*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 25, 2011

பெண்ணாய் நான்...

தலைமுறை தலைமுறையாய்
தாழ்வாரத்திலும்
வீட்டு முகட்டிலும்
கட்டித்
தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.

முட்டிகளை உடைத்தும்
தலைமுடிகளை அறுத்தும்
நிர்வாணங்களை
அம்பலப்படுத்தியுமான வலிகள்
எங்கள் வளவுகளில்
(காணி)
நிறையவே.

காலத்தின் விந்துகள்
கடல் கடந்து
கலய அடுக்குகள் மாறியபோதும்
உட்சுவர்கள் மாறாமலேயே.

ஒவ்வொன்றும் இறுக்கமாய்
சிலவற்றைத் தளர்த்தியபோதும்
தளர்த்த முயலும் விரல்களுக்குள்
இன்னும் இன்னும்
இறுக்கமாய் இருக்கும்
கோட்பாடுகளும் கலாசாரங்களும்.

தலைமுறை தலைமுறையாய்
கட்டி வைத்த மூட்டை முடிச்சுகளை
அவிழ்க்கவே முடியாமல்
சமூக விலங்குகளோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

35 comments:

சத்ரியன் said...

//தலைமுறை தலைமுறையாய்
கட்டித் தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.//

உங்கள் ஆதங்கம் நியாயமானதா இருக்கலாம் தான். கட்டமைப்பு என்ற ஒன்று எல்லாத்துக்கும் தேவையானதாகவே இருக்கிறது. ஆனாலும்,

காலத்திற்கேற்றார் போல சில மாற்றங்களுடன்!

சத்ரியன் said...

//காலத்தின் விந்துகள்
கடல் கடந்து
கலய அடுக்குகள் மாறியபோதும்
உட்சுவர்கள் மாறாமலேயே.//

ஹேமா,

கலயங்கள் மாறினால், நீரின் தன்மையுமா மாறிவிடும்?

அடைப்பட்டிருக்கும் வடிவம் மட்டும் தாம் மாறியிருக்கும்.

அந்த உட்சுவர்கள் மாறாதிருப்பது தான் நம் தனித்தன்மை.

மேவி... said...

ஒன்னும் செய்ய முடியாது ஹேமா ... ஆழ்மனதில் பதிந்துபோன பழக்கவழக்கங்களை, கலாச்சாரங்களை நம்மால் மறக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது

சுதா SJ said...

என்ன செய்வது
இது நாம் வேண்டி வந்த வரம்

சுதா SJ said...

//தலைமுறை தலைமுறையாய்
கட்டித் தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.//

முடியாதுதான்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் முயன்றால் முடியும் என்பது என் நினைப்பு ஆசை .

அன்புடன் நான் said...

உணர்வாய் இருக்குங்க.....

வளவு என்றால் என்ன?

அன்புடன் நான் said...

comments:
சத்ரியன் said...
//தலைமுறை தலைமுறையாய்
கட்டித் தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.//

உங்கள் ஆதங்கம் நியாயமானதா இருக்கலாம் தான். கட்டமைப்பு என்ற ஒன்று எல்லாத்துக்கும் தேவையானதாகவே இருக்கிறது. ஆனாலும்,

காலத்திற்கேற்றார் போல சில மாற்றங்களுடன்!

25 June, 2011 01:35 //

கருத்துரையெல்லாம் இருக்கட்டும் முதல்ல ஓட்டு போட கத்துக்க....மடமங்குனி.

சத்ரியன் said...

//கருத்துரையெல்லாம் இருக்கட்டும் முதல்ல ஓட்டு போட கத்துக்க....மடமங்குனி.//

ங்கொய்யால... அதான் எனக்கு பதிலா கள்ள ஓட்டு போடுவியே, இங்கயும் போட வேண்டியதுதானே!

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
மனசு வேதனைப் படுகிறது.
வாழ்த்துக்கள்.

எல் கே said...

உங்கள் கவிதைக்கு என்றும் ரசிகன் நான். இப்ப பொதுவாவே அதிகம் பதிவகள் பக்கம் வரது இல்லை. காலையில் சிறிது நேரம் பின் இரவு சிறிது நேரம். அந்த நேரத்தில் என் கண்ணில் படும் பதிவுகளை மட்டுமே படிக்கிறேன்.

உங்க மெயில் ஐடி இல்லை. எனக்கு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள் அந்த புத்தகம் அனுப்ப வசதியாக இருக்கும்

சாந்தி மாரியப்பன் said...

//தலைமுறை தலைமுறையாய்
கட்டித் தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு//

மாற்றங்கள் என்னிக்குமே ஒரே இரவில் வந்துவிடாதுதான்.. ஆனால், முயன்றால் நிச்சயம் முடியும். அருமையான கவிதை ஹேமா.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை ஹேமா. ஒருபக்கம் நிகழும் மாற்றங்கள் ஆறுதலைத் தந்தாலும் இன்னொரு பக்கம் இறக்க முடியாமல் பாரத்தை சுமந்தபடியேதான் பெண்கள். சாரல் சொல்வது போல முயன்றிடுவோம். வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

ராமலெக்ஷமி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ஹேமா.

ஸ்ரீராம். said...

அருமை ஹேமா. ராமலக்ஷ்மியின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

vidivelli said...

ஒவ்வொன்றும் இறுக்கமாய்
சிலவற்றைத் தளர்த்தியபோதும்
தளர்த்த முயலும் விரல்களுக்குள்
இன்னும் இன்னும்
இறுக்கமாய் இருக்கும்
கோட்பாடுகளும் கலாசாரங்களும்.

தலைமுறை தலைமுறையாய்
கட்டி வைத்த மூட்டை முடிச்சுகளை
அவிழ்க்கவே முடியாமல்
சமூக விலங்குகளோடு நான்!!!

நல்ல அருமையான கவிதை சகோ...
சிலவற்றிற்காக சிலவற்றை மாற்ற முடியாது !!!!!!!!!!!!ஆனால்
சிலவற்றை மாற்றிக்கொள்ளலாம்..
அதை மாற்றும் போது உலகம் சிலதைக்கதைக்கும் ..
ஆனால் மாற்ற முடியும்...
வாழ்த்துக்கள்.....

கவி அழகன் said...

முதல் பந்தி ஒரு பெண்ணின் பிரச்னையை சொல்லி அடுத்த பந்தி கொஞ்சம் விரிந்தது சமுக பிரச்சனையாக பார்த்து முன்றாம் பந்தி பொதுமைப்படுத்தி நான்காம் பந்தி மீண்டும் குறுகி சமுக வட்டத்துக்குள் வந்து இறுதி பந்தி இவற்றுக்கெல்லாம் எப்படி பெண் சிக்கிகொல்கிறாள் என்று முடிகிறது

குறுகி விரிந்து குறுகும் எண்ணம்
ஒன்றில் இருந்து பலத்துக்கு போய் பலத்தில் இருந்து ஒன்றுக்கு வருதல்
உய்த்தறி முறை தொகுத்தரி முறை
நல்ல முறையில் வடவமைக்க பட்ட கவிதை
வாழ்த்துக்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு பெண்ணின் உணர்வுகளை, வலிகளை, ஆற்றாமைகளை, அடிமைக்கோலத்தை விபரிக்க, உங்கள் கவிதையைவிட வேறு சாட்சிகள் வேண்டுமோ?

விரிவான கருத்துரைகளுடன் பின்னர் வருகிறேன்!

Unknown said...

உண்மையான வலிகள்....

தினேஷ்குமார் said...

வழிகளை சுமந்து செல்கிறது ...

தனிமரம் said...

மாற்றங்களை உள்வாங்கி நல்ல கட்டமைப்பை உருவாக்கலாம் என்றாலும் எங்கள் சமூகக் கட்டுப்பாடுதான் நாங்கள் புலம்பெயர்ந்தாலும் தெளிவான நோக்கத்துடன் வாழ வழிசெய்கின்றது என்பது என் முடிவு .
வார்த்தை வீரீயம் மிக்க கவிதை வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

தலைப்பின் கடைசி எழுத்தும் கவிதையின் கடைசி எழ்த்தும் “ம்” என்று போட்டிருக்கலாமோ ...

Anonymous said...

காலம் ஒரு நாள் மாறும் ...((

Mahan.Thamesh said...

பெண்ணின் வலிகளை எடுத்து சொல்லும் அற்புதமான கவிதை

கூடல் பாலா said...

அதிகப்பட்ச வேதனைகள் ......விரைவில் விலகட்டும் ..

http://thavaru.blogspot.com/ said...

இனம் இனம்சார்ந்த நடைமுறைகளின் போலிதனங்களும் எங்குமுண்டு ஹேமா..

நிலாமகள் said...

த‌ண்ணீரின் மேல் ந‌ட‌க்க‌ முடியுமா என்ற‌த‌ற்கு ப‌னிக்க‌ட்டியாய் உறையும் வ‌ரை காத்திருந்தால் முடியும் என்றாராம் ஒருவ‌ர். வெப்ப‌ப் பிர‌தேச‌த்து த‌ண்ணீர் எப்போதும் ப‌னிக்க‌ட்டியாய் உறைய‌ப் போவ‌தில்லை. எனினும் ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை. நாமில்லாவிட்டாலும் ந‌ம் ச‌ந்த‌தியின‌ராவ‌து இற்றுப் போய் அறுந்து விழ‌ப் போகும் அந்த‌ மூட்டைக‌ளைப் புற‌ந்த‌ள்ளி வாழ்ந்து க‌ளிக்க‌ வாய்ப்பிருக்கிற‌தென‌ ம‌ன‌தைத் திட‌ப்ப‌டுத்திக் கொள்ள‌லாமே...

சிவகுமாரன் said...

முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் உங்கள் விரல்களாலேயே.

நிரூபன் said...

தலைமுறை தலைமுறையாய்
தாழ்வாரத்திலும்
வீட்டு முகட்டிலும்
கட்டித்
தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.//

இவ் வரிகள் தொடர்பாக எனது கண்டனத்தினை வெளிப்படுத்துகிறேன், காலாதி காலமாக அடிமைத் தளையுடன் பெண்கள் எல்லோரும் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
இல்லைத் தானே, அப்படியெனில் சிறுகச் சிறுக இத்தகைய சமூகத்தின் கட்டுகளை அவிழ்த்தெறியலாம் தானே.

நிரூபன் said...

முட்டிகளை உடைத்தும்
தலைமுடிகளை அறுத்தும்
நிர்வாணங்களை
அம்பலப்படுத்தியுமான வலிகள்
எங்கள் வளவுகளில் (காணி)
நிறையவே.//

பெண்கள் மீதான வன்முறைகளை தத்ரூபமாகச் சொல்லும் வரிகள் இவை,

நிரூபன் said...

பெண்கள் மீதான வன்முறைகளின் வடிவங்களையும், ஒரு பெண் மீதான சமூகத்தின் பார்வையினையும்,
நாகரிகமடைந்த மூன்றாம் உலக நாடுகளில் எம் இனம் வாழ்ந்தாலும், அவர்களும் பெண்கள் மீதான வன்முறைகளினைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள் என்பதனையும், உங்களின் இக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் இன்னும்
இறுக்கமாய் இருக்கும்
கோட்பாடுகளும் கலாசாரங்களும்.//

எந்தவடிவிலாவது கட்டுப்படுத்த முயற்சிக்கும் சிறை.

www.eraaedwin.com said...

அருமை ஹேமா

கலா said...

உன்
முத்த ஒப்பத்திற்காகவே
காத்திருக்கும் என் கன்னம்
காலம் முழுதும்\\\\\
கொடுத்ததாகவோ,எடுத்ததாகவோ....
இதுபற்றி “யாரும்” எனக்குச் சொல்லவே இல்ல....
சே... மறைக்கலாமா?

கீதமஞ்சரி said...

காலங்காலமாய்ப் பெண்ணினத்துக்கெதிராய்ப் பிரயோகிக்கப்படும் கொடுமைகளை வெகு காட்டமாய் இயம்பும் கவிதை. கை கோர்க்கிறேன் உங்கள் கருத்துகளோடு.

அப்பாதுரை said...

தாக்கும் சிந்தனை.
'பெண்' என்பது மனதின் தன்மையா, உடலின் தன்மையா? 'ஆண்கள்' உடலமைப்பினால் சமூக லாட்டரியில் பரிசு வாங்கியவர்கள் என்று சொல்லத் தோன்றினாலும், மன அமைப்பில் பெண்களுக்கு அந்த லாட்டரி விழுந்திருக்கிறது எனச் சொல்லத் தோன்றுகிறது - ஒரு வேளை மாற்றிச் சொல்கிறேனோ? நண்பர்களுடன் வெட்டி அரட்டையில் ஆண்-பெண் சமூக அமைப்பு பற்றி ஏதோ உருட்டிக் கொண்டிருந்தோம்; இணையத்தைப் புரட்டினால் உங்கள் கவிதை!

Post a Comment