நமக்கான கனவுகள்
எங்களுக்கேயானவை
சதுரங்கச் சுழிகளிலும்
பாம்பு துரத்தி ஏறும்
ஏணிகளின் உச்சியிலும்
அவை காத்திருக்கும்.
எம் கனவுகள்
வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
நீரைப்போல் ஈரமானவை
பாலைவன நீரைப்போல
மண் உறிஞ்சிக் காய்ந்து
அடையாளம் தொலைக்காது.
என் பிணம் காவி வரும்
என் தாய்
தன் குறியையும்
காக்கவேண்டியிருக்கிறது.
என் தேசத்தின்
ஒவ்வொரு துகள் மண்ணிலும்
என் மக்களின் குருதி
காய்ந்த சருகுகளின் அடியில்
தொலைந்து போன
என் உறவுகள்
எப்போதும் அவர்கள் பற்றிய
எம் கனவு பற்றிய
நினைவுகளை அழிக்க
எவராலும் ஆகாது.
தீயும் போரும்
செல்லப்பூனை எமக்கு
இறப்புப் பற்றிய பயம் அற்று
கனவு நுரைகளை நீர்க்கவைத்து
எமக்கான கனவுகளைத் தொடரும்
காலடித் தடங்களுக்கு
அடையாளம் காட்டும்
நாம்........மிதிப்பட்ட
குருதி வழிகாட்டல்.
நமக்கான தரிசல் காடுகளிலாவது
எம் கனவுகள்
கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
கனவுகளைச் சீராக்க வரும்
இளம் காலச் சூரியர்களுக்காக!!!
ஹேமா(சுவிஸ்)