*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, July 31, 2014

ஜூலை 30...

ஓ...
வருடங்கள் எண்ணவில்லை
எண்ணத்தில் நீயிருப்பதால்.

கடக்கிறது இன்றைய
ஜூலை 30 ம்
நீ...விட்டு விட்டுப்போன
இடத்திலேயே
அப்படியே
இன்றும் நான் .

சாத்தான்களின் கனவுகளில்
வண்ண இறக்கைகளோடு
நான் வருவதாகவும்
தங்கள் இறகுகளைப்
பறிப்பதாகவும்
பறித்து
நிறம் மாற்றுவதாகவும்
குற்றம் சொல்கிறார்கள்.

எனக்கோ உறங்குகையில்
நீ விட்டுப்போன இறகும்
பறித்துப்போன இறகும்
வர வர
வண்ணமிழந்தபடி
பிறப்பின் கடனில்
இன்னொரு இறகும்
வளர்ந்தபடி.

ஒவ்வொரு விடியலிலும்
என் பல்கனி
கண்ணாடி தொட்டுப்போகும்
நீலநிறப் பொன்வண்டின்
எதார்த்தம்
சாத்தான்களைத்
துளைக்குமென்கிறேன்.

நீ.....
என்ன சொல்கிறாய் ?

அடுத்த 30 ஜூலையில்
சந்திக்கும்வரை
வண்ணத்தமிழ்
வணக்கங்கங்கள் கூறி....!!!

ஹேமா(சுவிஸ்)

நிமித்தமான இரங்கற்பா...

ஒரு மாறுதலுக்காக
யசோதரைகளுக்கு
முள்கிரீடம் அணிய
உத்தரவிடுகிறார்கள்
சித்தார்த்தன்கள்.

போதிமரங்களுக்குப் பதிலாக
சிலுவைகளை நிலைநிறுத்தி
ஆணிகளும்
அங்கே ஆயத்தமாய்.

நீதியும்
மறுதலிப்பும்
தண்டனையும்
மறுபரிசீலனையற்றே
சிவனின்
இறுக்கிய குரல்வளைகளில்
நீலம்பாரிக்க...

சித்தார்த்தனின் கருணை
பலிக்கான ஆயுதங்களுக்காக
தேர்வெழுதுகிறது
அடிக்கடி
காலாவதியான
திகதிகளில்...

இரக்கம் கேட்டவர்களுக்கு
இரத்தம் கொடுத்து
தற்காலிகமாய்
தள்ளிப்போடுகிறார்கள்
புத்தனாகாமல்
16 முதல் 30 வயதான
விடலைச் சித்தார்த்தன்கள்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 27, 2014

முகவரியில்லாப் புழுதிகள் ...

எனதான முகவரி
என்னிடமில்லை இப்போ
ஒரு முடக்கில்
வைரவர் கோயில் பின்புறத்தில்
என் வீடென ஞாபகம்.

நான் அளைந்த புழுதிகளையும்
கூழாங்கற்கள் நிறைந்த
சிரட்டையையும்
தாத்தா அம்மம்மாவின்
புகைப்படங்களையும்
றங்குப்பெட்டியில்
சேர்த்துவைத்திருக்கும் அது.

ஒவ்வொரு சந்தியிலும் தரித்து
பயணிக்கிறது என் கால்கள்
கை நீட்டி அழைக்கும்
உறவுகளுக்குள்
என் கண்களை
தேடி அலைந்தாலும்
எதுவும் எனதாயில்லை.

பரவாயில்லையென
தொடரும் பயணத்தில்
சந்திகள்
பழக்கபட்டதாயில்லாமல்
கிளைகள் விட்டு
வலம்சுழிவிட்டும்
குச்சு வேலிகளில்
பொட்டு விட்டும்.

வானங்களுக்குள்
தவறவிட்ட
சிறு சிறகுகளுக்காய்
என் தேடல்கள்
நனையும் கண்களை
காயவைத்தபடி.

பற்றி எரியும் என் மனம்
குரங்கு வம்சமாய்
காற்றை
எரித்தபடி
முடியாத தேடல்களோடு
சந்திகளில் மட்டும்
நிறுத்திப் பின் தொடர்கிறது
கால்கள் புதைய!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 24, 2014

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து...

சாபங்களைச் சுமந்துகொண்டே
சுகமாயிருப்பதாய்
சோடனைகள்.

வேர்களை அழிக்க
விஞ்ஞானத் தேடல்
நிழலில் நின்றுகொண்டே.

பலவீனமே பலமாகவும்
பலமே பலவீனமாகவும்
தைரியமில்லா
நாகரிகக் கோமாளிகள்.

எதுவானபோனதும்
தாத்தாவின்
வீபூதிக் குடுவைக்குள்
மஞ்சள் பூசிய துணியில்
ஒற்றை ரூபா
நேர்த்திக் கடனாய்.

வியர்வை துடைக்கும் மரங்கள்
விட்டெறிந்த பெருமூச்சில்
பட்டைகள் வெடித்து
தெறித்த குருதியில்
குழந்தைகள்
மூன்றாம் கையாய்
நான்காம் காலாய்.

"பூவரச மரங்களை
பூக்கவிடு
என் கல்லறை சுற்றி"

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து!!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6400

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 23, 2014

இரண்டு கவிதைகள்...

நீ...நான்...வெட்கம்

வெட்க ரேகைகளை
மெல்ல மெல்ல
அழித்துக்கொண்டிருக்கிறாய்.

பொய்யாய் வெட்கப்படும்
குறிப்புகள் ஏதும்
எழுதிவைக்காமல்
விட்டது என் பிழை.

கண்ணில்லாதவரின்
ஒற்றைக் கைத்தடியை
என் விரலிடுக்கில்
உதவிக்குச் செருகி
ரேகைகள் புதிதாக
இனி வளராதென்கிறாய்.

வெட்கப்பட்ட ஞாபகங்களை
தட்டித் தடவி
மீட்டெடுக்க நினக்கிறேன்
நீயோ மற்றக் கையிலும்
இன்னொரு
கைத்தடியைச் செருகிறாய்.

இனி நானும்
என் வெட்கங்களும்...!!!



ப்ரியமானவனே...

எதுவும் நினைவிலில்லை
நான்....
உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை.....

கொஞ்(ச)சும் முதல்
கொஞ்சிக்கொண்டிருந்தாய்
பின்னராய்
என் முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தாய்...

பேசித்தீரா பிரியங்களை
பெருவெளி மணலிலும்
வானின் எரிநட்சத்திரங்களின்
இருண்ட முனைகளிலும்
புதைத்து வெளியேறும் உன்னை....!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 22, 2014

எதிர்க்கவிதையொன்று...

தூரத்தில் உன்னைப் பார்த்த போது
புலியின் கண்ணில்
மானைப் பார்த்தேன் அம்மு
பார்வை இன்னும் பார்வையாகவில்லை அங்கே..
உன்னைச் சந்தித்த போது
மானின் வயிற்றில்
ஆழப் புதைந்தது
புலியின் நகம்..
மரணம் இன்னும் வடிவமாக்கப்படவில்லை அங்கே.

மெதுவாய்
உன்னைக் கடக்கிறபோது
இரத்தத்திற்கு விடைகொடுக்கிறது மான்..
நான் உன்னைக் கடந்து முடித்தபோது
மரணம் அங்கே வடிவமாகி இருக்க வேண்டும்.
இப்படித்தான் அம்மு கடக்கிறேன் உன்னை..
..... ..... ..... ....

சத்யா
சென்னை 

Sathya Raj Ph D

ஒரு உயிர்வதை பார்த்தும் கடக்கிறாய் சத்யா
இரத்த வாடை சுவாசிக்கமுடியாமல் நீ...

சூன்யப் பூனைகள் புலிகளாவது பற்றி
முன்னமே அறியத்தரவில்லை எனக்கு நீ...

அவைகளைக் கட்டுப்படுத்தி
மூக்கின் நுனிகளை வளைத்து
என் நிக்கரின் அடிவரை உந்தி
பின் தோல்வியுற்றபோதே
மரணத்திற்கு வடிவமானது
அவைகள்.

அப்போது புலியின் நகக்கீறல்களை
நக்கிக்கொண்டிருந்தது மான்
அதன்பின் தான்
இன்னும் ஆழப்புதைந்தது
புலியின் நகம் மானின் வயிற்றில்.

எனக்குத் தெரியும்
புலியொன்று என் வயிறு கிழிக்கும்
கனவொன்றைக் கண்டு
கடந்துகொண்டிருப்பாய்
சத்யா நீ ..... இப்போதும் !

ஹேமா(சுவிஸ்)