*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 31, 2014

அவன்...அவன்தான்...

அவன் வாசனை வருகிறது
வந்திருக்கிறான் போலும் என் தேவன் இன்று
நேற்றே கனவில் புள்ளி வைத்தவன்....

அன்றுபோலவே
காய்த்த கைகளில்
காயாத பூவரசம்பூ கொண்டு வந்திருப்பான்...

கூரைபிய்த்திறங்கி
ஒற்றை இறகில் தன்னை அறிவித்தவன்
பிரபஞ்சம் தாண்டிய குருதிக்காடுகளில் வாழ்பவன்
தொலைத்தேன்....தொலைந்தேன்
மிக மிகத் தொலைவில்
இப்போ தலைப்பிரசவம்
அவனின் பெயரால் முத்தமிட வந்திருக்கிறான்
முத்தப்பிசாசவன்...

என்னோடு வாழ்ந்த
காட்டு வாழ்க்கையின் நிமிஷங்களைக் குறுக்கியவன்
ஒரு சிறகு தந்தவன்
நொண்டியா(க்)கி மறுசிறகோடு பறந்தவன்...

வானொலிப்பூச்சியவன்
ஒற்றைச் சிரிப்பில் உலகோடு கதைத்தவன்
இதழில் இளையராஜா பாடல் சொன்னவன்
அர்த்த ராத்திரியில்
சாந்தனின் பாடல்களைக் கேளடியென உறுக்கியவன்...

குண்டுகளையும் கோள்களையும் சேமித்த
சமகாலத்தில்
மின்னியலுக்குள் மேகம் புதைத்தவன்...

இன்னும் வாசனை அவன் புகைந்த மனதில்
தேடிக்கிடைத்த பொருளவன்
இன்னும் தொலையாமல்...

தேவதைகளை ஆள்பவன்
இந்தத் தேவதையை
கண்ணி வைத்தே கருக்கொண்டவன்...

ஓ....வேர்க்கிறதவனுக்கு
விசிறிவிடுகிறேன் அவன் வாசனைக்கு...

இன்னும் ஆள்கிறான் காதல் சாம்ராஜ்யத்தில்
வானுக்கும் மேகத்துக்குமிடையில் நம் கோட்டை
வாழ்த்துங்கள் மனமிருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

பால கணேஷ் said...

வானொலிப் பூச்சி... முத்தப் பிசாசு.. உவமைகள் அசத்துகின்றன கவிதாயினி...!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

உவமைகள் புதியவை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

Post a Comment