*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, April 18, 2010

சூரிய விசாரிப்பு...

பனி தேசமும்
என் தனிமையும்
என்னை தன்னிச்சையாய்
இயங்க விடுவதாயில்லை.

காலநிலை கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.

நாளொன்று விடிய
காளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.

முளை வெடிக்கும்

வளரும்

பிரம்புப் பந்தலில்

கொடி படரும்

மேக நிறத்தில்
பூக்களும் குலுங்கும்

காத்திருப்பில்
கண்கள்தான்
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.
 

முளைத்தலும்

படர்தலும்

வளைதலும்...வளைத்தலும்

மொட்டும் பூவும்

என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 14, 2010

நிலவோடு சித்திரைப் புத்தாண்டு...

வந்திருக்கேன் குழந்தைநிலா
நிறைய நாளாக் காணாத
உங்களையெல்லாம்
பாத்துக்கொண்டு
தமிழ்
புத்தாண்டுக்கு
வாழ்த்தும் சொல்லி
வாழ்த்துக் கேட்டும்.

மறந்தே போனீங்க என்னை !
போன வருஷம் பிறந்த நாளில
கண்டபிறகு.
இப்போ...சுகம் கேட்டு
கை விஷேசம் வாங்கவும்தான்.
நான் இப்போ தாயகத்தில்.
பாட்டி சொல்றா
கை விஷேசக் காசை வாங்கி
மண்ணுக்குள்ள புதைச்சு
தண்ணியும் விட்டா
காசுமரம் முளைக்குமாம்.

ம்...
இல்லைவே இல்லை
அஸ்க்கு...புஸ்க்கு
ஏமாறமாட்டேன்
இவங்களைப்போல.
ஏமாந்த இவங்களாலதானே
இழந்துபோனேன்
என் தாயகத்தை!!!

அத்தனை அன்புள்ளங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Monday, April 12, 2010

கலைக்கப்பட்ட பறவை...

வற்றிய குளமானாலும்
தவமாய் நின்ற தடங்களின் ஞாபகத்தோடு
வெட்டிச் சரிக்கப்பட்ட
ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி.

தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.

எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை.

என்றாலும்....
எங்கள் சாபங்களை விழுங்கிக்கொண்டே
ராட்சத பறவைகள்
முன்னேறியபடி.
எங்கள் கூடுகளுக்குள்ளும்
அவைகளின் குடியிருப்பு.

குரல் உடைக்க
ஒரு சந்தோஷப் பாடல் பாட
முயன்றும் முடியாமல்.

வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்.

ராட்சத பறவைகளை
துரத்தத் திராணியற்று
மாறிய திசையில் பயணிப்பதை
தவிர்க்க முடியாமல்
கூடுகள் கலைந்த தவிப்போடு

திரும்பவும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி நான்!!!

ஹேமாப் பறவை வாடகைக் கூட்டுக்கு வந்தாகிவிட்டது.
என் உறவுகள் எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?சுகம்தானே.மீண்டும் சந்திக்கிறதில மிக மிகச் சந்தோஷம் நண்பர்களே.என்னைத் தேடிய அன்பு நண்பர்கள் அனைவருக்க்கும் என் அன்பின் நன்றி.
இன்னும் தொடர்வோம்.

ஹேமா(சுவிஸ்)

Monday, March 01, 2010

ஒற்றை வார்த்தைக்கு...

உன் தூண்டிலில் சிக்கிக்கொண்ட
என் ஒற்றை வார்த்தைக்குத்தான்
உன் அகராதிக்குள்
எத்தனை அர்த்தங்கள்.

அடம்
கர்வம்
றாங்கி
பிடிவாதம்
செருக்கு

ஒவ்வொரு வார்த்தையையும்
தூண்டில் முள்
காயப்படுத்துவதை அறிந்தும்
பிடிபட்ட மீனுக்கு
உணவளிப்பதாய் சொல்கிறாய்.

வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.

அங்கே....
கடவுள்
அன்பு
ஆதாரம்
தேவை
எதிர்பார்ப்பு
ஆதங்கம்
ஆறுதல்

ஏன்
^
^
^
^
^
^
^
காதல்

என்றுகூட... !!!

ஒரு மாத விடுமுறை.குழந்தை நிலாவுக்குச் சற்று ஓய்வு.
மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே.

ஹேமா(சுவிஸ்)

Monday, February 22, 2010

உயிர்த்தளம்...

இது என் மண்.
இந்த மண்
என்னைத் தாங்கும்
வெறும் நிலம் அல்ல.
என் மூச்சுக் கிடக்கும்
காற்று அடைத்த மண்டலம்.

இது என் கிராமம்.
இது என் குடிசை.
கிரவல் மண் தாங்கி நிற்கும்
ஒரு திடல் அல்ல
என் வாழ்வு
என் உயிர்த்தளம்.

என்னை வளர்த்த அன்னை பூமி.
என் பாட்டன் பூட்டன் பாதுகாத்த பரம்பரை
பாரம்பரியம் பண்பாடு.
கூட்டுப்புழுக்களாய் புரண்டு உழுது
பிணைந்து கிடந்த கூட்டு வாழ்க்கை.

இன்று....
விழுது விட்டு கிளை பரப்பி
வேர் பதித்த என் மண்ணை விட்டு
வேறு வேறாய்.

ஒரு குடிசைதான்
என் அழகிய வீடு
என்றாலும்
என் பெற்றோரின்
இரத்தம் தாங்கும் இதயம்.

இப்போ..... இது
தன் நினைவுகளை....சுவடுகளை
மட்டுமே வைத்துக்கொண்டு
புல்லிடமும் பூண்டிடமும்
தன் பழைய வரலாறு சொல்லியபடி
கண்ணீர் துடைக்கக்கூட கைகள் அற்று
பாம்புகளுக்கும் பூச்சிகளுக்கும்
படுக்க இடம் கொடுக்கும்
கறையான் அரித்து
இற்றுக்கிடக்கும் நினைவுச் சின்னமாய்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி
வலம் வருகிறேன் கோவில் போல.
அக்கா பொத்திப் பொத்திப்
பாதுகாத்த சினிமாப் புகைப்படங்களை
எடுத்தோடி
வீட்டைச் சுற்றி ஓட ஓட
அடிவாங்கிய நினைவு.

தடுக்கி விழுத்திய
அதே பலா வேர்
இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
நலமா என்கிறது.
எனக்காகவே தனை உயர்த்தி
எத்தனை தடிகள் கொடுத்திருக்கும்
இந்தப் பூவரசு.
இப்போதும் பரிதாபமாய்ப் பார்க்கிறது.
வயதின் முதிர்வைப் பார்த்தா
இல்லை பயந்து ஓடிய
கோழைத்தனத்தை நினத்தா.
அப்பப்பா வளர்த்த பனை
தாத்தா நட்ட தென்னை
என்னை மட்டுமே நெருங்க விடும் அருநெல்லி.
இப்போதும்....
காய்கள் ஆய்வதற்கு ஆருமே இல்லாமல்
இருந்த ஒரேஒரு அறையின் நடுவில்
பெரிதாய் உயரமாய் நிறைந்த
காய்களோடு ஒரு பப்பாமரம்.
முளைத்துக் கிளம்பியிருக்கலாம்.
காக்கா போட்ட எச்சத்திலிருந்து

அம்மிக்காக போட்ட சிறு மேடை
சிதைந்து ஞாபகச் சின்னமாய்
ஓ...ஒரு மண்ணெணெய் விளக்குக்கூட
புல் போல வளைந்து ஆடியபடி
நின்ற வேப்பமரம் பெருவிருட்சமாய்
பல கிளைகள் விட்டு
இடம் பெயராமல் அப்படியே.

பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
போராடி நகர்வில்லாமல்
தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
நியாயங்கள் பேசி
தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
நாம் மட்டும்
நாடு விட்டு நாடு
அலைவது ஏன் ????

போட்டி !
பொறாமை !
பேராசை !
பெரு நினைவு !
சொல்லலாமா !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, February 19, 2010

தொலைத்த பதிவுகள்...

இருட்டியது
இருள் முட்டியது
வீடு அடங்கியது
சன்னமாய் ஒரு குரல்.
அலமாரிக்குள்
மிக...மிக
மிகவும் தெளிவாய்.

மனதோடு உரசி
அழுது சிரித்து
பக்கமிருந்து
தலை தடவி
குட்டியா என்றழைக்கும்
இளமையில் கேட்ட குரலாய்
நெகிழ்வோடு
அது....அது அப்பா !

அம்மாவின்
சமையல் சரியில்லை
தொடங்கி...
பக்கத்துவீட்டு
தங்கமணி அக்காவின்
குழந்தை நடக்கிறாள்
என்பது வரை...
உறவுகளின்
ஒரு பெரும்
சரித்திரச் செய்திகளோடு அவர்.

குறைந்தது பேசிக் கட்டணங்கள்.
குறைந்தது
அசைபோடும் நினைவுகளும்தான்.
பிறந்த நாள் வாழ்த்துக்கூட
தொலைபேசியிலாகி
தொலைந்து போனது
கையின் பதிவுகள்
அழகு கையெழுத்துக்கள்.

மீண்டும்....மீண்டும்
படிக்க
பார்க்க
சந்தோசிக்க
சேமித்த ரகசியங்களோடு
காத்திருக்கும்
கடிதங்கள் இன்னும்
என்னிடம்
நினைவுகளை மீட்கும்
உணர்வுகளோடு !!!

ஹேமா(சுவிஸ்)