
இனியவன் நீ...
தேனினும் இனிய நண்பன் நீ.
காலமெல்லாம்
கண் வழி கடந்து,கவிழ்கின்ற உனதன்பில்
கூடு கட்ட நினைக்கிறேன்.
குழம்பாதே
சும்மா ஒரு நினைவு.
என் மனக்கூடு பாசி பற்றி பாழாகிறது.
உன் வார்த்தைகளால் வலு இழந்து
வழுக்கி விழப் பார்க்கிறேன்.
குழந்தையாய் சிறு குழப்பம்.
திசைகள் தெரிந்தும்,வழிகள் குழப்பமாகி
பரந்து விரிகின்றன.
பார்த்து வழி காட்டு பார்த்திபனே.
நினைக்கும் நேரங்களில் நெஞ்சம் நிறைவாய்
நிறைந்த நிறைகுடமாய்.
சில சமயங்களில் மனம் வரம்பு மீறி
வம்பே வேண்டாம் என்றபடி.
மறுத்து மீண்டும்
வம்பல்ல அது உனதன்பு என்கிறதே.
என் இதயம் இப்போ சிறைப்பட்டில்லை.
உயரவே பறந்தபடி.
மகிழ்ச்சியின் எல்லைக் கடலில் நான்.
அசைத்துவிடும் விழுதாய் நீ.
அசைந்தாடும்
ஊஞ்சல் குழந்தையாய் நான்.
தனிமைக்குத் துணையானாய் தோழனே.
வலிக்கு விரும்பும்
சிறு ஒத்தடம் ஆனாய்.
உன் காலடி ஓசைகூட
என் இதயத்து இசையாகிறது.
உனை நினைக்கும் நேரங்கள்
நாழிகளும் நலிந்து மெலிகிறது.
என் இனிய நண்பா...
இதயத்து எண்ணங்களுக்கு
கற்பனைகளின் காட்சிகளுக்கு
எல்லையே இல்லை.
எட்டமுடியா விந்தையின் வித்தை அது.
தூரத்துப் பச்சை
மனதில் மட்டுமே பசுமை .
முடியாததை முடியில் கட்டி
முடியுமென்று முடிய முயல்வதுதானே
மனித மனம் !!!
ஹேமா(சுவிஸ்)