*** உப்புமடச் சந்தியில் http://santhyilnaam.blogspot.com/இன்று*****இப்படியும் நடக்கிறது.*****
***** "வாழ்க்கை என்பது நடைபயிலும் நிழல்.அதைச் சந்தித்து,அறிந்து வாழ்ந்து, அதனுடன் ஒன்றுவது என்பது எண்ணற்ற மனிதர்களின் துயரக்கதை.**** "மண்ணின் விடுதலைக்காக உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும் தாழ் பணிந்த என் வணக்கம்." *****

Friday, November 20, 2009

கேட்பாரற்ற பொழுதுகளில்...

சில கதவுகள் வேண்டுமென்றே
மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.

தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.

கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.

விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.

சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.

பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!

"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 18, 2009

இழப்புக்களின் வரிசையில்...

நீ....
அன்றைய தினத்தில்தான்
உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!
காதலிப்பதாகவும் சொல்லிவிட்டாய்.

அதே ஆவேசம்
பயமாய்
கௌரவமாய்
அம்மா முகம் நிழலாட
பிரிந்தும் விட்டாய்.

எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளும்புகிறது பார்.

உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய் சென்றாய்.
பெரியதொரு பெருமூச்சோடு
நிம்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.

மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, November 14, 2009

பழுத்தல் இலை...

புதிய தளிர்கள் பூப்படைய
பழுத்தல் இலையாய்.
தாங்கிய காம்பு தளர்ந்து உலர
இறுக்கிப் பற்றிய
என் தாய் கரம் தவற விட
வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய் நான்.

தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.

வாகன நெரிசலுக்குள்
வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !
வெப்பக் கற்கள் கோர்த்து
கொத்தனார்கள் கூடிக் கட்டிய
கட்டிடக் காடுகளின் நடுவிலா !
ஈக்களும் கொசுக்களும்
கொஞ்சி கதை பேசி விளையாடும்
குப்பைகள் சேரும் கும்பலிலா !
கரையோடும் தரையோடும்
உரசி நெளிந்து ஓரத்துப் புற்களோடும்
முந்தியோடும் மீன்களோடும்
போட்டி போடும் ஓடுகின்ற தண்ணீரிலா !
மனிதனின் உணவுக்காய்
மேய்கின்ற மாடுகளின் உணவுக் கூடத்திலா !
காடும் மலையும் காதலிக்க
வானம் பார்த்துக் கூச்சம் கொள்ளும்
கானகக் கரைகளிலா !
இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற
ஓவியப் புத்தகத்திலா !

காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

வானம் வெளித்த பின்னும்...

அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்.

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில் அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
இன்னொன்றின் மேல் படர்ந்ததா?

ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய் !!!

"வானம் வெளித்த பின்னும்"முகப்புக்காய்
ஆர்வத்தோடு ஆக்கம் இணையத் தோழி கலா.

அவருக்கென்று தளம் இன்னும் இல்லை.என்றாலும் சிங்கையிலிருந்து எப்போதும் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தும் ஒரு குரல்.அவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இப்பதிவு அன்போடு அவருக்காக.கலா உங்கள் அன்பிற்கு என்னால் இப்போதைக்கு என் அன்பாக !!!

இதே நேரத்தில் தமிழ்நாட்டுத் தோழி "மது"வையும் நினைத்துக்கொள்கிறேன்.உங்களுக்கென்று தளம் இல்லாவிட்டாலும் ஆயிரம் சோகத்துக்குள்ளும் என்னையும் நினைத்து அடிக்கடி ஓடி வருவீர்கள்.இடைவிட்டு மீண்டும் உங்களைக் காண்கிறேன் தோழி.நலம் கேட்டபடி நன்றியும் சொல்கிறேன் !!!

என்னோடு சேர்ந்து நீங்களும் என் தோழிகளை வாழ்த்துங்கள் தோழர்களே.

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.நன்றி.

தூரத்துத் தோழிகள் கலா,மது கைகள் பற்றிய வெப்பத்தோடு
ஹேமா(சுவிஸ்)

Monday, November 09, 2009

காதலுக்கு விலையில்லை...

முத்திரை இல்லை
முதலில்.
முகவரி இல்லை !
முன்னுரை இல்லை !
முன்பின் தெரியவில்லை !
என்...
கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!

பிரியமுடன் வசந்த் கவிதையில்
பிரிந்த கவிதை.

ஹேமா(சுவிஸ்)

Friday, November 06, 2009

வெட்கச்சிறை...

பூ போல...
பனித்தூவல் போல...
தூவானம் போல...
யாழின் இசை போல...
அணிலின் கொஞ்சல் போல...
அந்தி வானம் போல...
வேப்பம்பூ மணம் போல...
இன்னும்
போல போல...
உன் வெட்கம்.

ஐயோ...
உன்னையே தின்று தொலைக்கும் அது
அப்போதுதான்
பறக்கப பழகும் பட்டாம்பூச்சிக் கூட்டமாய்.
எத்தனை வர்ணங்களில்
குழைத்தெடுக்கிறாய் உன் வெட்கத்தை
கன்னக் குவளைக்குள்.
ஒவ்வொரு வெட்கமும்
ஒவ்வொரு சொட்டுக் கவிதையாய்.

நான் கேட்க
நீ மறுக்க
தரத் தயங்கி
பின் உன்னைத் தயார்ப்படுத்த !
ம்ம்ம்...

மகரந்தம் தொடும் கரமாய் நான்
வெட்க நிறங்களாய் நீ
உன் வெட்கம் தொட்டுப் பார்த்தேன்.
வெறும் வண்ணப் பொடி மட்டுமே
ஒட்டி முகம் மறைக்கிறாய்.

போடா...
உன் (ஆண்) வெட்கம் என்ன
பிறர்காணா
புது மொட்டின் மலர்வோ !
பார்க்கவும்
பறிக்கவும் கடினமாய்.

ப்ரியமானவனே...
ரகசியமாய் ஒன்று சொல்லவா !
என் இதழ் தொட்டு
முத்த ஒப்பமிடு.
சுலபமாய் வெளிவர
உன் வெட்கச் சிறைவிட்டு !!!

வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்)