*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, July 17, 2014

வீணையடா நீ எனக்கு...

என்னிடம் நீ...
விடைபெறுமுன்
எத்தனை முறை
அந்த மலையுச்சியின்
பெயர் சொல்லியிருந்தாய்
இப்போதும்....
அங்குதானா இருக்கிறாய்
தூதென
இல்லை சாட்சியென
மலைக்குருவியொன்றை
அனுப்பிவிடேன்
அலகில் மீசைமுடி சுத்தி !

மிரட்டிச் சிரிக்கும்
உன் பார்வையை
ஒற்றியெடுத்துப் படிக்கிறேன்
போதாதோ
இதமாய்
விரல்வழி இறங்குகிறது
மென்சூட்டு
மஞ்சள் வெயில் !

காலம் கறள் பிடித்து
கறகறக்கும் ஓசை
என் காதுகளுக்குள்
இன்னும்...
உன் ஞாபகம் மட்டும்
கொல்லன் பட்டறை
பச்சை இரும்பாய் !

மீண்டும் மீண்டும்
சுழலும் இசைத்தட்டில்
உன் குரலில்
என் பாடுகள் சத்தமாய்
நினைவறுத்தல்
அத்தனை
சுலபமாயில்லை !

இதயத்தோடு பேசுவது
இசை என்றால்
நீ....அதன் மொழி
எந்த நேரமும்
கேட்கப்பட்டாலும்
சில நேரங்களில் மட்டுமே
உணரப்படுகிறது !

தேடிப் பறந்த
களைப்பின்
தாகம்
உன் கூட்டில்
இளைப்பாற'வா'
ஒரு வலி
ஒரு மருந்து
நீ
நான் !

ஹேமா(சுவிஸ்)

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையில் புரிகிறது நினைவின் வலிகள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Radha N said...

//அலகில் மீசை முடி சுத்தி// ஆகா....மீசை விடு தூதா..... அழகு

// மருந்து நீ தான்.....// .... நிச்சயமா ....

”தளிர் சுரேஷ்” said...

தேடிப் பறந்த
களைப்பின்
தாகம்
உன் கூட்டில்
இளைப்பாற'வா'
ஒரு வலி
ஒரு மருந்து
நீ
நான் !// அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் உணர்வும் பிரிவின் வேதனையும் காண முடிகிறது. சிறப்பான சொல்லாடல்

நிலாமகள் said...

தூதென
இல்லை சாட்சியென
மலைக்குருவியொன்றை
அனுப்பிவிடேன்
அலகில் மீசைமுடி சுத்தி !//

இருப்பின் அத்தாட்சி...?!

முடிப்பும் பிரமாதம்!

Thenammai Lakshmanan said...

செம ஹேமா.

///இதயத்தோடு பேசுவது
இசை என்றால்
நீ....அதன் மொழி
எந்த நேரமும்
கேட்கப்பட்டாலும்
சில நேரங்களில் மட்டுமே
உணரப்படுகிறது !/// ரசித்தேன்.

Post a Comment