*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 29, 2013

ஒளிகாட்டும் வழி...


சூரியன் திசை தவறிய தேசத்தில்
எமக்காய்
உருகி வழிகிறோமென
சில மெழுகுவர்த்திகளின்
கூக்குரலில்
விழித்தெழுகிறோம் நாளும்.

மனக் கல்லறைக்குள்
உயிர் உருக்கி
ஏற்றிய தீபங்களோடு
கார்த்திகைப்பூக்களை
கரிகாலர்கள் நடந்த
காடுகளில் விட்டெறிகிறோம்.

காலம் சபித்ததால்
விளக்குகள் அணைந்த
அநாதை மரங்களுக்கு
மின்மினிகள்கூட
ஒளிதர மறுத்த உலகிது.

பார்த்துப் பார்த்து
அழித்தொழிக்கப்பட்ட
என் சனத்தில் கையில்
கருத்த சூரிய
பொம்மையொன்று திணித்து
சண்டை முடிந்த பூமியின்
சமாதான பொம்மை
இதுதான் என்கிறார்கள்.

குருதி குடித்த தேசம்
விட்டகன்றபோது
கடைசியாய்
ஓடிய ஓடத்தில் கிடைத்தது
ஒரு குப்பி விளக்கு மட்டுமே.

பயங்கரவாதியொருவன்
பயங்கர ஆயுதங்களுடன்
தப்பிவிட்டதாய் செய்தி.

ஏதுமறியா விளக்கொன்று
புலம்பெயர்ந்து தவிக்கிறது
யாராவது
தீராத்தாகம் தீர்த்தெரிந்து
ஒளிபரப்ப
எண்ணெய் ஊற்றும் வரை!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 24, 2013

அதி'காரம்'...


தடித்த எருமைத்தோலுக்குள்
குத்தியெடுத்த ஆணியென
சொற்கள் கடுக்க
பிறப்பின் கர்வமாய் 
ஆண் அதிகாரங்கள்.
 
தண்ணியில்லா
ஆழ் கிணறு விழுத்தி
அடக்கி மறுக்கும்  
ஆணவத்தை
அண்டம் அமுக்க   
புகைச் சுளியங்கள்
ஆழக்கிணறு கடந்து  
மேலெழும்பி வந்து 
நிலம் பரவும்.
 
ஒற்றைப்படைப் பூச்சில்
முகம் மட்டுமே அழகாய்
உள்ளிருந்து அசிங்கமாய்
ஆணாய்... 
அதிகாரம் சுட்டெரிக்க
விழுத்திய கிணற்றுக்குள்
கிடக்குமெனக்கு
பலநாள் சந்தேகமொன்று....

பகல்கள் கலங்க
கதிகலக்கும் உன்னால்
என்னதான் முடிகிறது   
இரவுப் பொழுதுகளில் 
மாத்திரம்!!!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5944

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 19, 2013

மாத்திரைச் சொற்கள்...


தப்பிப்பிழைத்தல்
என் வாழ்க்கையில்
பலமுறை
உங்களைப்போல்.

சிரித்தது கொஞ்சம்தான்
கடத்தலும் காவுதலும்
இழப்பும் இல்லாமையும்
அழுகையும்தான் அதிகம்.

காலத்தினிடை
காதலும் கற்றுமறந்தேன்
வயதும் வர
வழுக்கி நகரும் கூழாங்கல்லாய்
பல காதலைக் கடந்தோடியது மனது.

நானும் மனுஷிதானே....

மறத்தல்......
எனக்கு மட்டும் வரமா என்ன
பார்த்த சில முகங்களும்
பழகும் தமிழும்
மறக்கவிடவில்லை
சிறகு தந்தவனை.

இன்று.....
தெருவில் ஒரு முகம்
எனக்குத் தெரிந்ததாய்
திக்கிய வாய் அசைத்து
நீ....ங்க......ள்.

அடையாளமற்றுப் போனேனோ
ஒருவேளை.....

நிராகரிப்பின் அமிலத்தை
அள்ளி வீசியது
வார்த்தைகளால் அது.

மெல்லக் கொல்லும்
ஒவ்வொரு சொற்களையும்
மாத்திரையாக்கி
மெல்ல மெல்ல
இறப்பதே மேல்.

கனக்கிறது மனசு.....

மனமுருட்டும் மல உருண்டை
உணர்வற்ற மனதில்
இதுவரை நாற்றமில்லாமல்.

இப்படியே....
உணர்வுக்குள் தப்பித்தலும்
உணர்வற்று நாறுதலும்
எதுவரை.

அமிலச் சொற்கள்
தந்தவனுக்கொரு நன்றி
மீண்டும்
சந்திப்பதின் விபரமிருக்கிறது
என் இடக்கை ரேகையில்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 15, 2013

லவண்டர் முத்து...


நீ...
உறிஞ்சியதுபோக
மீந்து சிதறிக்கிடக்கிறது
இரவுப்படுக்கையில்
சில மின்மினி முத்தங்கள்.

தலையணையில்
ஒட்டிய முத்தம்
வெட்கிச் சிரிக்க...

மொக்குடைக்கும்
லவண்டர் பூவொன்று
செடியிலும்
உன் மடியிலுமென
கண்ணடித்து
தொட்டு தடவ
அடிவயிற்றில்
அதீத அலையொன்று
சேமிக்கிறது
சிறு முத்தொன்றை!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 14, 2013

போர்க்காலக் காதல்...


போர் ஒழிந்தபின்னும்
சிதைந்த காவலரணாய்
நிகழ்வுகளின் சாட்சியாய்
நம் காதலில் நான்.

ஆயுதங்களைக் கொள்ளையடித்தவர்கள்
உன் ஷெல் பார்வையை
விட்டு வைத்திருக்கிறார்கள்
நன்றி.

எறிகணை இலக்குகளை ஏவி
உச்சப் பனையில் புகையெழும்பும்
இரசாயனக் குண்டுகள் துளைத்த
திசைக்கூடாரமென
மனம் சல்லடையாய் கிடந்தாலும்
உன்னுள் மீள்குடியேற
13 ம் திருத்தச்சட்டமென
ஒப்பமிடுகிறேன்.

கிடப்பு அரசியலில்
அமைதிக்காலப்பணியென
நம் காதலும்
வெடிக்காத கண்ணிவெடியென
உன் மௌனமும்.

நீ....
சோதனைச்சாவடி
இராணுவமல்ல
நான்....
அடையாள அட்டை
காட்டிப் பல் இளிக்க.

முச்சந்தி தாண்டும்
கனரக வாகனத்துள்
உறங்கும்
மரணித்த போராளியாய்
A 9 பாதை
மிதிவெடிகளையும்
குடிசைகளின்
இடப்பெயர்வுகளையும்
மாவீரர் கல்லறைகளையும்
உணர்வற்றுக்
கடந்துகொண்டிருக்கிறேன்
உன் ஒவ்வொரு
ஆட்டிலெறிச் சொற்களையும்
தாங்கியபடி.

ஊரடங்குச் சட்ட காலத்தில்
தஞ்சமாய்
புகுந்தே கிடக்கும்
குழந்தைகளின் பங்கருக்குள்
தவறி விழுந்த பாம்பென
அலறியடிக்கிறது உயிர்.

நீ....
புலம் பெயர் தேசமல்ல
நான்....
அகதியுமல்ல
நிவாரணங்களை அள்ளி வழங்க.

நிச்சயம்
போரற்ற காலத்தில்
சமாதானப் பேச்சுவார்த்தைக்
குழந்தைகளோடு
நீ என்னுடனும்
நான் உன்னுடனும்தான்.

ஒரு சொல் சொல்லிவிடு
தீர்ப்பில்லா
காலவரையறையற்ற
வதைமுகாமாகிக்கொள்கிறேன்.

புரிந்துகொள்....
போர்க்காலம் தாண்டியபின்
இன்னொரு சொல் வேண்டாம்
நம் இலங்கை அரசாங்கம்போல்!!!

http://kaatruveli-ithazh.blogspot.ch/2013/10/blog-post.html?spref=fb

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 13, 2013

காதல் துளிகள் (10)

தனிமை
இரவின் பாடல்கள்
ஏதோவாய்
வானொலியில்
ஒற்றை மெழுகுதிரி
எரிய
முகமற்ற ஒருவனின்
அன்பின்
சுவாசம் மட்டும்
என்
அறை நிரப்பியபடி !

கேள்விகளால்
நிரம்பியிருந்தான் அவன்
எனக்கான
குவளைகள்
போதாமலிருக்கிறது
நிரம்பியும் வழிந்துமாய்
தளம்பிக்கொண்டிருக்கிறேன்
நான் !

அலட்சியமாய்
சாகடிக்க
நஞ்சு வேண்டாம்
தஞ்சம் கேட்கும்
மெல்லிய அன்பு போதும் !

சிலசமயங்களில்
சிறு தூரலாய்
தூவி
என் ஈரலிப்பை
காக்கிறானே தவிர
பெய்வதென்னவோ
மிதமிஞ்சிய
சதுப்பு நிலத்தில்தான் !

அன்பால்தான்
கொண்டான்
என்னை.....
அதே அன்பால்
கொல்கிறான்
என்னைத் தவிர்த்து !

சிலுவை வலிகளுக்கு
மருந்தாய்
இயேசு சொன்ன
ஏழு வாசகம்போல்
என் வலிக்கு
அவன் பெயர் !

ஹேமா(சுவிஸ்)

Wednesday, October 09, 2013

கடக்கும் வாழ்வில்...


கிஞ்சித்தும்
அஞ்சாமல் விளையாடும் வாழ்வு
காற்புள்ளி தள்ளியாடும்
ஊஞ்சலென...

செரித்த உணவிலெங்கு
ஏப்பமும்
தொண்டையில் கரகரப்பும்...

பிந்திய நாட்களில்
ஹோர்மோன்களின் நடனம்
தாளா வயிறு
துர்நாற்றத் தீட்டாய்...

சஞ்சலத்துடன் ஆடும்
காற்றாடிப் பட்டம்
பொருந்தியிருகா
கயிற்றை நம்பி....

இறப்பில் செருகியிருந்த
கூர்ம புராணம்
கூலிக்காரன் மெலிந்த இடுப்பில்
அபத்தமாய்...

சுயம்புவாள்
குற்றமில்லாச் சுமங்கலி
கடவுள்
தன் கணவன்தானென...

அக்கினித் தீர்த்தமருந்தி
அடம் பிடித்த என்னை
ஆடடியென
பாடி வீரம் வளர்த்த
என் ஈழதேசம்...

புற்றாஞ் சோற்று
கறையான்களாய்
கூட்ட நெரிசலற்று
பூட்டிய சுவர்களுக்கு
ஓட்டையொன்றமைத்து
புறக்கடையாம் புலம்...

புறக்கணியாப் புட்கள்
புழையிட்ட மனிதர்களிடை
நுழையும் நிலாவாய்
புற்கை வேகும்
நீர்க்குமிழி வாழ்வில்...

போலிப்
புளகிதம்தான் வேறில்லை
புவனம் என்வசமே
புழைக்கடையில்
சில புண்ணிய காரியம்...

நான் நானாயிருக்க
இதுவும் கடக்கும்
இனியும் கடக்கும்
எல்லாமே கடக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 06, 2013

ஏய் ...பாடலொன்று...

Love for music
குளிர்காலமோ கோடைகாலமோ
இசை.....
என் நாளைச் சுவீகாரம் எடுத்துக்கொள்கிறது
அன்றைய நாளின் ஆரம்ப இசை
என்னைத் தத்தெடுத்தும்கொள்கிறது....

மொழியில்லா இசைகூட
வந்தமர்ந்து கொள்கிறது என்சிறகில்
அதன் அர்த்தம் புரியாமலே
தோள்மேல் உறங்கும் குழந்தையாய்
மூச்சிலிறங்கும்
மூச்சைப்பறிக்கும் இணைக்காதலாய்....

அதானால்தான் ஒரு முறை சொல்லியிருந்தேன்
ஐ லவ் ரஹ்மான்
பின்னொருமுறை ஐ லவ் இளையராஜா
போதையில் ஒருமுறை ஐ லவ் ஹரீஸ்
ஐ லவ் எஸ்.பி.பி
ஐ லவ் ராஜேஷ் வைத்யா
காதலர்களை நான் மாற்றுவதில்லை இசையில்
நிறையவே காதலர்கள் இரவிலும் பகலிலும்....

சில பாடல்களை
என் வாழ்வில்
என் காதலில்
என் சோகத்தில்
ஏன்...என் மோகம் கூடும்
முச்சந்தியிலும் சந்தித்துக்கொள்கிறேன்...

பொழுதுகளைக் கள்ளாக்கிக் குவளை நிரப்பும் 
கனவுக் காதலன் கைகளில் ஊஞ்சலசைக்கும்
விரல் வெப்பத்தில் மதிமயக்கும்
ஏதோ ஒரு பாடலும் அதன் இசையும்
நடுவில் மனதை அறுத்தே போடும்
வீணையின் லாவகமும்...

சில பாடல்களில்
நுரை மிதக்கும் தேநீர்போல் ஒரு வசீகரம்
அப்படியே அள்ளியணைக்கும்
குழந்தையின் மென்னுடல்போல ஆத்மதிருப்தி
என் காதலன் முத்தம்கூட இசையின் பின்னால்தான்
என்னை அசைக்கும்...

இப்போ கோபித்துக்கொண்டிருப்பான் அவன்
ஆனால் பாடல் ஒன்றில்
சமாதானம் கொள்ளும் நம் காதல்...

ஒரு இசைக்காலத்தில்தான் அந்த அறிவிப்பாளன்
ஒருகோடிக் கும்பல் ஸ்வரங்கள் மத்தியில்
ஆண்குயிலின் கம்பீரக்குரலுடன்
என்னைச் பரப்பிச் சிதறவிட்டிருந்தான்
இசை மயக்கம் அதன்பின் உச்சநிலையில்...

சில இசைகள் தீர்மானிக்கிறது
வாழ்வுக்கான தீர்மானங்களை
ஒரு குக்கூ இசையுடன் .... !!!!

ஹேமா)சுவிஸ்)

Friday, October 04, 2013

பெருநாகமும் நானும்...


மாறத்தொடங்கியிருந்தான்
என்னவன்....

உருவெடுத்திருந்தாள்
அவள்
அன்பு மலையென
எனக்கும்
அவனுக்குமிடையில்.

கணங்கள் சுருங்கும்
வேளை
அன்புக் கயிற்றை
அவள் மெல்ல இழுக்க
அவனுக்கான
என் கவிதைகளை
அழிக்கத் தொடங்கியிருந்தது
பெருமழை.

நச்சு நாகமென
மாறியவள்
என்னை மெல்ல
மிண்டி
விழுங்கிக் கொண்டிருந்தாள்.

நன்றியுள்ள அவனால்
கடிக்கவோ குதறவோ
முடியாமல் போனது
அப்பொழுது.

விட்டு விட்டு விழுங்கும்
நாகமும்
நானும்
வேண்டிக்கொண்டிருந்தோம்
அன்பின் அவனுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

மாயக் காதல்...


நரக வழி தவறி
கூர்ப்பிழந்து தவிக்கையில்
தேவதைகளை செதுக்கும்
அன்பின் உளியொன்றாய்
நெருங்கிச் சிரிக்கிறது
ஒரு நிழல்.

கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு

தேடிய கனவொன்றை
கையேந்தும் சிலையொன்றை
செதுக்கும் ஆர்வத்தோடு
என்னை
குழைத்துச் செதுக்க
தன் கனவைச் சொல்லி
தனக்கான அதிகாரத்தை
எடுத்தும் கொள்கிறது.

தூரிகைக்குள்
என் வண்ணமெடுத்து
உயிருக்கான
நிறமும் கொடுத்து
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்தும் விடுகிறது.

மூச்சிழந்து
தேவதை தவிக்கையில்....

காமமும் காதலும் வேறென
தத்துவம் சொல்லி
கண்ணைக் கட்டி
மறைந்தும் போகிறது
மீண்டும் வருவேனென!!!

ஹேமா(சுவிஸ்)