*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 27, 2012

ரசிகனின் நினைவில்...

கொஞ்சம் முன்வரை நினைத்திருக்கவில்லை
எனக்கும் உனக்குமான உறவுக்குள்
இப்படி....

நம்...நம் இயல்பிலேயே
கவிதையையும்...பிடித்த பாடல்களையும் சொல்லி
மலையும்...மழைமண்மணமும்
தாயும்.....தன்நாடும் அழகெனச் சொல்லி
நீ....தந்த ஒற்றைச் சிறகுகளுக்குள் பொத்தி வைத்து
ஒரு ஆயுத அமைதி ஒப்பந்தக் காலத்தில்
வைத்திருக்க முடிந்தது
இரவின் யன்னல்களுளினூடே
என்னை மட்டுமே அனுமதித்திருந்தாய் தென்றலாய்.

இப்போ...........
ஒற்றைச் சிறகைத் தாண்டி
இன்னொரு அன்புலகம் இருப்பதாய் சொல்கிறாய்
என் இயல்பில்லா அந்த உலகத்தில்
தங்க என்னால் முடியவில்லை
அந்த உலகில் வீசும் பாசத் தென்றலில்
பலமணிநேரங்கள் என் துணையில்லாமல்
உன்னியல்போடு
தனித்தியங்க முடிகிறதென்றும் சொல்கிறாய்.

நன்று நண்பனே....

ஒருவேளை முயன்றிருப்பேன்.அந்த உலகைக் கண்டிருக்காவிட்டால் என் உலகில் உன்னைப் பாதுகாத்திருக்க .நீயே வெளிக்கொண்டு வந்துமிருப்பாய் என் ஆழ்மன அன்பைக்கூட.பல பூக்கள் ஒடிக்கும் ஒரு சாவியை நான் கண்டிருக்கிறேன் உன்னிடம்.கேள்விகளும்,கருத்துக்களும்,சிக்கலில்லாப் பேச்சுக்களும்,நவீனத்துவம் இல்லாக் கவிதைகளும் வேண்டாமென உணர்வதாயும் சொல்கிறாய்.உனக்கான இயல்புலகம் அதுவெனக் கண்டிருக்கிறாய்.நீ உன் சிறகுகளோடு இணைத்திருக்கவில்லை உன் தேவைகளை.நீ அறிமுகப்படுத்திய உலகின்....அந்த மொழி சிரமமாயும் இருக்கிறது எனக்கு.

புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.கோடு போடத்தொடங்க நீ.....என்கிற அதே புள்ளியிலேயே முடிகிறது என் வட்டம்.வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப் பொருட்கள் என்னோடு உன்னப்போல் பேசும்.ஆனால்....நீயும் கடந்து போகிறாய்....நான்...?

அன்புப் பட்டம் ஒன்று காதுக்குள் கரையாமல் ......பெண் ஹிட்லர்......!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 26, 2012

பகிரண்ட வெளியில்...

வந்து கரையும்
ஒற்றை அலைகூட
உண்மையில்லை
சந்திப்புக்கான சங்கதிகளை
வெவ்வேறாகச்
சொல்லிப் போயின
பொய்யின் பின்குரலாய்.

அறிவியல் எல்லையில்
மானுட உலகம்
உயிரற்றதும் உயிருள்ளதுமான
கடலுலகில்
பொய்கள் உலவாதென
யாரோ சொன்னதாய் ஞாபகம்.

ஆழக் கடலில்
காற்று காறித் துப்புகிறதாம்
வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்.

நானும் நம்புவதாய்
பசப்பிப் புன்னகைத்து
தாண்டிக் கடக்க
ஊமையென நடிக்கும்
ஓடு முதிர்ந்த ஆமையொன்று
கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது
சீக்கும் சாக்காடும்
பங்கிட்டுக் கொல்கிறதென
சுவைத்து மென்று
விழுங்கும் நாவில்
மானுட மாமிசம்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, May 23, 2012

உறவுகள்...

அள்ளமுடியா
அமில மழை
தூறித் துமித்து முடிய
அடித்த பேய்க்காற்றில்
மூடிய கதவுகளை
அரித்துக்கொண்டிருக்கிறது
ஆக்ரோஷக் கறையான்கள்
பாறிக்கொண்டிருக்கிறது
நிலைப்படியோடு
கதவும் உறவும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 18, 2012

மே 18- 2012...

நமக்கான கனவுகள்
எங்களுக்கேயானவை
சதுரங்கச் சுழிகளிலும்
பாம்பு துரத்தி ஏறும்
ஏணிகளின் உச்சியிலும்
அவை காத்திருக்கும்.

எம் கனவுகள்
வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
நீரைப்போல் ஈரமானவை
பாலைவன நீரைப்போல
மண் உறிஞ்சிக் காய்ந்து
அடையாளம் தொலைக்காது.

என் பிணம் காவி வரும்
என் தாய்
தன் குறியையும்
காக்கவேண்டியிருக்கிறது.

என் தேசத்தின்
ஒவ்வொரு துகள் மண்ணிலும்
என் மக்களின் குருதி
காய்ந்த சருகுகளின் அடியில்
தொலைந்து போன
என் உறவுகள்
எப்போதும் அவர்கள் பற்றிய
எம் கனவு பற்றிய
நினைவுகளை அழிக்க
எவராலும் ஆகாது.

தீயும் போரும்
செல்லப்பூனை எமக்கு
இறப்புப் பற்றிய பயம் அற்று
கனவு நுரைகளை நீர்க்கவைத்து
எமக்கான கனவுகளைத் தொடரும்
காலடித் தடங்களுக்கு
அடையாளம் காட்டும்
நாம்........மிதிப்பட்ட
குருதி வழிகாட்டல்.

நமக்கான தரிசல் காடுகளிலாவது
எம் கனவுகள்
கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
கனவுகளைச் சீராக்க வரும்
இளம் காலச் சூரியர்களுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 15, 2012

நேர்மையின் காத்திருப்பு...

மூட்டைப்பூச்சியின்
இருப்பிடமென
ஒதுக்கப்பட்டிருந்தாலும்
கண்களுக்குள்
அலார மிரட்டலோடு
பழைய கதிரையொன்று.

சுருங்கிய முக ரேகைக்குள்
நேர்மை நிரம்பிய புன்னகை
அனுபவங்கள் அழுத்திய ஆட்சி
அந்தரத்து ஆரவாரமாய்
தாங்கிய நினைவுகள்.

நேற்றைய முடிவுகளே
நாளைய தீர்மானமாய்
வைக்கோல் நுழைந்து
உறிஞ்சும் புழுவென
வழியும் எச்சில் நேர்மை
வேண்டாம் வேண்டாம்.

நேர்மை பற்றி அறியும்
சுவர்களும்
யன்னல் சீலைகளின்
நுனிகளும்கூட இங்கு
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.

கைகாட்டும்வரை
என்னை...
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு
சாட்சியாய் இங்கு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 12, 2012

அம்மாவாய் அருகில்...

பத்திரமாய்....
பாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.

அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்.....

பிடி...பிடியென
துரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.

அம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.

அம்மாவின் தினத்தில்
அம்மாவாய் அருகில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

"தாயுள்ளம் படைத்த அனைவரையும் நினைப்போம்...வாழ்த்துவோம் !"

Sunday, May 06, 2012

அன்புள்ள ....க்கு !

சிறந்த குறிப்புக்களோடுதான்
இசைத்துக்கொண்டிருந்தேன்
என் கனவுகளுக்கு
மெட்டுப் போட்டுத் தருவதாய்
அடம்பிடித்து
வாசித்தும் காட்டினாய்.

இதே ’வைகாசி’ மாசத்து
ஒரு நீண்ட இரவில்தான்
’சங்கீதத் தோழி’யென்றும்
செல்லப் பெயரிட்டாய்
’நினைவு’ வலிக்க.

காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’

சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்.

ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.

உன்னால்
உரத்துச் சொல்லப்பட்ட
மூன்று வரிகள் இவை
’ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல்
உன் நினைவுகள்’.

மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....

இப்படிக்கு அன்போடு........
உன் சங்கீதத் தோழி!!!
 
ஹேமா(சுவிஸ்)

Thursday, May 03, 2012

சில முடியாதவைகள்...

பாசம் பணம்
இரண்டுக்குமான தூரத்தை
சொல்லி முடித்த அவன்
எதையோ இடக்கையில்
எழுதிக்கொள்கிறான் .

பணம் பற்றிச் சொல்ல
கலைந்த அமைதி
வலச்சுழியில் லயித்திருந்த
சின்னவன்கூட விழித்தான்.

சொல்லிடறிய பாசம்
பாவம்....
ஊடாடும் உயிரோடு
துணிகிறது கொல்ல
முடியாதென்கிறான் சின்னவன்.

புழுங்கும் வெப்பம்
இடக்கை மை உருகி வழிய
மல்லுக்கட்டமுடியா
பலனற்ற இரவொன்றில்
நுழைகிறான் கல்லறைக்குள்
தலைமுறைத் தோல்வியோடு.

இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!

ஹேமா(சுவிஸ்)