*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 12, 2012

அம்மாவாய் அருகில்...

பத்திரமாய்....
பாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.

அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்.....

பிடி...பிடியென
துரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.

அம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.

அம்மாவின் தினத்தில்
அம்மாவாய் அருகில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

"தாயுள்ளம் படைத்த அனைவரையும் நினைப்போம்...வாழ்த்துவோம் !"

Sunday, May 06, 2012

அன்புள்ள ....க்கு !

சிறந்த குறிப்புக்களோடுதான்
இசைத்துக்கொண்டிருந்தேன்
என் கனவுகளுக்கு
மெட்டுப் போட்டுத் தருவதாய்
அடம்பிடித்து
வாசித்தும் காட்டினாய்.

இதே ’வைகாசி’ மாசத்து
ஒரு நீண்ட இரவில்தான்
’சங்கீதத் தோழி’யென்றும்
செல்லப் பெயரிட்டாய்
’நினைவு’ வலிக்க.

காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’

சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்.

ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.

உன்னால்
உரத்துச் சொல்லப்பட்ட
மூன்று வரிகள் இவை
’ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல்
உன் நினைவுகள்’.

மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....

இப்படிக்கு அன்போடு........
உன் சங்கீதத் தோழி!!!
 
ஹேமா(சுவிஸ்)

Thursday, May 03, 2012

சில முடியாதவைகள்...

பாசம் பணம்
இரண்டுக்குமான தூரத்தை
சொல்லி முடித்த அவன்
எதையோ இடக்கையில்
எழுதிக்கொள்கிறான் .

பணம் பற்றிச் சொல்ல
கலைந்த அமைதி
வலச்சுழியில் லயித்திருந்த
சின்னவன்கூட விழித்தான்.

சொல்லிடறிய பாசம்
பாவம்....
ஊடாடும் உயிரோடு
துணிகிறது கொல்ல
முடியாதென்கிறான் சின்னவன்.

புழுங்கும் வெப்பம்
இடக்கை மை உருகி வழிய
மல்லுக்கட்டமுடியா
பலனற்ற இரவொன்றில்
நுழைகிறான் கல்லறைக்குள்
தலைமுறைத் தோல்வியோடு.

இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 27, 2012

பாதையும்...பாசமும் !

கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில் அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத பாதைகளிலும் 
பயணிக்க முடியும் 
முடிவில்லா 
 உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன் 
அம்மா நீ.... 
தாங்கியாய்த் தாங்குவேனென 
நம்பிக்கை வார்த்தையொன்றை 
சொல்லிவிட்டால்!!! 

ஹேமா(சுவிஸ்)

Friday, April 20, 2012

கொய்யா...முத்தம் !

கொடுப்பது பற்றியும்
எடுப்பது பற்றியும்
யோசிப்பதை
உன் உதடுகள் உணர்ந்திருக்க
வாய்ப்பில்லை.

முன்னம் அறிந்திரா
மிகச் சிறந்த...
மிக மிகச் சிறந்த
ஒன்றை
சமைக்கத் தொடங்கிவிட்டேன்
இப்பொழுதே
உனக்கு மட்டுமானதாய்.

மழைதொடும் மண்
மண்தொடும் மழை
ச்ச.....
ஞாபகக் கள்வனே...
காற்றாய்
வருடுகிறாய்
ஒற்றை மழைத்துளியாய்
உதடு நனைக்கிறாய்
சமையலுக்கான
ஈரம் சேமிக்கிறேன்
உன்னிடமிருந்தே.

வா....வரும்வரை
உலரா உதட்டோடு
அல்லாடித் தொலைக்கிறேன்
இருப்பு ஏதுமற்று
கோடை மழை
பருகத் தவிக்கும்
ஒரு வண்டாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 18, 2012

இவள்....மெலேனா !

கட்டட முகப்பில்
உயர்த்தப்பட்ட
கொடியெனக் காம நெடி
பிரிந்த கணவனுக்காய்
கட்டியணைத்து
முத்தம் தந்தவர்களில்
எவரும் அனுதாபிகளல்ல
பயந்து பயந்து மருண்ட
ஒரு விழி உரசுகிறதவளை
தெரிந்துகொண்டதில்
சின்னவனாம் பத்தாண்டு.

காதல் எரிக்க
காமம் அதை முந்த
கறுப்பு மரமேறி
யன்னல் க(ள்)ல் நுழைந்து
இறங்கினான் சின்னவன்
ஆடையில்லா அவளருகில்
பார்த்தானாம் அன்றொருநாள்
அந்தப்புர அந்தியில்
முற்பிறவியில் கணவனென்றான்.

தொடர் இரவில்....
"அதிரவைக்கிறாய் என்னுடலை
விடத்திற்கு நீயே ஒளடதம்
உயிர்த்தெழ உத்தரவாதம்
உந்தி வெளியேற்றும்
என் ஒரு துளி விந்தும்
உன் காதலுமென"
இரத்தம் கீறுகிறான்.

அத்துமீறலென
அலற அலற அடிக்கிறார்கள் அவளை
அதன்பின் அறையத்தொடங்குகிறாள்
அவளை அவளே!!!

("மெலேனா" என்கிற பிரெஞ் படத்தின் தாக்கம்)

ஹேமா(சுவிஸ்)