*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 26, 2008

அகதியான காதல்...

எக்கணமும்...
நீ தந்த நினைவின் எச்சங்கள்
நெஞ்சோடு நிழலாடியபடி.
நெருப்பைச் சுமக்கும் வேதனை.
நடந்தே திரிகிற போதும்
பறக்கின்ற உணர்வு.
கடிவாளம் என் கைக்குள்
ஆனால் அகப்படாத மனக் குதிரை.

தேடிய பொழுதுகள் தீர்ந்து போக
உன்னைக் காணாமலேயே
என் காலம் கழிகிறது.
காதலுக்கும் எமக்கும்
காலாகாலத்துத் தொடர்பு போலும்.
உறவின் தொடர்புகள்
ஒருவரோடு ஒருவர்
அற்ற நிலையிலும்
தொடர்ந்த அன்பில் நாம் இருவரும்.

எங்காவது...எப்போதாவது
எதிர்பாராமல் ஏதாவது
உன் நினைவோடு
தட்டுப் படும் போதெல்லாம்...
நின்று நிதானமாய்
ஒரு கணம் உன்னைக்
கண்டு களிப்படைகிறேன்.
கனவில் காணுகின்ற
நேரத்தில் கூட
கதைக்க முடிவதில்லை உன்னோடு.
காதலின் புனிதம் இதுதானோ!

மணிக்கூட்டின் சப்தத்தைத் தவிர
ஒரே நிசப்த இரவு.
கும்மிருட்டைக்
கலைக்க ஒரு மெழுகுதிரி.
மூடிய நான்கு சுவர்களுக்குள்
நான் மட்டும் தனியாக.
அகதி வாழ்வின்
ஒரு பகுதி எமக்கு இப்படி.

என் நினைவில் நீ.
உன் ஞாபகக் கொப்புளங்கள்
கொதிக்கிறது.
தாய் மண்ணை விட்டுக்
காத தூரம் கடந்து வரும் போது
உன் நினைவுகளை மட்டுமே சுமந்தபடி.
எதையுமே எடுத்து வர முடியவில்லை.
நீ வாங்கித் தந்த எதையுமே.
இதயம் கீறி
அதற்குள் உன் பெயரையும்
என் பெயரையும் இணைத்து
எழுதிய வெள்ளைத் தாளைத் தவிர.
உன்னை அதற்குள் கண்டுகொள்கிறேன்.

தொடமுடியா தொலை தூரம்
விட்டு வந்த உறவுகள் நிழல்களாய்.
நினைவுகளில் மட்டுமே
மிக அருகாய் நீ.

என் தேசத்திற்கும்
இந்த அந்நிய தேசத்திற்கும்
வேற்றுமை வித்தியாசங்கள்
பெரிதாய் இல்லை.
மனிதர்களின் நிறம்
மாறியிருகிறதே தவிர
மனங்கள் அப்படியேதான்.
எத்தனை இருந்தும்
நீ இல்லாதது
எதுவுமே அற்றுப்
பரந்த தூரமெங்கும் வெறுமையாய்.

சிந்திக்கின்ற பொழுதுகளில்
நாம் நடந்த
சின்னக் குச்சொழுங்கைகள்...
மகிழ மர நிழல்...
முச்சந்தி வாசிகசாலை...
அம்மன்கோவில் குளத்தடி...
இன்னும்...இன்னும்.
அத்தனையும்
கண்ணுக்குள் நிழலாடும்போது
என் நினைவோடு நீயும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

தமிழன்-கறுப்பி... said...

ஹேமா மனதில் சுமையாகிப்போனாலும் நினைவுகளில் இனிமையாவும் ஞாபகம் வருகிற தருணங்கள் எல்லாம் ஒருவிதமான நெகிழ்வைத்தருகிறதுமான பிரிவை உணர்வோடு சொல்லியிருக்கிறீர்கள் தொடர்ந்து எழுதுங்க...

ஹேமா said...

வணக்கம் தமிழன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி.உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்குவிக்கும்.

விச்சு said...

கனவில் காணுகின்ற
நேரத்தில் கூட
கதைக்க முடிவதில்லை உன்னோடு.
காதலின் புனிதம் இதுதானோ!
புனிதம்தான்.

Post a Comment