*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 21, 2010

இணைய விடுப்பு...


வணக்கம் வணக்கம் என் அன்பு நண்பர்களுக்கு நான் சுகம் சுகம்தானே எல்லோரும்.

வீடு திருத்தப்படுகிறது.இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய !

தற்சமயம் சிநேகிதியின் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்.கணணியை என் வீட்டைப்போல அதிக நேரம் அவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்த முடியாமலிருக்கிறது.
மின்னஞ்சல்களை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன் அலுவலகத்தில்.சிநேகிதி வீட்டில் 3 குழந்தைகள்.நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.

இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.அதோடு வீடு ஒரே தூசும் துடைத்தலுமாக நிறையவே வேலை.அதுவரை...........

அன்போடு ஹேமா.

Saturday, October 09, 2010

இன்று...

மாமாவின் சாயலாம்
அத்தையின் நடையாம்
அப்பாவின் குணமாம்
அம்மாவின் றாங்கியாம்.

பள்ளித் தோழி ஒருத்திதான்.
தம்பிதான் உயிர்த்தோழன்.

காதலிக்காமலே
காதல் தோல்வி.
படிப்பில் மண்.

திருமணம்
புரியாத உறவு
இல்லாமலே போனது.

காலச்சுழற்சியில்
வறுமை நிரப்பிய பணம்.
சுற்றம் புறம்பேச
முதுகில் புண்.
நோவைப் புதைக்க
நீண்டதொரு பிரயாணம்.

ஒற்றை மயிர் வெளுப்பு
வயதை ரசிக்கும் கண்ணாடி
கண்ணிலும்தான்.

கிடைக்கவும் இல்லை
இழக்கவும் இல்லை
விரும்பிய ஒன்றுக்காக
இன்னொரு பிறவிக்கான
ஏக்கக் கண்ணீர்.

இருண்ட இரவுகளில் ஒன்று
புதிதாய் விடிகிறது இன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 04, 2010

நிறங்கள்...

எல்லோராலும் முடிவதில்லை
^
எதிர்த்துப்பேச
^
பல் இளிக்க
^
பசப்ப
^
பயப்பட
^
ஒத்துப்போக
^
பொய்யாய் புகழ்பாட
^
புறம்கூற`
^
பச்சோந்தியாய் வாழ....

உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்.

நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.

மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.

நீலம் நீலம்தான்
அது எப்போதுமே.

நானும் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 30, 2010

ப்ரியமானவனே...

புரிதலில் பூக்கிறது வாழ்வு !

பிரிந்து போகிறது
பகிர்ந்துகொண்ட உறவு !

சொல்லவில்லை
என்னைப்
புரியவில்லையென்று...
புரியவைத்திருப்பேன் !

திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி !

சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !

என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !

புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 26, 2010

தியாகிகளில் ஒருவனாய்...

விழித்தே இருக்கிறேன்
கொடூரமான
கறுப்பு எழுத்துக்கள்
சிலுவைகளாய் கழுத்தை நெரிக்க
அடிமை வாழ்வென கையெழுத்திட
தீராத் தர்க்கம்
கைகள் வலுவற்றதாய் !

ஓ...
இத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !

தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !

கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுதங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !

ஆனது என்ன ?
பார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
எல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே !

இன்று....
தின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 23, 2010

குதிரையும் கனவும்...

நித்தமும்....
சிவப்புக் குதிரையொன்றின் துரத்தல்
கனவில்கூட
திரும்பிப்பார்த்தல் இயலாமல்.

உடல் எங்கும் இரத்தப் பிசுபிசுப்பு.
தூரத்தே எட்டி அணைக்கும் கையொன்று
நீண்டு நீண்டு
வந்து வந்து மறைவதாய்.

புழுதி கிளப்பி
குதிரை எகிறிக் கனைக்க
என் நகங்கள் என்னையே
பிறாண்டிக் காயப்படுத்த...

இடையிடை விழுத்த எத்தனிக்கும்
கொடிகளும் காட்டு மரங்களும்
பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
சிதைவுற்ற போதும்
எதிர்க்கும் உறுதியோடு
ஓடிக்கொண்டிருந்த நாளில்...

சூரியன் உதித்த
காலையின் பொழுதில்
கடவுள் என்கிற பெயரில்
ஓர் உருவம் கை அணைக்க
கல்லாய் நான்.

குதிரைக்கும் நிறம் மாற்றி
உருவம் மாற்றிய அது
தானும்
நிலையற்ற உருவமாய்.

ம்ம்ம்....

இப்போதைக்கு கனவுகளின்
தொன்மங்களுக்குள் நான்!!!

ஹேமா(சுவிஸ்)