*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 31, 2013

யாழ் நூலக நினைவு...

நெருப்பு நெருப்பை அணைக்காது.யாழ்/நூலகம் இது எம் சொத்து.மனதில் அணையா நெருப்பு.ஒருவேளை வரும் தலைமுறை துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்தாலும் அது எமக்குக் கற்பித்த பாடத்தையும் இழப்பையும் மறக்காது !






ஹேமா(சுவிஸ்)

Thursday, May 30, 2013

காதல் துளிகள் (7)


உன்
கூண்டுக்குள்
பிடிபட்ட
கிளிதான் நான்.
நீ.....
கிள்ளியெறியும்
நான்கு
நெல்மணிக்காகவா
சீட்டுக்களை
இழுத்துப்
போட்டுக்கொண்டிருக்கிறேன்
புரியாதவனே !


சபிக்கப்பட்ட
நாளொன்றில்
கெடு வைக்கிறான்
கொல்லவா இல்லை
கொள்ளவா
கொசுவை விட
மோசமானவன் !


பாடிக்கொண்டேயிருக்கிறேன்
யாரும்
கேட்கமாட்டார்களெனத்
தெரிந்தும்
அநாதரவற்ற
குளக்கரையோரத்தில்.....
குயிலெனச் சொன்னவன்
இப்போதெல்லாம்
கோட்டான்
என்கிறான் !


காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான்
நகைச்சுவைதான்
இருந்தும்
அவன் பாஷை
புரியவில்லை இன்னும் !


கனவுகள்
பலித்துக்கொண்டிருப்பதாய்
பறக்கிறான்
கனவுகளுக்கு
கால் முளைக்க
வைத்துக்கொண்டிருக்கிறேன்
நான் என்பதை அறியாதவன் !


பனிபூத்த நாளொன்றில்
நடந்த தடங்கள்
தெளிவாக
அள்ளியெடுக்க
கைச்சூடு தாங்காமல்
உருகி வழிகிறான்
திருடன்.....
இன்னும் ஊடலில்தானோ !


ஒற்றை விநாடிக்குள்
கொள்ளை போக
முடிகிறது
அன்பின்
முடிச்சுகளுக்குள்
மட்டுமே
இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !


கொஞ்சம் கோபமா
இல்லை நானயறியாத
ஊடலா
பேச வரமறுக்கும்
என்...
மௌனங்களை மொழிபெயர்த்து
தன்...
கவிதைகளாக்கியிருப்பான்
இந்நேரம்
நாளை பிரசுரமாகுமது !

ஹேமா(சுவிஸ்)

Monday, May 27, 2013

எனக்கானது இது...


மொட்டுவிட்ட பூவுக்கு
நீறூற்றுதல்
உமக்கு வாழ்வியலானால்
எனக்கென்ன.

வியாபார
ப் பொருளென்று
பேரம்பேச அரிதாரமிட்டு
இனி இவள்
காதல்வசப்படுவாளென்றும்
அறிவித்து
இன்னும் புதிது புதிதாய்
ஏதேதோ.

பருவத்தால்
உடல் மாற
மதத்தால்
மலர் அர்ச்சனையால்
உருமாற்றி
கடவுளின் காவல்காரர்கள்
வரலாற்று எழுத்தாளர்கள்
கலை வளர்ப்பாளர்கள்
கையில் என்னை
கற்பழிக்கக் கொடுக்க
புன்முறுவலோடு
இத்தனை
பூச்செண்டுகள் தந்தா
உங்கள் புனிதம் காப்பீர்.

என்னவோ....அது
இருந்துவிட்டுப் போகட்டுமே
எனக்கென்ன...

தொப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை
தீட்டாக இருக்கலாம்.

என்னையும்
தீட்டென்று ஒதுக்கி
துர்நாற்றக் கண்ணீரை
என் குழந்தைப் பருவமுடைத்து
ஏன் நிரப்புகிறீர்.

உமக்கென்ற சடங்குகள்
இருந்துவிட்டுப்
போகட்டுமே எனக்கென்ன...

பழமைவாதமும்
பாட்டி சொன்ன வடைக்கதையும்
புனிதமென்றால்
என் இன்றைய தெளிவும்
தேவையற்ற சம்பிரதாயச்
சடங்குகளும்
எனக்கு என்னோடு.

என் பறப்புகளுக்கு
இரு சிறகுகள் போதாதென்று
தவமிருக்கப்போகிறேன்
மண்ணுருண்டை
உடைத்து வரும்
சிற்றீசலுக்காக.

எனக்கான ஆசைகள்
கனவுகள்
சிறகு கொண்டு வரும்
ஈசலோடு
இருந்துவிட்டுப் போகிறேனே
உங்களுக்கென்ன!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 26, 2013

கடவுள் கவிதை...


கண்மூடிக்கிடக்கையில்
ஆழ்மன இருள்
ஒற்றைக் கீற்றொளி...
கடவுள் என்கிறார்கள்
ஞானிகள்
நானோ அதை
நான் என்கிறேன்
ஆக்ரோசமாக
தள்ளி விட்டு எழும்ப
என் உடம்பை அசைக்க
அந்த ஒளியே உதவுகிறது
இனியாவது
என்னை உதறி
ஒற்றையில் வாழலாமென
நினைக்காதேயென
கர்வமாய் முறைக்கிறது
அந்த ஒற்றைத் துளி ஒளி !
 
நிழல் உடைக்கும்
ஒரு கனவு
வான் துளைத்துப் பறக்கும்
சுந்தந்திர வெளியில்
ஒரு பறவை
சுட்டெரிக்கும் சூரியனால்
வெளிர்க்கும் பச்சையம்
பாரங்களைச் சுமக்கும்
வேர்கள்
வியர்த்துப் புழுங்க
மனிதம் மறந்த மனிதனுக்குள்
இரக்கம் வர
பிரத்தியேக
இயக்கமொன்று வேண்டி
எழுதிக் களைத்து
கிழித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கவிதை!

ஹேமா(சுவிஸ்)

சபிக்கப்பட்ட இரவு...


பொழுதுகளை
மௌனிக்க வைக்கிறது
என் வீட்டு மெழுகுதிரி
மெல்ல வெளியில் பார்வை பரவ
பகலின் வெளிச்சத்தை
மௌனிக்க வைத்த
இரவைச் சபித்தபடி
தெருவைக் கடக்கிறது
ஒரு காட்டணில்.
தன் மகவை
வயிற்றின் மேல் கட்டியபடி
சாலையில் ஒரு தகப்பன்.
மெல்லிய காற்றையே தாங்காமல்
கொம்பிழக்கும் ஒரு இலை.
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
ஏதோ ஒரு அவலம் ஆபத்து.
என் அறையில்
இசைக்கிறது மொழியற்ற ஒரு பாடல்.
தனியாக எரியும் மெழுகுதிரிக்கு
நான் துணையென்று நினைக்க
தலையாட்டி
தான் எனக்குத் துணையென்கிறது.
உன் நினைவை மட்டும்
சொல்லாமல் ஒளிக்கிறேன்
மெழுகின் ஒளியும் மெல்லிய இசையும்
மனதை நிறைத்தாலும்
நிறையவில்லை இன்றைய நாளும்
நீயில்லாமல்....!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 19, 2013

பெருவிழாக் குறிப்பொன்று...


அன்பின் பற்றாக்குறையென
அதிர்ந்து அழுகிறது
வீணையொன்றின்
சிறுதுண்டொன்று
மீட்டிய விரல்களைத்
தேடியபடி.

பிரபஞ்சச் சுழியீர்ப்பின்
எல்லையில்
இருப்பற்ற ஒரு சாலையில்
ஆழப் புதைந்த நிகழ்வை
எவரும் சொல்ல
இல்லையில்லை....
எவருமே இல்லா நிலையில்
அந்தந்த இடங்களில்
மானிடம் வாழ்ந்து
வீழ்ந்ததை
சாட்சி சொல்ல வாழும்
கருக்குப்படலையின்
மூச்சிளைக்கும்
கூப்பிடு ஓசை.

என் பெயரை
அவர்கள் பெயரை
உச்சரிக்கும்
தெருப்படலை
பதறி
மௌனித்து
பின் அலறுகிறது
ஆழப்புதைந்த
அத்தனை பெயர்களையும்
அந்த
அன்பு வீணை மீட்டியின்
பெயரையும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)



 

நேற்றோடு
முடிந்துவிட்டதென்று
திரை மூடி
அணைத்திருக்கிறார்கள்
தொடரும்.....
போட்டதைக் கவனிக்காதவர்கள் !

Saturday, May 18, 2013

மே 18...


ஈச்சமுள்ளும்
ஈர அட்டைகளும்
கடித்தபோது இல்லாத வலி
மண்ணைவிட்டு
அகதியாய் அவதிப்படும்போது.

அடிபட்டுக் கோபித்து
பின் மெல்லமாய்
சிரித்துக் கைகோர்த்த
சந்தோஷங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அவர்கள் புகைப்படங்களில்.

இன்னொருமுறை வாழ ஆசை......

இருக்கட்டும் இருக்கட்டும்
மூச்சோடு மட்டுமாவது.

அருவமாய்
முன்னால் நட தோழனே
உன் உருவோடு
பின் தொடர்ந்துகொண்டே
நாம்...!!!


எமக்காய் தம்முயிரைத் தியாகித்த அத்தனை உயிர்களுக்கும் என் வீர வணக்கம் !

ஹேமா(சுவிஸ்)

Friday, May 17, 2013

முலையில்லா மனிதம்...


தொலைத்த ஒன்று
தொலையாமல்
யாருமற்ற
தெருவோரம்.

கொத்தும் காக்கைகள்
வண்டிச் சில்லுகள்
தப்பி
இரத்தம் உறைய
தூசுக்காற்றில்
துடிக்கும் குரல் கேட்டும்
துடிக்காத
இதயத்தோடு
பாதசாரிகளாய் பலர்.

அள்ளிச் செல்லும்
குப்பைகளோடு
கொட்டிச் சிதறிய
செல்வமொன்று
உடல் வெக்கை தணித்த
முகவரியில்லா
இருவர் சதை பொருத்திய
முகத்தோடு
பலமுறை சுழன்ற
பாதங்களுக்குள்
அகப்படாமல்
அழுதபடி.

கடி நாய்கள் கூடுமிடமிது
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.

இரங்காத முலை கொண்ட
காக்கை குருவிக்கும்
இரக்கமுண்டு
என் முலையிலும்
ஏதுமில்லை
ஆனாலும்...!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 12, 2013

அம்மா...


முந்தியேதும் அனுபவிக்காத
உச்சவலி
பச்சைப்புண் நடுவில்
உச்சி மயிரிலிழுத்து
விளையாட்டு யாரோ
என்னோடு.

பதறிய கண்ணோடு
அம்மா...

வேம்படி வைரவர்
வீபூதி
நிறைச்சுப் பூசி
தலை தடவி
"ஒண்டுமில்லையம்மா
கொஞ்சம் பொறுத்துக்கொள்...."

இப்போது
அதிகமாய்
வலிக்கிறது மனதில்
அம்மா...அம்மா!!!

ஹேமா(சுவிஸ்)


அன்னையர்களை வணங்குவோம்.அப்பாக்களையும் மறக்காமல்....!

Saturday, May 11, 2013

அடை மழை....


கால் நனைகிறதாம்
ஒரு ஓரமாய் ஊரும்
எறும்பின் கவலை.

தவளையின் மகிழ்ச்சி.

தேனீக்கு
தன் சிறகு நனைவதாய்
குற்றச்சாட்டு.

அப்பா கை விட்டோடும்
குழந்தைக்கு
சேற்று நடனம்.

கோடைகாலக் கூடு
கட்டிமுடியாக் கெடு
பறவைகளுக்கு.

மரமுதிர்ந்த
சருகுக்கோ பாதத்திலேயே
பசளையாகும் வரம்.

தெருப்பாடகனுக்கு
நாளைய கேள்வி.

மரத்துளிர்களுக்கு
குளிர்ச்சி.

தெருவிளக்கின் கோபம்.

பனி நனைத்த புல்லுக்கோ
பட்டுத் தெறிக்கும்
மழைத்துளி வலி.

கால்வரை
வழியும் மழைநீரில்
காதலின் இடப்பெயர்வு.

நேயர் விருப்பத்தில்
எனக்கான மழைப்பாடல்.

நிகழ்ச்சி ஒன்றாய்
கோணங்கள் பலவாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 09, 2013

மாயம்...


சிதைந்து கிடக்குமென்னை
நிலவின்
ஒருப்பக்க நிழலின்
துணையோடு
புனரமைக்க நினைக்கிறான்
கவிதைகளை
மொழி பெயர்ப்பவன்.

நிலவுக் குழந்தையையும்
நிர்வாணக் கோடுகளையும்
இம்சிக்கிறது
அவன் வாதங்களும்
பிடிவாதங்களும்.

சுகமும் வலியும்
ஒருசேரத் தரும்
புணர்தலை ஒத்ததாய்
சலனமற்ற வலிகள்
அவன் மொழி.

விதவையாகிவிட்ட மனதை
மறுதலித்து
மீண்டும்
சமப்படுத்துவதாய்
தோள்தொட்ட
பூத்தூவல்.

யாசிக்கும்
அவன் மொழிகளை
புரிந்துகொள்வேனோவென
உற்று நோக்கிக்கொண்டிருக்கும்
காலம்....
உச்சிமலையில்
பால்வடியும்
எருக்கமலர்களை
சேமித்துக் கோர்க்க
எச்சமிட்டுப் பறக்கிறது
ஊர்க்குருவியொன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 07, 2013

நட் 'பூ'...


கையில் கிடைத்திருக்கிறது
அன்பின்
திறந்த புத்தமொன்று
சில இனிப்பான
பக்கங்களோடு.

கரைந்து படிந்த
இனிப்பை இன்னும்
மொய்த்துக்கொண்டிருக்கிறது
நினைவெறும்புகள்.

இன்னும் பல
இனிப்புக்களை
தருவதாகச் சொல்லி
நானில்லாத நேரத்தில்
என் தலையணையின் கீழ்
சில இனிப்பின் துகள்களைப்
போட்டும்விட்டிருக்கிறது.

காலையிலும்
வாசனை சுமந்த
எறும்புகளின்
மென்மீசை
நாசியோடு
ஊர்ந்து உரசுகிறதென்
மனதை.

அன்பின் புன்னகையை
நானும் சேமித்துக்கொள்கிறேன்
அந்த எறும்புகளைப்போலவே!!!

ஹேமா(சுவிஸ்)

வெறும் நாள்...


சுருண்டு படுத்திருக்கும் பூனைக்குட்டியென
இன்று வெறும் நாளாயிருக்கிறது
எந்தப் பாத்திரத்துக்குள்ளும் அடங்குவதாயில்லை.
படுத்திருக்கும் சருகென
கொஞ்சம் படபடத்து தெருக்கள் விடிந்தாலும்
என் நாள் வெறுமையாய் இதுவரை படுத்திருந்தது.
பள்ளிப்பிள்ளைகள் நியாயமற்ற பத்திரிகைகளை
வீசிப்போனார்கள் என் வாசலில்.
எதிர்ச் சுவரில் காதலுக்கான வியாபார விளம்பரம்.

இப்போது மதியம்.....

சூரியன் என் கண்களுக்கு
எப்போதும் மறைந்தபடிதான்
வெறும் நாளிலாவது
எனக்காகச் சிரித்திருக்கலாம் ஒரு கையசைப்போடு.
பூங்காவில் விளையாடும் குழந்தை
ஒளித்துவிளையாடிப் பின் பிடிபட்டபோது
இந்த வெறும் நாள் ஒரு கூடல்காட்டின்
பயங்கரத்தைக் கடப்பதாய் உணர்கிறேன்.

ஒன்றேயொன்று.....

ஒரு மென்மையான வெள்ளைப்பூவை
என் வாசலில் வைத்து வணக்கமும் எழுதிப்போயிருக்கிறது
யாரொருவரும் கையளிக்காத ஆதுரத்தில் நனைத்தெடுத்து
இன்றைய வெறும் நாள்!!!

ஆதுரம் - பரபரப்பு

ஹேமா(சுவிஸ்)

Friday, May 03, 2013

மறுக்கப்பட்ட செய்திகள்...


காற்றில்.....
பலமான செய்திகள்
எத்தனையோ
ஊடகப் பாதுகாப்பின்றி
அலைகிறது நம் தேசத்தில்.

முள்வேலிட்ட
அரசியல் வானம் துளைத்து
உலகின்
காதுகளிலோ கைகளிலோ
கிடைக்காதவாறு.

விஞ்சும் பாரமிருக்க
இறங்கினாலோ
இறப்பு உறுதியென
எழுதி வைத்திருந்தார்கள்
முன்னம் செய்தி சொன்னவர்கள்.

முடியாப் பாரத்தோடு
இறங்கி
பின் இறந்த செய்திகள்
பல
என்றாலும்
வீறு கொண்டு கக்கும்
இன்னொரு பேனாவில்
இன்னொரு செய்தியாய்!!!


(எனக்கும் மிக மிகப்பிடித்த துறை ஊடகம்.
ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

ஹேமா(சுவிஸ்)