*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, January 30, 2014

காதல் குறிப்பொன்று...

கனவுகளுக்கு
வால்கட்டிப் பறக்கவிடமுடிகிறது
உன் சில்மிஷங்கள்
தாளாப் பொழுதுகளில்
காதலின் பூரணத்தை உணரும்
இரவின் உயர்ந்த கோபுரமமர்ந்து.

ஆழ்கடலென்றும்
ஆழ்தவம் புரியும் மலரென்றும்
காதல்
அது ஒரு மரணத்தின் வாசலுமாய்.

ஒருவேளை காதலைத் தாண்டி
என் மரணம் முந்திக்கொண்டால்
நாளும்
பொழுதும்
இரவும்
பகலும்
கோபுரமும்
எல்லாமும் மாறாதிருக்கும்.

ஆனால்
உன் காதலும்
சில்மிஷங்களும்
கனவும்
வாலும்
என் சந்தோஷங்களும்
இப்படி
சொல்லப்படாமலே அலைந்திருக்குமோ!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, January 27, 2014

படைத்தவனும் படைத்தவனும்...

பார்த்துக்கொண்டிருக்க....

இது பத்தோ அல்லது
பதினைந்தாவதாகவோ இருக்கலாம்
வட்டம் வட்டமாய் சிகரெட் புகை
கடவுளைச் சுற்றிலும்.

வானத்தின் தேகமெங்கும்
அதிரும் இரும்புப் பறவைகள்
பச்சையம் அழித்து
இரத்தக் களறியாகும் பூமி.

பச்சைக்குழந்தையிடம்
இச்சைதேடும் நரன்.

இதற்குள்ளும்
நன்றி மறவாத நாய்
கொடுத்துண்ணும் காக்கா
வரிசை கலையா எறும்புகள்
மனிதன் தவிர
தம்மை மாற்றா மாற்றுயிர்கள்.

அழிக்கும் வனம் அழ
பாறையில் முளைவிடும் சிறுவிதை
பெருமரமென மலை பிளந்து
தடைக்கற்கள் கடந்து வேர் விரித்து
சிக்கும் சின்ன வேர்களை விசாரித்தபடி
ஆழப் பதிய வைக்கிறது தன்னை.

கடவுளைப் பார்த்து முறைக்கிறேன் நான்
மனிதன் பண்ணிய புகைக்குள் அவர்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, January 25, 2014

மயூரத்தவம்....

ப்ரியத்தை....
மயூரமிசைத்து
தூளியாட்டுகிறது
மௌனக் காற்றுவெளி.

புள்ளியாய் அசையும்
தீபத்தில்
நானென்ற திரியும்
நாமென்ற வெளிச்சமும்.

இரவுகளை நீட்டிச்செல்லும்
தூங்கா வானத்தில்
வெளித்த
வெளிச்ச நிலவில்
அவனோடு நான்..

முகமுரசி
கருந்தாடி எழுதும்
மோகத்தீயில்
சிலிர்த்தெழுந்து
சுயம் தொலைக்கவைத்து
அடையாளமிடுகிறாய்
சாதாரண சகமனுஷிதான்
நானுமென.

ஒரு கோப்பை
தேநீர் மயக்கத்தில்
சிறுதூரல் மழையணைப்பென
சரிந்துகிடக்கும்
என் விழிக்கா விழியில்
மேகம் கடக்கும் கருமுகில்
அழகு காட்டிப்போகிறது
என் மீசைக்குழந்தையை.

தன் எச்ச விதையில்
முளைத்த மரத்தில்தான்
சில விதிப்பறவைகளின்
கூடுகள்
விதியென இணையும்
என்னையும் அவனையும்போல!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 21, 2014

பிரிக்கப்படா சிக்கல்...

பார்வைகள் சிதைந்த
இயல்பினர் அவர்கள்
இதயம் பருத்த பருந்துகள்
பெயர் ஆண்களாம்.

அவர் பெற்ற
அன்னைபோலன்றி
விஷேசமாக
ஏதுமில்லை என்னிடம்.

பிரமாண்ட மடிப்புக்களில்
நீலநரம்புகள் குறித்த வருத்தம்
எனக்கும்தான் என்றாலும்
திரண்ட மார்பை
சீவிக்குறைக்க முடியவில்லை.

சுவர்க்கோழியென
ஒட்டிக்கிடக்கிறேன்
அடுப்பங்கரையில்
குடத்தோடும்
உட்சுவர் உடைத்த
இடுப்புவலியோடும்.

என் இயலாமையின் உமிழ்தல்
ஒரு இரவுப்பாடகனின்
நிரம்பாப் பாத்திரமென
ஆனாலும்
உனை நிரப்பும்
விலைமாதென
வரையறையிடுகிறாய்.

அந்தநேரத்தில் மட்டும்
எப்படிச் சல்லாபமாய்
கொஞ்சமுடிகிறது
செல்ல வார்த்தைகளோடு
உன்னால்!

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/2014_01_01_archive.html

ஹேமா(சுவிஸ்)

Monday, January 20, 2014

உறவென்பது...

படைப்பின்
புதிரறுக்கா மனிதன்
பூட்டிக்கிடக்கும்
புரியா உறவுடைக்க
சாவியொன்று தேட
நினைப்பதேயில்லை.

பயங்களாய்
பயன்களாய்
பிறழ்வுகள் காட்டி
பிணைத்து நிற்கும் சங்கிலியாய்
உராய்ந்து தீ உமிழ்ந்தாலும்
உறவுகளின் உன்னதம்
அறிவதில்லை.

வியாபாரமாகிவிட்ட வாழ்வில்
உயிர்களைப் பணயமாக்கி
அண்டவெளியை
தனதாக்கி
ஈரமற்ற மனதிற்கு
தண்ணீர் தேடியலையும்
மனிதனுக்கு புரிவதில்லை
அணைக்கும் அன்பின் அதிசயத்தை.

காது குடைய
ஒற்றை இறகின் தேவைக்கு
ஒரு பறவையையே
உணவாக்கும்
இரக்கம் விற்கும்
ஈசன் பெயரில்
பெயர் புகழ் தேடி
கோடியாய் கொட்டி
தானம் செய்யும்
தர்மர்களுக்குத் தெரிவதில்லை
தாய் முலைதேடும்
குழந்தையின் பசியை.

உபத்திரவமற்ற
வதைசெய்யா
நண்பனோ எதிரியோ
என் உறவெனச் சொல்வதில்
பெருமையெனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, January 17, 2014

அச்சம் எழுகிற தருணங்கள்...

மௌனப் பெருவெளி பிரித்து
நாசித்துவார இடுக்கில்
நுழையும் தாழம்பூ மணமென
சில நினைவுகள்
மறந்தாலும் மறக்காமலும்.

உந்தி எம்பி
வெளிவந்து மூச்சிழுத்து
உள்ளிழுக்கும் நீருக்கும்
'சற்றுப் பொறு' சொல்லி
காற்றுவாங்கும் மீனென
பிரதின்மையாகும்
புரவி வேகத்தில் எல்லாமே.

மனப்பரப்பெங்கும்
அரவம் கொத்திப் படரும்
நஞ்சின் நீலமாய்
துரோகிக்கும் மனித மனதின்
பல வர்ணக் கேள்விகளை
பெரும்பாறை
இறுகிச் சிதறும் மணல்துகளென
மாறி மாறி
விழியிழுத்து வெளிதாண்டி
வழி காட்டும்
அகத்தெளிவின் உண்மைகள்.

சரிவாய்
நீளமாய்
குவிந்து
கவிழ்ந்த இரவின் இருளில்
மெல்லப் புதையும் நான்.

சுவாலை வீச
கன்னம் நனைத்து
காது சிவக்க
கண்வழி கசியும் நீர்
உணர்த்தி வெளியேறும்
போன ஜென்மத்துக்
கடன்களை!!!

ஹேமா(சுவிஸ்)