*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 10, 2010

சுடும் இரவுகளும் நீயும்...

 



உன்னுடன் பேசி முடித்தபின்
சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்.
சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே !

 


உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட !

போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !

மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !


நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
எனக்கென்ன பயம்
என் நினைவோடு நீதானே !

என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.
ஓ...
நீதான் என்றோ இறந்துவிட்டாயே !

இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவளே நீதானே !

கல்லறை வந்தால் அழுது விடாதே
அன்பே.....
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 06, 2010

வெட்கம்...

என் வீட்டு மலர்கள்
வாடியதைப் பார்த்தே
என் அந்த மூன்று நாட்களைக்
கணக்கெடுக்கிறாயே !
கள்வனடா நீ.

நடசத்திரங்கள் தூங்குவதற்கும்
நான் முற்றத்தில்
நிலாக் காய்வதற்கும்
சம்பந்தப்படுத்துகிறாய்
சதிகாரா!

உன்னோடு பேசிப்பேசியே
சில பறவைகளின் பாஷைகூட
பரிட்சயமாகிறது.
தூவானத் திரை
முகம் மறைக்க
கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
தொங்கிய
பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
ரசிக்கிறது மனம்.

கவிதையாய்
உன் பேச்சும்
உன் காதல் குறிப்புக்களும்
எனக்குள் நீ
புதைந்த பொழுதுகள்
உறைந்த நொடிகளின் மயக்கம்
இப்போதும்...
எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ள
தென்றல் கிச்சுக் கிச்சு மூட்ட
கூசவைக்கிறது வெட்கம்.

பேசுவதும்
கேட்பதும்
கெஞ்சுவதும்
மறுப்பதும்
விலகுவதும்
அணைப்பதுமாய்
எம் நெகிழ்வான விளையாடல்
கனவோடு
நீ நடத்திய
புலவியின் பொழுதுகளை
வெளியில் சொல்லியே
பாடுகிறது அந்தப் பேடு.

அச்சச்சோவென
மனம் அலற
அன்றைய பொழுதை
வெட்கத்தோடு தலையணைக்குள்
ஒளிக்க மறைக்க
முயல்கிறது
என் மன அரங்கம் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 01, 2010

கருப்பை இரவல்...

கரிசல் நிலமாய்
காய்ந்த வயிறோடு
முற்றாய் தளர்ந்த மனதோடு
கனவில்....அம்மா...

"அம்மா"
திறந்த கதவோடு
இளமையை வறுமை தின்ன
வேலை கேட்டு ஒருத்தி.

அவளுக்கு உணவளிக்க
தைரியம் எனக்கு வர
வேலை எதுவும் இல்லை
என்றாலும் இருக்கிறது
குழந்தை பெறும் வேலை ஒன்று.

அவள் முகத்தைத் திருத்தித் தெய்வமாய் !

சிந்தித்துச் சிரித்தபடி
இரண்டு குஞ்சுகள் வீட்டில்
நொய்கூட இல்லை கஞ்சிக்கு
காயஞ்ச வயிறுகள் பிஞ்ச பாயில்.

வருந்திச் சிரித்தபடி
என்னதான் இருக்கிறது என்னிடம்
கருப்பையே இல்லை.

பண்டமாற்றாய்
உதவியாய்
வேலையாய்
இதில் ஏதோ ஒன்று...

தோள் சுமக்க
பெற்றுத் தா பூவொன்று
உன் சுமைகள் சுமக்கும்
தோளாய் நான்.

வேலை கொடுத்த திருப்தியும்
வேலை கிடைத்த திருப்தியும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 30, 2010

முடிவின் முடிவில்...

ஒருதலைப் பட்சமாய்
சொல்லிக்கொள்ள என்னவனாய்
கவிதைகளுக்குள்
ஆச்சரியக் குறியும்
கேள்விக் குறியுமானவன்
பெயர் தெரியாப் பறவையின் இறக்கையில்
தொங்கித்
தொலைந்துகொண்டிருப்பதாய் செய்தி.

என்னிடம் செய்திகள் பகிர்தலில்
இஷ்டமில்லாதவன்
இரவின் வயிற்றையும்
பகலின் நெஞ்சையும் கிழிக்க
கேள்விகளோடே காத்திருந்தவன்.....

உலகம் அழிதலும்
நிச்சயமற்ற மனிதர்களின் வேள்வியும்
எப்போவென வெறியோடு
பிரசண்டமாய் பிராணசங்கடம் தர
அகலமுடியா இரவும் பகலும்
கொட்டும் குருதி
கொட்டி நனைத்து
பூமி பரவத்தொடங்க.....

வானம் தொடங்கி பூமிவரைக்குமான
அபயக்குரலும் அவிப்பலியும்
அவனோடும் என்னோடும் அதிர
அந்தரஊஞ்சலில் என்னை இறுக்கித்
தன் உதிர இதழால் உறிஞ்சியபடி
தன்னையும் கடித்து முடித்தான்.

யார் தடுக்க இனி !

சிதைந்த உடலைத்
தழுவ
அணைக்க
இணைய
இறுக்கி முத்தமிட.

அவனாலும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 24, 2010

அந்திமத்தில் அம்மா...

"இந்தக் கட்டையை
என்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"
அம்மாவின் அடிமன ஆசை அது.

வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்
வாழ்வின் பொருள் பரிசளித்தவள்
கிளை விட்டெழும் பறவையாய்
இலையசைத்து
பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.

அனுப்பிவிட்டேன் பக்குவமாய்.
படுக்கை....
அம்மாவின் சேலை
வாசனை கலைக்க விரும்பாதவளாய்.

அக்காதான் பேசினாள்.

"சவம் வந்திட்டுது
பொறுப்பெடுத்து ஊருக்குக் கொண்டு போறம்.
இடது கால் சொக்ஸ்க்குள்ள இருந்த காசும்
பாவாடை மடிப்பில இருந்த சங்கிலியும்
றவுக்கைக்குள்ள இருந்த
அம்மான்ர காப்பும்
நீ சொன்னபடி நானும் தம்பியும்
பிரிச்சு எடுத்துக்கொள்றம்.

செத்தவீட்டை
குறையொண்டும் இல்லாமல்
வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்
கவலைப்படாமல் இரு என்ன."

வாழ்வு வரிசையின் ஒழுங்குமுறை
அம்மாவின் குரலில்
"என்னடி லட்சணம் இது"
என்று கேட்படி!!!

நேற்றைய "எங்கள் புளொக்"ல் சிறுகதை
ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்திய தாக்கம்.
நன்றி ஸ்ரீராம்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 20, 2010

மகனே வந்துவிடு...

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
மகனும்
துணையாய் அணைத்திருப்பான்
உலகில்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ !!!

ஹேமா(சுவிஸ்)