love for music
குளிர்காலமோ கோடைகாலமோ
இசை.....
என் நாளைச் சுவீகாரம் எடுத்துக்கொள்கிறது
அன்றைய நாளின் ஆரம்ப இசை
என்னைத் தத்தெடுத்தும்கொள்கிறது....

மொழியில்லா இசைகூட
வந்தமர்ந்து கொள்கிறது என்சிறகில்
அதன் அர்த்தம் புரியாமலே
தோள்மேல் உறங்கும் குழந்தையாய்
மூச்சிலிறங்கும்
மூச்சைப்பறிக்கும் இணைக்காதலாய்....

அதானால்தான் ஒரு முறை சொல்லியிருந்தேன்
ஐ லவ் ரஹ்மான்
பின்னொருமுறை ஐ லவ் இளையராஜா
போதையில் ஒருமுறை ஐ லவ் ஹரீஸ்
ஐ லவ் எஸ்.பி.பி
ஐ லவ் ராஜேஷ் வைத்யா
காதலர்களை நான் மாற்றுவதில்லை இசையில்
நிறையவே காதலர்கள் இரவிலும் பகலிலும்....

சில பாடல்களை
என் வாழ்வில்
என் காதலில்
என் சோகத்தில்
ஏன்...என் மோகம் கூடும்
முச்சந்தியிலும் சந்தித்துக்கொள்கிறேன்...

பொழுதுகளைக் கள்ளாக்கிக் குவளை நிரப்பும் 
கனவுக் காதலன் கைகளில் ஊஞ்சலசைக்கும்
விரல் வெப்பத்தில் மதிமயக்கும்
ஏதோ ஒரு பாடலும் அதன் இசையும்
நடுவில் மனதை அறுத்தே போடும்
வீணையின் லாவகமும்...

சில பாடல்களில்
நுரை மிதக்கும் தேநீர்போல் ஒரு வசீகரம்
அப்படியே அள்ளியணைக்கும்
குழந்தையின் மென்னுடல்போல ஆத்மதிருப்தி
என் காதலன் முத்தம்கூட இசையின் பின்னால்தான்
என்னை அசைக்கும்...

இப்போ கோபித்துக்கொண்டிருப்பான் அவன்
ஆனால் பாடல் ஒன்றில்
சமாதானம் கொள்ளும் நம் காதல்...

ஒரு இசைக்காலத்தில்தான் அந்த அறிவிப்பாளன்
ஒருகோடிக் கும்பல் ஸ்வரங்கள் மத்தியில்
ஆண்குயிலின் கம்பீரக்குரலுடன்
என்னைச் பரப்பிச் சிதறவிட்டிருந்தான்
இசை மயக்கம் அதன்பின் உச்சநிலையில்...

சில இசைகள் தீர்மானிக்கிறது
வாழ்வுக்கான தீர்மானங்களை
ஒரு குக்கூ இசையுடன் .... !!!!

ஹேமா)சுவிஸ்)

Friday, October 04, 2013

பெருநாகமும் நானும்...


மாறத்தொடங்கியிருந்தான்
என்னவன்....

உருவெடுத்திருந்தாள்
அவள்
அன்பு மலையென
எனக்கும்
அவனுக்குமிடையில்.

கணங்கள் சுருங்கும்
வேளை
அன்புக் கயிற்றை
அவள் மெல்ல இழுக்க
அவனுக்கான
என் கவிதைகளை
அழிக்கத் தொடங்கியிருந்தது
பெருமழை.

நச்சு நாகமென
மாறியவள்
என்னை மெல்ல
மிண்டி
விழுங்கிக் கொண்டிருந்தாள்.

நன்றியுள்ள அவனால்
கடிக்கவோ குதறவோ
முடியாமல் போனது
அப்பொழுது.

விட்டு விட்டு விழுங்கும்
நாகமும்
நானும்
வேண்டிக்கொண்டிருந்தோம்
அன்பின் அவனுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

மாயக் காதல்...


நரக வழி தவறி
கூர்ப்பிழந்து தவிக்கையில்
தேவதைகளை செதுக்கும்
அன்பின் உளியொன்றாய்
நெருங்கிச் சிரிக்கிறது
ஒரு நிழல்.

கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு

தேடிய கனவொன்றை
கையேந்தும் சிலையொன்றை
செதுக்கும் ஆர்வத்தோடு
என்னை
குழைத்துச் செதுக்க
தன் கனவைச் சொல்லி
தனக்கான அதிகாரத்தை
எடுத்தும் கொள்கிறது.

தூரிகைக்குள்
என் வண்ணமெடுத்து
உயிருக்கான
நிறமும் கொடுத்து
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்தும் விடுகிறது.

மூச்சிழந்து
தேவதை தவிக்கையில்....

காமமும் காதலும் வேறென
தத்துவம் சொல்லி
கண்ணைக் கட்டி
மறைந்தும் போகிறது
மீண்டும் வருவேனென!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 30, 2013

கழிவறைச் சாட்சி...


மருந்துகள் பலனளிக்காது
அறிந்தபடியேதான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்.

அவசர அழைப்பில்
வைத்தியரும்
சம்பிரதாயம் சொல்கிறார்.

அப்போதும்
உதடுகள் குவிந்து
விரிகிறது சொல்ல.

விடிந்த பொழுதில்
வைத்தியருக்காகக்
காத்திருக்கமுடியவில்லை
காப்பாற்ற
வரவில்லை அவரும்.

கழிவறை மூலையில் சேமித்த
உண்மைகள்
வறண்டு ஆவியாகின்றன!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 25, 2013

காதல் யானை...


சாயரட்சை மணியோசை
திசையசைக்க
சுணங்கும் வடவை
வரவறியா
தொண்டலம் தொங்க
சுனை சுற்றும்
கரி மறக்க
மறுக்கா ஞிமிறு
நறை தடவி
பறக்கவிட்ட
தூது எட்டுமுன்
சினத்த வாரணம்
காமுறா மனம் வேண்டி
கராகன் நோக்கிய தவமாய்
விழாலி திணற
கார்கோள் மண்வாரும்
மத்தம் கொண்டு!!!

சுனை - நீர்நிலை
வாரணம் - யானை
விழாலி - யானையின் துதிக்கை உமிழ் நீர்
தொண்டலம் - துதிக்கை
சாயரட்சை - மாலைப்பொழுது
ஞிமிறு - தேனீ
நறை - வாசனை
கார்கோள் - கடல்
கராகன் - படைப்பவன்
மத்தம் - பைத்தியம்

ஒரு தமிழ் ஆர்வம்தான்.திட்டாதேங்கோ.சரி பிழை சொல்லுங்கோ.இதை எழுதத் தூண்டிய நண்பருக்கு(Saminathan Ramakrishnan)நன்றி !

பெண் யானைக்காய் நீர்நிலையருகே நிலையற்றுத் தவிக்கும் ஆண்யானை.மாலைநேரக் கோவில் பூஜைக்காக சுணங்கி வராமலிருக்கும் பெண்யானை ஒரு தேனீயின் இறகில் தன் வாசனை தடவித் தூது விடுகிறது.தூது கிடைக்கமுன் கோபம் கொண்ட ஆண் யானை, காமமில்லா மனம் வேண்டிப் படைத்தவன் முன் நின்று தும்பிக்கை உமிழ்நீர் திணறத் திணற பைத்தியம்போல கடல் மண்ணைத் தனக்குத்தானே வாரிப்போட்டுக்கொள்கிறதாம்.காதல் கிறுக்கனோ இந்த யானை :) :) :)

ஹேமா(சுவிஸ்)

Monday, September 23, 2013

அகதி நாடும் நானும்...


மூச்சு வாங்குது......15 வருஷ அகதி வாழ்க்கையும்.அ,ஆ தெரியாத ஐரோப்பிய நாடுகளில் அவர்களோடு வேலையும்.....அகதியாய் நுழைந்தாலும் தங்களில் ஒரு வராய் ஏற்று எம்மையும் மதிக்கும் என் சுவிஸ் நாட்டுக்கும்,என் வேலைத் தலைமைக்கும் ,தோழர் தோழியருக்கும் என் மனமார்ந்த நன்றி !

ஹேமா(சுவிஸ்)

Friday, September 20, 2013

பச்சோந்தியானவன்...


வார்த்தைகளில்...
மஞ்சள் பொடி தடவியிருந்தான்
அவன் செல்லம் கொஞ்சி
எச்சில் பறக்கையில்
கண்களில் பட்டுத் தெறிக்க
மஞ்சளானேன் நானும்.

இடையில்...
எங்கோ சிவப்பு வார்த்தைகள்
அவனோடு ஒட்டிக்கொள்ள
பிடித்துப்போனது பச்சை.

மஞ்சள்நோய் பிடித்தவளாய்
நான் இப்போ!!!

ஹேமா(சுவிஸ்)

ராம் ராம்....மழை...


ஒரே இரவில் கொண்டும்
அதே.....
ஒற்றை இரவில் கொன்றும்
கழி(ளி)க்குமிந்தப் பெருமழை !

மழை முத்தமிட்ட
பூமியில்
இருள் கவிய
என் படலை ஒதுங்கும்
உன் நினைவுகள்
என்னை
பிறாண்டுதலிலேயே
குறியாயிருக்கிறது !

மழைக்கவிதை கேட்டவன்
ப்ரிய மண்வாசனை காட்டி
மௌனமாய்
தானே....
தமிழ்ச்சாரலான
விந்தையிங்கு !

சாரல்...
துளி...
பெருமழை...

இதில்
எது நீ ?

அடித்துப் பொழி
உனக்காய் மட்டும்
முளைக்கும்
குடைக்காளானாய் நான் !

மழையாய்
நனைத்தவன் அங்கிருக்க
நடுங்குபவள் நான்
வைத்தியர் விசாரிப்பில்
ஊசி எனக்குத்தானாம் !

மழை கேட்டவன் மழையாகி...
பின் மழையாக்கி....

ஒத்தி வைக்கப்படுகிறது
இப்போதைக்கு
சில மழைக்கவிதைகள்!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 17, 2013

நான் அவன் மழை...


தமிழாய்...
சோவெனப் பெய்தவன்
சொல்கிறான் வாயாடியாம்
மழைத்தேவனும் மாறுகிறான்
சாதாரண மனிதனென
அடித்துப்பெய்த மழையில்
கரையொதுங்கும் பட்டுப்பூச்சியென
அவன் மனதில்
ஒட்டிக்கிடப்பதறியானோ.

உள்நுழைந்து
அதே பாதையில் வெளியேற
எளிதாயிருக்கிறதுனக்கு
ஒரு நாளும்
அறிந்திருக்கப்போவதில்லை
உயிர்ப்பறவைச் சிறகொன்றை
பிய்ப்பதில் வலியையும்
அதன் ஓலத்தையும்.

இதில் வேறு
அதே சிறகால் கண்மூடி
காதும் குடையும் காட்சி
ஆகா.....கிராதகா.

உருண்டோடும் மழைச்சகதியில்
ஒட்டிக்கொண்ட சேறாய்
உன்பாட்டுக்கு உருட்டுகிறாய்
என் தேகம்
உதிர்ப்பது உதிரமல்ல
தேவனே
ஆராய்ச்சியும் அறிவியலும் தேடும்
உனக்கெங்கே தெரியப்போகிறது
மனமும் மண் உருட்டலும்.

காலச்சகதியில்
நனைந்தும்
உருண்டுகொண்டும்தான் நான்
ஒவ்வாமைகளே உடையாய்.

இப்போதைக்கு
கொஞ்சம் அணைத்துக்கொள்ளேன்
குளிர்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 13, 2013

கவிக்காதல்...


விண் நுழைந்த
சாகா விண்மீன்கள்
உதிரா நூலில்
நழுவா அந்தரத்தில்
தொங்குமென் முந்தானையில்.

எனை
சித்திரமெனக் கீறி மறந்த
உன் இதயம்
எண்ணிக்கை அறியாது
அந்தாதி முத்தங்களை.

செவ்விதழ் கௌவி
தேன் நீ
தேனீயென
போதையில்
புலன் தொலைத்து
எழுதுகோல் முனையில்
காதலுரசும் கவிஞனை
முகிழ்த்து மூடிக்கொள்வதெங்கனம்?

சேதனமில்லாச் சொல்லெடுத்து
உதட்டருகில் வெட்கித்து
யாக்கை நடுங்கியிறுக
உயிர் உருகி
கவி சொல்லி....

பாடடி பல்லவியை
தொடர்வேன் சரணமென
காதுக்குள் காதலுரைத்து
காது கடித்து
மீசை நீவி
கொல்லவும்
பின் கொள்ளவும்
துடிக்கும் உன்னை.....

உன் பாரி நானெனக் கூவி
கவியுன்னை
காவிக்கொண்டிருக்கிறேன்
இலக்கியப் பல்லக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 12, 2013

கண்டுகொண்டேன்...


கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
நடுவில் எங்கேயோ
சரிந்த கோடொன்றில்
முழுப் பாகையில்
இல்லாச் சூரியனை.

கடவுள்கள் பிறக்கமுன்
மதங்கள் பிறந்து பரவ முன்
பிறந்த ஒரு மனுஷியின்
சந்தோஷம் எனக்கிப்போ.

கடவுளர்களை
சிறைப்பிடித்து வைக்கப்போகிறேன்
படைப்பில் விடுபட்டுப்போன
மற்றும்...
முன்செய்த பிழைகளை
சரிப்படுத்தலாம் !

சிரிக்கும் முகத்தோடு
தொப்பி போட்ட
பனிமனிதன்
செய்துகொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாமல் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, September 07, 2013

காதல் துளிகள் (9)


பிறழ்வுகளைச்
சரிப்படுத்தும் தேவன்
அப்பமும் மீனும்
தந்து தொட்டிலசைக்கிறான்
தூங்கச்சொல்லி.

சிலுவைகளில்
ஏற்றியவர்களையும்
நேசிக்கும் உலகத்தில்
பத்திரமாக்குகிறேன்
அவன் ஆயுள் நீடிக்க.

குரூர விழிப்புடன்
தூங்க மறுக்கிறான்
இருளின் கடைவாயிலில்
உதிரும் உதிரம் பார்த்தவன்!!!


அடிக்கடி சொல்கிறாய்
என்னைத் தெரியுமென்று.

எப்படி என்றால்......

கர்வக்காரி
வாய்க்காரி
கோவக்காரி
கவிதைக்காரி
றாங்கிக்காரி
காளியாச்சி
பேய்,பிசாசு
ஒன்றாய்ச் சேர்ந்த
கல்லுளி மங்கியென்றும் சிரித்து....

இத்தனையும் சேர்ந்தவள்
தோழியாய்
என்னைப் பிடிப்பதாயும்
சொல்கிறாய்.

உண்மையில்
உனக்கு என்னைத் தெரியவில்லை!!!

(எல்லாமாய்ப் புரிந்துகொண்டிருந்திருக்கிறாய்.என்னுள் என்னை ஏன் புரிந்துகொள்ளவில்லை !?)


உன் ஆன்ம
அதிர் நரம்புகளில்
ஏதோவொன்றில்
என் பெயர்
எழுதி வைத்திருப்பாய்
வாழ்த்துகளென்று
ஏதுமில்லை என்னிடம்
மனம்போல்
வாழ்வாயென்கிற
நம்பிக்கையில் நான்
என் கைவிளக்குகள்
உன் திசைநோக்கியபடிதான்
இருள் சூழாதபடிக்கு
என்னிடமும்!!!


நேற்றைய கனவில்
காக்கா கரைய
காதல் காக்கையென
நான் சொல்ல....
சகுனக் காக்கையென
நீ சொல்ல....
அனுமானங்களை சேகரியென
இணக்கமில்லா என்னை
நிராகரித்து மறைகிறாய்
இன்னும் நிப்பாட்டவில்லை
கரைவதைக் காக்கை ...

கரையாக் கல்லொன்று
கதைக்கிறது
என் கதையின்
அத்தியாயத்தில்
அதிசயமென்றேன்
இல்லை இல்லை
உண்மையென்கிறது
காதல் காகம்
சத்தம்போட்டுச் சிரிக்கிறது
சகுனக் காக்கை !

ஹேமா(சுவிஸ்)