*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, August 23, 2009

செல்லமாய்...

பூக்களுக்கு
பூவின் வண்டுக்கு
வானுக்கு
வானின் பறவைக்கு
ஆற்றுக்கு
நீந்தும் மீனுக்கு
மலைகளுக்கு
காடுகளுக்கு
டீச்சருக்கு
தோழிக்கு
கோழிக்கு
ஊரும் எறும்புக்கு
என்று எல்லாவற்றிற்கும்
பட்டப் பெயர்
வைத்துவிட்டு,
உன்னை மட்டும் எப்படி
சும்மா விட முடிகிறது
என்னால் !
உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 20, 2009

தேவையில்லை இரவல்...

தனித்த இரவொன்றில்
சிலையாய் இருந்தேன்.
என்மீது பாரமழுத்தி
என் மௌனங்களும்
சிலையாய் இறுகியபடி.

இரவலாய் சிறகுகள் கிடைத்தால்
கொஞ்சம் பறக்கலாம் போல.
எழும்ப வைத்தது
தூரத்து நிலவைத் தேடும்
நட்சத்திரங்களின் பாடல்.

இரவல் மூச்சுக்கள் பற்றி
இறாக்கைப் புத்தகங்களுக்குள்
இரவல் சிந்தனைகள் தேடினேன்.
கிடைத்தது.

மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும்.

ஆனால் மனுஷியாய் எனக்குப்
பிடிக்கவில்லை இரவல் மூச்சு.
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.

இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்து கொண்டு
மீண்டும்...
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!

வாழ்வியல் பற்றி எழுத மாட்டேனாம்
என்று தூண்டியவர் மேவீ

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 18, 2009

பிசாசுகள்...

பிசாசுகள்...
வாழ்வின் சுவையறியாப் பிஞ்சுகள் மேல்
வெந்நீர் ஊற்றும் கொடிய பிசாசுகள்.
இதழ்கள் பிரிந்து துடிக்கும்
பூக்களை நிராகரித்து
வேர் அறுத்துச் சிரிக்க
அந்தப் பிசாசுகளால் மட்டுமே முடிகிறது.

புத்தனின்
பாதையில் நடந்தால் அல்லவோ
பூக்களின் அவலம் புரிந்திருக்கும்.
புழுக்களின் மேல் அல்லவா
படுக்கை போட்டுக் கொடுத்திருக்கிறது.
கொடுமையாய் இல்லை.

இடதும் வலதுமாய்
நாடிகள் ஊடே என் துடிப்பைப் பார்.
நரம்புகள் பிடுங்கப்பட்டு
ஆசைகள் புதைக்கப்பட்ட பிஞ்சுகளை
முட்கம்பிகளுக்கூடாக
காணக்கூட
கண் வேண்டாம் என்கிறேன் நான்.

இழப்புக்களும் பறிகொடுத்தலும்
இரத்த ஆற்று நீச்சலும்
பழக்கமில்லை உனக்கு.
அறிய மாட்டாய் நீ.

தலை தடவி...நீர் ஊற்றி
தளிர் ஒன்று தளைக்கும் வரை
தீக்குள் அவியும்
என் நெஞ்சு ஆறா.

பிசாசே ஓடிவிடு.
பச்சையம் உயிர்க்க வழிவிடு.
எங்கள் பிருந்தாவனங்களுக்குள்
ஏன் புகுந்தாய்.
ஆணிவேரின் அடியிருப்பை
அடியோடு ஏன் அகற்றினாய்.
உன் கரம் காத்து ஓடிவிடு.

அது வரை
புழுக்களோடு
சிநேகம் கொண்டாவது
உன் கை கடிப்பேனே தவிர
உன்னோடு ஒத்துப் போக
என் மனம் சாயா !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, August 15, 2009

ஏன் இப்படி...

பெருமழையில்
சிக்கிக்கொண்டிருக்கிறேனோ ஒரு வேளை.
கட்டிடங்கள்
இடிந்து விழும் அபாயம் வரலாம்.
அறிக்கை சொல்கிறது.
மண்வீடு கட்டி விளையாடிய வேளை
அழுததைவிட
அழுகை அழுகையாய் வருகிறது.

கனவில் காக்கா கரைகிறது.
அப்போ..யாரோ வரத்தான் போகிறார்கள்.
நம்பிக்கையோடு தலைவாழையிலை
வெட்டி வைக்கலாமோ.
பாதை நெடுகிலும் பரிமாற
நிறையக் கேள்விகளும் கதைகளும்
தேக்கி வைத்திருக்கிறேன்.
ஓ...கேட்பதும் கதைப்பதும் பிடிக்காதோ !

சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 13, 2009

"தொடக்கப்பள்ளி"

பொன்னையா மாஸ்டர் சுளகில் அரிசி புடைத்தபடியே
தமிழ் பாடம் சொல்லித் தந்ததை மறக்க முடியவில்ல.

முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.

மூத்திரக்காய் உடைத்து ஊற்றி
சிலேட்டில் எழுத்து அழித்ததையும் மறக்கவில்ல.

"ஏண்டா லேட்"என்று வாத்தியார் கேட்க
"பிட்னிப் புல்லில யாரோ செத்துக்கிடக்கிறாங்க.
அவங்க எழும்பிப் போறவரைக்கும்
பத்தைக்குள்ள ஒழிச்சிருந்தேன் சார்"
வெங்கடாசலம் சொன்னதையும் மறக்கவில்லை.

சின்னக் காளிகோவில் அதுவர ஒரு அரசமரத்தடி புத்தர்
பிறகு ஐயனார் சிலை - பாலம் - வயல்வெளி - ஆறு கடக்க
ஒண்ணு ரெண்டு மூணு என்று மேல்கணக்கு முக்கில்
படிகளைப் பாடமாய் படித்தபடி
அப்பாவின் கை பிடித்து நடந்ததையும் மறக்கவில்லை.

போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரியமுடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை !!!

[பா.ராஜாராம் அவர்கள் கேட்டதற்கான நினைவலை]

(ஹேமா(சுவிஸ்)

Saturday, August 08, 2009

இனியவன் நீ...


Thinking Of You Myspace Comments
இனியவன் நீ...
தேனினும் இனிய நண்பன் நீ.
காலமெல்லாம்
கண் வழி கடந்து,கவிழ்கின்ற உனதன்பில்
கூடு கட்ட நினைக்கிறேன்.
குழம்பாதே
சும்மா ஒரு நினைவு.

என் மனக்கூடு பாசி பற்றி பாழாகிறது.
உன் வார்த்தைகளால் வலு இழந்து
வழுக்கி விழப் பார்க்கிறேன்.
குழந்தையாய் சிறு குழப்பம்.
திசைகள் தெரிந்தும்,வழிகள் குழப்பமாகி
பரந்து விரிகின்றன.
பார்த்து வழி காட்டு பார்த்திபனே.

நினைக்கும் நேரங்களில் நெஞ்சம் நிறைவாய்
நிறைந்த நிறைகுடமாய்.
சில சமயங்களில் மனம் வரம்பு மீறி
வம்பே வேண்டாம் என்றபடி.
மறுத்து மீண்டும்
வம்பல்ல அது உனதன்பு என்கிறதே.

என் இதயம் இப்போ சிறைப்பட்டில்லை.
உயரவே பறந்தபடி.
மகிழ்ச்சியின் எல்லைக் கடலில் நான்.
அசைத்துவிடும் விழுதாய் நீ.
அசைந்தாடும்
ஊஞ்சல் குழந்தையாய் நான்.

தனிமைக்குத் துணையானாய் தோழனே.
வலிக்கு விரும்பும்
சிறு ஒத்தடம் ஆனாய்.
உன் காலடி ஓசைகூட
என் இதயத்து இசையாகிறது.
உனை நினைக்கும் நேரங்கள்
நாழிகளும் நலிந்து மெலிகிறது.

என் இனிய நண்பா...
இதயத்து எண்ணங்களுக்கு
கற்பனைகளின் காட்சிகளுக்கு
எல்லையே இல்லை.
எட்டமுடியா விந்தையின் வித்தை அது.
தூரத்துப் பச்சை
மனதில் மட்டுமே பசுமை .
முடியாததை முடியில் கட்டி
முடியுமென்று முடிய முயல்வதுதானே
மனித மனம் !!!

ஹேமா(சுவிஸ்)