*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, June 02, 2015

என்னூர் இளவரசி...

"கொஞ்சம் கழனித்தண்ணி தாங்கோ
என்ர குஞ்சுகளுக்கு."

ஒரு போதும்
இரங்கியதில்லை தனக்காய்
நாமாய்ப் போர்த்திவிடும்
ஒருபாதிச் சேலை தவிர.

தெருவோரம் உருட்டிவிட்ட
சாராயப் போத்தலென
வெறித்தபடி லட்சியமாயொரு
ஆயாச நடை.

பெருமூச்சோடு
தெருக்கடக்கும் ஒருவன்
தீய்ந்த தேகத்தோடு ஒருவன்
எச்சில் வழிகிறான்
இன்னொருவன்
அவள் பெருமுலைகள்
மூட மறுத்த முந்தானை
முனையிலொருவன்.

உணராப் பிறழ்வோடு
உறைகிறது
உள்மனத் தீக்காடு
கருக்கொண்ட
அவள் தீக்குள்ளேயே.

இருத்தலும் தொலைதலும்
பிரியமென்றால்
ஏக்கங்களின் நிறங்களே
அவளின் நாய்க்குட்டிகள்.

ஒன்று இடுப்பில்
ஒன்று கையில்
இன்னொன்று
வயிற்றுச் சேலைக்குள்ளுமாய்
காவி...

தன் உயிருக்கும்
வாழ்வுக்குமிடையிலான
கருணையற்ற
கடவுளின் மௌனமாய்
நிராகரித்த மனிதருக்குள்
'மனுஷி' என்கிற ஒழுங்கறுத்து
'நாய்க்குட்டி விசரி'யாகி
நடக்கிறாள்
நேற்றின் தடத்திலும்
நாளையின் நவீனத்திலும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)