*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, September 27, 2009

தூங்க விடு கொஞ்சம்...

அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்
இடறி விழுந்து
நொறுங்கிப் போனது
என் பிடிவாதங்கள்.

ஆறுதல் வார்த்தைகளில்
அடிமையாய்ப் போனது
என் இதயம்.

எழுப்பி எழுப்பி
அலுத்துப்போனது
எனது ஆயுள்.

இன்பமும் துன்பமும்
சிறைப்பட்டுப் போனது
உன் நினைவுகளுக்குள்.

உன் நினைவால் நிறைந்து
மேகத்தை மூடும் முகிலாய்
மூடிக்கிடக்கிறது
என் அன்றாட அலுவல்கள்.

இதயத் துடிப்போடு
கூடியிருப்பதால்
மூட மறுக்கிறது விழிகள்.

உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.

அன்பே காது கொடு
சொல்கிறேன் ஒன்று
கேட்பாயா கொஞ்சம்.
உன்னால் முடியுமா !

எனக்குள் உன் நினைவுகளை
நீயே முடக்கிப் போடு.
இன்றாவது உனை மறந்து நான்
நின்மதியாய்
கண் துயில !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 25, 2009

ஒண்டும் விளங்கேல்ல...

செத்துப் போகலாம் போல இருக்கு.
சாகக் கூட உரிமையற்ற
பிறப்புக்களா நாங்கள்.
விசாரணையின் பெயரால்
ரத்தமும் சிதழும்
கலந்து கசிந்து நாற
பிறந்த மேனியாய்
மூத்திரம் சொட்டச் சொட்ட.
கால்கள் ஏவாமல்
மனம் சொல்ல நடக்கிறது கால்கள்.

பச்சை மிளகாய் வாங்கப் போக
குச்சொழுங்கையில் சங்கவியும் வர
பேசிச் சிரிக்கேக்க
வந்தாங்கள் ஐயா ஆமிக்காரன்.
இப்போ என்னண்டா
என்னவோ
உண்மை ஒண்டு சொல்லட்டாம்.
என்ன இருக்கு என்னட்ட உண்மை ?

உடுப்பையும் கழட்டி
உரிஞ்சான் குண்டியாய்
உதைக்கிறாங்கள் போட்டு.
தொங்க விட்டாங்கள் தலைகீழாய் நேற்று
மிளகாய் சாம்பிராணியும் போட்டு.
கம்பியாம் நாளைக்கு ஆணுடம்புக்குள்ள.
என்னவோ...
ஒரு உண்மை சொல்லட்டாம் என்னை.

ஈரெட்டு வயதின் எல்லைக்குள் நான்.
எனக்கென்ன தெரியும்.
அறியவில்லை அரசியல்.
அப்பா சொல்வார் கொஞ்சம் விளங்கும்.
மிச்சம் விளங்காது.
எம் தலை கிள்ளி முளை கிள்ளுவது
விளங்கியும் விளங்காமலும்.(புரிந்தும் புரியாமலும்)
எம்மை அழிக்கும் கருடர்கள் கையில் நாம்.
தெளிவாய் மிக மிகத் தெளிவாய்.


மற்றும்படி குண்டு வெடிக்கும்
ஹெலி பறக்கும்
பங்கருக்குள்(பதுங்குகுழி)பதுங்குவோம்.
ஓடுவோம் கோயிலுக்குள்.
தலையணையோ பாயோ
ஏன் சிலசமயம்
உடம்பில உடுப்புக் கூட இருக்காது.
என்ன வேண்டிக் கிடக்கு
உடுப்பும் சாப்பாடும்.
மனம் அலுத்துப் போகும்.
ஆனால் பயமில்லை.

வருவாங்கள் ஆமிக்காரங்கள்.
சன்னதம் ஆடுவாங்கள்.
இழுத்துப் போவான்கள் அடிப்பாங்கள்.
அப்பாவுக்கும் கால்முறிச்சவங்கள்.
பக்கத்து வீட்டு அல்லி அக்காவை
அசிங்கப் படுத்தினவங்கள்.
விசர் அக்கா இப்ப அவ.

உண்மை ஏதோ கேக்கிறாங்கள்.
என்ன சொல்ல இருக்கு என்னட்ட.
பயமாயும் கிடக்கு எனக்கு.
பொய் எண்டாலும் சொல்லலாம்.
அடிப்பாங்கள் சொன்னாலும்.
சொல்லாட்டிலும்
கம்பிதான் மூலத்துக்குள்ள
.

அப்பவும் சொன்னனான்...
அப்பா ஆமிக்காரன்ர அட்டகாசத்தை
எழுதிப் போடுங்கோ ரேடியோவுக்கு எண்டு.
எழுதின ஆக்கள்
காணாம போய்விடுவினமாம்.
கரம் நறுக்கி
காக்காய்க்கு போடுவாங்களாம்.
கவனம் தம்பி எண்டவர் அப்பா.
எழுதேல்லையே நானும்.
அப்ப என்ன உண்மை நான் சொல்ல?

ம்ம்ம்ம்...
துயரங்கள் சுமப்போம் முடியும் வரை.
அதே பாரம் கனமாய் மாறி
முடியாமல் போகும் ஒரு நாள்.
பார்க்கலாம் அதுவரை பொறுப்போம்.
சொன்னாலும் அடி விழும்.
சொல்லாட்டிலும்
அடிதான் விடிய விடிய.
விடிய வேண்டாம் இந்த இரவு மட்டும்.
நானும் சொல்ல வேண்டாம் ஒண்டும்.
செத்த இரவுக்குள்
சாகாமல் இருக்க நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 23, 2009

பேசு - பேசவிடு...

பெண்ணே பேசு...
கொஞ்சம் பேசு
பத்துத் தலைமுறை தாண்டியாச்சு.
அடுப்படி தாண்டி படலை கடந்து
பறக்கும் தட்டில் நீ இப்போ.
அகராதியில் பேதை என்றதாலோ
பேச்சின் உரிமையை
உனக்குள்ளேயே புதைக்கிறாய் - ஏன் ?
பெட்டைபுலம்பல் என்றான் யாரோ.
மனம் சலித்தால்
உன்னையே சலித்து
ஒழித்துவிடும் உலகில் உன் யாத்திரை.
எண்ணங்களின் உணர்வுகளை
உன் உரிமைகளை
கொஞ்சம் பேசேன்.

அடி கோழையே...
உன்னைப் பேசா மடந்தை என்றவன் ஓர் ஆண்தானே.
உடன் கட்டை ஏறச்சொன்னவனும் அவனே.
பெண்ணைப் பாதி சுட்டு மீதி தின்றவனும் அவன்.
அவன் காலத்தில் சொன்னதை இன்னும் !
ஏன் இன்றும் ஏகாந்தத்துள் நீ !
பேசடி பேசு.
பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.
பகிரண்டம் கேட்கப் பேசு.
உள்ளத்து உணர்வுகளைப் பேசு.

ஆக மிஞ்சி...
உன் கண்களையாவது பேசவிடு.
சிரிக்கும்போது ஆனந்தக்கண்ணீராய்
நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.
கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!

(தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்)

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 20, 2009

காதல் கிசுகிசு...

மழையில் நனைகிறாய்.
அட ...
நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையே
பரவாயில்லை வா
என் முந்தானைக் குடைக்குள் !

என்னைச் சரியாக்க
உன்னால் மட்டுமே முடிகிறது. பார்...
என்னைத் துவைத்து
மனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்
கசங்காமலே !

என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்து
எதையாவது வந்து
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.
சீ...போடா வெட்கமாயிருக்கிறது.
உன் சின்னச் சின்ன
சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.
பிற்காலத்திற்கு உதவுமே என்று !

உன்னைப் பிடிக்கவில்லை
வேணாம் போ என்று
சொல்லிச் சொல்லியே
உன் நினைவுக் கயிற்றிலேயே
தொங்கித் தொடங்குகிறது
என் பயணம் !

இப்போ எல்லாம்
காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.
எனக்காக நீ தந்துவிட்ட
கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்
அபகரித்துக்கொள்கிறது அது !

நீ காற்றில் உளறிய
ஒவ்வொரு சொற்களையும்
சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.
நீ திரும்பி வரும்வரை
என்ன செய்வது நான் !

எல்லாம் சரிதான்... 
கிழித்தெறியமாட்டாய்
என்கிற நம்பிக்கையில்தான்
மனு ஒன்று சமர்ப்பித்தேன்.
சொல்லாமலே கிழித்தது ஏன் ?

மௌனம்போல ஒரு சுமை இல்லை.
நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்
மௌனம் என நினைத்தது தப்பானது.
இன்று...
இன்றைய உன் மௌனம் ?

உன்னை எழுத நினைக்கிறேன்
என் கவிதையில்கூட
நிறைய எழுத்துப் பிழைகள் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 18, 2009

எரிக்கப்படவேண்டிய கோட்பாடுகள்...

என்றோ கலைந்த
கனவுகள் மீண்டுமாய்
இன்றைய கனவின் தொடராக.
பழைய காயங்கள்
சிறிதுதான் ஆறியபடி.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்துச் சொல்கிறது.
கேட்டுத்தான் ஆகவேண்டும்.
காற்றைப் பிடிக்கவும்
விற்கவும் நான் யார் ?
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

அறிவு கெட்டவளே...
ஏன் திரும்பவும் திரும்பவும்
வாலாட்டிக்கொண்டு.
நாயிலும் கேவலமாய்
துரத்தப்படுகிறாய்.
கவனம்
உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.

இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
பூதமொன்று இனியும் வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.

இதென்ன
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 17, 2009

மலையடிவாரத்துத் தோழியே...3

உன் அப்பாதான் தோட்டக் கங்காணி.
பறங்கி வெள்ளைக்காரத் துரையோடு
கையில் ஒரு தடியோடும்
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்
தேயிலை மலைகள் நடுவில்
தூரமாய் உயர மலையில் தெரிவார்.
உன் அப்பாவும் அம்மாவும்
இப்பவும் சுகம்தானே தோழி.

உன் அம்மா சுடும் ரொட்டியும்
சம்பலும் அது ஒரு அலாதி ருசியடி.
ஒற்றை ரொட்டிக்கு எத்தனை கைகள் நீளும்.
ம்ம்ம்...மாங்காய்க் குழம்பு.சேமக்கிழங்குக் கறி.
கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.
சுடுநீர்க் குளியல்.
எண்ணை சளிக்க வைத்து வலிக்க வலிக்க
இழுத்துப் தலை பின்னிவிடும் உன் அம்மா.
போடி போ...மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க.

ஒரு நாள் பகல் பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு
இரு கைகளை ஒரு கையாக்கி சுடுகாடு தாண்ட
வேணுமென்றே யாரோ பயமுறுத்த
காய்ச்சல் பீச்சலோடு படுத்துக் கிடந்தோமே
இருவரும் வாரம் இரண்டு.
இன்னும் நான் அப்படியேதான். நீ ?

அந்த இந்தியத் தமிழ் மக்கள் பேசும் தமிழின்
இழுவையும் ஒரு சங்கீதம்தான்.
உன்னோடு திரிந்த
அந்த இளமைக் காலத்தில்
பன்னிரண்டு வயதுவரை
அந்தத் தமிழைத்தானே நானும் உச்சரித்தேன்.
பின்னர்தான் அணைத்தது
யாழ்ப்பாணத் தமிழ் என்னை.
காலம் பிரித்தது கல்வி என்கிற பெயரில்
உன்னையும் என்னையும்.

மறந்தே விட்டேனடி இன்னொன்றை.
உன்னோடு உங்கள் பண்டிகைகள்.
ரதி மனமதன் கூத்து,மாவிளக்குப் பூஜை
மஞ்சத்தண்ணி நீராட்டு என்று.
முழுதாக இல்லை என்றாலும்
நீறாக நினைவு தெளிந்து மறைகிறது.
இதைவிடப் பௌத்த மக்களின்
பன்சல (புத்தவிகாரை) புத்தனின் பெரிய உருவம்.
இருவரும் இறுக்கிக் கைகளைப் பிடித்தபடி
முட்டுக்காலில் தாமரைப் பூ வைத்து
ஊதுவர்த்தியும் ஏற்றிக் கும்பிட்டதும்
நினைவலையாய்.

இத்தனை வயது கடந்த பின்னும்
கடந்த தடங்களைத் தூசு தட்டி
உன்னையும் தேடுகிறேன்.
என் அம்மா கோழிக்கு அடை வைப்பா
பத்து முட்டை என்றால்,
அதில் எங்கள் அத்தனை பெயர்களையும்
பொறித்துக்கொண்டு காத்திருப்போம்.
எப்போ என் முட்டை குஞ்சாய்ப்
பொரிக்குமென்று.
அந்தக் குஞ்சுகளும்
எங்கள் பெயரிலே உலவி வரும்.

இன்றைய நாகரீகச் சூழலில்
அன்பும் அமைதியும் தெய்வமும் தூய்மையும்
தொலைந்த தேசத்தில் நாம்.
சொர்க்கமாய் இருந்த அத்தனையும்
இற்றுப்போனதாய்.
நோக்கமில்லாமல் நகரும் உலகம்.
அதனால்தான் அழிவுகளும் ஏராளம்.
இத்தனை அழிவுக்குள்ளும்
இயலுமானவரை காத்துவைப்போம்
விழிகளுக்குள் எம் அழியா நினைவுகளை.
என்ன இன்பம் என்ன சுகம்.

கண்கள் திரைகிறதடி
முழுதாகச் சொல்லாவிடினும்
எழுதியதில் முழுதாய் இருக்கிறாய் என்னோடு நீ.
அப்போது இருந்த நான்
இப்போ எனக்குள்ளும் இல்லை.
மலையடிவாரத்து என் தூரத்துத் தோழியே
என் இனிய நண்பியே
கூடப்பிறவா சோதரியே...சகியே
வளைத்துப் போடமுடியா
அந்த இன்பப் பொழுதுகளை
மீண்டும் கண்டுகொள்வோமா ?
நானும் நீயும்...
எப்போ சொல்லடி !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் போதும்]