*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, October 31, 2009

இருளும் ஒளியும்...

புத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.

அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.

ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.

அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.

வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.

எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 27, 2009

புதிதாய் ஒரு பூ...

நொந்த தருணங்கள் நொடிந்து விழ
எண்ணச் சிலந்திகளை கடித்துப் துப்ப
அந்தகார அரூபங்களாய் எரி பூச்சிகள்.

பகலவனுக்குப் போட்டியாய் எரிக்க
என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.
தீயின் அகோரம்
என் பசப்புச் சிரிப்பை
அம்பலப் படுத்தி
எரித்துக்கொண்டே விரட்டுகிறது.

கோடை விடைதர
வாடைக் காற்றில்
பூமி மஞசள் நிறத்தில்
நாகரீக உடையோடு.
எனக்குப் பிடிக்காவிட்டாலும்
அரிதாரம் இட்டுக்கொள்கிறேன்
அடையாளம் காட்ட.
வேற்று நிறங்களை பூமி ஏற்றுக்கொள்ள
வேறுபட முடியாமல்
ஒத்துழைத்துத் திரும்புகையில்
வாழ்வின் உண்மைகளில் ஒரு வெறுமை.

பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.

நான்கு சுவர்களுக்குள் பயணித்த உணர்வு
மொழி கடந்து தூரம் கடந்து
பதிலில்லாக் கேள்விகளோடு
நெடும் பாதையில் விரைகிறது.
பாதைகள் திசை சிதறிப் போனதா.
இல்லை...
என் உணர்வுகள் கலைந்து போனதா.

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 22, 2009

சேமித்த கணங்களில்...


ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !

என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

தடுமாறும் மனதின்
தகறாறு நீ.
எங்கே என் காதலைப்
பார்த்து விடுவாயோ
பயத்திலே மறைக்கிறேன்
என் கண்களை !

மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திருக்கின்றன.
நீ...
விட்டுப் போன
வார்த்தைகளோடு !

நகர மறுக்கிறது
நிமிடங்களும் நொடிகளும்.
நீ வரும் வரை
என்னோடு விரதமாம் அவைகளும்.
வந்துவிடு !

நீ ...
தராமலேயே போனாயோ
தந்து வராமல் போனதோ
உன் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கவே இல்லை !

சுற்றிச் சுழன்று
திரும்பியும் விழுகிறேன்
உன் நினைவுக் குழிக்குள்.
என் புதைகுழியாகவும்
அமையலாம் அது !

கூட்டுக்குள்ளும் அடைத்து
கதவையும்
திறந்து விட்டிருக்கிறாய்.
உன்னைத் தாண்ட முடியாத
சுதந்திரம்.
எனக்கு ஏன் !

நனைந்த தலயணையை
உலர்த்தி எடுத்துப்
பரவி விடுகிறேன்
படுக்கை முழுதும் நீ.
கைகளோடு
இறுக்கிக்கொள் என்கிறேன்.
மறுபடியும்
உயிர்த்தெழுந்து
மடி சாய்த்துக்கொள்கிறாய்
உணர்வோடு !

உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன்னால்
மட்டுமே முடியும்.
உயிர்ப்பித்தாய்
உயிரையும் எடுக்கிறாய்.
பத்து நாள்தானே
பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
கல்லாய்த்தான் இருந்தேன்
கரைத்தது உன் அன்பு.

கண்ணீரின் சாரல் எங்கும்
அன்பே...போய்விடு
யாரும் பார்க்கமுன் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 19, 2009

நேற்றைய இரவில்...

வெள்ளைத் தெருவில் குடியிருப்பு
பலகாலமாய்.
குடிசையும் கூடும்
வாழ்வும் நிரந்தரமாயிற்று.

மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு.

மரபணு கொல்லாமல்
தொடரும் நகர்வில்
இன்னும்
இரையூட்டி...இரையூட்டி
வளர்ந்த ஒரு மிருகம்.

காயசித்திக் காரகன்.
காரடை தின்றாயா
காராம்பசுவில்
பால் கறந்தாயா என்கிறது
பிந்திய இரவில்
செய்மதி துளைத்து.

காரணம் சொல்லாத கோடாங்கி.
இயல் இனம் மாறாத கார்க்கோடகன்.
இல்லையேல்
கேசவாரிப் பறவையாயும் இருக்கலாம் !!!

இகழ்தலுக்காட்பட்டு (நன்றி நேசன்)

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 17, 2009

தீபத்திருநாள் ஈழத்தில்...

Orkut Scraps - Butterfly
தமிழன்னை தவமிருக்கிறாள்.
நொந்திருக்கிறாள்.
அவதி அவளுக்கு
வேதியல் மாற்றங்களாலும்.
தன் குழந்தைகளின் இழவுகளுக்கு
அழுதழுது கண்களிலும் புண்.
உயிர்கசிந்து
ஊண் உருகிக் கிடக்கிறாள்.
கனத்த பாரம்
கைகளிலும் தோள்களிலும்.
பாவம் கொஞ்சம் தூங்கட்டும்.

உற்சாகமாய் பசுமையாய் எழுவாள்
இயற்கை அன்னை உயிர்ப்பிக்க.
மலைகளைச் சுருட்டி வைத்து
புயலின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.

அண்டம் விரிப்பாள்.
அவனியெங்கும்
மகப்பேறுகள்.
சூல்கொள்வாள் தானும்.
வண்ண வண்ணமாய்
வண்ணத்துப் பூச்சிகள் படைத்து
கலயம் கலயமாய்
கருமுட்டைகள் கொடுத்து
மயிர்கொட்டிப் புழுக்களால்
என் தேசம் நிறைப்பாள்.
தானும் பத்தியம் இருந்து
பேறுகாலம்
பார்த்துக் காப்பாள் அவளே.

முட்டைகள் வெடித்து விழும்
மயிர்கொட்டியாய்.
இன்னும் இனம் வளர்ப்பாள்
மீண்டும் கூடுகட்ட
இருள் விலகும்.

வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!!

என் இனிய நண்பர்களுக்கு
என் மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 13, 2009

முடியாத அவகாசங்கள்...

சிரிக்கச் சிரிக்க
கவிதை ஒன்று எழுதலாமென்று
விறுவிறென்று
சிவப்பு விளக்கில் கூட
நிற்காமல் நடக்கிறேன்.

தபால் பெட்டியில் அபாய அறிவிப்புக்கள்.
பூட்டிய கதவைத் திறக்கும்போதே
தனிமை முட்டித் தள்ள
தொலைக்காட்சி திருப்புகையில்
"முகாம்களிலும் பட்டினிச்சாவு".
தொலபேசி அலற
பிறந்த தேசத்து அகதிகளுக்கான பணத்திரட்டல்.
வெதுப்பகத்து ஏதோ திரள் ஒன்று
பசி போக்கக் குளிர்ந்து கிடக்க
ஒரு மிடர் தண்ணீரால் தொண்டை நனைத்து

இணையம் திறந்தால்
இறப்பு
அழிவு
அலட்சியம்
அநியாயம்.

இயலாமை வர்ணங்களால்
சிலவரிகள் கிறுக்கத் தொடங்குகிறேன்.
சிவப்பு
பச்சை
நீலம்
கறுப்பு என
கண்ணீரில் கரைந்து
என்னை மாற்றுகின்றன வர்ணக் குழைவுகள்.

காதலைத் தேடினேன்
அங்கும் காத்திருப்பு
சந்தோஷம்
சிரிப்பு
தோல்வி
அழுகை
முற்றும்.

மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.

சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 11, 2009

முகமூடிக் காதல்...

இப்போ எல்லாம்
அடிக்கடி
உன் மடியில்
விட்டுச் சென்ற
பறவையின் இறகாய்
பசிக்கு ஏங்கும் ஒரு சிறு பாலகனாய்
ஏதோ ஒரு வளர்ப்புப் பிராணியாய்
உன்னோடு அணைந்தபடி
பால் சுரக்காத் தாயாய் நீயும்.

நிழல்தரும் இலைகள்போல
நீயும் சருகாவாய் ஒரு பொழுதில்
அன்று முடிவில்லாச் சூரியன்
சுட்டெரிப்பான்
விட்டும் போவான்
இன்றைய நிழலில்
நாளை நீறான சாம்பலாய் நான்.

அனிச்ச இதழைவிட
உன் அன்பு இதம்
மூச்சுக்காற்றின் வெப்பம்
ஒரு யுகத்தின் இனிய தாம்பத்யம்
மழைத் தூறலிலும் வானின் கீறலிலும்
வானவில்லாய் நீ
எந்த நேரத்திலும்
சுவடே இல்லாமல் 

அழிந்தும்விடலாம்.

காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்
அத்தனையிலுமே உன் விம்பம்
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, October 09, 2009

இன்று நான்...

நெடுநாள் கழித்து
இன்று...
என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்.
நேற்றுத்தான் பார்த்தது போலிருக்கிறது
எந்த மாற்றமும் இல்லாமல் இப்போதும்.

பறவைகள் அப்படியே
மனிதர்கள்
பூக்களும் கூட.
மாறச் சாத்தியம் இல்லை.
நானும் அப்படியே.
சாலைகள் கொஞ்சம் ஒடுங்கிவிட்டதோ
மலைகள் கொஞ்சம் மெலிந்திருக்குமோ
காடுகளிடை வீடுகளோ
என்பதைத் தவிர.

நீண்டு வளைந்த காலம்
போதையேறித் துவண்டு கிடக்கிறது.
கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.
தாயின் வயிற்றை உந்தி உதைத்து
முகமெங்கும்
உப்புப் பூக்க வைக்கும் கர்வம்
வளரும் அந்தக் கருவுக்கு.
நான் மாத்திரம் அப்படியே.

சிறு வழி
பின் பெரு வெளி தாண்டி
வெயிலும் மழையுமாய்
சேற்றுக் கிடங்குகள் கடந்து
கற்கள் அகற்றி
விவாதங்களை வேதனைகளை
குடைகளாய்
விரித்து மடக்கி
ஆசை கனவு காதல்
வெட்கம் வேதனை உட்புகுத்தி
என்னையே எனக்கு அறிமுகமாக்கி,
ஆரத்தி எடுக்கும்
அழகான நங்கையாய்
பொட்டிட்டுப் பூவும் செருகி
பருவம் கோர்த்து மையலாக்கிய வயது.

நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 06, 2009

பயந்தாங்கோழிக் கடவுள்...

ஒரு பிடி மண் எடுத்து
மனிதனாய்...
மிருகமாய்...
இயற்கையாய்...
இன்பம் தந்த இறைவன்.
இன்று
தன்னைத் தானே குட்டிக்கொண்டு.
மானுடம் காணச் சகிக்காமல்
தப்பாய் ஒரு விதி செய்தோம்
என்று சலித்தவனாய்.

கொடுத்ததை எடுக்கவும் முடியாமல்
கோணலாய் வளைந்த உலகை
திருத்தவும் முடியாமல்.
குரங்காகவே விட்டிருக்கலாம்.
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்.

மாறிக்கொண்டு இருக்கும் மனிதன்
அவனால் மாற்றப்படும் இயற்கை
அவஸ்தையோடு
முழி பிதுங்கிவனாய்.
வானத்தில் ஓட்டை
கடலுக்குள் ஓட்டை
பறவைகள் மிருகங்கள் படுக்க இடமின்றி
மரங்களை அழித்துவிட்டு
கட்டிடக் காடுகள்.

கொளுக்கட்டை பிடிக்கப் போய்
குரங்காய் ஆன கதைதான் என்கிறாள்
பார்வதி தேவி.
முருகனும் பிள்ளையாரும்
மீண்டும் அப்பனுக்கு
பாடம் சொல்லித்த் தர ஆயத்தமாய்.
செய்வது எதுவுமே இன்றி
படைத்தவனே பயந்து பின் வாங்கி
நடப்பது நடக்கட்டும் என்று ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்க்கும் ஒருவனாய்.

சமைத்தே இருக்க மாட்டானோ
முன் கூட்டியே அறிந்து இருந்தால்!
படைத்துவிட்ட மனிதக் குரங்காலேயே
தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ
என்ற பயம் வேறு உள்ளுக்குள்!

முட்டாள் கடவுளே
கையால் ஆகாத உன் குருட்டாட்டம்
பேரழிவுகளின் அவலம்.
தடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு
படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.

அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 04, 2009

வேண்டாத ஞாயிறு...

ம்ம்ம்ம்.....
இன்றைய பொழுதில்
இப்போது
என்ன செய்துகொண்டிருப்பாய் நீ.
சில சமயம்
என்னைக்கூட
நினைத்துக்கொண்டிருப்பாயோ.

கணணிக்குள் கை விட்டுத் துழாவி
எதையோ தேடிக்கொண்டிருக்கலாம்.
இன்று ஞாயிறு.
ஆதலால் தொலைபேசிக்குள்ளும்
தொலைந்திருக்கலாம்.

அங்கும் அளந்து அளவோடுதான்
உன் அளவலாவல்.
கதைப்பதில்கூட பச்சைக்கஞ்சன் நீ.
முத்தா உதிர்த்துக் கொள்வாய்.
செல்லமாய்தான் பேசிவிடேன் கொஞ்சம்.

ஆத்திரம்தான் வரும் எனக்கு.
ஆவலோடு நான் காத்திருக்க
அப்புறமாய் பேசலாம் என்பாய்.
ஆணவமோ இல்லை
இப்படித்தான் இயல்போ.
ஏன் அப்படி ?

என்னையே நினைப்பது உண்மையென்றால்
சிலசமயம் சிரித்தும் கொண்டிருக்கலாம் நீ.
நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு.
எப்போதும் நான் "அழுமூஞ்சி" என்ற நீ
"இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னை"என்றாய்.

நான் உன்னை
நினைத்துக்கொண்டே தூங்குவதும்
தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
என் வழக்கமாகிவிடுகிறது.

கொஞ்சம் பேசிவிடு அன்பே.
முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
நான் ஒரு சமயம் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, October 02, 2009

முடிவிலி...


தொடர்புகள் அற்ற ஒரு பெருவெளி.

ஒரு யானை...
ஒரு குழந்தை...
ஒரு ஆறு...
ஒரு பிச்சைக்காரன்...
எனத் தொடர் தொடராய்.
முடிவில்லா ஒற்றைப் புள்ளியாய் !

யானை ...
தன் சுயமற்று
பாகனின் அங்குசத்தில்
அசைகிறது அது
அதன் மன உளைச்சலும்
தன் இனத்தைக் காணாத ஏக்கமும்
யாருக்குச் சொல்லும்
என்றாலும்....
ராஜாபோல கம்பீரமாய்
ஒரு தைரியத்தோடு
வாழ்ந்து கொண்டுமிருக்கலாம்!

யார் அந்தக் குழந்தை...
யார் அந்தப் பிச்சைக்காரன்...
ஆறு ....
என்னோடு ஏழேழு ஜென்மங்களில்
கை கோர்த்தவர்களோ !

கனவில் மட்டுமே முடிகிறது
கடவுளோடு
சண்டை போடவும்
கோபிக்கவும்
கொலை செய்யவும்
ஏன் ...
தற்கொலை செய்து கொள்ளவும் கூட!

பயண முறைகளில் மாற்றமில்லை
தெளிவாய் இருக்கிறேன்
பயணம் தூரம் என்பதால்
எல்லாவற்றையும்
சரி பார்த்துக் கொண்டேன்
குழப்பமில்லை

ம்ம்ம்...
பொழுதும் விடியும்
பயணமும் தொடங்கும்
இன்னொரு விடியலை
கடப்பது என்பது ? !!!

ஹேமா(சுவிஸ்)