*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, July 10, 2014

மாயவனோ நீ கண்ணா...

போதைக்கலவரம்
ஏன்
கீதையுரைத்தவன்
முகத்தில் ?!

நுதல் நோக்கிப்பின்
இதழ் நெருங்கி
தாழ்வடம் திருகி
நீள்வாதை தருபவன்
ஓரடியால் உலகளந்தவன்
கண்ணில் குழப்பம்
ஏன் ?!

வேய்ங்குழல்
தனித்துத் தவிக்க
துளையில்
மழை நுழைந்தழ
உஷ்ண மூச்சின்
காத்திருப்புக் கண்ணா
தண்ணென்ற
நினைவும் நீண்டழ.

பாலூட்டும்
அன்னை கையில்
பறித்த பாலடையென
தனித்துச் சேகரிக்கும்
என் வெறும்பொழுதுகள்
உன் குறும்புகளை.

தீராக்காதலும்
சமர் செய்து
சமமாக்கும் காமமும் தீர
அணைத்தென்னை
முத்தமிட்டு
முகில் வண்ணம்
நிரப்பென் மேனி முழுதும்
அடித்துத் தோய்த்தாலும்
போகாத ஆயுள்வர்ணமாய்.

பிணை என்னை
சாதுர்யமாய்
நெளியக்கிடத்தி
எடுத்துக்கொள்.

கள்வனென்றார் கோதையர்
காதலனென்பேன்
கண்ணா உன்னை
பாற்கடலில் பள்ளிகொண்டு
வெட்கிக் கவிழ்ந்த
ஒவ்வொரு பிரியப்பொழுதிலும்.

வண்ணப்பொடி தூவு
வந்தென்னை வம்புசெய்
சேலையிழு
உன்னையெடு
என்னில் புதைத்துவிடு.

கள்ளன் போல
இயல்பொளித்த
கோபித்த முகமதில்
அன்னையில்லை
அணைப்புமில்லை கண்ணா
கன்றாய் கணன்று
கதறுமென் மனதில்
இறப்புத்தவிர ஏதுமில்லை
ஏற்றுக்கொள்
ஆலிலை மாதவா என்னை!!!

ஹேமா(சுவிஸ்)

2 comments:

பால கணேஷ் said...

உன்னையெடு | என்னில் புதைத்துவிடு.
///அன்பில் தோய்ந்த அருமையான வரிகள். மிகமிக ரசிக்க வைத்தது கவிதை.

சத்ரியன் said...

மறந்தேன். மெய் மறந்தேன். இப்பவாவது ஒத்துக்கொள். மதுவாகினி உனக்குப் பொறுத்தமான பேர்தானே?

Post a Comment