*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label மாவீரர் தினம் 2012. Show all posts
Showing posts with label மாவீரர் தினம் 2012. Show all posts

Tuesday, November 27, 2012

ஊழியக்காரர்கள்...

வெட்டவெளியில்
காற்றசையும் மொழியில் பிறக்கிறது
உமக்கும் எனக்குமான உரையாடல்
தலைதடவிப் போகிறது
ஒரு கிளை
சூரியக்கதிரின் ஸ்பரிசத்தோடு.

கண்கள் இருளுடைக்க
கேட்கின்றீர் ஆயிரம் கேள்விகளை
கனவுகளில் தேடிக் கிடைத்த
உமக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு.

மடித்த வானத்துள் மனசை மறைத்து
தலை குனிந்தே
மண் பார்த்துக் கவிழ்கிறேன்.

நீரைப்போல் சுழித்தோடியவர்களிடம்
கரையாத உணர்வோடு
பெருமூச்சொன்றை
வெப்பமாய் வெளித்தள்ளி
பலஜென்மத்து மீதமென
விரட்டும் விந்தையோடு
உயிர் குடிக்கும் விஷப்பாம்பின்
கதை சொல்கிறேன்.

சப்பாத்திக் கள்ளி காலில் குத்த
திரை விலக்கிய காற்றில்
நீட்டும் ஒரு கையில்
என் குருதி.

சுவறேறும் எறும்புகளின்
கனவுக்கான வேண்டுகோளோடு
ஈரக்காற்றில்
முகம் புதைந்திருக்கும் என்னிடம்
பிரிந்து போவதற்கான
வார்த்தைகளை அவிழ்க்கிறீர்கள்.

தோழர்களே....
மீண்டும் வருவீர்களோ
காத்திருக்கிறோம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 26, 2012

அண்ணாவுக்கு வாழ்த்து...

பிரபஞ்சம் பெரிது
அதைவிடப்
பெரியவன்
நம் சூரியன்
இறைந்தெங்கும்
நிறைகின்றான்
தமிழர்கள்
நெஞ்சமெங்கும்.

வெளிச்சத்தைவிட
அதை....
உமிழ்ந்தெடுத்து
வெளிவிடும்
விளக்கின்
மதிப்பானவன்...

எம் அன்பான
அண்ணனுக்கு
மனம் நிறைந்த
பிறந்த நாள் வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 25, 2012

கார்த்திகைத் தீபங்களே...

கந்தகத் திணறலில்
ஈழத்தாய்
என் தாய்
ஒரு யுகத்தின் தாய்
கருச்சிதைவுற்றிருக்கிறாள்.

நரிகளின் ஊளைகளை
தன் காதில்
அடைத்துக்கொண்டாள்
குழந்தைகளின்
தூக்கம் கலைக்க விரும்பாதவள்.

வீடு கனத்து
பூமி அசைந்து
வானம் பிழக்க
காணாமல் போன
குழந்தைகளுக்களுக்காய்
வேண்டிக்கொள்கிறாள்
கல்லான கடவுளிடம்.

வன்மங்களை வன்மங்களாலும்
சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளாலும்
கிழித்தெறிய முடியும் அவளால்
ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்
பாலுறுப்புக் கிழித்த விரல்களை
எதிர்பாரா தருணத்தில்
சில திருவிழாக் காலங்கள்
தொடங்கலாம்.

எம் மக்கள்
அகதியாய்...
அநாதைகளாய்...
அரற்ற சாபம் குடுத்தவன் எவன்
எந்தக் கள்ளச் சாமியவன்.

சிவப்புச் சால்வைக்காரன்
அள்ளிப்போனதுபோக
மிச்சக் குழந்தைகள்
பயந்து மிரண்டபடி
வயிற்றுக்கும்
அறிவுக்கும்
பெரும் பசியோடு.

மாவீரர்களே
மண் சுமந்த
எம் சிவபெருமான்களே
உங்கள் மண்ணும் மக்களும்
வாய்பேசா மௌனிகளாய்
உயிர் சுமந்த பிணங்களாய்.

காத்திருக்கிறோம்
உங்களுக்காகத்தான்
வந்துவிடுங்கள்
இல்லை எமக்கான
வழி சொல்லுங்கள்.

நமக்கான தீர்வை
பறித்தெடுக்க
இன்னொரு யுகத்தை
ஏன் தந்து போனீர்
துயர்தான்
தமிழன் காலமென
பரிதாபப்படும்
துயர் துடைக்க
இன்னுமொரு சூரியன் தேவையோ
அதற்காவது.......
வரமொன்று தாங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 23, 2012

காவலில்லா என் தேசம்...

தலைவனில்லா தேசத்தில்
யாரும் திரும்பா பூமியில்
நாங்கள் வசிக்கிறோம்
மண்ணையும்
உங்களையும் நேசித்தபடி
காவலே விழுங்கும்
காவல்கள் காக்க இங்கு.

யாரோ ஆள்வதாய்
உணர்கிறோம் எங்களை
ஒற்றைப் பருக்கையை
தாங்களே
பிச்சையிடுவதாயும்
சொல்கிறார்கள்
எங்கள் சமையலறைக்குள்
அவர்களின் சப்பாத்துக்கள்
துப்பாக்கி முனைகளில்
சந்தோஷங்கள் உறைய
உறிஞ்சும் எங்கள் நிம்மதி
அவர்கள் கைகளில்.

கார்த்திகையில்
நாய்களுக்குக்கூட சுதந்திரம்
அதுகூட....
எங்கள் சனங்களுக்கு
ஈழத்தமிழனுக்கு
இல்லாமல் போனது.

ஆர்ப்பாட்டங்களும் ஆயுதங்களும்
எம்மை ஆள்வதாயும்
அடங்காவிடில்
கிடங்குகள் காத்திருப்பதாயும்
நம் பலவீனங்கள்
பேய்களுக்குப் பிறந்தவர்களுக்கு
பேராயுதங்களாயும்.

கொல்லப்பட்ட என் பூமியில்
மிச்சம் இருக்கும்
எல்லாமே கொல்லப்படுகின்றன
போர் தின்று
விட்ட எச்சங்களுக்காய்கூட
காக்கைக்கூட்டம்போல அவர்கள்.

ஒன்றுமில்லாப் பரதேசிகளிடம்
எஞ்சியிருக்கும் கொஞ்ச
சுதந்திர உணர்வும்
பறிபோகிறது
தலைவன் இல்லா நிலத்தில்
அவர்களின் நாய் நரிகூட
எமக்கான தலைவர்களாம்
வாய்பூட்டுக்கள் இலவசமாய்
கேட்டுக்கேள்வியில்லா
மரணங்களும் இலவசமாய்.

கேட்கத் துணிந்த மனிதர்கள்
எம்மைக் காவல் காத்த
காவல் தெய்வங்கள்
இல்லா பூமியில்
எங்கள் சனங்களின் கதி....?!!!

ஹேமா(சுவிஸ்)