சில கதவுகள் வேண்டுமென்றேமூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.
தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.
கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.
விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.
சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.
பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!
"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"
ஹேமா(சுவிஸ்)








