*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 28, 2009

வேண்டும் ஒரு சிற்பியும் ஒரு உளியும்...

கணங்கள் சுருங்கி
மனதை வறுத்தெடுக்கிறது உயிர்.
கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.

அன்றும் கூட அப்படித்தான்
இழுத்தெடுக்கையில் ஒரு விரல்
அகப்படும் ஒரு முகம்
அது தெரிந்து அறிந்ததாய் கூட
முனகிக் கொண்டிருந்தது.
என்றாலும் பேய்கள் துரத்த
வேகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது அவலம்.

தீபாவளிக்கு வெடி கொளுத்தினால் கூட
பயந்த எம் சரீரம்,
பென்னாம் பெரிய குண்டுகளையும்
வெடிச் சத்தங்களையும் சுமந்தபடி
பயத்திற்கே தைரியம் சொல்லிக்கொண்டு
தீவின் கரைகள் எங்கும்
நாட்டின் நரம்புகள் எங்கும்
மிருகங்களைச் சிநேகமாக்கியபடி
பசியும் ,தாகமும்,தூக்கமும் ,படிப்பும்
பாசமும் தூரமாகி...அந்நியமாகி
அம்மா...அண்ணா என்கிற ஏக்கங்களை
மூட்டை கட்டி விட்டு
மூச்சுவிடச் சுதந்திர உலகம் தேடி
இழந்த உயிர்களுக்கும் உறவுகளுக்கும் ஈடாய்
ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்
என்கிற நப்பாசையில்.

நாலு பக்கமும் கடல் சூழ
நடுவில் ஒரு சிரங்கை மண்ணுக்குள்
மண்ணுக்காகவே உயிர் பலிகள்.

கேட்டது கிடைக்கவில்லை.
கிடைப்பதோ திருப்தியில்லை.
குண்டுகளும் ஆயுதங்களும்
துளைத்து உடைக்கிற கற்களா தமிழன்!
இறுகிக் கிடக்க வேண்டியதாயிற்று.
எங்களைச் செதுக்க ஏன் ஆயுதங்கள்.
கை தேர்ந்த ஒரு சிற்பியும்
கூரிய ஒரு உளியும் போதாதா !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 21, 2009

உலகத் தமிழா ஒன்று சேர்...

என் பூமியின் புழுதிக் குளியலிலேயே
பூப்பின் புனிதம் ஆனது என் தேகம்.
இப்போ...
கந்தக பூமியாய் அது
சுடுகாடாய் அது
மனிதன் வாழமுடியா மண்மேடாய் அது.
பிணக்காடு கடந்து
இரத்த ஆறு தாண்டியே
விலங்கிட்ட என் தமிழ்த்தாயை
தூர நின்று தரிசிக்கிறேன்.
கண்ணீர் கூட வற்றியவளாய்
பேதலித்துப் பிதற்றியபடி.

தோழா கொஞ்சம் நில்...கவனி
பறக்கும் நிலை தவிர்.
உன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.
எங்களுக்கான இறுதி மணித்துளிகளின்
எல்லையில்தான் இன்றைய எம் பயணம்.
தனியாகப் பறக்கும் சக்தியைக்
சற்றுப் புறம் தள்ளு.
உனக்கு....இன்று
தனித்துப் பறத்தல் அவசியமற்றது.
கை கோர்த்துக்கொள்.
நடப்பது ஒன்றே
இப்போதைக்கு எமக்குத் தேவையானது.
கொடு உன் தோழமைக் கரத்தை !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 20, 2009

எம் தேசம்...

தேசம்...
எம் தேசம்
அது என்னவாய்...?

மனிதம் செத்து
மானுடம் மடிந்த படி.
புத்தன் வாழ்ந்த
சத்திய பூமியா-இல்லை
பேய் பிசாசுகளின
சுதந்திர தீவா.
மயிர் கொட்டியின்
உயிரை விடக்
கேவலமாய்...

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்றானே பாரதி.

இன்று...
என் தேசத்தில்
பட்டினிச் சாவு
நித்தமும்...
நச்சு பூச்சியை
நசிக்கக் கூட
நெஞ்சில் வலி,
எம் தேசத்தில்-இன்று
எத்தனை உயிர்கள்
எத்தனை விதமாய்.

புத்தனும் போதித்திருக்க
மாட்டான்
பதவிக்காக
பட்டினிக் கொலையும்,
மண்ணுக்காக
மனித படு கொலையுமாய்
அஃறினையாய்
உயர்தினையாய்
எத்தனை உயிர்கள்.
எம் தேசத்தில் மாத்திரம்
எழுதினானா
ஒரே நாளில்
உயிர் பறிக்க
பிரமன்.

சொறிந்த புண்ணையே
சொறிந்து சொறிந்து
சீழ் வடிய வடிய
மூடிக் கட்டிய
வேட்டியும் சால்வையுமாய்
சிம்மாசனத்தில்...
மாறிய உருவங்களும்
மாறாத மனங்களுமாய்
அரக்க வம்சங்கள்
எம் தேசத்தில்.

தாயே...
என் தேசத்துத் தாயே
உன் கை ஒடித்து,
கால் முறித்து,
உன்
பிஞ்சுக் குழந்தை
குரல்வளை நெரித்து,
உன்
நெஞ்சு மிதித்தே
நடக்கிறார்கள்.

மனிதம் தொலைந்து
ஒளிந்து கொண்டது
புத்தனின்
முதுகிற்குப் பின்னால்.
பொறுமைக்குப்
பொருள் தெரியா
அகராதி அவர்களது.

காலங்கள் எத்தனை
அவலங்கள்
பார்த்தபடி...
பேச்சு வார்த்தை...
பேச்சு வார்த்தை...
யார் யாரோடு ???
"சப்" என்று
காதுக்குள் வலியெடுக்கும்
பொய் வாய்ப்பாடுகள்
வெளி நாடுகளுகளோடு.

வயோதிபர் மடங்கள் போல
விதவை மடங்கள்...
அநாதை மடங்கள்...
மடங்காய்...
இரு மடங்காய்...
மும் மடங்காய்...
முட்டி வழியமுன்
முடிவெடு தாயே
முடிவெடு
காப்பாற்று
உன் தேசத்தை !!!

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஹேமா(சுவிஸ்)

Friday, April 17, 2009

நாசமாய்ப் போக...

சிலசமயங்களில்
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !

மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !

பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !

சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !

தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.

கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 13, 2009

இல்லாத ஒன்றைத் தேடி...

சோர்ந்து போனதாய் நினைவில்லை.
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.

நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.

என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.

புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கி,
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!

ஹேமா(சுவிஸ்)

படம் தந்தது-கடையம் ஆனந்த்

Saturday, April 11, 2009

புன்னகை தேடுகிறீர் எனக்குள்...

சிறையெடுத்து
தனக்குள் புதைத்தபடி
நல்லவனாய் நடிக்கிறான் ஒருவன்.
கொஞ்சம்
கேட்டுத்தான் பாருங்களேன்
அவனையே.
என் புன்னகை பார்க்க.

பரிதாபம் தூது போக
யாரோ எல்லாம்
இரங்கித் தருகிறார்கள்
இரவல் புன்னகை.
வேணாம்...தேவையே இல்லை
தேவை எனக்கு
என் இயல்பில் புன்னகை.

முறைக்கிறான்...முறைக்கிறான்
முறையோ என்று
எரிகிறான்...எரிக்கிறான்.
புன்னகை பறித்து
அன்பின் இடைவெளி குறைத்து
போர்க்களம் ஆக்குகிறான்.
சுயநலத்தின் மொத்தமாய்
சுள்ளான்போல ஒரு உருவம்.
புன்னகை புதைக்கும் பைத்தியக்காரன்.

என் புன்னகையை மீட்டிருக்கிறேன்
எத்தனையோ தடவைகள்
கெஞ்சி மன்றாடி.
சுவரில் தொங்குகிறான் நிழலாய்.
விழி சுழற்றி
பார்த்து முறைக்கிறான்.

தருகிறான்
அருகில் இருக்கும்வரை.
கள்ளன்
பிரிகையில் கொண்டே போகிறான்
தன்னுடனேயே.
என்ன செய்ய நான் ?
சிறைப்பட்டதாய் என் சிரிப்பு.
தெரியவில்லை மீட்டு எடுக்க.

வேந்தர்களின் விலங்கிற்கும்
அகப்படாத என் புன்னகை
இவன் பூ விலங்கிற்குள்
அகப்பட்டது அதிசயம்தான்.

விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
போடா...போ
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 08, 2009

தமிழ்ப் பசளை...

சமாதானச்
சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்.

எம் சொத்தையே...
எம் உரிமையையே...
கொள்ளையடித்து
தெருவில்
விரட்டியடித்த
புத்தன் தந்த புனிதர்கள்.

வாழ்வின்
துயரக் கொடியில்
காயவிட்டிருக்கும்
கட்டாயக் கைதித்
துணிகள் நாம்.

எதிர் காலக்
குருத்துக்கள்
குடல் சுருங்கி
ஆரோக்யத்தில் வறுமை
கல்வியில் வறுமை
ஆதிகால மனிதர்களாய்.

சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன.

காலத்துக்குக் காலம்
மனிதப் புதைகுழிகளின்
இடங்கள்தான்
மாறுகிறதே தவிர
உயிர்கள்... என்னவோ
தமிழனதுதான்.

எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.

வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 01, 2009

மொழிபெயர்த்த காதல்...

சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
புதைக்கப்பட்டிருந்தது
என் புதிய வீணை ஒன்று.

மீட்டெடுத்து
தூசு தட்டி
பட்டாடை போர்த்தி
பளிங்கு மேடையில் அமர்த்தி
மீண்டும் மெல்ல
மீட்டும் நிலைக்குக்
கொண்டு வந்து
பத்தின் வருடங்கள்.

மௌனத் தெருவில்
துணிவோடு
மறுபடியும் தடம் பதித்து
மொழி மறந்த காதலை
மொழி பெயர்த்து
பதிப்பில் இட்டவன் நீ.

தவழும் காற்றைப் பற்றியும்
அடை மழை பற்றியும்
புல்லரிக்கும் பாடல் பற்றியும்
எம் இனத்தின் அழிவு பற்றியும்
காதோடு இரகசியமாய் பேசிய

நீ.......

நிலவின்
இருப்பிடம் தேடி வரும்
வானமாய் வருகிறாய்.
அழும் குழந்தையை
ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
உன் வரவு.
வா என் அன்பே...
காத்திருக்கிறேன் காதலொடு !!!

ஹேமா(சுவிஸ்)