*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, July 08, 2015

அப்பா...அப்பா...

கவியாய்
எனைப் பிரசவித்த
என் குழந்தை...

தன் பெயரையே
என் கவிக்குப் பெயராக்கிய
என் அப்பாக் குழந்தை...

பறையோசையின்
அதிர்விலும் உறங்குகிறது
இறுதிக் கவிதைக்கான
வார்த்தைகளை
என் கண்ணீரில்
நனைத்துவிட்டு.

எனக்கான குறிப்பேதும்
விட்டுச் சென்றதாய்
எந்தத் தடயமுமில்லை
என்னைத்தவிர.

அடிவயிற்றில்
கயிறிறுக்கி
காலன் உயிர் பிடுங்கையில்
அவர் எழுதி ஒடிந்த
பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர்
மூடிய விழியில்.

எழுத்தறிவித்த
என் இறைக் குழந்தை
என்'அப்பா'
'குழந்தை நிலா' வின்
இக்குழந்தை...

இனியொருபோதும்
திறக்கா அவ்விழி
இனியொருபோதும்
'அம்மா' வென அழைக்கா
அப் பாசமொழி.

எரிந்த சிதையிலிருந்தும்
புரண்டு விழுந்திருக்கும்
ஒற்றை விறகு
எனக்கே எனக்காய்!!!

குழந்தை நிலாவின் குழந்தை குழந்தைவேலு என் அப்பா யூலை 1 ல் என்னை விட்டு இறைவனடி சேர்ந்தார்.

Tuesday, June 02, 2015

என்னூர் இளவரசி...

"கொஞ்சம் கழனித்தண்ணி தாங்கோ
என்ர குஞ்சுகளுக்கு."

ஒரு போதும்
இரங்கியதில்லை தனக்காய்
நாமாய்ப் போர்த்திவிடும்
ஒருபாதிச் சேலை தவிர.

தெருவோரம் உருட்டிவிட்ட
சாராயப் போத்தலென
வெறித்தபடி லட்சியமாயொரு
ஆயாச நடை.

பெருமூச்சோடு
தெருக்கடக்கும் ஒருவன்
தீய்ந்த தேகத்தோடு ஒருவன்
எச்சில் வழிகிறான்
இன்னொருவன்
அவள் பெருமுலைகள்
மூட மறுத்த முந்தானை
முனையிலொருவன்.

உணராப் பிறழ்வோடு
உறைகிறது
உள்மனத் தீக்காடு
கருக்கொண்ட
அவள் தீக்குள்ளேயே.

இருத்தலும் தொலைதலும்
பிரியமென்றால்
ஏக்கங்களின் நிறங்களே
அவளின் நாய்க்குட்டிகள்.

ஒன்று இடுப்பில்
ஒன்று கையில்
இன்னொன்று
வயிற்றுச் சேலைக்குள்ளுமாய்
காவி...

தன் உயிருக்கும்
வாழ்வுக்குமிடையிலான
கருணையற்ற
கடவுளின் மௌனமாய்
நிராகரித்த மனிதருக்குள்
'மனுஷி' என்கிற ஒழுங்கறுத்து
'நாய்க்குட்டி விசரி'யாகி
நடக்கிறாள்
நேற்றின் தடத்திலும்
நாளையின் நவீனத்திலும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, May 21, 2015

ஒரு யுகமழித்த வழி...

இதே.....
இரவாய்த்தான் இருக்கவேண்டும்
குரைத்தலின் ஓசை
கூடியும் குறைந்தும்
பாதச்சுவட்டை அழித்தழித்தே
கடக்க வேண்டியிருக்கிறது.

அடர்ந்த கிளைகள் அடவெடுக்க
முகிலின் திணவெடுத்த உரசல்கள்
காம்புகளில் உருண்டு
நர்த்தனமிட
மாறிய உருவகத்து
கவிதை வார்த்தைகளாய்.

எம்பிய காற்றுச் சருகுகள்
குவளையாக்கிய
வல்லினக் கனவுகளை
சல்லடையாக்குகின்றன
அமானுஷ்யங்கள்.

வெறுமனே சிக்குண்டு கிடக்கும்
சிலந்திகளுக்கு
ஆறுதல் இப்பொழுது.

கூடுதங்கும் பறவைகள்
மரங்களின் வேரறுத்தல்
பகல்களில் தானென
வேரூன்றும் கன்றுகளின் நிழல்களில்
பசியாறத் தொடங்கியிருக்கின்றன.

நம்புங்கள்
கணநேரத்தில் விடிந்துவிடும்
பயணங்களில் சந்திக்கலாம் நாம்
நீயும் நானும் கூட.

விடிகாலை மணியோசை
பகலைச் சமைக்கத் தொடங்குகிறது
சூரிய வெக்கையில்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Monday, May 18, 2015

அடங்காதவதர்கள் மாதமிது...

நீறாக்கப்பட்டது நிமிடத்தில்
தமிழனின் நிம்மதி
முள்ளிவாய்க்கால்
நீங்கா நினைவு நாளின்று.

கடக்கிறது காலம்
காவுகொடுத்த அக்கணம்
கடப்பதில்லை இம்மியளவும்
தமிழர் மனங்களில்.

இரத்தவாடைப் பூக்களை
தலையிலும் சூடாமால்
இறைவனுக்கும் படைக்காமல்
மண்கிளறி
மனப்பிறழ்வானவளாய்
தீ வார்த்துக்கொண்டிருக்கும்
என் குழிக்கு நான்.

தொலைத்த அவர்களின் குறிப்புக்கள்
வானுக்கும் மண்ணுக்குமாய் தொங்க
வழியேதுமின்றி
வாய் சளசளக்கும் விமர்சகர்கள்.

குடியிருக்கும் இடத்தில்
கோவில் வைப்பவர்கள் நாங்கள்.

இருப்பைக் கலைத்து
எல்லைகளை நகர்த்தி
கைகளில் எரிகற்களோடு
குற்றங்கள் ஏதுமற்ற மனிதர்களென
பலியிடும் விலங்குகளுக்காய்
வழக்காடும் அவர்கள்
கோயிலை வைத்துவிட்டு
குடிகளை இருத்துபவர்கள்.

நினைவு விளக்கில்
நிழல் காட்டும்
என் மக்களின் முகங்களை
உரக்க விசாரித்து
எழுதிக்கொண்டிருக்கிறேன்
பெயர்களை.

எவராலும்
எதுவும் செய்யமுடியாது
என்னை இப்போ!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

மே 18 2015 !

பூக்களை
பூக்களே கொன்றதாய்
பூக்களே குற்றம் சாட்ட
இடைநிறுத்தி
முடிவடையா வாசனைகளை
அடைத்துக்கொண்டது காற்று.

துவக்கைத் தூக்கினாலும்
பொத்திப் பொத்திப் பக்குவமாய்
தன் கதிருக்குள் அடைகாக்கும்
நம் சூரியன் பூக்களை.

சூரியகாந்திகளாய்
கார்த்திகைப் பூக்களாய்
வாடா மல்லிகைகளாய்
மண் மணக்கும்
வான்காவின் காவியமாய்.

கடவுள்கள்
நம்மோடு வாழ்தல் வரம்
வாழ்ந்தோம்
வாழ்கிறோம்.

துவக்கில் பூத்த இப்பூக்கள்
வானிலும்
வரப்பிலும்
தரையிலும்
தண்ணீரிலும்.

அக்காக்களாய்
அண்ணாக்களாய்
தம்பிகளாய்
தமிழச்சிகளாய்
கண்ணம்மாக்களாய்
இசைப்பிரியாக்களாய்
பிரசாந்திகளாய்
விபூசிகாக்களாய்
இப் பூசணிப்பூக்கள்
நம் வீட்டுக் கோலங்களில்.

எப்படி...எப்படி...எப்படி அழைக்கலாம்
இப்பூக்களை...

தீயாய் பூ கக்கும்
துவக்குகளை
கூட்டுப் பூக்களை
களை கொல்லும் புழுக்களை
எப்படி அழைக்கலாம் ?

நீந்தலறியாதவன்
வெளியில் நின்று
மீனை அழகென்பான்
தரையின் நீந்துவான்.

நாமோ.....
நீந்தும்
கடல் வேங்கைகளென்போம்.
மிதக்கும் பூக்களை.

தாங்கியே தேங்கியிருக்கிறது
நந்திக்குளம்
நம் தாமரைகளை
அள்ளிக்கொள்வோம்
சுதந்திரப் பூக்களென
ஒருநாள்....ஒருநாள்.

அதுவரை
ரசிக்கப்போவதில்லை
மகரந்தம் தின்னும்
பட்டாம்பூச்சிகளையும்
பிரயோசனமில்லா
எந்தக்
காட்டுப் பூக்களையும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Sunday, May 17, 2015

காற்றாகி அவன்...

மீண்டும்....
பிரபஞ்சம் நிறைக்கிறான்
வானொலிக்காரன்
தோட்டமெங்கும்
வெண் பூக்கள்
அவன் குரலாய்.

மரவண்டுகள் துளையிட்ட
துவாரங்களுக்குள்
தந்துபோன
ஒற்றைச் சிறகு
முதுகு
தாங்கா நேரங்களில்.

அந்தரத்தில் தொங்கும்
அவன் குரலை
வானலைக் காகங்கள்
பறக்கும் சுதந்திரம் சொல்லி
அரம்பையாகிய
தூக்கணாங்குருவியின்
கதை சொல்லி
எச்சில் படுத்துமோ...

அவன் குரல் தாண்டி
அதிரச் சப்தம் போடும்
மரவண்டுகள்
இறக்கைகளை
தூர்ந்த சொற்களால் தின்னுமோ
ஒருவேளை ...

கன்னிப் பேடைப் பிரசவமாய்
ஒரு முத்தம் பெறும் வலி
கொடுக்கும் வலி
முடிவிலியாய் தொடரும்
இவ்வாதை வலி
மரவண்டுகளறியா.

புன்னகைத்து
என் கையறு கண
பேரிழப்பைச் சமாளித்து
என் மார்பை
சப்பித் துப்பட்டும்
மரவண்டுகள்.

அவன் சிறு உலகத்தில்
அவனுக்கான
என் முத்தங்களை
தொங்கவிடுகிறேன்
தூக்கணாங்குருவியாய்.

தேவனே இதோ
இதோ....

மு
     த்
        த
            ம்.

ஈரமுத்தம்...

இன்னொன்று
இன்னொன்று...!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, April 23, 2015

கருப்பு வெள்ளைகள்...

மழித்த சொற்களின்
கண்களில் முளைக்கிறது
புது முடிகள் வீரியமாய்
கோணிக் கோணி.

எத்தனை துரோகங்கள்
எத்தனை நம்பிக்கைகள்
கடவுள் மீதும்கூட
யாருமறியவில்லை.

'ஆசை விட்டெறி'
அறிவித்தவன் புத்தனல்ல
வறுமை துரத்தும்
போதிமரத்தடி
பிச்சைக்காரனும்தான்.

புன்னகைத்து முகம் நிமிர்த்தி
வெட்டப்பட்ட விரல்கள்
வடிவான செம்பூக்களாய்.

அறுக்கத் தொடங்கியாயிற்று
வெட்கம் முதல்
வீண் கர்வம் வரை.

கடும் மௌன விரதத்தோடு
உயிர் உறுப்பின் முதல் போணியை
வாரி அள்ளி வீசின
பனி மேடுகளில்
அகல விரிந்த பனி வாரியல்கள்.

பிளந்த
கடைசிச் சொற்களைத் தவிர்த்திருக்கலாம்
கறள் பிடித்த
வீறாப்பின் வாரியைப் போலவும்
கோணிய சில எண்ணங்கள் போலவும்.

தீராப்பிரியங்களால் அழிவது
எப்படியென்பது பற்றியும்
மெல்லத் தீவாவது
எப்படியென்பது பற்றியும்
ஆராயத் தொடங்கலாம் இனி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, April 17, 2015

மன்மத வருடம்...

கடிக்கும்
தின்னும்
மிருகம்
நீ
நான்.

பழங்குடிகளின்
தென்னங் கள்
வாசனை.

வெடித்துப் பிளந்த
இதழ்கள்
வலிக்க வலிக்க
ஆடிமாத வெயிலில்
தீ மிதிப்பு.

வெள்ளை மயில்
பட்ட மரம்
ஒற்றைத் தாமரை
சாரை அரக்கிய நிலம்.

கொஞ்சம் விட்டு
ஆறியபின் இதழூற்று
காய்ந்த நிலத்தின்
பொருமலிப்போ.

உள்காய்ச்சலில்
துளையிட்ட புண்களில்
மழையீரம் தடவ
மயிலெனத்
தவமிருக்கிறேன்
ஒரு மாதிரியான
அகவலுடன்.

பஞ்சாங்கம்
வந்தபாடில்லை.

உலர்த்தித் தளிர்த்த
உன் உதடுகள்
தேவைப்படலாம்
காயமில்லா இரவுகளில்.

மன்மத வருடமாமே இது!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 15, 2015

சாயும் சாயல்...

பிறவிச்சுழல் தொலைக்க
என் காலைச் சுற்றியே
மீண்டும் மீண்டும்
முளைத்தெழா ஆழக்குழி.

அதிதியொன்றின்
அநாகரிக வரவு.

கோளகையாய்
கோழையாய்
எரிச்சலாய்
என்னைப்போலவே
எனைச்சுற்றி
முன்னும் பின்னுமாய்...

தோற்றல் விதி
இழப்பும் விதி
வெறியாடும் வேக்காடு விதி
கதியின் விரைவும் விதியென
விருந்தும் பசியுமாய்
தன் நிழலே தன் கழுத்திறுக்க...

தொலைப்பது தோல்வி
தவிர
புதைக்க முடிகிறது
அது சாய்ந்த என் நிழலை
என் காலின் கீழ்.

என் குருதிக்கு
நீயே பொறுப்பெனக் கை நீட்டுமுன்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, April 10, 2015

தொடரும் விதி...

திகட்டத் திகட்ட
போதும் போதுமென
இழப்புக்களை
இரத்த வாசனையோடு
குடித்தவள் நான்.

இழப்புக்களும்
மரணங்களும்
ஒன்றும் செய்யாதிப்போ
மரத்த என் மனம் தாண்டி.

தறித்தது
வீழ்ந்தது
வீழ்த்தியது
மரமா
மனிதனா
மனமா ???

கடல்
தாண்டியும்
உயிரை
உரிமையை
மயிராய் மதிக்கும்
மாக்கள் மத்தியில்
இவன்
பிழைத்தென்ன பயன்.

நினைவின் நாசியில்
நைந்து நாறிய
ஈழத் தமிழனின்
வாசம் குறையாமலே.

அமிழ்தென
நெஞ்சை
நனைக்குமொரு
மழைத்துளி
தமிழை
தமிழனைத்
தாங்கும் வரை...

உலகம் மாறாது
தொடரும்
நஞ்சின் வீச்சம்
நமக்கே நமக்காய்!!!

தமிழகக் கூலித் தமிழ்த் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல்...

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 07, 2015

அனுகரணவோசை...

அவிழ்த்த
நூல் பிரித்து
கயிறாக்கியிழுத்த
போட்டியின் வெற்றியில்
இரத்ததானப் பெருவிழா.

இத்தனை ஏக்கமா
இருந்திருக்கிறது
யாக்கைக் குடுவைக்குள்
காதலும் காமமுமாய்.

தோய்த்தெடுத்த
ஈரங்கள் காயப் போதுமாயிருந்தது
இருபது விரல்கள் பிணைத்த
நிமிட மென்வெப்பம்.

வியர்வையில் முளைத்து
மௌனித்த நாணம்
இதழ் இதழாய்
அவிழ்ந்த மணம் மடியில்.

ஒற்றை நிலைக்கண்ணாடி காண
கொழுக்கி விலகிய சங்கிலியில்
சம்பிரதாயச் சடங்கு.

இனி
ஊரும்
எறும்புகளும்
பிரிக்கா இடைவெளியற்ற
ஆடைகள்
தேடி உடுத்துவதே அழகு.

உதட்டு முத்தங்கள்
ஒட்டிய இடங்களில்
சுவாச வாசங்களாய்
அன்பின் தியானம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, April 04, 2015

கனவும் கடனும்...

கண் மூடினால்
கனவுகளில்
கனவுகளைத் துரத்தும்
பிரமாண்டப் பாம்பு
இடிந்து விழும் வானம்
புயல்
போர்
வன்முறை
வறுமை.

இன்றைய புதுக்கனவில்
என்றோ
தாத்தா சொன்ன
ஒற்றைக் கண்ணன்
துரத்த....

ஓடிய திசையில்
ஆழக் குழியொன்றில்
குப்பறத் தள்ளிய
நடு இரவில்
பிஞ்சுக் குழந்தையின்
கரங்களில் தஞ்சமாய்
தூங்கும் கனவில் நான்.

இனிப்புக்கள்
தேவதைகள்
நட்சத்திரங்கள்
பனிப்பாறைகள்
பளிங்கு மாளிகைகள்
மூக்கு முட்டும் வாசனையோடு.
வேண்டாக் கனவுகளை
அடித்து விரட்ட ....

பச்சைத் தவளை
டோராக்குதிரை
சிவப்புச் சிங்கம்
மஞ்சள் நாய்
சிவப்புப் பாம்பு
ஓடும் ஊர்தி
பறக்கும் விமானம்
குட்டிக் குட்டியாய்.

போர் நிறைந்த உலகில்
சிசுக்கள் நசுக்கும் பூமியில்
கை உயர்த்தி
அடிமைப் படா
ஓர் குழந்தை.

சிரிக்கும் கனவை
சிதைக்காமல் இணைகிறேன்
குட்டிப் புன்னகைக்குள்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, March 26, 2015

ஆசுவாசம்...

ஈரூற்றுக் குருதியின் பெருவலியோடு
வானம் கூடடைகிறது ஒற்றையாய்.

இந்நிகழ்வுக்குத் தேவையாய்
கண்களைக் குளிப்பாட்டித் திரும்ப
வானவில் சமைக்கும்
நிறுத்தல் குறிகளின் விளம்பல்.

தேவையற்ற அலங்காரமும்
பரப்பிய பூவும்
தட்டோடு காத்திருக்கும்
பழங்களும் பாவம்.

ஆதிமனிதன் தின்று
போட்ட விதையில்
முளைத்த முத்தக்கோட்பாடு
எச்சிலாய் வழியும்
அக்கினிக்குச் சாட்சியாய்.

ஏன் இத்தனை
ஆயுதக் கண்கள் கொக்கியாய்
இங்கவிழும் ஆடைக்குள்.

அவசியமற்றது.....

கனவுகளைத் தின்ற
இந்த இரவும் முடியும்
போதும்
மிச்சம் மிச்சமென
தாய் சேய் நலமென்பதோடு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, March 20, 2015

எட்டு முத்தங்கள்...

வதை முகாம்களில்
தூர நிற்கும்
முள்வேலியோர
அன்பு முத்தம் !

வானவில்லென
ஏமாறும் மீசையில்
பெருமழையென
வான் முத்தம் !

இரத்தநாளங்களைச் சீராக்க
மென்சகியாய்
வேப்பமரத்தடிக் காற்றின்
மூலிகை முத்தம்!

பூனையாய் பொய்யுடுத்தி
நாசி தேடி
பிரிய மூக்கில்
பால் குடிக்கும்
திருட்டு முத்தம் !

மாராப்புச் சேலைக்குள்
இல்லாத பால்தேடி
பல் செருகி வலிக்கவைக்கும்
பாச முத்தம் !

வனம் தொலைத்த ஓரிறகு
உலர்ந்துவிட்ட இரவுகளில்
வனாந்தரமென மடிசாயும்
உதிரா முத்தம் !

மகோன்னதப் போரில்
எம்பி வீசும் வாளில்
தோல்வி தரும்
வெற்றி முத்தம் !

நெருப்பில் வெடித்த
'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Tuesday, March 17, 2015

வேண்டுமொரு கண் திறந்த புத்தன்...

பழைய சொற்களோடுதான்
அவர்கள்
ஆட்கள் மாறிக்கொண்டு
எங்களையும் மாற்றாமல்
மாற்றிக்கொண்டு.

பிரகாசமாய்
புத்தனைக் கண்டேன்
பாதுக்காக்கும் தன் பல்லால்
பழைய சொற்களை
அவர்கள் தீட்டிப் புதிதாக்க
வாய்திறவா
தன் சொற்களோடு
மத்தியில்.

நித்திய பாவனையில்
கண்ணை மூடி
பெருங்காதுகளில்
சேமித்த படிமங்களோடு
தனித்திருந்தான்.

எப்போதோ....எப்போதோ
புத்தன் கண்ணொளி பறித்து
பரணில் பதுக்கியதாக
தேசியம் பேசும்
ஒரு பிக்கு.

சமத்துவம் சொல்லும்
'மைத்திரி' க்களும்
'சிறீ' க்களும்
புத்தனின் ஒளிவட்டத்தை
தம் தலையில்
பொருத்தியிருக்கிறார்கள்.

துவக்குகளற்ற தேசத்தில்
'துட்டகைமுனு' க்களும்
'காமினி' க்களும்
'ரணில்' களும்
இந்திய
'மோடி' க்களும்
மாடி உலகமும்
புத்தனை பேசவிடாமல்
பேசிக்கொண்டிருக்க...

அவன் கண்மூடியபடிய
திறந்த பெருங்காதுகளோடு
எப்போதும்போல
வேறு வழியின்றி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, March 15, 2015

ஒரு அகதிக்காதலும் ஒரு அதிகாலையும்...

மூடிக்கிடந்த விழியில்
ஒளியள்ளி வீசிவிட்டு
ஒளிகிறான் ஒரு திருடன்.

கரகரக்கும் இமை உதற
கருநீலக் கண்ணனாய்
சிறைப்பட்ட காற்றாய்
மெல்லக் கசிகிறான்
எங்குமிசைக்கிறான்
ஏதோ ஒவ்வொன்றிலும்
அது அதுவாய்.

காதல் குடில்
புல்லாங்குழல் வேலி
நகரா இசைக்குள்
சுற்றிவளைக்கப்பட்ட
அவன் நினைவுகள் தவிர
ஏதுமில்லை மீட்ட.

மண்பூத்த பனிப்பூவில்
சிலிர்த்து மலர்கிறது
தூரத்துக் காதல்.

அகதிக்காதல் என்கிறேன்
நான்...
அவனோ...
அதிகாலைக் காதலென்கிறான்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Friday, March 13, 2015

இரவின் முணுமுணுப்பு...

கனவின் கால்களில்
அரூபப் பேயெனத் தொங்கும்
அன்புப்பேய்.

காலாவதித் திகதியிட்டு
அடைபட்ட புட்டிப்பால்போல
அவதிப்படும் பாசம்.

நிராதரவின் வார்த்தைகளில்
இறுகச் சாத்திய கதவுகளில்
முறுக்கிக்கொண்ட அகம்பாவம்
சாவிகளில் துருவேறியபடி.

பகலில்
பிசுபிசுக்கும் காம இடுக்குகளை
கவிதைகளில்
எழுதிக் கிழித்துவிட்டு
இரவின் ஆழங்களில்
அமைதியற்ற படுக்கை.

பசியோடுதான்
ஆனாலும் கொத்த மறந்த பாம்பு...

ஓட்டைகள்தான்
பிணைப்பை விடாத கதவு...

முடியாத் தூரம்தான்
எச்சில் படாத முத்த ஓசை...

ஆழக்கடல்தான்
புயலில் கப்பலோட்டும் மாலுமி...

வெறுப்புத்தான்
ஒட்டிக்கொள்ளும் அகதி வாழ்க்கை...

அடித்து அழித்தவர்கள்தான்
அனுசரிக்கச் சொல்லும் சமூகம்...

நிதர்சனம் இதுதான்...

எனவே...
என்னவனே
வந்துவிடு
உனக்கான
பிரியத்தின் வாசனையை
இதழ் முட்டிய
முத்தத்தை
பெற்றுக்கொள் இப்பொழுதே
இக்கணமே!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, March 07, 2015

நிலவுக்கொரு வாழ்த்து...

அழகாய்
என் நிலவு
கடலாடி
மீண்டும் புதிதாய்
பிறக்கிறது இன்று.

பெருமதிப்பிற்குரிய
கடவுளே
என் தேவதைக்கு
என் சுட்டுவிரல்
வாழ்த்துகள்
செல்ல வேண்டுகிறேன்.



ஒளி அளவு
உயர்கிறது ஒன்பதாய்.

வாழ்வை
சுகமாய்
மகிழ்ச்சியாய்
எதிர்கொள் செல்லப்பூவே.

பிடித்த மணிக்கூடு
வடிவான சப்பாத்து
உன் அறைச் சித்திரங்கள்
தோள் தேடும் பொம்மைகள்
கடந்த நிமிடங்கள்
கடக்கும் நிமிடங்கள்
உன் அதிகாலைச் சேட்டைக்காய்
காத்திருக்கும்
பிறந்தநாள் பாடலோடு.

காவல் கோடுகள் தாண்டி
கைகளில்லாக் கடவுளிடம்
உனக்கான முத்தத்தையும்
சின்னப் புன்னகையும்
அனுப்பி வைக்கிறேன்
வாங்கிக்கொள்
என் சின்னவளே.

மிடுக்கற்ற
கர்வமற்ற
திமிரற்ற
அன்பான
எள்ளுப்பூவாய் சிரித்திரு
தமிழாய் நிலைத்திரு
ஆழப் புதைந்து
செழித்து வளர் தாயே!!!

Friday, March 06, 2015

குழம்பி...

வரங்கள் வேண்டியொரு
வானம்
புத்தம் புது நிலவுக்காய்.

கைரேகைகளும் கற்சிலைகளும்
நிர்ணயிப்பதில்லை
கருமுட்டை உடைவதை
தன்னலகே தள்ளி வரும்
உலகுகாண.

முடியும் வாழ்வில்
முடிவற்றதாய் நீளும்
நம்பிக்கை நுனிகளில்
இருந்துகொண்டு
சபிக்கிறேன்
தெருவோர வெளிச்சங்களை.

சிந்தலாம் இன்றோ நாளையோ
சபித்த என்மீது
சில மழைத்துளிகள்
அதில்
எரிவதும் அணைவதும்
என் பொறுப்பு.

இப்போ....
தந்து போகும் இவ்வுலகு
எனக்கொரு பெயர்.

விட்டிலையும் விளக்கையும்
வேடிக்கை பார்த்தவள் நான்
நானே விட்டிலாயும்
விளக்காயும் ஒருநாள்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, February 27, 2015

மாசி மழை...

எங்கும் பனி
பூவாய் உதிர
மெல்லிய
மழைச் சத்தம் தவிர
மௌனம் மட்டும்.

மெல்ல முணகித் திரும்பும் தார்ச்சாலை
பூக்கடை வாசலில் நம்மூர் மல்லி வாசனை
வேகமற்ற ஊர்திகள்
மழைக்கம்பிகளுக்கு அஞ்சும் மனிதர்கள்
சத்தமில்லா வாகனத்தில் சவ ஊர்வலம்.

அடர்ப்பச்சையிட்டு
காட்டின் அடர்த்தியோடு
வேரை இறுக்கியிருந்த
அச்சுவரை விட்டு
கிளை விட்டு
பிடி விட்டு
விழுந்த ஓரிலையோடு
பனியும் மழையும் கலந்த
இம்மாலை.

கிளைக்கும் காம்புக்குமிடையில்
தொங்கும் பிரியமென
நீ...நான்...அவ்விலை.

மழைச் சத்தம் தவிர
மௌனம் மட்டும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)