*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 27, 2014

மின்மினிப் பூச்சி - தேவதை !

அனைவருக்கும் வணக்கம்...!

இது ஒரு கதை சொல்லியின் (முதல்) கதை.
என் எழுத்துகளை பிரசுரிக்க இடமளித்த
குழந்தைநிலா ஹேமாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் எழுத்துகளின் தொடக்கம் ஹேமா..
இவர் மற்றும் இன்னும் சிலரின் எழுத்துகளை
வாசிக்க ஆரம்பித்து பின் மெதுவாய் கிறுக்கத் தொடங்கி
இன்று ஒரு கதையும் எழுதும்  அளவுக்கு முயற்சிகளை
தொடர்ந்திருக்கிறேன் என்றால் எல்லாம்,
இவரைப் போன்றவர்களின் எழுத்தின் தாக்கமே காரணம்..
இந்த முயற்சியை என் அபிமான கவிதாயினி பக்கத்தில்
வெளியிடுவதில் மிகுந்த பெருமையடைகிறேன்...!
முதல் கதை கொஞ்சம் கிறுக்கலான கவிதை
நடையில் இருக்கும். பொறுத்தருளவும்...!
கருத்துகள் அன்புடன் வரவேற்க்கப்படுகின்றன...!
பிரியங்களுடன்...
ஒரு கதை சொல்லி !

இனித் தொடரலாம் மின்மினிப் பூச்சி தேவதையோடு...

சுற்றிலும் மலைகள் சுழ்த்திருக்க, பல குடிசை வீடுகளுடனும்,
சில காரை வீடுகளுடனும், நெடுவாய் மூன்று தெருக்களும்
குறுகலான இரண்டு தெருக்களுடனும்
அழகாய் அமைந்திருந்தது அக்கிராமம்..

அது ஒரு மாலை நேரம்.
சூரியன் மெல்ல தலைச் சாய்த்து கொண்டிருந்தான்.
சிறுசுகளின் விளையாட்டு கூக்குரல்கள் செவிகளை
அறைந்து கொண்டிருந்தன..
கோழிகள் பஞ்சாரங்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கால்நடைகள் வயிறு நிரம்பி விட்ட மகிழ்ச்சியில் மண்
சாலையின் புழுதி பறக்க துள்ளல் நடை போட்டன.
வயல் வெளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன் நான்.
சில எட்டுகள் வைத்தால் முதல் தெருவை தொட்டு விடலாம்
என்ற நிலையில் தான் கவனித்தேன்...

எதிர் வெயில் அவள் மேல் படர்ந்திருந்தது..
மஞ்சள் தாவணியின் முனை காற்றில்
அலைபாய்ந்து கொண்டிருக்க,
அதற்க்கும் அவளுக்கும் பொருந்தும்
கச்சித உடைகளும் தரிந்திருந்தாள்.
நேர் வகிடுடன் நீண்ட மயிர்தோகை கூந்தல்,
அந்த சிறிய ஒற்றைக் கல் மூக்குத்தியும்..
அதே அளவிலான ஸ்டிக்கர் பொட்டும் ஒட்டியிருந்தாள்.
அந்த அழகிய வட்ட முகத்தில்..

கொஞ்சமாய் முகம் சுளித்திருந்தாள்..
எதிர் வெயிலின் தாக்கமாக இருந்திருக்கலாம்.
அவள் பாதங்களிலிருந்த வெள்ளிக் கொலுசின் ஓசை
தெருவின் வீட்டுச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது..
அதுவே அவள் வரும் வேகத்தையும் அறிவித்தது..
ஆம்... ஏதோ அவசரத்தில் வருகிறாள்
அதுவும் என்னை நோக்கி...
என்ன நடந்ததோ, எங்கயும் மட்டிவிட்டோமோ
என்ற பயத்தில், முன் எடுத்த அடியை வைக்காமல்
பக்கவாட்டில் ஒதுங்கி சாலையை விட்டு இறங்கி நின்றேன்.

(அவள்- ஓர் அறிமுகம்
அவள் வேறு யாருமல்ல..
என் இதயத்தை எடுத்து வைத்துக்
கொண்டு தரமாட்டேன் போ என்று அடம்பிடிக்கும் ராட்சசி.
என்னதான் ராட்சசி என்றாலும் பேரன்பு மிக்கவள்.
எனக்கொன்று என்றால் துடித்துப் போவாள்.
அழகிலும்,குணத்திலும் மேன்மை பொருந்தியவள்.
இதோ பக்கத்திலும் வந்து விட்டாள்...

என்னடா... உன்னைப் பார்க்கத்தான் இவ்வளவு வேகமாய் வரேன்..
நீ ஒதுங்கி போகிறாய்..
மேலும் சுளித்தாள் முகத்தை..
மனசு கேக்குமா என்ன...?
இல்லடி,,, ஒதுங்கி போகல...
நீ வர்ற வேகத்தில் மோதி கிழே தள்ளி விட்டுட்டேன்னா...
அதான் ஒதுங்கி நின்றேன் என்றவனை முறைத்துப் பார்த்தவள்..
பின்பு சிரித்து விட்டாள்.
போடா.. எப்போதும் என்னை கிண்டல் பண்றதே
உனக்கு வேலையா போச்சு..
தலையில் கொட்டினாள்..
ஏய்.. லூசு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.
வெளி இடங்களில் நெருக்கம் காட்டி நிற்காதே என்று..
யாரும் பார்த்தா அப்புறம் அவ்ளோதான்..
அதனாலென்ன என் ஆள் பக்கத்தில நிற்க எனகென்ன பயம்..
அதுவுமில்லாம அப்பா,அம்மா ஊர்ல இல்ல தெரியுமா...?
பாட்டி ஊர்ல நாளை கும்பாபிஷேகம். முன்னமே கிளம்பி போய்ட்டாங்க,,
மெல்லமாய் கண் சிமிட்டினாள்..

ஒ... அதான் துளிர் விட்டு நிக்கிறியா.. வச்சிக்கிறேன்
சரி, இப்போ எதுக்கு அவசரமா தேடிட்டு வந்தவ என்னை..
அதில்லைடா... உனக்கு தான் தெரியுமே
சின்ன வயசிலிருந்தே எனக்கு அந்த அம்புலி காடு பார்க்கனும்னு ஆசை,
நீ தான் என்னை ஏமாத்திகிட்டு இருக்கியே..
நான் எத்தனை முறை உன்கிட்ட கேட்டிருக்கேன்..
இன்னைக்கு போலாமா...?
போயிட்டு சீக்கிரம் வந்திடலாம்..
கெஞ்சலும் ஏக்கமுமாய் பார்த்தாள்...

வேணாம்டி... அங்க போனா அவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியாது.
போறதுக்கே கன நேரம் ஆகிடும்.. அவ்வளவு நேரம் நாம்
இங்க இல்லாம இருந்தா வீணா பிரச்சினை ஆகும்...

அத நான் பார்த்துகிறேன்.. அங்க நிறைய மின்மினி பூச்சி
இருக்கும் தானே.. எனக்கு அதைப் பார்க்கணும்டா...
அதை கையில் பிடிச்சு... நீ மட்டும் எப்படி வெளிச்சத்தோட
இருக்கேன்னு அதுகிட்ட கேக்கணும்.. ம்ம்ம்,
அதான் எங்க வீட்டில யாரும் இல்லையே.. நீ உன் வீட்டில
பக்கத்து ஊர் நாடகம் இல்ல சினிமா பார்க்க போறேன்னு
சொல்லிட்டு எப்படியாவது வாடா... விரசா திரும்பிடலாம்..
முக பாவனை மாற்றாமல் சொன்னாள்..

மனசு தங்குமா எனக்கு....
சரி போகலாம்... என்றேன்
சொன்ன விநாடி அவள் முகத்தை பார்க்கணுமே
பஞ்சுமிட்டாய் கிடைத்த குழந்தை போல...
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள்,
தலையால் ஒரு முட்டு முட்டினாள்.
எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது...
நன்றிடா...! சொல்லி விட்டு கேட்டாள்..
ஆமா அந்த காட்டில நிஜமாலுமே அம்புலி இருக்கா..?

எனக்கு சரியாய் தெரிந்திருக்கவில்லை..
முன்பு அங்கு போனதும் கிடையாது,,
அங்கு அம்புலி என்றொன்று இருப்பதாகவும்
அங்கு செல்பவர்களை தூக்கி சென்று விடும் என்றும்
செவிவழியாய் கேட்டதுண்டு..
இதை இவளிடம் சொல்லி ஏன் குழப்பனும்...
பாரு எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறாள்லென்று...
மனதிற்குள் நினைத்தவனாய்...

தெரியலடி... எதுவா இருந்தா என்ன..?
உன்னைப் பார்த்தால் ஓடிவிடும் என்றேன்.
போடா.. இங்க மட்டும் என்னவாம்...
அடிக்க வந்தவள் நிறுத்தி..
சரி.. நான் எப்போ கிளம்ப வேணும்,
இப்போவேவா..? என்றாள்.
ஏண்டி... என்னை பஞ்சாயத்தில் நிற்க வைக்காமல் விட மாட்ட போல,
கொஞ்சம் இருட்டட்டும்.. ஒரு ஏழு மணிக்கு மேல..
வடக்கு எல்லையோரம் இருக்கிற அய்யன் கோயிலோரமா வந்து நில்லு.
நான் வந்து கூட்டிப் போறேன்..
இங்க பாரு அந்த இரண்டு மலைகளையும்
அந்த புறமிருக்கும் ஆற்றையும் தாண்டி தான் போயாகனும்..
அதனால ஒழுங்கா சாப்பிட்டு வா..
அப்புறம் பாதிவழியில் நடக்க மலைச்சு நின்றால்
அங்கேயே விட்டுட்டு வந்திருவேன் சொல்லிட்டேன்...
ம்ம்ம்... அம்மா அடை சுட்டு வச்சிட்டு போயிருக்கா,,,
உனக்கும் சேர்த்து கொண்டுவரேன்..
இப்போ வீட்டுக்கு போறேண்டா...
சொல்லிவிட்டு சிறுபிள்ளை ஓட்டம் ஓடி தெரு கடந்து மறைந்தாள்...!
மெல்ல இருட்ட தொடங்கியிருந்தது...

நேரம் ஏழு மணி தாண்டியிருந்தது... இந்நேரம் வந்திருப்பாள்..
பதற்றத்துடன் வீட்டில் ஏதோ சாக்கு சொல்லி விட்டு கிளம்பினேன்..
அய்யன் கோயிலை நெருங்கினேன்..
ஆள் அரவமற்று கிடந்தது..
இன்னும் வரலையோ இவள்... எப்போதும் இப்படி தான் பண்ணுகிறாள்.
வரட்டும் இன்று... நல்லா நாலு திட்டினாதான் பயம் இருக்கும்..
மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவனை பின்புறமிருந்து
தொட்டது ஒரு கரம்...
திட்டுகிட்டு திரும்பியவனை கத்திவிடாமல்
வாய் பொத்தியது அக்கரம்..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்... யாரோ அல்ல..
அவள் தான்..
எங்கடி போனவா..? இப்போவே நேரமாச்சு தெரியுமில்ல..
மிரட்டலாய்...
போடா.. நீ இப்போ வந்திட்டு என்னைச் சொல்றியா...
நீ சொன்ன நேரத்துக்கே வந்து காத்து கிடக்கேன் நான்...
யாரும் பார்ப்பாங்க என்று மதில் பக்கமா நின்றேன்...
பெருமிதமாக சொன்னாள்....

அறிவு கொழுந்து தாண்டி நீ...! சரி போகலாமா என்றேன்.

ம்ம்ம் ஆனா ஒரு அடி தள்ளி தான் வரணும்..
தொடாமல் இருக்கணும், அப்படின்னா போலாம்..
இல்ல, வீட்டுக்கு போறேன் என்றாள்....!
எல்லாம் விதி... கூட்டிகிட்டு போறதும் இல்லாம நிபந்தனை வேறயா..?
தலையில் அடித்து கொள்ள வேண்டும் போல இருந்தது....
சரி போகலாம் என்றேன்...
ம்ம்ம்.... முனகினாள்.
பாதங்கள் வேகம் காட்டின... பாதை சென்ற திசை நோக்கி...

அப்போதுதான் முளைத்திருந்த முழு நிலவு கொண்டு வந்திருந்த
தீப் பந்தங்களுக்கு வேலை இல்லாமற் செய்திருந்தது...
முதல் மலையை மெதுவாக கடந்தோம்...
இரண்டாம் மலை நெருங்கியதும்
அம்புலி காடு கண்ணில் பட்டதுதான்...
அவள் நடை வேகம் கூட்டிச் சொன்னாள்..
சிக்கிரம் வாடா என்னை சொல்லிட்டு நீ தான் மெதுவா நடக்கிறாய்..
வரியா இல்ல விட்டு போகவா...? என்றாள்.

ஏண்டி சொல்ல மாட்ட நீ.... காடு வரட்டும் உன் வேகத்தை பார்க்கிறேன்..

ஏண்டா... ?

அங்கதான் அம்புலி இருக்கே என்றேன்.

நிச்சயமாய் பயந்துபோய் இருப்பாள் போல..
நிஜமாவா...? பக்கம் வந்து கையை இறுகப் பற்றிக் கொண்டாள்..
ஏய்..சும்மா சொன்னேன் டி லூசு...
பயப்பதடாத என்றேன்...
ம்ம்ம்.. என்றாலும் கையை விலக்கவில்லை..
உணர்ந்தேன் அவளுக்கு என்மேலிருந்த
அன்பின் பிணைப்பையும் நம்பிக்கையும்,,
சற்று நேரம் எதுவும் பேசாமலே தொடர்ந்தது பயணம்...

ஆற்றை நெருங்கியதும் அவளே பேச்சை துவக்கினாள்...
ஆமா இன்று குளிச்சியா நீ...? என்றாள்..
இல்லை என்றேன்..
அழுக்கு பையா... இங்கதான் இவ்ளோ தண்ணி ஓடுதுல்ல..
போய் குளிச்சிட்டு வா.. நெட்டினாள் என்னை.
பரவால்ல... காலைல குளிச்சிக்கிறேன்...
ஏற்கனவே குளிரா இருக்கு... இப்போ குளிச்சா அதிகமாயிடும்
அப்புறம் ஏதும் ஏடாகூடமாயிடும் என்றேன்...
வேணாம்பா.... அப்படின்னா என்றைக்குமே நீ
குளிக்க வேண்டாம் என்றாள் கேலிச் சிரிப்போடு..
ம்ம்ம்.. நான்.

ஆற்றை கடக்க அந்த பழைய கல் பாலம் தான் எப்போதும் துணை..
பாலத்தை நெருங்கியதும் வெடுக்கென என் கையை உதறியவள்,
குட்டி ஓட்டம் காட்டி பாலத்தில் நின்று சொன்னாள்..
ஹை.... நான் தான் முதலில் தொட்டேன்... கீச்சு குரலில் சொன்னாள்.
பின் பாலத்தின் குறுக்காகவும், நெடுக்காகவும் சற்று தூரம் போய்
திரும்பி வந்து மறுபடி திரும்ப போய்....
சிறுபிள்ளைத்தனம் செய்து கொண்டிருந்தாள்... நான் இருப்பதையும் மறந்து...!
என்னடி பண்ற நீ....?

ஒன்னுமில்லையே என்றவள்...  பெருமூச்சொன்றை உதிர்த்து சொன்னாள்..
சின்ன பிள்ளைல இங்க சிலமுறை வந்துருகேண்டா தாத்தாவோடு...
அப்போல்லாம் பாலத்தின் மேல் தரை தட்டி சில நேரங்களில் தண்ணீர் ஓடும்.
காலால் எத்தி விளையாடுவேன்... அவ்வளவு சந்தோசமா இருக்கும்..
இங்க பாரு ஒருமுறை அப்படி விளையாடுறப்போ லேசா அடிபட்டுச்சு..
உடனே தாத்தா ஓடிபோய் அதோ அக்கரையிலிருந்து
ஏதோ இலை பறிச்சு வந்து மருந்திட்டார்...
என்று கணுக்காலிலிருந்த சிறு கீறல் தழும்பைக் காட்டினாள்..
கூடவே தாத்தாவின் நினைவுகளையும்...!
என் கண்களில் துளிர்த்த சிறு துளிகளை மறைக்க முயன்று..
ம்ம்ம் போகலாம் என்றேன்...
நல்லவேளை அவளிருந்த சந்தோஷ மனநிலையில் இதை கவனித்திருக்கவில்லை...!

காட்டை நெருங்கி விட்டோம் என்பதின் அடையாளமாய்
வெட்டவெளியில் தொடர்ந்தது பாதை...
தூரத்து நெட்டை மரங்கள் கையசைத்து வரவேற்ப்பது போல ஆடியது காற்றில்..
இப்போது நிலா தொடுவானிலிருந்து வெகுவாகவே மேலே வந்து விட்டிருந்தது.
நல்ல வெளிச்சம் பகலைப் போல காட்சியளித்தது.
காட்டு மிருகங்கள் இரவு உணவு முடித்து
அப்போதுதான் உறங்க தொடங்கியிருக்கும் போல,
மிக லேசான கர்...கொர் சத்தங்கள் தூரத்தில் கேட்ட வண்ணம் இருந்தன..
பக்கமிருந்த மரங்களில் பறவைகள் எங்களை கவனித்து
விட்டாற்போல அவ்வப்போது கீச்சிட்டன..

எங்கடா ஒரு மின்மினி பூச்சி கூட காணல...?

எனகென்னடி தெரியும்...
ஒருவேளை ரொம்ப வெளிச்சமாய் இருக்கிறதால வரலையோ என்னவோ..?
கோபப்பட்டு அவள் நிலவை முறைத்தலோ என்னவோ,
மேகக் கூட்டத்துக்குள் மறைந்து கொண்டது நிலா...!

லேசான இருட்டு அவளை கொஞ்சமாய் பயமுறுத்தியிருக்கும் போல..
மீண்டும் இறுகப் பற்றிக் கொண்டாள் என் கரத்தை...!
மனதிற்குள் சிரித்து கொண்டேன்.
வெளிகாட்டாமல்,
என்னடி..? என்றேன்.
ஒன்றுமில்லை நட என்றாள்.
இம்முறை நெருக்கம் அதிகரித்திருந்தது...!

அன்றே மலர்ந்திருந்த காட்டு மலர்களின் மணம் எங்கள் வழியெங்கும் நிரம்பியிருந்தது.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு குளம்...
அதில நிறைய தாமரை பூக்கள்...
நாங்கள் குளத்தை நெருங்கியதும் எங்கள் சத்தம் கேட்டு தவளைகள்
தான் சத்தத்தை நிறுத்தி விட,
அமைதியானது குளமும்.. வனமும்...!
நிசப்தமே படர்ந்திருந்தது எங்கும்..
அவள் அரை இருட்டிலும் தாமரை பார்க்க ஆசைப்பட்டு,
எனக்கு அத பார்க்கணும் கண்ணா என்றாள்.
என்னடா இவ ஆசைப்பட்டு கேக்கிறாளே...
என்ன செய்ய ன்னு தவித்து நின்றேன்..
என் தவிப்பு கடவுளுக்கும் கேட்டிருக்கும்...!
சரி என்று குளத்தில இறங்கி அதை பறித்துக் கொண்டு
வந்து அருகில் காட்டலாம் என்று இறங்க ஆரம்பித்தேன் குளத்தில்...!

அப்போது...........

சிவப்பும் மஞ்சளும் கலந்த ஏதோ ஒரு பெரிய
ஒளி பெருக்கு குளத்தின் எதிர்புறத்தில்
இருந்து குளத்தில் மேல்புறமாக நெருங்க பரவ ஆரம்பித்தது...!
புரியமால் பயத்தில் அவள் என் கை பிடித்து,
வேணாம் டா.. என்றாள்.
நான் அவளை சமாதானப் படுத்தி மீண்டும் இறங்க ஆரம்பித்தேன்.
அதற்குள் அந்த ஒளிப் பெருக்கு குளம் முழுக்க
பரவி விட்டிருந்தது.
கூட்டமா இருந்த அந்த ஒளி வட்டம் சிறு சிறு பிரிவா பிரிந்தது.
அவள் முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம்...!

ஆம் அவை எல்லாம் மின்மினி பூச்சிகள்......
அவள் பார்க்க ஆசைப்பட்ட மின்மினி பூச்சிகளே தான்...!
அந்த வெளிச்சத்தில் அத்தனை தாமரை மலர்களும்
அவ்வளவு அழகாய் காட்சி தந்தது.
மெய்மறந்து சிலையாகி நின்றாள் அவள்..
அவள் முகம் தாயை பார்த்த குழந்தையின் பரவசம் போல ஆகியிருந்தது...!
சரி பூ வேண்டுமென்று கேட்டாளே என்றுனர்ந்தவனாய்,
மீண்டும் குளத்தில் இறங்க ஆரம்பித்தேன்..
அவள் சொன்னாள்...
வேண்டாம்டா......அது அங்கேயே இருக்கட்டும்.. அதுதான் அழகு எனறாள்...!

அவள் வார்த்தைகளை மின்மினிகளும் கேட்டிருக்கும் போல...
அத்தனை மின்மினியும் அவளை வட்டமிட ஆரம்பித்தது..
அவளைச் சுற்றிச்...சுற்றி,,,, அழகாய், அழகழகாய்...
கூடவே நானும் சுற்றினேன் மின்மினியாய் மாறி...!
அப்போது எனக்கொன்று சொல்லத் தோன்றியது..
சொன்னேன் அதை...
இப்போ நீ  ரொம்ப அழகா இருக்கடி...
தேவதை போல,,,,,
என்னடா...? சரியாய் கேட்காதவள் கேட்டாள்.
வேகமாய் கத்திச் சொன்னேன்..
தேவதை டி நீ.... அழகாய் புன்னகைத்து, மெதுவாய் முகம் சுளித்து,
கைகளை அகல விரித்துச் சொன்னாள்..
இறுக்கமா கட்டிக்கோடா தேவன் மட்டும் ஏன் தனியா நிற்க வேணும்...?

நிஜமாகவே மிரண்டு போனேன்.. இவளா பேசியது என்று...??
யோசித்து முடித்த நொடிப்பொழுதில் இழுத்தணைத்து கொண்டாள்.
இப்போதாண்டா உண்மையாலும் தேவதை நான்.உண்மைக் காதலின் மகத்துவத்தை எந்த ஆண்மகனும் உணர்திருப்பான்,
அந்த இடத்தில் இருந்திருந்தால்...!
எவ்வளவு நேரம் அப்படியே கடந்திருக்கும் என்பதை இருவராலும்
உணர முடிந்திருக்க வில்லை....!
தொடர்ந்து கொண்டிருந்தோம் எங்கள் காதல் கண்ணாமூச்சி
விளையாட்டுகளை மின்மினிப் பூச்சிகளோடு...!

மீதமிருக்கும் இரவில் நடந்திடப் போகும் விபரீதங்கள் எதையும்
துளியும் உணர முற்படதவர்களாய்..
நேரம் நள்ளிரவைத் தொட்டு விட்டிருந்தது.....

- தொடரும்...


4 comments:

இராஜராஜேஸ்வரி said...

மின்மினிப்பூச்சியும் மின்னல தேவதையும்.!

Yoga.S. said...

அருமையான கற்பனை.நன்றாக எழுதியிருக்கிறார்,இந்தக் கதை சொல்லி!///'ஹேமா' வே தன் தளத்தில் அனுமதித்திருக்கிறார் என்றால்..................வாழ்த்துக்கள்.{ஒரு சில எழுத்துப் பிழைகள் ............தவிர்க்க முயற்சி(த்திரு) க்கலாம்.}

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்... தொடர்கிறோம்....

அப்பாதுரை said...

முதல் முயற்சி நம்ப இயலாத அளவுக்கு நேர்த்தி.
வர்ணனைகள் அபாரம். கொஞ்சம் சில்லிட வைக்கும் கதை. தொடர்கிறேன்.

Post a Comment