*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, August 25, 2008

நிழல்...

தொலைத்துவிடுவேன் உன்னை.

ஏன் பின் தொடருகிறாய்?

ஐயோ....

முடியவும் இல்லையே.

உபத்திரவமே தவிர

உதவி எதுவுமே இல்லை

உன்னால்.

உன்னைப் பார்த்தே

அலறியிருக்கிறேன்

சில சமயங்களில்

நான்.

துன்பம்தான் நீ

எனக்கு.

காதலனாய்

கட்டிக்கொள்கிறாயா!

சிநேகிதியாய்

சேர்ந்து சிரிக்கிறாயா!

தோழனாய்

தோள் தருகிறாயா!

சகோதரியாய்

சோர்வு தீர்க்கிறாயா!

அம்மாவாய் அப்பாவாய்

அணைத்துக் கொள்கிறாயா!

மனப்பாரம் குறைத்தால்

ஆறுதல்

சொல்லியிருக்கிறாயா!

எப்போதாவது...எப்போதாவது.

பிறகு எதற்கு

நீ...என்

பின்னால்.

தொல்லைதான்

உன்னால்.

என் தனிமை...

இரகசியம்...திருட்டு

எதிலும் பங்கெடுக்கிறாய்.

வேண்டாம் நீ...

எனக்கு போய்விடு.

இருளில்தானே

துணை தேவை.

அவ்வேளை

நீ இல்லை.

ஒளிந்து கொள்கிறாய்.

பகலில் மாத்திரம்

முன்னாய்...பின்னாய்

இடமாய்...வலமாய்

ஐயோ எதற்கு நீ.

தொலைந்து போ.

பிரயோசனம் இல்லாத

பிசாசு நீ.

ஓ....

சுலபம் இல்லையோ

நீ விலகுவது.

நீ விலகினால்....

நானும் இல்லையோ

கடவுளே!!!!!!



ஹேமா(சுவிஸ்)03.06.2007

17 comments:

கோகுலன் said...

//சுலபம் இல்லையோ
நீ விலகுவது.
நீ விலகினால்....
நானும் இல்லையோ
கடவுளே!!!!!!
/

நன்று.. :)

கோகுலன் said...

உங்கள் வலைப்பூ நன்று.. பாடல்களுடன் வரவேற்கிறது..

Anonymous said...

//என் தனிமை...
இரகசியம்...திருட்டு
எதிலும் பங்கெடுக்கிறாய்//

//ஓ....
சுலபம் இல்லையோ
நீ விலகுவது.
நீ விலகினால்....
நானும் இல்லையோ//

ஒரு தத்துவம் போல விரிகிறது கவிதை. அருமை.

Anonymous said...

எண்ணங்களை வார்த்தைகளாக்கி அழகான கவிதையாக்கி இருக்கிறீர்கள். அதற்கு ஒரு சபாஸ் ஹேமா. ஆனால் உங்கள் கவிதையில் ஒரு சோகம் பளிச்சிடுகிறது. அது இனம் புரியாத சோகத்தையும் உருவாக்கி விடுகிறது.

NILAMUKILAN said...

அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்து அதில் தங்கி இளைப்பாற உதவுமே. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்.... நிழல் கடவுள் மாதிரி. அதனால் எதுவும் உபயோகம் இருக்கிறதா என அறியா விட்டாலும், நம் கூடவே வருவதை நம்மால் தடுக்க முடிவதில்லை..

கோவை விஜய் said...

நாம் கூப்பிடமலே தொடரும் நிழல்

சாட்சியாய் சொல்லும் கவிதைகள் அருமை

கோவை விஜய்

Unknown said...

இருளில் ஒளித்து ஒளியில் ஒளிர்ந்து
ஜடத்துடன் உறவாடும்
நிழல் !

தியாகு said...

பின் தொடரும் நிழலை முன்நிலைபடுத்தி , இயல்பான ஒரு நிகழ்விற்கு கவிதை வடிவம் தந்தது மிக அருமை ........

ஹேமா said...

வணக்கம் கோகுலன் கருத்துக்கு.
முதன் முதலாக வந்திருக்கிங்க.நன்றி.

ஹேமா said...

நன்றி சேவியர் அண்ணா கருத்துக்கு..

ஹேமா said...

வணக்கம் கடையம் ஆனந்த்.உங்கள் சபாஷ் என்னை இன்னும் ஊக்குவிக்கும்.ஈழத்து மண்ணில் பிறந்த எங்களுக்கே உரித்தான சொந்தம் சோகம்தானே!

ஹேமா said...

கோவை விஜய் அவர்களுக்கு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

முகிலன் உண்மையா?எங்கள் நிழல் கடவுளா?புதிதாகக் கேள்விப்படுகிறேன்.

ஹேமா said...

அன்பு நன்றி களத்துமேடு.
நகச்சுத்தி சுகம்.

ஹேமா said...

வாங்க தியாகு.முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் நிறைந்த நன்றி.

thamizhparavai said...

//இருளில்தானே
துணை தேவை.
அவ்வேளை
நீ இல்லை.
ஒளிந்து கொள்கிறாய்//

எனக்குப் பிடித்த வரிகள் இவை...
படம் மிக அருமை....

//அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்து அதில் தங்கி இளைப்பாற உதவுமே. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்.... நிழல் கடவுள் மாதிரி. அதனால் எதுவும் உபயோகம் இருக்கிறதா என அறியா விட்டாலும், நம் கூடவே வருவதை நம்மால் தடுக்க முடிவதில்லை..//
நிலா முகிலனின் கருத்தும்,உங்கள் கவிதையும் சேர்ந்தபின் தோன்றிய எண்ணம் இது..
"நிழல்களைப் போலவே பெரும்பாலும் நமது(எனது) உறவுகளும்... என்ன செய்ய....?"

ஹேமா said...

அருமையான கவிதை ஹேமா.. ஆனாலும் நமது நிழல் பிறர் வந்து அதில் தங்கி இளைப்பாற உதவுமே. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்.... நிழல் கடவுள் மாதிரி.//

ஓ... இதைத்தான் முகிலனும் சொன்னாரா நிழல் கடவுள் மாதிரி என்று.உண்மைதான் எமது உறவுகள் நிழல்கள் போலத்தான்.ஆனாலும் இருட்டில் பார்க்கும் நிழல் போல சில உறவுகள் பயங்கரமானவை.
எங்களையே கவிழ்த்து விடும்.நான் அகப்பட்டு இருக்கிறேன்.
கவனம்...கவனம்.

Post a Comment