*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 14, 2010

தேவை ஒரு மரணம்...

மரணம்....
அறிதல் எப்படி
அதன் வலி
கடைசி நிமிடத் தவிப்பு !

இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !

எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !

மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ...பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்!

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !

ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !

எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புழு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !

எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 06, 2010

தேற்ற ஒரு விதி...

முட்டுதலும் மோதலும்
வாழ்வில் இயல்பானாலும்
முட்டிய மதில்களே வாழ்வாய்
பகிர்ந்து கொடுக்க முடியாத
பங்கீடுகளாகி.

காக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்.

எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.

குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!

ஹேமா(சுவிஸ்)

உயிரோசையில் முதன் முதலாக வந்த கவிதை !

Friday, December 03, 2010

உன் பேச்சிலே...

காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வலி
வேதனை
விரகம்
ஓவியம்
கவிதை
இசை
தேவதைகள்
இரவு
பிறைநிலவு
மறையும் சூரியன்
ஆனந்தம்
அழுகை
வீரம்
ஏழ்மை
இரைச்சல்
சிரிப்பு
அலையோசை
என அத்தனையும் காண்கிறேன்.

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 30, 2010

உடைக்கப்பட்ட கனவுகள்...


இன்னும் என் மனம் மாவீரர் நினவுகளுடனேயே.இந்தக் கவிதை
இந்த இடத்தில் பொருந்தும்.அதோடு சில பாடல்கள்
பதிவில் தேவைப்படுக்கிறது ஆவணங்களாக !
உணர்வுகளும் கனவுகளும்
நிறைந்திருந்த தேசம் அது.
செருப்பிட்ட கால்களோடுகூட
நுழையாமல் பத்திரப்படுத்தப்பட்ட
தூங்கும் தெய்வங்களின் தாழ்வாரம் அது.

உறவுகளுக்காய் காத்திருக்கும்
ஆன்மாக்களின்
நினைவுச் சந்நிதி அது.
குவிக்கப்பட்ட
கனவுத் தடாகம் அது.

வணக்கத்துக்குரிய
மாவீரர்களின் கோவில் அது.
செம்மல்களின்
மூச்சுக்காற்று அது.
பசிகொண்ட வேங்கைகள்
படுத்துறங்கும்
அமைதிச் சோலை அது.
தமக்கான வாழ்வை
தாய்க்காய்த் தியாகித்த வள்ளல்கள்
ஓய்வெடுக்கும் பிருந்தாவனம் அது.

பிள்ளைபிடிகாரராய்
இரவோடு இரவாக நுழைந்த பிசாசுகள்
இன்று அதிகாரத்தோடு
தூங்கும் எங்கள் மன்னர்களை
பகலிலேயே எழுப்பிக் கலைத்துவிட்டது.

கனவுகளைத்
தூபிகளுக்குள் வைத்திருந்தோம்.
கனவுகளைச் சிதைப்பதென்பது
அவர்களுக்கு புதிதல்ல.
கருவில்...தெருவில்
குழந்தைகள் நசிக்கும்
ராட்சதப் பிசாசுகள் அவர்கள்.

தொடர்ந்தும் கல்லெறியப்படுகிறோம்
சிதம்பிய இருதயங்களுக்குள்
கல்லறைப் புழுதியும் படிய
தமிழையே மூச்சாய் வாழும்
ஒற்றைத் தமிழன்
திருப்பி எறியாமல் இருக்கமாட்டான்
சேமிக்கும் கற்களில் ஒன்றையாவது!!!


"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.
இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் !

தாயகக் கனவுடன்...

கல்லறை மேனிகள்...

மண்ணில் விளைந்த...

விழி மடல் மூடி...


ஹேமா(சுவிஸ்)

Saturday, November 27, 2010

வரலாற்றுக் கோள்...


சாத்தியமேயில்லை
சூரியன் இறப்பது.
நிழலோடும் இருட்டோடும்
ஊழியம் செய்யும் பெரு நெருப்பாய்
இருளை நிரந்தமாக்காத
வரவாய் வரலாறாய் அவன்!

கசிந்த சூட்டில்
இதமாய் வளர்ந்த பயிர்களை
ஆடு மேய்ந்ததாய் ஒரு கதை.
பேய்கள் கொளுத்திய தீயில்
சூரியன் கருகிவிட்டதாயும் ஒன்று.
புயல் பிய்த்ததால் கதிர்கள் கிழிந்ததாம்.
அலை அடித்த வேகத்தில்
ஆழக் கடலுக்குள் சிதைந்தாய்
சரித்திரத் தாளிலும் மாற்றம்.

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

சிறுபயிர்களுக்கும்
சீராய் நிழல் வெப்பம் செருகி
செங்குழலில்
சிற்றுருண்டைகளாய் சோறு சமைத்தூட்டி
மேயும் ஆடுகளை
மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
அந்த ஊழிக்காரன்.

மழை இருள் மண்டிக்கிடக்கிறதே
தவிர....
மாற்றமில்லை அவனில்.
சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.

பெற்றவள் சூல் வலிவாள்
கருச்சிதைந்து போகாக் காளியவள்
மீண்டும் கருவுருவாள்
கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்.
ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

பொங்கிடும் கடற்கரை...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

(ஹேமா(சுவிஸ்)

Monday, November 22, 2010

குடியிருப்புக்கள்...

சிறு உக்கிய மரக்குற்றி (மரக்கட்டை)
பகலில்
சிறுவர் உருட்ட
இரவில்
குடிகாரன் காலால் மிதிக்க
இரைச்சலும் எச்சிலும்
கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள
எங்கள் குடியிருப்பு.

எதிர்பாரா நாளொன்றில்
ஒற்றைக் கால் உந்தித் தள்ள
ஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்.

எரிந்தோம் கருகினோம்
தடுமாறித் தகித்துப் பயம் தெளிந்தோம்.
என்றாலும்....
எம் இருப்பிடம் விடாமல்
பிடித்திருந்தோம்.
கனவுகள் கரைய
ஆக்ரோசமாய் வலிமை பெற்றோம்.

தள்ளியவன் தள்ளி நிற்க
கரையேற்றச் சில கைகள்.

சூடு ஆறாத மரக்குற்றியையே
மீண்டும் மீண்டும்
சுற்றினோம்...
தொற்றித் தொங்கி விழுந்தோம்
செத்தோம்.

குடியிருப்புக்கள்...
மரக்குற்றியோ
மண்திடலோ
மாளிகைதான்
வாழும் மனங்களுக்குள்!!!

எமக்காகத் தியாகத் தீயில் ஆகுதியாகிய அத்தனை உயிர்களையும் நினைவு கொண்டு,2010 கார்த்திகையின் ஆத்ம தீபங்கள் ஏற்றுவோம் இந்த வாரம் முழுதும் !


ஹேமா(சுவிஸ்) படம் - நன்றி எங்கள் புளொக்.