*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 31, 2014

முத்தத் துளிகள் (3)


புவியின் ஈரலிப்பை
சொற்களுக்குள்
தேக்கி வைத்திருக்கிறது
உன் கவிதைகள்.

எழுதமுன்
ஒரு முத்தம் தருகிறாய் காற்றுவழி
சில குழந்தைகள் தங்களுக்காகவும்
சில அம்மாக்கள் குழந்தைகளுக்காகவும்
சேமித்த நிலவிடம்.

நிலவுக்கும் காலாவதித் திகதியிருக்கும்
அதற்குள் தீர்த்துவிடு உன் முத்தத்தூதை !

நேற்றிரவு
நீ....
கன்னத்தில்
வரைந்த
மீசைக் கோலங்களை
சிநேகிதி...
கேலிச் சித்திரமாய்
வளைந்து காட்ட
நான்...
நாண வண்ணங்கள்
பூசி மறைக்க
வேண்டியதாயிற்று
இன்று !

முத்தத்திற்கு
விடுமுறை விட்டவன்
சொல்லவேயில்லை
எப்போ....
விடுப்பு முடியுமென...

நிலவடி நீயெனக்கென
சொல்லிச் சொல்லியே
ரசித்த
என் கிராதகன்
தேயவைக்கிறான்
காக்கவைத்து

அவன் நினைவுகள்
என்ன....
எனக்கான
அவன் குழந்தையோ
நடு இரவிலும்
தூங்கவிடாமல் !

இதழ் ஒற்றி
எனக்காய்
வழியனுப்பும்
அத்தனை முத்தங்களும்
சுற்றி வளைத்த
ஈட்டி முனைகளில்
சிறைப்படுகிறது.

நினைத்திருக்கிறேன்
தப்பிதலுக்கான இறகொன்றை
இனி வரும் கனவில் அனுப்ப.

அதுவரை
நீர்த்த முத்தமாய்
ரூபமெடுக்கட்டும் அவைகள் !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 25, 2014

பிறப்பும் பிழையும்...


குடைந்தெடுத்த சொற்களால்
குந்திய இடத்திலேயே
குற்றவாளியாய்க் கூனிக்குறுகிய
காட்சி கலையாமல்...

வாழ்வைத் தவமாக்கியதும்
பின் வரமாக்கியதும்
தப்புத்தானோ
நானே தப்புத்தானோ
அத்தனையும் தப்புத்தானோ...

அவிழ அவிழ அன்பாய் 
இறுகக் கட்டிய
தன் தந்தையின்
சாம்பலைக் கிள்ளும் தனயனின்
மௌனமும்
அச்சமும் நடுக்கமுமாய்...

தருணங்கள் தரும்....
அசதி
அவதி
சுமை
ஐயம்
நைவு
பிழை
மறதி
குன்று
வளைவு....ஆயாசம்....பிளவு

ஆக்கியழிக்கும்
கடவுள்களே
மன்னியும் என்னை
இனி ஒருபோதும்
பிழையேதும் செய்வதாயில்லை
நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, March 20, 2014

தேவை ஒரு நாயார்...


நிலவு பார்த்து நித்தம்
குரைத்துக்கொண்டிருக்கிறது
எப்போதும்
நான் பார்க்கும் அந்த நாய்.

கடிக்காவிட்டாலும்
குரைப்பதென்பதே
அடையாளமாய்
ஆக்கப்பட்டிருக்கிறது
அதற்கு.

கடிக்காவிட்டாலும்
குரைக்காத நாயை
நாயென்று சொல்வீர்களா
நீங்கள் ?

கடித்தும் குரைத்தும்
நாயின் சாகசங்களோடுதான்
மனிதன் இப்போ
என்றாலும்....

வாலில்லாமலோவென்று
நினைத்துச் சிரித்ததுண்டு
நிமிர்த்தமுடியாததாலோ !

கடித்தால் பாசிசமாம்
குரைத்தால் ஜனநாயகமாம்
இரண்டுமாய் 
இருப்பான் மனிதன்
அவன் அடையாளம் அது.

கடிக்காவிட்டாலும்
குரைக்கும் நாயொன்று
இருத்தல் நல்லது
என்னால்
குரைக்கவோ கடிக்கவோ
முடியவில்லை.

யார் வந்தாலும்
வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்
என் இயல்போடு
இன்றளவும் நான்!!!

 http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6122

ஹேமா(சுவிஸ்)

Monday, March 17, 2014

இன்று இவளும்...


பாசத்தினால் கையேந்திய
போட்டோக்கள்
பயங்கரவாதத்தைப் புதுப்பிக்குமென்று
பயப்படும் பிராந்துகள் அவர்கள்.

இனியும்
புதுவிதைகள் முளைக்கவோ
வளரவோ விடாதபடிக்கு
நச்சு நீர் தூவி
தாம் தெளித்ததை
தண்மழையென
கணக்கும் சொல்லும்
கிராதகர்கள்.

அரசியல் பிழைக்கும்
கண்களுக்கு
பத்தினியும் பரத்தையும்
ஒன்றேதான்.

காப்பனற்று
தப்பமுடியா வேடர்களிடம்
அகப்பட்டுக்கொண்டது
பெருவெளிப்பறவைகளின் விதி.

கற்றுத்தந்த பாடங்களின்
வரிசையில்
காத்திருக்கிறாள்
விபூசிகாவும் இனி.

கனவுகளின் தீட்சண்யத்தில்
களங்கப்படாதிருக்கட்டும்
பிரசாந்திகளாய்
அவள் பருவம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, March 10, 2014

நிலாக்குட்டி 2014 !

   னம் நிறைந்த இனிய.......

(07.03.2014)பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் என் செல்வத்திற்கு.எல்லோருக்கும் இனியவளாய், நல்லவளாய்,பண்பானவளாய் எல்லா நலனும் நலமும் வளமும் பெற்று வாழ என் அன்பு வாழ்த்துகள் கண்ணம்மா !