*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Friday, August 01, 2014

நினைவோடு வாழ்த்து ....

முழுமதியன்று
என் தேநீர் குவளையில்
தவறி விழுந்த
ஓர் பால்நிலாத்துண்டு
அலைந்து களைத்துப்போய்
உருகித் தேய்ந்து தத்தளிகிறதே...

ம்...
எடுத்து வைக்கிறேன்
குளிர்ந்த பாலில்
அவன் வரும்வரை
சிந்தும் முத்தங்களை
சிந்தாமல் சேமித்து
சந்தம் பாடியே
மூழ்கிய நிலவை
முழுதாய்
சரிசெய்துகொள்ள !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராம் !


Saminathan Ramakrishnan
 
குழந்தைநிலா ஹேமா

Monday, June 16, 2014

வாழ்விலக்கணம்...

ஆசைக் கயிற்றில் நடக்கும்
கூத்தனாய் வாணாள்
வானுலகம் காத்திருக்கும்
மிகுதி வாணிபத்துக்காய்.

ஊனமனதை
காலம் விழுங்கிச் சமிக்க
வாஞ்சையில் சுழலும்
அந்தரங்க மெய்.

உச்சக்கட்ட மீட்பில்
உயிர்க்கூட்டில் படிம நாகமாய்
விடமவிழ்க்கும் இறை வெறுத்து.

பட்டாம்பூச்சியின்
இறுதி மூச்சில் தொட்டணைத்தவனும்
முலையிரங்கித் தேடும் தன் குழந்தையும்
நீர்த்தாவரமாய் விழிமிதக்க...

இங்கே...
உறவுகள் தவிக்க
துவங்குகிறது உப்பரிகை ஊர்வலம்.

கண்ணாமூச்சி விளையாட்டை
கொம்பேறி ரசித்துக்களிக்கிறது
மரணம்
காலம் காலமாய்!!!

அன்போடு நம்முள் கலந்து கலைந்த ஆன்மாவுக்கு சாந்தி கொடுத்து நாமும் சாந்தி பெறுவோம் !

ஹேமா(சுவிஸ்)

Monday, April 28, 2014

ஈரங்கள் திருடும் முட்டாள்...


இப்போதான் என் முன் காண்கிறேன்
மென்னீரம் பரவிய இந்த முகத்தை
இலையுதிர்காலத்து மரத்தடியில்
உலர்ந்த இலைகள் சில கவிழ்ந்து
அவன் முகம்போல.

அடையாளப்படுத்துகிறான் தன்னை...

பிறப்பொன்றில்
சாள
க் கதவிடுக்கில்
பாதிப்பாதியாய் நாம் நனைந்ததாயும்
உடலை உலர்த்திவிட்டு
ஈரமனதை நான் விட்டுப்போனதாயும்
பின்னர்
தானே தத்தெடுத்து வளர்த்தாயும்.

நனைந்த ஈர நாட்களில்
நானே இலைகளை உடுத்தியிருந்தேனாம்
தன் முற்றத்தில்
ஒரு வசந்தகால துய்யிரவில்
பொதிகளாய் சுமந்து வந்திருந்தானாம்
என்னில் திருடிய அத்தனையையும்
கனவுக் கிளையில் என் காதலன் கண்டு
தராமலும் போனானாம்.

என்னதான் பொதியில் என்றால்...

மழைநாளில் சேகரித்த
என் யன்னல் மின்னல்கள்
ஆயிரக்கணக்கில்
நான் சேகரித்த என் கவிதைக்கான
சில நிறத்தூரிகைகள்
சில உளறல் வார்த்தைகளும்
மற்றும்
என் கையில் காய்ந்த மருதாணிச்
சிவப்புமென்கிறான் திருடன்.

இராணுவ நுட்பங்கள் நானறிவேன்
அவர்களின் ஒரு மாதிரியான
இறுக்க வாசனையும் நன்கறிவேன்
சப்பாத்தின் அழுத்தங்களையும் அளந்திருக்கிறேன்
முன்னும் பின்னுமாய் அவனைத்துளாவ
ஆயுதமேதுமில்லை
முட்டிய அன்புதானென்கிறான்.

கால் வலியெடுத்துக் கொஞ்சம் கொலுவசைய
கொழுந்திலைகளால் தாம்பாளமிடுகிறான்
என்ன செய்ய இவனை
மீனாய்ச் செதிலிழக்கிறேன் அவன்முன்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 06, 2014

உயிரின் சுழற்சி...

எப்படி இணைந்தாய்
என்னோடு நீ
உறவின் பாதையை செப்பனிடும்
ஒரு கைதேர்ந்த ஊழியக்காரனாய்.

கை கோர்த்து
எத்தனை பக்குவமாய்
வழிநடத்த முடிகிறதுன்னால்
பாதை மாறாமலும்
தடுமாறாமலும்.

கொஞ்சம் பிசகினாலும்
உறவின் அர்த்தமே
மாறுமென
ஆதி மனிதன்
கதைசொல்கிறாய்.

உன்னை
சந்திப்பதற்காகத்தானோ என்னவோ
சில துரோகங்களை
நானே உண்டாக்கியிருப்பதாக
நம்பிக்கை மனிதர்கள்
சொல்கிறார்கள்.

உடைத்தெறிய
நமக்கான காரணங்கள்
கிடைக்கும்வரை
ஒத்த உணர்வலைகள்
உயிரைச் சுற்றும்.

நரமிருகங்களறிவதில்லை
ஒருமுனையும்
மறுமுனையும்
பிரிவையறியாதென்று...!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 07, 2013

நட் 'பூ'...


கையில் கிடைத்திருக்கிறது
அன்பின்
திறந்த புத்தமொன்று
சில இனிப்பான
பக்கங்களோடு.

கரைந்து படிந்த
இனிப்பை இன்னும்
மொய்த்துக்கொண்டிருக்கிறது
நினைவெறும்புகள்.

இன்னும் பல
இனிப்புக்களை
தருவதாகச் சொல்லி
நானில்லாத நேரத்தில்
என் தலையணையின் கீழ்
சில இனிப்பின் துகள்களைப்
போட்டும்விட்டிருக்கிறது.

காலையிலும்
வாசனை சுமந்த
எறும்புகளின்
மென்மீசை
நாசியோடு
ஊர்ந்து உரசுகிறதென்
மனதை.

அன்பின் புன்னகையை
நானும் சேமித்துக்கொள்கிறேன்
அந்த எறும்புகளைப்போலவே!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 21, 2010

இணைய விடுப்பு...


வணக்கம் வணக்கம் என் அன்பு நண்பர்களுக்கு நான் சுகம் சுகம்தானே எல்லோரும்.

வீடு திருத்தப்படுகிறது.இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய !

தற்சமயம் சிநேகிதியின் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்.கணணியை என் வீட்டைப்போல அதிக நேரம் அவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்த முடியாமலிருக்கிறது.
மின்னஞ்சல்களை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன் அலுவலகத்தில்.சிநேகிதி வீட்டில் 3 குழந்தைகள்.நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.

இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.அதோடு வீடு ஒரே தூசும் துடைத்தலுமாக நிறையவே வேலை.அதுவரை...........

அன்போடு ஹேமா.

Friday, January 29, 2010

பிடிக்கேல்ல...

அ...னா
ஆ...வன்னா...படிக்கட்டாம்
தேவாரம் பாடமாக்கட்டாம்
வீட்டுப்பாடம் செய்யட்டாம்
பிடிக்கேல்ல எனக்கு.

ஐஸ்ல வழுக்கி விளையாட
சுவரில பென்சிலால கீற
ஐஸ்கிறீம் குடிக்க
விஜய் படம் பார்க்க
அவரின்ர பாட்டுக்கு டான்ஸ் ஆட

புதுச்சட்டை போட
பள்ளிக்கூடம் போக
அண்ணாவோட சண்டை போட
அக்கான்ர சாமான்கள் களவெடுக்க

அம்மா மடியில படுத்திருக்க
நித்திரை கொள்ள
ம்ம்ம்..பிறகு
ஹேமா வீட்டுக்குக் காரில போக
விரல்.....சூப்பவும்தான்

எல்லாம் பிடிக்குது
அது மட்டும் பிடிக்கேல்ல எனக்கு
ஏன் ? !!!

இவன் என் சிநேகிதியின் மகன்.
பெரி...ய விஜய் ரசிகன்.பெயரும் சச்சின்.

ஐ லவ் யூ டா செல்லம்.


ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

வானம் வெளித்த பின்னும்...

அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்.

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில் அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
இன்னொன்றின் மேல் படர்ந்ததா?

ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய் !!!

"வானம் வெளித்த பின்னும்"முகப்புக்காய்
ஆர்வத்தோடு ஆக்கம் இணையத் தோழி கலா.

அவருக்கென்று தளம் இன்னும் இல்லை.என்றாலும் சிங்கையிலிருந்து எப்போதும் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தும் ஒரு குரல்.அவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இப்பதிவு அன்போடு அவருக்காக.கலா உங்கள் அன்பிற்கு என்னால் இப்போதைக்கு என் அன்பாக !!!

என்னோடு சேர்ந்து நீங்களும் என் தோழியை
வாழ்த்துங்கள் தோழர்களே.


தூரத்துத் தோழி கலாவின் கைகள் பற்றிய வெப்பத்தோடு
ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 27, 2009

புதிதாய் ஒரு பூ...

நொந்த தருணங்கள் நொடிந்து விழ
எண்ணச் சிலந்திகளை கடித்துப் துப்ப
அந்தகார அரூபங்களாய் எரி பூச்சிகள்.

பகலவனுக்குப் போட்டியாய் எரிக்க
என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.
தீயின் அகோரம்
என் பசப்புச் சிரிப்பை
அம்பலப் படுத்தி
எரித்துக்கொண்டே விரட்டுகிறது.

கோடை விடைதர
வாடைக் காற்றில்
பூமி மஞசள் நிறத்தில்
நாகரீக உடையோடு.
எனக்குப் பிடிக்காவிட்டாலும்
அரிதாரம் இட்டுக்கொள்கிறேன்
அடையாளம் காட்ட.
வேற்று நிறங்களை பூமி ஏற்றுக்கொள்ள
வேறுபட முடியாமல்
ஒத்துழைத்துத் திரும்புகையில்
வாழ்வின் உண்மைகளில் ஒரு வெறுமை.

பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.

நான்கு சுவர்களுக்குள் பயணித்த உணர்வு
மொழி கடந்து தூரம் கடந்து
பதிலில்லாக் கேள்விகளோடு
நெடும் பாதையில் விரைகிறது.
பாதைகள் திசை சிதறிப் போனதா.
இல்லை...
என் உணர்வுகள் கலைந்து போனதா.

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 02, 2009

நட்பும் காதலும்...

Click Here
கண்ணீர் தந்து
மனதின்
ஆழம் தேடும்
காதல்.

கண்ணீர் கண்டு
காயம் துடைத்து
மனதின்
ஆழத்துள் வாழும்
நட்பு.

புன்னகைக்க
பூவும் தந்து
கல்லறைக்கும்
பூ வைக்கும்
காதல்.

பூக்கும் போது
தானும் பூத்து
கல்லறையிலும்
பூவாய்
பூத்திருக்கும்
நட்பு.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 17, 2009

கூட்டாஞ்சோறு உறவு...

ஞாபகத்தில் இருக்கிறது
அழகாய் நிழலாய் ஒரு முகம்.
ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை.
அலையும் நீரில்
அலைவதாய் அது.
வயது தொலைந்து
வாழ்வின்
எல்லையின் தனிமையில்
இளமையை
அசை போட்டபடி.
நிறைவாய் ஒரு
நீ.........ண்ட
ஞாபக உறவு.
வாழ்வு
இயல்பாய் நகர்ந்தும்
அம்முகம் அடிக்கடி
வரும்... மறையும்.

கொல்லைப்புறத்துப்
பொட்டு வேலிதான்
அவனது போக்கு வரத்து.
பனம்பாத்தியடியில்
கிளுவங்குச்சி முறித்துக்
கொட்டில் கட்டி,
குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
மரப்பாச்சி பொம்மையும் செய்து,
கொட்டாங்குச்சியில்
சோறும் காய்ச்சி,
தொட்டாச்சிணுங்கி இலையும்
தேங்காய்ப்பூக் கீரையும்
கறிகளுமாய்.

அம்மாவின்
சோட்டிக்குள் நானும்,
அப்பாவின்
வேட்டிக்குள் அவனுமாய்.
கூட்டாஞ்சோறு ஆக்கி
பூவரசமிலையில் போட்டுப்
பக்கத்தே மூக்குப்பேணியில்
தண்ணியும் கொடுப்பேன்.

இறப்பில் சொருகியிருக்கும்
தாத்தாவின் காம்புச்சத்தகமும்,
குத்தூசியும் களவு போகும்.
கம்மாலை வளவு
கலா அம்மாதான்
சின்னச் சுழகும்,
கொட்டாம்பெட்டியும்,
திருகணியும்
நீத்துப்பெட்டியும்
இழைத்துத் தந்தா.

சிலசமயம்...
நாவலடி,வேம்படி
அத்தியடி,புளியடியும்
எம் அடுப்படியாய்.
தும்பிக்கு வால் கட்டினாலும்
பிள்ளைப் பூச்சிக்குக்
குளறியழுவான்.
மண்ணுளிப்பூச்சி
இலங்கைப் படம் கீறுதென்பான்.
சுடலை என்றாலும்
பறைச்சத்தமும் பயம் அவனுக்கு.

கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
கோழியாய்
ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
கிளித்தட்டும்
கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
கப்பிக் கிணத்தடி,
துளசி மாடத்தடி,
கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
எங்களுக்கு அத்துப்படி.

ஞானவைரவர் ஒழுங்கை தாண்ட
ஒரு குச்சொழுங்கையில்தான்
அவன் வீடு.
நானும் போய்
ஊஞ்சல் ஆடியிருக்கிறேன்.
அவன் பாட்டியின்
அழகான நாச்சாரம் வீடு
நடுவில் ஒரு ஓட்டையோடு.
நாயனமும் வாசிப்பார் தாத்தா.
பினாட்டும் தந்து
குடுவையில் தேனீரும் வரும்.
பிலா இலையில் பிளா செய்து
கூழும் சிலசமயம் முற்றத்தில்
மூக்கு உறிஞ்ச உறிஞ்ச.

வயதும் வந்ததால்
வாழ்வில் தூரமானான்.
திரும்பவும் காண ஆவலோடு.
இவ்வளவையும்
பகிர்ந்து கொள்ள
அவனால்....
மட்டும்தானே முடியும்!!!!

(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)
கொல்லைப்புறம்-வீட்டின் பின்புறம்
வேலிப்பொட்டு-வேலியில் போகவர சிறு புகுவழி
பனம்பாத்தி-பனங்கிழங்குக்காக பனங்கொட்டைகளை
முளைக்க விட்ட மண்மேடு
குரும்பட்டி-தென்னம்(பாளை)பூவில் தேங்காயின் ஆரம்பம்
கொட்டாங்குச்சி- சிரட்டை
சோட்டி-அம்மா வீட்டில் அணியும் உடை
மூக்குப்பேணி-மூக்கு வைத்த தேநீர் கோப்பை
இறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி
காம்புச் சத்தகம்-சிறிய கூரான கத்தி
கொக்கச் சத்தகம்-உயரத்திலிருக்கும் மரக்கிளைகளை
முறித்தெடுக்கும் கத்தி (பெரிய நீண்ட தடியில் இணைத்திருப்போம்)
குத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி
கம்மாலை-(தச்சு) மரத்தொழில் செய்யும் இடம்
கொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி
திருகணி-சமையலின்போது சூடானவற்றை இறக்கி வைக்க
ஓலையால் பின்னப்பட்ட வட்டமான தாங்கி
நீத்துப்பெட்டி-ஓலையால் பின்னப்பட்ட புட்டு அவிக்கும் கூரான பெட்டி
மண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி
சுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)
பறை-தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி
அடுப்படி- சமையல் அறை
கரப்பை-கோழி அடைக்கும் மூங்கிலால் செய்த கூடு
கடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்
கூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை
துலா-கிணற்றிலிருந்து நீர் அள்ள உதவும் நடுப்பகுதி
கப்பி-கிணற்றில் நீர் அள்ள உதவும் இன்னொரு முறை
கள்ளிப்பெட்டி-மரத்தாலான பெரிய பெட்டகம்
கடைச்சல் பட்டறை-இரும்பு வேலை செய்யும் இடம்
நாச்சாரம் வீடு-பழைய வகை வீட்டு அமைப்பு.
(சுற்றிவர அறைகளும் நடுவில் நிலா முற்றமும் இருக்கும்)
நாயனம்-நாதஸ்வரம்
பினாட்டு-பனம் பழத்தைப் பிசைந்தெடுத்து பாயில் பரப்பித் தகடுபோல எடுத்த உணவு.
குடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது
பிளா-கூழ் குடிக்கப் பிலா இலையைக் கோலி எடுத்துக்கொள்வது
மரங்கள்-கிளுவை,பூவரசு,மகிழமரம்,மா,நாவல்,வேம்பு,அத்தி,புளி
தொட்டால் சிணுங்கி,தேங்காப்பூக் கீரைச்செடி

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 31, 2008

புதியவன் தந்த"பட்டாம் பூச்சி"

சும்மாதான் கிறுக்கினேன்
புத்தாண்டுப் பரிசாய்
"பட்டாம் பூச்சி"விருது.
Get a Sexy, Colorful and Cute Comment from Commentsdump.com TODAY!
சும்மாதான் கிறுக்கினேன்
எழுத்துக்கள் கவிதையாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சுமைகள் சுளுவாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சொந்தங்கள் கூடியதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கனவுகள் சுகமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
தனிமை தொலைந்ததாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சிநேகிதங்கள் நெருக்கமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
உணர்வுகளின் சேமிப்பாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
இயலாததையும் சொல்வதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கோபங்களைக் கிறுக்கல்களாய்.

இன்னும்...இன்னும்
சும்மாதான்...சும்மாதான்
என்றாலும்,
வலிகளின் ரணங்களாய்
வாழ்வின் வரைபடமாய்
காதலின் தூதாய்
சந்தோஷங்களின் இறக்கைகளாய்
சமூகத்தின் சாட்டையாய்
சொந்தங்களின் பகிர்வாய்
என் தேசத்தின் ஏக்கமாய்!!!
பிறக்கிற தையில்
வயது ஒன்றாய்
பூத்தவள் குழந்தைநிலா.
அதற்குள் தட்டிய விருதோ மூன்று.
சேவியர் அண்ணா ஒருமுறை.
மலேசியா விக்கி ஒருமுறை

வியப்போடு நானிருக்க
புன்னகைக் குழந்தையாய்
புதியவன் ` இப்போ
"பட்டாம் பூச்சி"விருதாய்.
சிறகு முளைக்காத குறைதான்
ஆனாலும்...
பறக்கிறேன்...பறக்கிறேன்
புதியவன் தந்த விருதே சிறகுகளாய்.
சிறகு முளைத்ததாய்
ஒரு ஞாபகத்தோடு
பறக்கிறேன்... பறக்கிறேன்.

பகிர மனமில்லை.
எனக்கே எனக்காய்
புதியவன் தந்த பட்டாம் பூச்சி இது.
என்றாலும் பகிர்கிறேன்.

நூறாவது பதிவின் திளைப்பில் இருக்கும்
கடையம் ஆனந்த்
அக்கினிக் குஞ்சுகளாய் தரும்
எங்கள் மெல்போர்ண் கமல்
தமிழில் தத்தித் தவழ்ந்து
விழுந்து எழும்பும் இரவீ.
பகிர்ந்து கொள்வார்கள்
இனி அவர்கள் பதிவின் பக்கத்தில்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 16, 2008

நட்போடு நலம் கேட்டு...

மனம் மண்டிக் கிடக்கிறது பாரமாய்.
கையிலும் பாரத்தோடு
நுழைவாயில் நலம் கேட்க,
நுழைகிறேன்
சூழ்நிலைக் கைதியாய்
அலுப்பின் துணையோடு.

தனிமையின் இருட்டுக்குள்
தள்ளிவிட்டுக்
கதவடைத்துப் போகிறது
கரையும் கால அட்டவணை.
என் நிழலே
என்னை அழுத்தி அழவைக்கிறது.

நகரவிடாதபடி
நூல்கட்டி இழுக்கிறது
பெற்றோரின் இனிய அணைப்பு.
மீண்டும் மீண்டும்
பிரிகிற அந்த விநாடிப் பொழுதை
வெறுக்கிறது மனம்.

ஐரோப்பியக் குளிரும்
இருண்ட வான்நிலையும்
விரட்டுகிறது
வேண்டாம் போய்விடலாம்
இப்பொழுதே என்பதாய்.
நிழலுக்காய்
மரத்தடி ஒதுங்க,
மரநிழலே என் மேல் பரவி
அழுத்தி அமுக்குவதாய்.

கடமைகளுக்குள் கட்டி அழ
காலம் கலைத்துக்
காவல் காக்க,
ஓய்ந்த மனதில்
வெறுப்பின்
சுவாலைக் கனல்
அனலாய் அடிக்க,
கணணியை அழுத்த...
வலை தந்த நட்புக்களின்
நல்ல வார்த்தைகள்
மருந்தாக...
மீண்டும்
நலம் கேட்டுத் தொடர்கிறாள்
குழந்தைநிலா!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 08, 2008

தோழிக்காக...

"கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்"
தர்மத்தின் தாரக மந்திரமிது.
தோழியே...
அங்கத்தில்தான் பங்கம்
தங்கமடி உன் இதயம்.

மழைக்கு ஏங்கும் பூமியாய்
நிலவுக்கு ஏங்கும் அல்லியாய்
கதிரவனுக்கு ஏங்கும் பனித்துளியாய்
துவள்கிறாய் தோழியே ஏன்?
துயரத்தைக் கொஞ்சம்
பங்கிட்டுச் சிந்திவிடு.
இலேசாகும் உன் இதயம்.

சில சமயங்களில்
இறைவனிடம் கூட
எரிச்சலாய் வரும்
உன்னை நினைத்தால் எனக்கு.
உடம்பில் சிறு குறை என்றால்
அன்பும் அற்றுவிடுமா
ஆசையும் ஆகாதா.

தோழியே தளராதே
தளராத காரியம் சிதறாது.
நம்பிக்கையோடு நகர்ந்துகொள்.
மனதை ஒளிக்காதே.
அன்போடு அணுகிக்கொள்.

நண்பியே...
வாழ்வின் விளிம்பில் எதிபார்ப்பு.
முடியாமல் வெடிக்கின்ற
வேதனையே ஏமாற்றம்.
கோழையாகி விடாதே.
கருமுகில் விலகி ஓடும்.

ஆண்டவனை வேண்டிக்கொள்.
காத்திரு...
தனிமை விட்டகல
காலப்போக்கில் உன்னை...
உன் மனதை உணர்ந்திட்ட
வாழ்வொன்று
வசந்தமாய் வரவேற்கும்
காதலொடு!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, June 01, 2008

மற...கொஞ்சம்...சிரி

நண்பா...
மறத்தல் என்பது வேறு
நிறுத்தல் என்பது வேறு.
உன் நினைவுகளை
நிறுத்தித்தான் வைத்திருந்தேன் நான்.
மின்னல் அடித்த வேகத்தில்
நிலவைத் தொலைத்த
வானம் போல நீ.
மெளனமே உன் மெளனத்தைக்
கலைப்பதாகக் குற்றம் கூறுவாய்.

பூ ஒன்றால்...
புன்னகை இழந்திருக்கிறாய்.
எத்தனையோ முறை
பொறாமைப் பட்டிருகிறேன்
உன் புன்னகை பார்த்து நானே.

எதுவுமே எரிச்சல் தரக்கூடிய
பொழுதுகள் உனது.
நட்பின் விசாரிப்புக்கள் கூட
நரகமாய்.
மனதிற்குக் கொஞ்சம்
மெழுகு பூசு.
மூடிவிட்டு முயற்சி செய்
கொஞ்சம் சிரி.
வாழ்வு வசந்தமாய் வாசம் தரும்
மறத்தல் இயல்பாய் இருந்துவிட்டால்.

முரண்பாடுகளே
நிறைந்த பாதையில்
மறத்தல் மட்டும்
விதிவிலக்கா என்ன!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 16, 2008

நட்பின் வாழ்த்து...

Glitter Graphics
முகம் காணா என் இனிய
இளைய நண்பனே.....
வெளியில் மழையில்லை
மனதில் அடை மழை.
எல்லாம் நிறைந்திருந்தும்
முற்றிலும் சூன்யமாய்.
நட்பை.....
வெறும் நட்பு
என்பது தவறு.
உண்மை நட்பை
உலகம் உணர்ந்தால்
யுத்தம் இல்லா பூமி
நித்தம் சிரிக்கும்.
வானவில்லாய்
வண்ணம் மாறும்
வாழ்க்கையில்...
எது கண்டு
கை கோர்த்தாய்.
நட்போடு கை கோர்த்து
கூடப்பிறந்தவனாய்
உறவு தருகிறாயே!
முற் பிறப்பில்...
பகிர்ந்து கொண்டாயோ
கருவறையை...
கோர்த்த மலர்
மாலையில்
அருகிருந்தாயோ
மலராய்....நீ!
இப்போதெல்லாம்
பாரதி என்றால்
எட்டயபுரத்து பாரதி
ஞாபகத்தில் இல்லை.
என் நண்பன் பாரதி
நீ மட்டுமே.
உப்பின்றி உணவில்லை...
நட்பின்றி வாழ்வில்லை...
நண்பனே...
வாழ்வோடு கூடி வா.
நானும் கூட வர
வரம் ஒன்று கேட்போம்
இருவருமாய்
இறைவனிடம்.
என்றும் சிரித்திரு.
என் இனிய
நட்பு வாழ்த்துக்கள்!!!

நட்போடு...உன் அக்கா ஹேமா(சுவிஸ்)05.08.2007

Tuesday, April 08, 2008

நட்பு...

கடும் வெயில் இங்கு.
காத்திருக்கிறேன்
நட்பின் குடை
கொண்டு வா.
நிழல் தர நீதானே.
கண்ணுக்குத் தெரியாத
கடவுள் போல...
எங்கோ மலர்ந்து
காற்றில் கலந்து வரும்
மலரின் வாசம் போல...
உன் பாசம்.
வானோடு வாழும் நிலவாய்...
பாரதி பாடிய கவிதைகளாய்...
புதிதாய் பிறந்த உறவாய்...
உறவுக்கோர் மாதிரியாய்...
கைகள் கோர்த்து வாழ்வோம்.
நட்பின் குடையோடு
காத்திருக்கிறேன்
வா!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, March 27, 2008

எங்கோ இருந்து கொண்டு...

என்னதான் செய்கிறாய்
எங்கோ இருந்து கொண்டு...
மொழி தெரியாக் குழந்தை போல
ஒரே குழப்பம்.
உன் உணர்வின்
பார்வை மட்டும்
பட்டுத் தெறிக்கிறது.
என்றோ விட்டுப் போன
உறவொன்று
சட்டென்று
கை சேர்ந்தாற் போல
சொட்டுக் கண்ணீரில்
மனம் கரைந்து போகிறது.

கரைந்து கொண்டே
இருக்கிறது நேரம்.
கணங்கள் தேடும்
தவிப்பின் படபடப்பு.
மீண்டு விடுபட
நினைத்துத்
தோற்றுப் போகிறேன்.

நட்பின் கனத்த இதயம்
முகம் காணாமலேயே
முட்டி மோதுகிறது.
அங்கொன்றும்
இங்கொன்றும்
புள்ளிகள் போட்டதும்
தொட்டுப் போகும்
கோடுகள்...
கோலங்கள்
அழகழகாய்....
அன்பும்
தூர இருந்தாலும்
தொட்டுச் செல்கிறது
மனதை மிக அழகாய்!!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, February 27, 2008

நான்கு சிறகுகள்

சிந்தித்துக்
கொண்டிருந்தேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
போதவில்லை எனக்கு...
சிறகுகள் இரண்டு
தனிமையில் பறக்க
துணிவும் இல்லை...
இறைவன் தந்தான்
உன்னை எனக்கு...
இன்னும் இரண்டு
சிறகுகள் சேர்ந்தன.
வருகிறாயா என்
இனிய நண்பனே...
இயலும் இப்போது...
உலகின் தேடலகள்
பலவிதம் பலவிதம்...
இறகுகள் இப்போ
நானகாய் ஆனதே...
இன்பமோ துன்பமோ
தேடலகள் சுகமாய்
மிக சுலபமாய்...
தனிமையில் தேடல்
சோர்வுதான் மிச்சம்...
உன் துணை சேர்ந்ததால்
உற்சாகமே உணவாய்...
என் சிறகுகள்
உனக்காய்
உன் சிறகுகள்
எனக்காய்
இடம் மாறி
போகிற போது
மனமும் சேர்ந்து
பறக்கிறதே...
அன்பின் சக்தி
இதுதானோ!!!

ஹேமா(சுவிஸ்)2007

Saturday, January 26, 2008

உன்னோடு நான்...

தேசம் கடந்திருந்தும்
நேசம் நிறைந்தபடி.
முகங்கள் மறைந்திருந்தும்
மனங்கள் நிறைந்தபடி.
யார் நீ...
பழைய உறவோ
பறந்து வந்து
பாசமாய் ஒட்டிக்கொண்டாயே.
மூடிய சிப்பிக்குள்
மண்ணா... முத்தா!!!
வெளியில் முகமும்
உள்ளுக்குள் மனமுமாய்
படைப்பின் இரகசியம்.
உடைக்க முடியவில்ல
மனதின் திரைகளை.
கலங்கிய பொழுதெல்லாம்
காற்றில் கை கோர்த்து
என் கண்ணீர்
துடைக்கின்றாய்.
கூடப் பிறந்தவனாய்
என் பாரம் சுமக்கின்றாய்.
பகிர்ந்து கொள்கிறாயே
எதிபார்ப்புக்கள்
எதுவும் இல்லாமல்.
பேசும் போதெல்லாம்
மனம் இலேசாகி
இறகாகிறதே நண்பனே.
வலி குறைந்து
கலவரம் நீங்கி
வாழலாம் போலிருக்கிறதே.
எப்போதும் நினத்துக்கொள்.
தூரம் தொல்லைதான்.
மனங்கள் தொலைவிலில்லை.
உண்மை அன்பு எம்
உள்ளங் கைகளுக்குள்.
தோழனாய்
நீ...
தோழியாய்
சோதரியாய்
நான்...
வாழ்வோம்
வா என்றும்!!!!

ஹேமா(சுவிஸ்)21.06.2007