***** நாம் தேர்ந்தெடுத்ததும் எம்மைத் தேர்ந்தெடுத்ததும் இணைந்தே தீர்மானிக்குமோ எம் வாழ்வின் போக்கை!!!!!*****

Sunday, May 19, 2013

பெருவிழாக் குறிப்பொன்று...


அன்பின் பற்றாக்குறையென
அதிர்ந்து அழுகிறது
வீணையொன்றின்
சிறுதுண்டொன்று
மீட்டிய விரல்களைத்
தேடியபடி.

பிரபஞ்சச் சுழியீர்ப்பின்
எல்லையில்
இருப்பற்ற ஒரு சாலையில்
ஆழப் புதைந்த நிகழ்வை
எவரும் சொல்ல
இல்லையில்லை....
எவருமே இல்லா நிலையில்
அந்தந்த இடங்களில்
மானிடம் வாழ்ந்து
வீழ்ந்ததை
சாட்சி சொல்ல வாழும்
கருக்குப்படலையின்
மூச்சிளைக்கும்
கூப்பிடு ஓசை.

என் பெயரை
அவர்கள் பெயரை
உச்சரிக்கும்
தெருப்படலை
பதறி
மௌனித்து
பின் அலறுகிறது
ஆழப்புதைந்த
அத்தனை பெயர்களையும்
அந்த
அன்பு வீணை மீட்டியின்
பெயரையும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)



 

நேற்றோடு
முடிந்துவிட்டதென்று
திரை மூடி
அணைத்திருக்கிறார்கள்
தொடரும்.....
போட்டதைக் கவனிக்காதவர்கள் !

Saturday, May 18, 2013

மே 18...


ஈச்சமுள்ளும்
ஈர அட்டைகளும்
கடித்தபோது இல்லாத வலி
மண்ணைவிட்டு
அகதியாய் அவதிப்படும்போது.

அடிபட்டுக் கோபித்து
பின் மெல்லமாய்
சிரித்துக் கைகோர்த்த
சந்தோஷங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அவர்கள் புகைப்படங்களில்.

இன்னொருமுறை வாழ ஆசை......

இருக்கட்டும் இருக்கட்டும்
மூச்சோடு மட்டுமாவது.

அருவமாய்
முன்னால் நட தோழனே
உன் உருவோடு
பின் தொடர்ந்துகொண்டே
நாம்...!!!


எமக்காய் தம்முயிரைத் தியாகித்த அத்தனை உயிர்களுக்கும் என் வீர வணக்கம் !

ஹேமா(சுவிஸ்)

Friday, May 17, 2013

முலையில்லா மனிதம்...


தொலைத்த ஒன்று
தொலையாமல்
யாருமற்ற
தெருவோரம்.

கொத்தும் காக்கைகள்
வண்டிச் சில்லுகள்
தப்பி
இரத்தம் உறைய
தூசுக்காற்றில்
துடிக்கும் குரல் கேட்டும்
துடிக்காத
இதயத்தோடு
பாதசாரிகளாய் பலர்.

அள்ளிச் செல்லும்
குப்பைகளோடு
கொட்டிச் சிதறிய
செல்வமொன்று
உடல் வெக்கை தணித்த
முகவரியில்லா
இருவர் சதை பொருத்திய
முகத்தோடு
பலமுறை சுழன்ற
பாதங்களுக்குள்
அகப்படாமல்
அழுதபடி.

கடி நாய்கள் கூடுமிடமிது
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.

இரங்காத முலை கொண்ட
காக்கை குருவிக்கும்
இரக்கமுண்டு
என் முலையிலும்
ஏதுமில்லை
ஆனாலும்...!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 12, 2013

அம்மா...


முந்தியேதும் அனுபவிக்காத
உச்சவலி
பச்சைப்புண் நடுவில்
உச்சி மயிரிலிழுத்து
விளையாட்டு யாரோ
என்னோடு.

பதறிய கண்ணோடு
அம்மா...

வேம்படி வைரவர்
வீபூதி
நிறைச்சுப் பூசி
தலை தடவி
"ஒண்டுமில்லையம்மா
கொஞ்சம் பொறுத்துக்கொள்...."

இப்போது
அதிகமாய்
வலிக்கிறது மனதில்
அம்மா...அம்மா!!!

ஹேமா(சுவிஸ்)


அன்னையர்களை வணங்குவோம்.அப்பாக்களையும் மறக்காமல்....!

Saturday, May 11, 2013

அடை மழை....


கால் நனைகிறதாம்
ஒரு ஓரமாய் ஊரும்
எறும்பின் கவலை.

தவளையின் மகிழ்ச்சி.

தேனீக்கு
தன் சிறகு நனைவதாய்
குற்றச்சாட்டு.

அப்பா கை விட்டோடும்
குழந்தைக்கு
சேற்று நடனம்.

கோடைகாலக் கூடு
கட்டிமுடியாக் கெடு
பறவைகளுக்கு.

மரமுதிர்ந்த
சருகுக்கோ பாதத்திலேயே
பசளையாகும் வரம்.

தெருப்பாடகனுக்கு
நாளைய கேள்வி.

மரத்துளிர்களுக்கு
குளிர்ச்சி.

தெருவிளக்கின் கோபம்.

பனி நனைத்த புல்லுக்கோ
பட்டுத் தெறிக்கும்
மழைத்துளி வலி.

கால்வரை
வழியும் மழைநீரில்
காதலின் இடப்பெயர்வு.

நேயர் விருப்பத்தில்
எனக்கான மழைப்பாடல்.

நிகழ்ச்சி ஒன்றாய்
கோணங்கள் பலவாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 09, 2013

மாயம்...


சிதைந்து கிடக்குமென்னை
நிலவின்
ஒருப்பக்க நிழலின்
துணையோடு
புனரமைக்க நினைக்கிறான்
கவிதைகளை
மொழி பெயர்ப்பவன்.

நிலவுக் குழந்தையையும்
நிர்வாணக் கோடுகளையும்
இம்சிக்கிறது
அவன் வாதங்களும்
பிடிவாதங்களும்.

சுகமும் வலியும்
ஒருசேரத் தரும்
புணர்தலை ஒத்ததாய்
சலனமற்ற வலிகள்
அவன் மொழி.

விதவையாகிவிட்ட மனதை
மறுதலித்து
மீண்டும்
சமப்படுத்துவதாய்
தோள்தொட்ட
பூத்தூவல்.

யாசிக்கும்
அவன் மொழிகளை
புரிந்துகொள்வேனோவென
உற்று நோக்கிக்கொண்டிருக்கும்
காலம்....
உச்சிமலையில்
பால்வடியும்
எருக்கமலர்களை
சேமித்துக் கோர்க்க
எச்சமிட்டுப் பறக்கிறது
ஊர்க்குருவியொன்று!!!

ஹேமா(சுவிஸ்)