*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 06, 2008

யார் யாரோ...யாரிவரோ

குழந்தையின் ஏணையில்
தாங்கும் சேலை
அப்பாவாய்,
பிணைக்கும் கயிறு அம்மாவாய்.
அத்தனை அன்பாய்...
இறுக்கமாய்... பிணைப்பாய்
அணைப்பாய்... பாதுகாப்பாய்.
பத்துக் குழந்தைகளுக்கும்
பத்திரமாய் பகிர்ந்து
அள்ள அள்ளக் குறையா
நிரம்பி வழியும்
அட்சயபாத்திரமாய்
அவள் அன்பு.

எமக்காய் தன் இன்பம்
தான் இழந்து
உழைத்து... உழைத்தே
குடும்பம் உயர்த்தும் அப்பா.
உடல் வற்றிய போதிலும்
எதிர்வரவு பாராத
வற்றாத அன்பாய்
அவர்கள் அன்பு.

சின்னத் துன்பத்திலும்
துடித்துப்போகும்
தொட்டில் அன்பு.
வானம் விட்டுத்
தாண்டிய உறவின்
வேறுலகம் அவர்களது.
வறுமை உலவினாலும்
வற்றாத அன்பு குழைத்து
நிலவு காட்டி ஊட்டிடும் தாயன்பு.

இயற்கை இதுதான்
என்றாலும்...என் வீட்டில்
அப்பாதான்
முழு நிறை அன்னையாய்
அம்மாவை விட
தாயன்பு நிறைவாய்.
தூக்கத்தில் முனகினாலும்
அணைக்கும் கை
முதலில் அப்பாதான்.

உடல் சோரும்போதெல்லாம்
தன் தூக்கம் தொலைத்துத்
தூக்கியே தோளில் தாங்கி
ஆரிரரோ பாடிடும் அன்பு.
அரிவரி படித்ததெல்லாம்
அப்பா நெஞ்சில்
தவழ்ந்தபடி.
சமைத்தும் தந்திடுவார்
விதம் விதமாய்.

அம்மாவோ....
அத்தனையும் செய்தாலும்,
அன்பு அதிகாரமாய்
வெளிக்கொணரும்
விதம் வித்தியாசமாய்.
இடி முழங்கித்தான்
மழை பெய்யும்
பூமியைப் பசுமையாக்க.

உணர்கிறேன் இன்று
வயதின் எல்லை
நான் எட்டித் தொட.
அதே அன்பு
இன்றும் குறையாமல்
அவர்களிடம்.
ஜென்மம் வேண்டும்
அவர் கடன் தீர்க்க.
மீண்டும் மடி தவழ
ஆசையோடு மனம் நிறை
வாழ்த்துக்களும் கேட்டபடி !!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

பெற்றோரின் அன்புக்கு எந்த இணையும் இல்லை. அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.

Post a Comment