*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 28, 2010

நான் கருப்பா...

கருப்பில்லை...கனபேர்
யார் சொன்னது
உண்மை சொன்னா
நானும் வெள்ளையில்லை.

வெள்ளைக்காரன் கருப்பாயில்லை
அவிஞ்ச கண்ணை பாக்க சகிக்கேல்ல‌
ஏனோ எனக்கு அவனை பிடிக்கேல்ல
எங்கட‌ குணங்கள்தான்
அவனுக்குப் பிடிக்கேல்ல.

காக்கையில்லை இங்க
குயிலும் சுத்தக் கருப்பில்ல
கண்ணன் கருப்பென்றால்
நல்லவேளை கண்ணனுக்கு
கருப்பா ஒரு குழந்தையில்ல.

கருப்பைக்குள் கருப்பென்றால்
அம்மா அங்க லைட் போடேல்ல.
உப்பில்லை சப்பில்லை
கவிதையிலயும் கருத்தில்ல.
இருக்கென்று சொன்னாலும்
நம்பப்போறதுமில்ல.

இவ்ளோ கருப்பான்னு கேட்டதால
வஞ்சகம் பண்ணின கடவுளில வெறுப்பில்ல
கருப்பா ஏன் பிறந்தேனோன்னு
கோவமில்ல மனசில அமைதியில்ல
சமாதானமும் தேவையில்ல.

அம்மாவுக்கு விசரில்லை
அவவிலயும் கோவமுமில்ல
கருப்பு அப்பாவைக் காதலிச்சதால
என்னையும் கருப்பில்லையாம்.

மைக்கல் ஜக்சன்போல
விருப்பமுமில்லை கலரை மாத்த
அவஸ்தையில்லை எனக்கு இப்போ
என் பிள்ளை கருப்பில்லை
ம்ம்ம்.......
என் கருப்பியும்தான்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 24, 2010

தீர்க்கப்படாத தீர்மானங்கள்...

கடந்துவிட்ட பேச்சு வார்த்தைகள்
பிச்சை போட்ட கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளாததால்
இல்லையென மறுக்கப்பட்டதாம் ஈழம்
சொல்கிறது
இலங்கை அரசாங்கம்.

தனித்தும் இல்லாமல்
சேர்த்தும் கொள்ளாமல்
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை.

இணைவதும்...ஏற்பதுமான
இயல் வாழ்வு இனி எப்போ ?

இல்லை என்று சொல்லாவிட்டாலும்
யார் நீ.....
என்பதான தள்ளி வைப்பு.

பேசித் தீர்க்காத வார்தைகளாலேயே
இடைநிறுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.
எனக்கான தீர்மானங்கள்
அந்த வார்தைகளுக்குள்ளும்
அடங்கியிருக்கலாம்.

நீ....
மௌனித்திருந்தாலும்
நாடு கடந்த
போராட்டம்போலத் தொடரும்
என்....
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 17, 2010

சொல்லித் தந்தால் என்ன...

அப்பா அம்மா விளையாட்டு இண்ணைக்கு !

நான் அம்மா
சமைப்பதாய் சைகை !

அவன் அப்பாவாம்
கணணியும் கையுமாய் !

"என்னப்பா...எனக்கொரு சந்தேகம்."

"ம்...சொல்லு...கேளு எப்பவும்போல !"

"எப்பிடிப்...பிறந்தே...நீ ?!"

"அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பெத்தாங்க."
தெரிந்த அறிந்த தீர்மானமாய் !

வெளி வந்த விழி அதிசயிக்க...
"எப்பிடி...அப்பிடி !"

"ம்ம்ம்...சரி...சரி
நீ...எப்பிடிப்...பிறந்தே ?!"

"ஏஞ்சல் ஒன்று என்னை தூக்கிப்போய்
பக்குவமா பட்டில சுத்தி
பாடுற குயில் வாயில மாட்ட
அதுவும்...
பக்கத்தில உள்ள பூக்காட்டில
"பொத்"ன்னு போட்டும்விட
அழுதேனாம் நானும் கத்திக் கத்தி.
எடுத்திட்டு வந்தாளாம் அம்மா அப்போ !"

பலவாய் திரித்த கதைகள்
பருதியாய் உருள...
எக்கச்சக்கமாய் சிக்கிய
விழுங்கும் இடியப்பமாய்...

"ஓ...
இத்தனை கஸ்டமாய்
பிறந்தியா நீ!!!"


ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 14, 2010

தேவை ஒரு மரணம்...

மரணம்....
அறிதல் எப்படி
அதன் வலி
கடைசி நிமிடத் தவிப்பு !

இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !

எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !

மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ...பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்!

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !

ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !

எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புழு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !

எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 06, 2010

தேற்ற ஒரு விதி...

முட்டுதலும் மோதலும்
வாழ்வில் இயல்பானாலும்
முட்டிய மதில்களே வாழ்வாய்
பகிர்ந்து கொடுக்க முடியாத
பங்கீடுகளாகி.

காக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்.

எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.

குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!

ஹேமா(சுவிஸ்)

உயிரோசையில் முதன் முதலாக வந்த கவிதை !

Friday, December 03, 2010

உன் பேச்சிலே...

காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வலி
வேதனை
விரகம்
ஓவியம்
கவிதை
இசை
தேவதைகள்
இரவு
பிறைநிலவு
மறையும் சூரியன்
ஆனந்தம்
அழுகை
வீரம்
ஏழ்மை
இரைச்சல்
சிரிப்பு
அலையோசை
என அத்தனையும் காண்கிறேன்.

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 30, 2010

உடைக்கப்பட்ட கனவுகள்...


இன்னும் என் மனம் மாவீரர் நினவுகளுடனேயே.இந்தக் கவிதை
இந்த இடத்தில் பொருந்தும்.அதோடு சில பாடல்கள்
பதிவில் தேவைப்படுக்கிறது ஆவணங்களாக !
உணர்வுகளும் கனவுகளும்
நிறைந்திருந்த தேசம் அது.
செருப்பிட்ட கால்களோடுகூட
நுழையாமல் பத்திரப்படுத்தப்பட்ட
தூங்கும் தெய்வங்களின் தாழ்வாரம் அது.

உறவுகளுக்காய் காத்திருக்கும்
ஆன்மாக்களின்
நினைவுச் சந்நிதி அது.
குவிக்கப்பட்ட
கனவுத் தடாகம் அது.

வணக்கத்துக்குரிய
மாவீரர்களின் கோவில் அது.
செம்மல்களின்
மூச்சுக்காற்று அது.
பசிகொண்ட வேங்கைகள்
படுத்துறங்கும்
அமைதிச் சோலை அது.
தமக்கான வாழ்வை
தாய்க்காய்த் தியாகித்த வள்ளல்கள்
ஓய்வெடுக்கும் பிருந்தாவனம் அது.

பிள்ளைபிடிகாரராய்
இரவோடு இரவாக நுழைந்த பிசாசுகள்
இன்று அதிகாரத்தோடு
தூங்கும் எங்கள் மன்னர்களை
பகலிலேயே எழுப்பிக் கலைத்துவிட்டது.

கனவுகளைத்
தூபிகளுக்குள் வைத்திருந்தோம்.
கனவுகளைச் சிதைப்பதென்பது
அவர்களுக்கு புதிதல்ல.
கருவில்...தெருவில்
குழந்தைகள் நசிக்கும்
ராட்சதப் பிசாசுகள் அவர்கள்.

தொடர்ந்தும் கல்லெறியப்படுகிறோம்
சிதம்பிய இருதயங்களுக்குள்
கல்லறைப் புழுதியும் படிய
தமிழையே மூச்சாய் வாழும்
ஒற்றைத் தமிழன்
திருப்பி எறியாமல் இருக்கமாட்டான்
சேமிக்கும் கற்களில் ஒன்றையாவது!!!


"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.
இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் !

தாயகக் கனவுடன்...

கல்லறை மேனிகள்...

மண்ணில் விளைந்த...

விழி மடல் மூடி...


ஹேமா(சுவிஸ்)

Saturday, November 27, 2010

வரலாற்றுக் கோள்...


சாத்தியமேயில்லை
சூரியன் இறப்பது.
நிழலோடும் இருட்டோடும்
ஊழியம் செய்யும் பெரு நெருப்பாய்
இருளை நிரந்தமாக்காத
வரவாய் வரலாறாய் அவன்!

கசிந்த சூட்டில்
இதமாய் வளர்ந்த பயிர்களை
ஆடு மேய்ந்ததாய் ஒரு கதை.
பேய்கள் கொளுத்திய தீயில்
சூரியன் கருகிவிட்டதாயும் ஒன்று.
புயல் பிய்த்ததால் கதிர்கள் கிழிந்ததாம்.
அலை அடித்த வேகத்தில்
ஆழக் கடலுக்குள் சிதைந்தாய்
சரித்திரத் தாளிலும் மாற்றம்.

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

சிறுபயிர்களுக்கும்
சீராய் நிழல் வெப்பம் செருகி
செங்குழலில்
சிற்றுருண்டைகளாய் சோறு சமைத்தூட்டி
மேயும் ஆடுகளை
மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
அந்த ஊழிக்காரன்.

மழை இருள் மண்டிக்கிடக்கிறதே
தவிர....
மாற்றமில்லை அவனில்.
சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.

பெற்றவள் சூல் வலிவாள்
கருச்சிதைந்து போகாக் காளியவள்
மீண்டும் கருவுருவாள்
கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்.
ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

பொங்கிடும் கடற்கரை...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

(ஹேமா(சுவிஸ்)

Monday, November 22, 2010

குடியிருப்புக்கள்...

சிறு உக்கிய மரக்குற்றி (மரக்கட்டை)
பகலில்
சிறுவர் உருட்ட
இரவில்
குடிகாரன் காலால் மிதிக்க
இரைச்சலும் எச்சிலும்
கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள
எங்கள் குடியிருப்பு.

எதிர்பாரா நாளொன்றில்
ஒற்றைக் கால் உந்தித் தள்ள
ஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்.

எரிந்தோம் கருகினோம்
தடுமாறித் தகித்துப் பயம் தெளிந்தோம்.
என்றாலும்....
எம் இருப்பிடம் விடாமல்
பிடித்திருந்தோம்.
கனவுகள் கரைய
ஆக்ரோசமாய் வலிமை பெற்றோம்.

தள்ளியவன் தள்ளி நிற்க
கரையேற்றச் சில கைகள்.

சூடு ஆறாத மரக்குற்றியையே
மீண்டும் மீண்டும்
சுற்றினோம்...
தொற்றித் தொங்கி விழுந்தோம்
செத்தோம்.

குடியிருப்புக்கள்...
மரக்குற்றியோ
மண்திடலோ
மாளிகைதான்
வாழும் மனங்களுக்குள்!!!

எமக்காகத் தியாகத் தீயில் ஆகுதியாகிய அத்தனை உயிர்களையும் நினைவு கொண்டு,2010 கார்த்திகையின் ஆத்ம தீபங்கள் ஏற்றுவோம் இந்த வாரம் முழுதும் !


ஹேமா(சுவிஸ்) படம் - நன்றி எங்கள் புளொக்.

Saturday, November 13, 2010

தடுமாற்றம்...

கடமைகள்
என்னை வழி நடத்தினாலும்
எச்சரிப்பு மணியடிக்க
இதயம் துடித்து
விழித்துக்கொள்ளும்.

உன் நினைவுடனேயே
பொழுது
விடிந்து இருண்டாலும்
உன்னிடம் என் மனதை
காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
ஒளிந்து கொள்கிறேன்.

முகம் மாத்திரம்
உன்னை
வெறுத்து ஒதுக்குவதாய் நடிப்போடு
வெறுப்பை உமிழ்ந்தாலும்...
மறு பக்கமாய்
உன்னை
முழுதும் நிறைவாய்
மனதுக்குள் நிறைத்தபடி.

மனதுக்குள் உண்மையா என்று
என்னை
நானே கேட்டபடி
என் திசையோடு
என் இயல்பின் வேகத்தோடு
உன்னையும்
சேர்த்துக்கொண்டுதான்
அலைகிறேன்.

சொல்லிக் கொள்ளாமலேயே
மெளனமாய்
தூரம்...மிகமிக தூரமாய்
உன்னைச் சுமந்த படி
வந்துவிட்டேன்.

உன் பேச்சுத்துணையோடு
காலம் கடந்த போதும்
முடியாமைகளுக்குள்
முண்டியடித்துக்கொண்டு
அன்பையும் ஆசையையும்
அடக்கிக்கொண்டு
சிலசமயங்களில்...

*எப்படி இருக்கிறாய்*
என்று கேட்க வர
உன் சிறு புன்னகையே
என்னைக் கிண்டல் செய்து
உன் முன்னால்
மண்டியிட வைக்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 11, 2010

பாசத்தின் நிறம்சொல்லும் வறுமை...

பரம்பரைத் தொழில் அல்ல
விரும்பி வேண்டியதுமல்ல.

வறுமை வாசலில் காவலிருக்க
பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க
வயிறு காத்திருக்கும்
ஒற்றைப் பருக்கைக்காய்.

கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
கையேந்தும்
இளம் தளிரொன்று
ஏதோ ஒரு பாட்டு
பசி கண்ணுக்குள்
சுதியும் விலகியபடி.

பரிதாபம் தாளாமல்
"வருவாயா என்னோடு
பாலும் பட்டும்
காரும் கணணியுமாய்
போகலாம்
பள்ளிக்கூடத்துக்கும்".

"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 07, 2010

தென்றல் சொன்ன தூது...

ஆர்ப்பாட்டமில்லாத
உன் அன்பை
சொல்லிப் பாடிக்கொண்டிருக்கிறது
உன்னிடமிருந்து வந்த
அந்தத் தென்றல்

இன்னும் உன் கனவுகள்
ஆழ்மனதின் அபிலாசைகள்
அனுபவங்கள் பற்றியும்
வாய் ஓயாமல் சொல்லி
உன்னைப் பற்றிய
என் கனவுகளை
நீட்டி வைக்கிறது.

கனவுகளுக்குள்
நித்தம் வரும் கனவு நீதான்
என்பதைச் சொல்லாமலே
அகலத் திறந்த கண்களுக்குள்
உன் கனவுகளை
இன்னும் சேமிக்கிறேன்.

வாய் வலித்த தென்றல்
பறந்த பின் தான்
புரிந்துகொண்டேன்...

சொல்லாமலே
ஊர் போன உன்னை!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 21, 2010

இணைய விடுப்பு...


வணக்கம் வணக்கம் என் அன்பு நண்பர்களுக்கு நான் சுகம் சுகம்தானே எல்லோரும்.

வீடு திருத்தப்படுகிறது.இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய !

தற்சமயம் சிநேகிதியின் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்.கணணியை என் வீட்டைப்போல அதிக நேரம் அவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்த முடியாமலிருக்கிறது.
மின்னஞ்சல்களை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன் அலுவலகத்தில்.சிநேகிதி வீட்டில் 3 குழந்தைகள்.நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.

இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.அதோடு வீடு ஒரே தூசும் துடைத்தலுமாக நிறையவே வேலை.அதுவரை...........

அன்போடு ஹேமா.

Saturday, October 09, 2010

இன்று...

மாமாவின் சாயலாம்
அத்தையின் நடையாம்
அப்பாவின் குணமாம்
அம்மாவின் றாங்கியாம்.

பள்ளித் தோழி ஒருத்திதான்.
தம்பிதான் உயிர்த்தோழன்.

காதலிக்காமலே
காதல் தோல்வி.
படிப்பில் மண்.

திருமணம்
புரியாத உறவு
இல்லாமலே போனது.

காலச்சுழற்சியில்
வறுமை நிரப்பிய பணம்.
சுற்றம் புறம்பேச
முதுகில் புண்.
நோவைப் புதைக்க
நீண்டதொரு பிரயாணம்.

ஒற்றை மயிர் வெளுப்பு
வயதை ரசிக்கும் கண்ணாடி
கண்ணிலும்தான்.

கிடைக்கவும் இல்லை
இழக்கவும் இல்லை
விரும்பிய ஒன்றுக்காக
இன்னொரு பிறவிக்கான
ஏக்கக் கண்ணீர்.

இருண்ட இரவுகளில் ஒன்று
புதிதாய் விடிகிறது இன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 04, 2010

நிறங்கள்...

எல்லோராலும் முடிவதில்லை
^
எதிர்த்துப்பேச
^
பல் இளிக்க
^
பசப்ப
^
பயப்பட
^
ஒத்துப்போக
^
பொய்யாய் புகழ்பாட
^
புறம்கூற`
^
பச்சோந்தியாய் வாழ....

உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்.

நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.

மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.

நீலம் நீலம்தான்
அது எப்போதுமே.

நானும் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 30, 2010

ப்ரியமானவனே...

புரிதலில் பூக்கிறது வாழ்வு !

பிரிந்து போகிறது
பகிர்ந்துகொண்ட உறவு !

சொல்லவில்லை
என்னைப்
புரியவில்லையென்று...
புரியவைத்திருப்பேன் !

திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி !

சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !

என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !

புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 26, 2010

தியாகிகளில் ஒருவனாய்...

விழித்தே இருக்கிறேன்
கொடூரமான
கறுப்பு எழுத்துக்கள்
சிலுவைகளாய் கழுத்தை நெரிக்க
அடிமை வாழ்வென கையெழுத்திட
தீராத் தர்க்கம்
கைகள் வலுவற்றதாய் !

ஓ...
இத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !

தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !

கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுதங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !

ஆனது என்ன ?
பார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
எல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே !

இன்று....
தின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 23, 2010

குதிரையும் கனவும்...

நித்தமும்....
சிவப்புக் குதிரையொன்றின் துரத்தல்
கனவில்கூட
திரும்பிப்பார்த்தல் இயலாமல்.

உடல் எங்கும் இரத்தப் பிசுபிசுப்பு.
தூரத்தே எட்டி அணைக்கும் கையொன்று
நீண்டு நீண்டு
வந்து வந்து மறைவதாய்.

புழுதி கிளப்பி
குதிரை எகிறிக் கனைக்க
என் நகங்கள் என்னையே
பிறாண்டிக் காயப்படுத்த...

இடையிடை விழுத்த எத்தனிக்கும்
கொடிகளும் காட்டு மரங்களும்
பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
சிதைவுற்ற போதும்
எதிர்க்கும் உறுதியோடு
ஓடிக்கொண்டிருந்த நாளில்...

சூரியன் உதித்த
காலையின் பொழுதில்
கடவுள் என்கிற பெயரில்
ஓர் உருவம் கை அணைக்க
கல்லாய் நான்.

குதிரைக்கும் நிறம் மாற்றி
உருவம் மாற்றிய அது
தானும்
நிலையற்ற உருவமாய்.

ம்ம்ம்....

இப்போதைக்கு கனவுகளின்
தொன்மங்களுக்குள் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 14, 2010

ஏன்...எதுக்கு ?

அள்ளிக் கொட்டும் அரிசி
புறாக்களுக்காம் !

பயந்து பறந்த புறா
பத்தடி தூரமாய் !

கள்ளமில்லா மனதில்
கூட்டி அள்ளும் கேள்விகள் !

ஏன் பயம்...
பசிக்காதோ அதுக்கு...
யார் சமைச்சுக் குடுப்பா...
ஏன் சாப்பிடணும்
பூச்சி புளுவெல்லாம் !

நான் குடுக்கிறேன்
என்னோடயும்
சாப்பிட்டு
விளையாடலாம்தானே !

கடவுள் சொல்லியிருக்கிறார்
அதுக்கு....
மனுஷரைக் கண்டால்
தள்ளியிருக்கச் சொல்லி !

பைத்தியம் கடவுளுக்கு...
யோசிக்க முடியாத
சின்னமூளை வைத்த
கடவுள்தான் முட்டாள் !

இன்னும்....
மனுஷனாய் ஆகாத
சின்னக் குழந்தை தானே
நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 07, 2010

தனித்தில்லை...

நீண்ட நாட்கள்
அல்ல அல்ல
நீண்ட காலங்களுக்கு பின்
உன் ஸ்பரிசம்.

அலுவலாய் இருந்த என்னை
அணைத்து
முடி தள்ளி....
முத்தம் தந்து
எப்படி முடிகிறது உன்னால்
தனிமை தைரியம் ?

முகம் பார்த்துச்
சிரித்த கண்ணில்
மீண்டும் ஒன்று.

திரும்பவும்....
பயந்தாங்கோழிக்கு
எப்படி இத்தனை
தைரியம் தனியாக ?

யார் சொன்னார்
நான் தனித்தேனென்று.
முன்பைவிட எப்போதும்
நீ...
என்றும் பிரியாமல்.

அலுவல்...அம்மாவீடு
என்றுகூட அகலாமல்
என் மூச்சின் முகவரியே
உன்னோடு.

என்ன கேள்வி இது
போடா தள்ளி
காலையிலேயே கலாட்டா
செய்தபடி நீ இங்கு.

காற்றோடு நீ
கண்மணிக்குள் நீ
தனிமையாய் நான் இல்லை.
நீ இல்லை என்று
என் ஞாபகத்தில்
எப்போதுமே இருந்ததில்லை

என் மரணம் வரை
உனக்கும் இல்லை அது!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, August 04, 2010

தொடரும் சாபங்கள்...

எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.

கொல்லைவழி போய்
பெரிய வீட்டுக் கோடியில்
பனையேறும்
முருகன் அண்ணா.

காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.

சாதிப்பெயரோடு
தன் பெயரை வைத்துக்கொண்டாலும்
*ஆச்சி* என்றழைக்கும்
என் தாத்தா.

*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.

விபச்சாரி வீடு சென்று
கால் அலம்பி
வீடு நுழையும் கணவன்.

ஒவ்வொரு முறையும்
*இனி வந்தால் வேண்டாம்*
என்று நினைத்தாலும்
வந்தவுடன்
முடி கத்தரிக்கத் தொடங்கும் கைகள்.

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!

ஹேமா(சுவிஸ்

Friday, July 30, 2010

மேக நிறப் பூவொன்று...

மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.

என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல.
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
பேசிய வார்த்தைகள்
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்.

தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.

சேமித்த ஞாபக மிட்டாய்களின் இனிப்பை
நாவு மீண்டும்
இரை மீட்டிச் சுவைத்தபடி
தூவானமாய்
மனம் சிணுங்கிக் கொண்டாலும்
எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்.

என் வீட்டு பல்கனிப் பூக்கள் மட்டுமே
என் தவிப்பைச் சொல்ல
தலை அசைத்து முயற்சிக்கும்.

தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 27, 2010

எல்லாமுமானாய்...நீ!

எனது சிக​ரெட்டின்
சிறு சிறுத் துகள்களாய்
நீ​யே......
பு​கையி​லையாகியிருக்கிறாய்.
உன்​னை சுவாசித்து
நு​ரையீரல் காதலாய் தி​கைக்கிறது !

உ​ன்​னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்​லை.
உன்​னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவு​மே இல்​லை..!

எனது ப்ரிய கணணி​யை இயக்குகி​றேன் !
கீ​​போர்ட் ​மொத்தமும்
உன் ​பெயரின்
முதல் எழுத்துக்களாய்
நிரம்பியிருக்கிறது !

ஓ​​ஹோ..!
இதுவும் உன் வி​​ளையாட்டா என்று
எல்லாக் *கீ*யும் ஒன்றுதான் என்பதாய்
எண்ணம்​ போன​போக்கில்
ஏ​தே​தோ *கீ*க​ளை அழுத்துகி​றேன்..!
முழு மானிட்டர் தி​ரையிலும்
உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!

அடி....
இங்குமா நீ என்று
மவு​ஸைக் கிளிக்கி
இந்த (உன்) அமானுட நில​வொளி​யை
​டாஸ்க் பாரில் சுருக்கப் பார்த்​தேன்.

கள்ளி...
மவுஸின் ​மென்​மையிலும்
நீ​யே நி​றைந்து ​கொண்டு
என்​னைக் கிளிக்குகிறாய் !

போதுமடி....
இந்த மார்ஃபிங் வி​ளையாட்டு
உனக்​கொரு ​மெயில் தட்ட
மு​னைகிறேன் மீண்டுமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 21, 2010

அன்பைத் தேடி...

தேடித் தேடிக் களைத்து எங்கோ மூலைத் தெருவொன்றில்
ஊத்தை உடுப்போடு
பாறையொன்றில் பசிக்களையோடு
நிறையாத மனதோடு உட்கார்ந்திருப்பதாய் உணர்கிறேன்.

எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்
அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்
நானும்......என் நானும்.

அன்பு....
அன்பின் தாக்கம் அறியவில்லை ஆரம்பத்தில்
வயதின் வரம்பு கடக்க
அன்பே ஏக்கமாகி
வாழ்வு விழுந்து படுத்தபின்பும்
அன்பின் துளிச் சிதறலுக்காய் ஏங்கும் ஒரு ஜீவனாய் நான்.
காலவெளியில் கதறியழும்
அன்புப் பசியால் தினம் வாடும் சின்னக்குழந்தையாய்
துன்பப்புண் என் மனதில்.

தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....
அதன் பின் அன்பின் அருகாமை
இன்னும் கிடைக்காத பாவியாய்.

சுதந்திரமற்று வறண்ட தேசத்திலும்
சீக்குப் பிடித்த மனித மனங்களிலும்
அன்பின் ஒளி எங்கும் காணேன்.
அன்பு வற்றி மானுடம் குன்றிக் கிடக்கிறது.

அன்பு கண்டேன்
நிறைவாய் அன்பின் சாயல் கண்டேன்.
சின்னக் குழந்தைகள் சொன்ன மொழிகளில்
அன்பு வழியக் கண்டேன்.
சிறகடிக்கும் பறவைகள் நிழல்தரும் மரங்கள்
ஏன்..ஐந்தறிவு மிருகங்களில்கூட
மிகுந்திருக்கும் அன்பு
மானிடம் மட்டும் மறந்ததேனோ !

சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு.

எங்கும் கதவடைப்பு தட்டுப்பாடு கிடைப்பது அரிது.
கிடைக்கவே கிடைக்காது.
ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.
அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.

நினைத்திராத நிமிடத்துளிக்குள் நான் இறந்துவிடுவேன்.
என் சுவாசத்தின் இறுதி இழைத்துளியில் ஊசலாடிக்
களைத்து இளைக்கிறேன்.
என் உயிர் பிரிவதைக்கூட உணர்கிறேன்.
சுவாசம் கொஞ்சம் வேகமானாலோ
இரக்கத்தை விட்டுவிட்டாலோ என் உயிர் பறந்துவிடும்.

வாழ்வின் வரவுகளோடு என் வெகுமானங்களையும்
விட்டுப் போகும் நேரத்திலும்
ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!


(வானொலிக் கவிதை.24.02.2003)
ஹேமா(சுவிஸ்)


Thursday, July 15, 2010

இருண்ட அவைகள்...

ஒரு இருளுக்குள்
பேரிருளையே
சுமந்தபடி அவைகள்.

அந்த இருளுக்குள்ளும்
பளிச்சிடும் கண்களோடு
காத்துக்கிடக்கின்றன அவைகள்.

அவைகளின்
எத்தனை ஓலங்கள்
ஓங்கி ஒலித்து
அடங்கியிருக்கும் இங்கு.

இந்த இருளுக்குள்ளும்
ஒவ்வொரு முகங்களும்
ஒவ்வொன்றைச்
சொல்லிப் போயின.

அவைகளின் இரைச்சல்களை
காற்று
வாங்கித் தந்திருக்கும் அன்று.
ஏன்...எவர் காதிலும்
விழாமல் போயிற்று?

ஏதோ ஒரு பொழுதின்
அமைதியில்
அவைகளும் வாழ்ந்திருக்குமே
எம்மைப்போல.

அழைத்து அழைத்தே
அடங்கியதால்தான்
இந்த இருளுக்குள்ளும்
காத்துக்கிடக்கினறன
ஏதோ ஒன்றைச்
சொல்வதற்காக.

இனி....

அவைகள் இல்லாதவைகள்
இ(ய)ல்லாதவர்கள்.

அந்த இருளுக்குள்ளும்
பேரிருள் தேக்கி வைத்திருக்கும்
அவைகளின் முகங்களைத்
தேடியபடி நான்.

என்னையும் தேடிடுமோ அவைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 08, 2010

மயக்கம்...

ஊற்ற ஊற்ற
உள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.

எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.

எப்போ தொடங்கினாய்
என்னென்ன பேசினாய்
என்ன சொல்லி முடித்தாய்
எந்த பிரக்ஞையுமின்றி.

மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.

நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.

*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.

*அன்பும் விஷம்தானடி*
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.

விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்!!!


ஹேமா(சுவிஸ்

Wednesday, June 30, 2010

அறியாவயசு...

தப்பான
தப்பின் தாளத்துக்கும் ஆடுகிறது !

தரை விழுந்து இறந்த பூக்களை
தலையில் சூடிச் சிரிக்கிறது !

சொந்தங்களைக் கண்டதால்
புன்னகைத்து வைக்கிறது !

தான் பாடமாக்கிய
தேவாரமும் திருவாசகமும் என
தானும் சேர்ந்தே ஒப்புவிக்கிறது !

தகப்பன் தூக்கும் தீச்சட்டியை
தான் தூக்க அடம் பிடிக்கிறது !

ஓட்டை போட்ட பானையில்
நீர் பிடித்து
குடிக்கவும் ஓடுகிறது !

தன் தாய்
இறந்ததை அறியா
அந்தக் குழந்தை!!!


ஹேமா(சுவிஸ்)

Thursday, June 24, 2010

காற்றும் காவலும்...

யுகப் போர்
ஆசையில்லா மனம்
சமூக நெருடல்
காதல் அறுந்த தேசம்
ஆணின் அன்பு
தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு.

தேடல் ஒத்திவைப்பு
வார்த்தைப் பசி
கவிதைகளால்
விருந்து உபசரிப்பு
வெற்றிலையும்தான்.

நிலவொளிச் சேமிப்பு
இரவின் இணங்கல்
அங்கும்...
ஆராதனைப் பூக்கள்
வாசனையோடு.

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்.

நேற்று...
மீசை முளைத்த கவிதை
இன்று...
மீசையோடு செல்லக் குழந்தை.

ஒவ்வொரு இரவும் புறப்பாடு
மழை ஈசலாகி
ஏதோ தேடல்.
இன்றாவது கிடைத்துவிடும்
என்கிற ஆசை.

இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, June 17, 2010

அளவீடு...

குடிப்பது உடலுக்குக் கேடாம்
விளம்பரம் ஒன்று
அன்றே...
நிறுத்திவிட்டேன்
விளம்பரங்கள் படிப்பதை !

அம்மா...
நான் பெரியவனாயிட்டேன்
பூசிவிட்ட
நகப்பூச்சையும்
உதட்டுப் பூச்சையும்
துடைத்துக்கொண்டே!

விளம்பரம் - எங்கள் புளொக்.

ஹேமா(சுவிஸ்)

Friday, June 11, 2010

ப்ரியம் சுழித்தோடும் வெளியில்...

அதிர்வுகள் எத்தனை
சந்தித்தது இந்த உயிர்
சிதறாத
என் உயிரை பறித்த வீரன் நீ !

கருத்த வீட்டின்
இறுகிய கதவு
இழைத்தது
இரையாகியது
இல்லாமலே போனது
பின் கழற்றியது
பெரிதேயல்ல தோழனே
கருவாய்
தொடரும் பிறப்பில்
என் குழந்தையாய் நீ !

மனம் தவிர்த்து...
இரு மார்பும்
ஒரு பெண்குறியும்
நீண்ட
அழகான விரல்களோடு கால்களும்
தடித்த தொடைகளுமே
பெண்ணென்ற குறியாய்
நினைக்கும்
ஆண்கள் மத்தியில்
அதிசயமானவன் தான் நீ !

நீ...வெளியே
நான்...உள்ளே
விளையாட்டல்ல
இது வாழ்வு !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 04, 2010

மனசோடு ஒரு கா(த)வல்...

தாத்தாவின் ஜாகை.
றங்குப்பெட்டியில்
அடிபட்டது பந்து.
வலித்தது தாத்தாவுக்கு.
யாருடா அங்க.
இங்கிட்டு வா...இங்கிட்டு வா.
அங்கயெல்லாம் விளையாடறதில்ல !

அம்மம்மா எதையோ
அரக்கப் பரக்கத் தேடுறா.
அறுபது வருடத் தாம்பத்ய உறவாய்
ஆதிகாலத்து அதே றங்குப்பெட்டி
கறளும் பிடிச்சிருக்கு.
ஏய் இந்தா இங்கிட்டு வா.
நீ தேடுறது ஒண்ணும்
அங்கயிருக்காது !

தாத்தா இறந்து முப்பதாம் நாள்.
துடக்குக் கழிக்க
சாமான் சட்டெல்லாம் ஒதுக்கி
வீடு கழுவுகையில்
அதே றங்குப்பெட்டி
விளக்குமாறு தட்ட
ஐயோ....
தாத்தாவின் குரல் !

தைரியம்தான்
தாத்தாதான் இல்லையே
திறந்து பார்த்தேன் !

பெருவிரல்
நடுவிரல் மோதிரவிரல் என
தனித் தனியாய் தவில் கூடுகள்
ஐந்து ஆறு சுருக்குப்பைகளில் !

அழகான ஜரிகைப் பையில்
ஒரு சோடி
சிவப்புக் கண்ணாடி வளையள்களோடு
ஒரு ஜரிகை ரிபனும் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 27, 2010

பொய்யாகாத இரவு...

ஒரு இரவல் இருளில்தான்
உண்மையும் பொய்யுமான
அந்த நாடகம்
காற்றோடு வந்தது
மனதில் நிறுத்தி
ரசிக்கச்சொல்லி.

அன்றைய இரவு
பௌர்ணமியைக் குடித்த போதையில்
தள்ளாடியபடி
மூச்சின் உஸ்ணம்
வந்தடையச் சாத்தியமற்ற பொழுது
இன்றைய இரவும் அதேபோல
பொய்யும் உண்மையுமாய்.

முத்தங்களை வாங்கிக்கொண்ட
நிலவின் துகள்களிலும்
பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்.

வெட்ட வெளியில்
காற்றாட உலவிய வாழ்வு
சூன்யங்களைப்
பிரித்து வேய
விருப்பமின்றியே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 23, 2010

மா(ற்)றாத கவிதை...

"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு ​தொ​லைத்த வானம்
அ​ழைப்புக்கு ஏங்கும் ​தொ​லை​பேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்​டோ
எழுத மறந்த கவி​தை

ம்ம்ம்.....
மறந்த கவி​தை​யே இன்று
என்னிடம்
கவி​தை வாசிக்கப் பணிக்கிறது.
முகமற்ற அல்லா-வாக
முதலில் இருந்தாள்.
நான் முஸ்லிமாக
அவ​ளைத் ​​தொழு​தேன்.

இன்று.....
முகில் சுமந்த ம​ழையாக
எந்த மதத்தில்
என்​னைச் ​சேர்க்க என்று ​தெரியாமல்
அவளின் ​பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகி​றேன்.

ஒற்றை எழுத்துக்கூட மா(ற்)றாமல்
எழுதுகிறேன் உன் வரிகளை
மா(ற்)றிக்கொண்ட
உன்னை நினைத்து!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 18, 2010

மே 18 ன் நினைவு நாள்...

தொடர்ந்திருந்தும்
மறந்திருந்த துன்பத்தை
நினவூட்டியது
நாட்காட்டி மே 18 !

ஒட்டு மொத்த உலகமும்
முதுகில் குத்த
ஈழத்தாயின் முலையை
பேய்கள் பிய்த்தெறிய
நிராகரிப்புக்கள் நிரவிய
நினைவு நாள் !

தாரதம்யம் இல்லாமல்
ஈழத்தமிழனுக்கு
அகதி முத்திரை
ஆழமாக
குத்திய பொன் நாள் !

முள்ளி வாய்க்கால்
மூடிய கிடங்குகளில்
குழந்தைகள் மூச்சடக்க
முள்ளிவாய்க்காலே
முட்கம்பியாய் முடங்கிய நாள் !

உலகக் கண் மௌனிக்க
காஞ்சொறிச் செடியில் கஞ்சி சமைத்து
மிஞ்சிய வயிற்றை மெல்ல அடித்தே
கொல்லத் தொடங்கிய மிகுதி நாள் !

ஒரு சிறுவனின் கனவை...
ஒரு கிழவனின் எதிர்பார்ப்பை...
அப்படியே விழுங்கிய
திருவிழாவின் இறுதி நாள் !

என் வார்தைகளில் சில

சுயநலம்...

அயோக்யத்தனம்...

என்றாலும்
துன்பத்தை
விற்கத் தொடங்குகிறேன்
பிணவறை நிரம்பமுன்
அடுத்த கனவைச்
சேமிக்க!!!

(எம் மண்ணின் விடுதலைக்காய்
உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும்...)

ஹேமா(சுவிஸ்)

Monday, May 17, 2010

தமிழன்...


ஒன்றாய்
இருக்க வேண்டாம்
ஆனால்
நாம் ...
இரண்டாய்
இருக்க வேண்டாம்!!!
ஹேமா(சுவிஸ்)<>

Thursday, May 13, 2010

மாறாப் புன்னகை...(மே 13)

மரணம் இல்லா வீடொன்றில்
மிளகு கேட்டவன்
உயிர்கள் பறித்த
வெறியோ....வலியோ
முகம் இறுகினாலும்
இன்னும்
சின்னப் புன்னகையோடு
சிரித்தபடிதான் அவன்
புத்தம் சரணம் கச்சாமி !

சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்
புத்தம் சரணம் கச்சாமி!!!

(மே 13 முதல் மே 18 வரையான உயிரழிவுகளின் நினைவாக)


ஹேமா(சுவிஸ்)

Monday, May 10, 2010

சுடும் இரவுகளும் நீயும்...

 



உன்னுடன் பேசி முடித்தபின்
சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்.
சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே !

 


உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட !

போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !

மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !


நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
எனக்கென்ன பயம்
என் நினைவோடு நீதானே !

என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.
ஓ...
நீதான் என்றோ இறந்துவிட்டாயே !

இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவளே நீதானே !

கல்லறை வந்தால் அழுது விடாதே
அன்பே.....
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 06, 2010

வெட்கம்...

என் வீட்டு மலர்கள்
வாடியதைப் பார்த்தே
என் அந்த மூன்று நாட்களைக்
கணக்கெடுக்கிறாயே !
கள்வனடா நீ.

நடசத்திரங்கள் தூங்குவதற்கும்
நான் முற்றத்தில்
நிலாக் காய்வதற்கும்
சம்பந்தப்படுத்துகிறாய்
சதிகாரா!

உன்னோடு பேசிப்பேசியே
சில பறவைகளின் பாஷைகூட
பரிட்சயமாகிறது.
தூவானத் திரை
முகம் மறைக்க
கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
தொங்கிய
பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
ரசிக்கிறது மனம்.

கவிதையாய்
உன் பேச்சும்
உன் காதல் குறிப்புக்களும்
எனக்குள் நீ
புதைந்த பொழுதுகள்
உறைந்த நொடிகளின் மயக்கம்
இப்போதும்...
எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ள
தென்றல் கிச்சுக் கிச்சு மூட்ட
கூசவைக்கிறது வெட்கம்.

பேசுவதும்
கேட்பதும்
கெஞ்சுவதும்
மறுப்பதும்
விலகுவதும்
அணைப்பதுமாய்
எம் நெகிழ்வான விளையாடல்
கனவோடு
நீ நடத்திய
புலவியின் பொழுதுகளை
வெளியில் சொல்லியே
பாடுகிறது அந்தப் பேடு.

அச்சச்சோவென
மனம் அலற
அன்றைய பொழுதை
வெட்கத்தோடு தலையணைக்குள்
ஒளிக்க மறைக்க
முயல்கிறது
என் மன அரங்கம் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 01, 2010

கருப்பை இரவல்...

கரிசல் நிலமாய்
காய்ந்த வயிறோடு
முற்றாய் தளர்ந்த மனதோடு
கனவில்....அம்மா...

"அம்மா"
திறந்த கதவோடு
இளமையை வறுமை தின்ன
வேலை கேட்டு ஒருத்தி.

அவளுக்கு உணவளிக்க
தைரியம் எனக்கு வர
வேலை எதுவும் இல்லை
என்றாலும் இருக்கிறது
குழந்தை பெறும் வேலை ஒன்று.

அவள் முகத்தைத் திருத்தித் தெய்வமாய் !

சிந்தித்துச் சிரித்தபடி
இரண்டு குஞ்சுகள் வீட்டில்
நொய்கூட இல்லை கஞ்சிக்கு
காயஞ்ச வயிறுகள் பிஞ்ச பாயில்.

வருந்திச் சிரித்தபடி
என்னதான் இருக்கிறது என்னிடம்
கருப்பையே இல்லை.

பண்டமாற்றாய்
உதவியாய்
வேலையாய்
இதில் ஏதோ ஒன்று...

தோள் சுமக்க
பெற்றுத் தா பூவொன்று
உன் சுமைகள் சுமக்கும்
தோளாய் நான்.

வேலை கொடுத்த திருப்தியும்
வேலை கிடைத்த திருப்தியும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 30, 2010

முடிவின் முடிவில்...

ஒருதலைப் பட்சமாய்
சொல்லிக்கொள்ள என்னவனாய்
கவிதைகளுக்குள்
ஆச்சரியக் குறியும்
கேள்விக் குறியுமானவன்
பெயர் தெரியாப் பறவையின் இறக்கையில்
தொங்கித்
தொலைந்துகொண்டிருப்பதாய் செய்தி.

என்னிடம் செய்திகள் பகிர்தலில்
இஷ்டமில்லாதவன்
இரவின் வயிற்றையும்
பகலின் நெஞ்சையும் கிழிக்க
கேள்விகளோடே காத்திருந்தவன்.....

உலகம் அழிதலும்
நிச்சயமற்ற மனிதர்களின் வேள்வியும்
எப்போவென வெறியோடு
பிரசண்டமாய் பிராணசங்கடம் தர
அகலமுடியா இரவும் பகலும்
கொட்டும் குருதி
கொட்டி நனைத்து
பூமி பரவத்தொடங்க.....

வானம் தொடங்கி பூமிவரைக்குமான
அபயக்குரலும் அவிப்பலியும்
அவனோடும் என்னோடும் அதிர
அந்தரஊஞ்சலில் என்னை இறுக்கித்
தன் உதிர இதழால் உறிஞ்சியபடி
தன்னையும் கடித்து முடித்தான்.

யார் தடுக்க இனி !

சிதைந்த உடலைத்
தழுவ
அணைக்க
இணைய
இறுக்கி முத்தமிட.

அவனாலும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 24, 2010

அந்திமத்தில் அம்மா...

"இந்தக் கட்டையை
என்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"
அம்மாவின் அடிமன ஆசை அது.

வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்
வாழ்வின் பொருள் பரிசளித்தவள்
கிளை விட்டெழும் பறவையாய்
இலையசைத்து
பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.

அனுப்பிவிட்டேன் பக்குவமாய்.
படுக்கை....
அம்மாவின் சேலை
வாசனை கலைக்க விரும்பாதவளாய்.

அக்காதான் பேசினாள்.

"சவம் வந்திட்டுது
பொறுப்பெடுத்து ஊருக்குக் கொண்டு போறம்.
இடது கால் சொக்ஸ்க்குள்ள இருந்த காசும்
பாவாடை மடிப்பில இருந்த சங்கிலியும்
றவுக்கைக்குள்ள இருந்த
அம்மான்ர காப்பும்
நீ சொன்னபடி நானும் தம்பியும்
பிரிச்சு எடுத்துக்கொள்றம்.

செத்தவீட்டை
குறையொண்டும் இல்லாமல்
வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்
கவலைப்படாமல் இரு என்ன."

வாழ்வு வரிசையின் ஒழுங்குமுறை
அம்மாவின் குரலில்
"என்னடி லட்சணம் இது"
என்று கேட்படி!!!

நேற்றைய "எங்கள் புளொக்"ல் சிறுகதை
ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்திய தாக்கம்.
நன்றி ஸ்ரீராம்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 20, 2010

மகனே வந்துவிடு...

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
மகனும்
துணையாய் அணைத்திருப்பான்
உலகில்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, April 18, 2010

சூரிய விசாரிப்பு...

பனி தேசமும்
என் தனிமையும்
என்னை தன்னிச்சையாய்
இயங்க விடுவதாயில்லை.

காலநிலை கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.

நாளொன்று விடிய
காளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.

முளை வெடிக்கும்

வளரும்

பிரம்புப் பந்தலில்

கொடி படரும்

மேக நிறத்தில்
பூக்களும் குலுங்கும்

காத்திருப்பில்
கண்கள்தான்
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.
 

முளைத்தலும்

படர்தலும்

வளைதலும்...வளைத்தலும்

மொட்டும் பூவும்

என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 14, 2010

நிலவோடு சித்திரைப் புத்தாண்டு...

வந்திருக்கேன் குழந்தைநிலா
நிறைய நாளாக் காணாத
உங்களையெல்லாம்
பாத்துக்கொண்டு
தமிழ்
புத்தாண்டுக்கு
வாழ்த்தும் சொல்லி
வாழ்த்துக் கேட்டும்.

மறந்தே போனீங்க என்னை !
போன வருஷம் பிறந்த நாளில
கண்டபிறகு.
இப்போ...சுகம் கேட்டு
கை விஷேசம் வாங்கவும்தான்.
நான் இப்போ தாயகத்தில்.
பாட்டி சொல்றா
கை விஷேசக் காசை வாங்கி
மண்ணுக்குள்ள புதைச்சு
தண்ணியும் விட்டா
காசுமரம் முளைக்குமாம்.

ம்...
இல்லைவே இல்லை
அஸ்க்கு...புஸ்க்கு
ஏமாறமாட்டேன்
இவங்களைப்போல.
ஏமாந்த இவங்களாலதானே
இழந்துபோனேன்
என் தாயகத்தை!!!

அத்தனை அன்புள்ளங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Monday, April 12, 2010

கலைக்கப்பட்ட பறவை...

வற்றிய குளமானாலும்
தவமாய் நின்ற தடங்களின் ஞாபகத்தோடு
வெட்டிச் சரிக்கப்பட்ட
ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி.

தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.

எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை.

என்றாலும்....
எங்கள் சாபங்களை விழுங்கிக்கொண்டே
ராட்சத பறவைகள்
முன்னேறியபடி.
எங்கள் கூடுகளுக்குள்ளும்
அவைகளின் குடியிருப்பு.

குரல் உடைக்க
ஒரு சந்தோஷப் பாடல் பாட
முயன்றும் முடியாமல்.

வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்.

ராட்சத பறவைகளை
துரத்தத் திராணியற்று
மாறிய திசையில் பயணிப்பதை
தவிர்க்க முடியாமல்
கூடுகள் கலைந்த தவிப்போடு

திரும்பவும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி நான்!!!

ஹேமாப் பறவை வாடகைக் கூட்டுக்கு வந்தாகிவிட்டது.
என் உறவுகள் எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?சுகம்தானே.மீண்டும் சந்திக்கிறதில மிக மிகச் சந்தோஷம் நண்பர்களே.என்னைத் தேடிய அன்பு நண்பர்கள் அனைவருக்க்கும் என் அன்பின் நன்றி.
இன்னும் தொடர்வோம்.

ஹேமா(சுவிஸ்)

Monday, March 01, 2010

ஒற்றை வார்த்தைக்கு...

உன் தூண்டிலில் சிக்கிக்கொண்ட
என் ஒற்றை வார்த்தைக்குத்தான்
உன் அகராதிக்குள்
எத்தனை அர்த்தங்கள்.

அடம்
கர்வம்
றாங்கி
பிடிவாதம்
செருக்கு

ஒவ்வொரு வார்த்தையையும்
தூண்டில் முள்
காயப்படுத்துவதை அறிந்தும்
பிடிபட்ட மீனுக்கு
உணவளிப்பதாய் சொல்கிறாய்.

வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.

அங்கே....
கடவுள்
அன்பு
ஆதாரம்
தேவை
எதிர்பார்ப்பு
ஆதங்கம்
ஆறுதல்

ஏன்
^
^
^
^
^
^
^
காதல்

என்றுகூட... !!!

ஒரு மாத விடுமுறை.குழந்தை நிலாவுக்குச் சற்று ஓய்வு.
மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே.

ஹேமா(சுவிஸ்)

Monday, February 22, 2010

உயிர்த்தளம்...

இது என் மண்.
இந்த மண்
என்னைத் தாங்கும்
வெறும் நிலம் அல்ல.
என் மூச்சுக் கிடக்கும்
காற்று அடைத்த மண்டலம்.

இது என் கிராமம்.
இது என் குடிசை.
கிரவல் மண் தாங்கி நிற்கும்
ஒரு திடல் அல்ல
என் வாழ்வு
என் உயிர்த்தளம்.

என்னை வளர்த்த அன்னை பூமி.
என் பாட்டன் பூட்டன் பாதுகாத்த பரம்பரை
பாரம்பரியம் பண்பாடு.
கூட்டுப்புழுக்களாய் புரண்டு உழுது
பிணைந்து கிடந்த கூட்டு வாழ்க்கை.

இன்று....
விழுது விட்டு கிளை பரப்பி
வேர் பதித்த என் மண்ணை விட்டு
வேறு வேறாய்.

ஒரு குடிசைதான்
என் அழகிய வீடு
என்றாலும்
என் பெற்றோரின்
இரத்தம் தாங்கும் இதயம்.

இப்போ..... இது
தன் நினைவுகளை....சுவடுகளை
மட்டுமே வைத்துக்கொண்டு
புல்லிடமும் பூண்டிடமும்
தன் பழைய வரலாறு சொல்லியபடி
கண்ணீர் துடைக்கக்கூட கைகள் அற்று
பாம்புகளுக்கும் பூச்சிகளுக்கும்
படுக்க இடம் கொடுக்கும்
கறையான் அரித்து
இற்றுக்கிடக்கும் நினைவுச் சின்னமாய்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி
வலம் வருகிறேன் கோவில் போல.
அக்கா பொத்திப் பொத்திப்
பாதுகாத்த சினிமாப் புகைப்படங்களை
எடுத்தோடி
வீட்டைச் சுற்றி ஓட ஓட
அடிவாங்கிய நினைவு.

தடுக்கி விழுத்திய
அதே பலா வேர்
இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
நலமா என்கிறது.
எனக்காகவே தனை உயர்த்தி
எத்தனை தடிகள் கொடுத்திருக்கும்
இந்தப் பூவரசு.
இப்போதும் பரிதாபமாய்ப் பார்க்கிறது.
வயதின் முதிர்வைப் பார்த்தா
இல்லை பயந்து ஓடிய
கோழைத்தனத்தை நினத்தா.
அப்பப்பா வளர்த்த பனை
தாத்தா நட்ட தென்னை
என்னை மட்டுமே நெருங்க விடும் அருநெல்லி.
இப்போதும்....
காய்கள் ஆய்வதற்கு ஆருமே இல்லாமல்
இருந்த ஒரேஒரு அறையின் நடுவில்
பெரிதாய் உயரமாய் நிறைந்த
காய்களோடு ஒரு பப்பாமரம்.
முளைத்துக் கிளம்பியிருக்கலாம்.
காக்கா போட்ட எச்சத்திலிருந்து

அம்மிக்காக போட்ட சிறு மேடை
சிதைந்து ஞாபகச் சின்னமாய்
ஓ...ஒரு மண்ணெணெய் விளக்குக்கூட
புல் போல வளைந்து ஆடியபடி
நின்ற வேப்பமரம் பெருவிருட்சமாய்
பல கிளைகள் விட்டு
இடம் பெயராமல் அப்படியே.

பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
போராடி நகர்வில்லாமல்
தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
நியாயங்கள் பேசி
தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
நாம் மட்டும்
நாடு விட்டு நாடு
அலைவது ஏன் ????

போட்டி !
பொறாமை !
பேராசை !
பெரு நினைவு !
சொல்லலாமா !!!

ஹேமா(சுவிஸ்)