*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 31, 2014

சூது கௌவும் 2014...

அகப்பா விழுத்தி
அகலவுரை நிறைத்து...

வேர்ப்பலாச் சுவையில்
வெதுவெதுப்பாய்
பூனை மயிரொதுக்கி
குங்கும் தேய்த்து
கொஞ்சி...

அகள விழியிலும்
முலை மேட்டிலும்
இடை பற்றும்
வயிற்றிலும்....

பொறு பொறு
கொஞ்சம் பொறு
போர்க்காலக் கிபீர்போல
ஏனிந்த வேகம்.

கண்ணாடி துளைக்கும்
ஒலிபோல்
ஒளிபோல்
முத்தங்களின்
மென்மையும்
மெதுமையும்
மேனி சுடுமாமே.

அங்கண் கொள்ளேன்
அகற்சி குறை.
பாலையில் ஊரும்
நீர்ப்பாம்பென
ரகசியங்களின்
பலவீனம் கண்டறியுமாம்
சில முத்தம்.

சூதாட்டத்தின்
விநோதச் சொல்போல
மறைந்திருக்குமாம் சில.

பிணைந்த பாம்பின் முத்தம்
பார்த்திருக்கிறேன்
இமைமூட மகுடியூது நீ.

கைது செய்கிறேன்
நான்
சில கௌரவ வார்த்தைகளை.

முலைப்பால்
சுவையறியாக் குழந்தைபோல
தவிப்பின் யுக்தி தரப்பாரேன்.

வேம்பூவின் வாசம் நிரப்பு
புங்கைப்பூவென உதிரவிடு
தாழ்முடி மல்லிகையோடு
கூடெடுத்துப்போ என் உயிரை
அது சுலபமுனக்கு.

வருடத்தின் கணக்கை
எண்ணி முடி
என்னில் முடி
எட்டிய நொடியே
நம்மோடு இனி 2014.

சுருக்காய் சுருக்காய்
இன்னும் சுருக்காய்
பாலேடு மீது படியும்
சிறு சிறு சுருங்கலாய்
இறுக்கி.....கிறுக்கி!!!


குழந்தைநிலா(ஹேமா)

Monday, December 29, 2014

'கண்ணா'மூச்சி ஏனடா...

நீ...
என்பது பொய்யாகி
இருளிலும் என்னோடிருக்கும்
நிழல்போல.

கருமுகில் கசியும்
ஈரம் விரட்ட
பொத்திய அன்பின்
பௌத்திரப் பொதியில்
கதகதக்கும்
உன் பெயரிலொரு
கருப்பு டெடிபியர்.

பாட்டுப் பாரதி
கண்ணம்மாவின் காதல்
மீராவின் வீணை
சாம்ராஜ்ய கருப்பு ராஜாக்களின்
சரித்திர முத்தங்களை
உருக்கி உருவேற்றி
கொலுசாக்கி
நமக்காய்
சிணுங்கும் கனவுக்குள்
புகுத்திக்கொள்ளேன் பூக்கருப்பா.

நிலையில்லா ஆணவம்
அதிகாரம்
கர்வம்
திமிர்
ஆதியிருப்புச் சடங்குகள்
இனி எதுக்கு?

ஒட்டகக் கொம்பாய்
கனவுயரங்களின் லாவகம்.

ஏறு ஏறு
அம்பாரியில் ஏறு
நானே கிரீடமாக
நீயே முத்தங்களாகு
கரியின் கருநிறத்தில்.

கருக்கொண்ட தீ உறையும்
மீண்டும் அத்தீக்குள்ளேயே!!!

குழந்தைநிலா(ஹேமா)

Tuesday, December 23, 2014

அவனும் நானும்...

போதையில்
தட்டிக்கொண்டேயிருக்கிறான்
கதவை.

திட்டுவதை
அதட்டுவதைத் தவிர வழியில்லை.

என்ன..... ?

'உப்' பென்று ஊதிவிட்டு
'உர்' ரென்று
பார்த்துக்கொண்டிருக்கிறான்.

என் கோப்பை
வைனின் சாரம் குறைய
வெறுமனே
சிவப்பு நிறத்தில்
மிதந்துகொண்டிருக்கிறது
அவனுக்கான வலி.

ம்ம்ம்....
இப்போது தூங்கியிருப்பான்.

மெல்ல மெல்ல அணைத்து
எனக்குள்
இறங்கிக்கொண்டிருக்கிறது
வெண்பனிக்குளிர் இதமாய்.

நானும் உறங்கலாம்
இனி
நாளை அவன்
கதவு தட்டும்வரை!!!

குழந்தைநிலா(ஹேமா)

Monday, December 22, 2014

இருட்டு இரவு...

முயல்குட்டியென
மிரட்சியுடன்
மிழற்றிக்கொண்டிருக்கிறது
ஸ்தலவிருட்சமாய்.

தொங்கு சதைகளில்
எதுக்களித்து
தெறித்த வாந்திபோல
முகம் சுளித்தாலும்
வயசுப் பொத்தல்கள்
தூர்வழி தெந்தனமாட....

பூக்களற்ற காலத்தில்
தேனும் வண்டுகளும்
பனிகுடைந்து
நுனிப்பாதம் விறைக்க
வெண்சுருட்டுப் புகையாய்.

காதலில் நலிந்தவன்
காமத்தால் நனைகிறான்.

துகிலாய்ப் போர்த்த
நுரை பூத்த
இலேசான இரவுகளை
வேண்டச் சொல்கிறான்
புதிரற்ற
ஒரு புதிய இரவிடம்.

கொத்திய கொக்கின்
நீர்வட்டமென வாழ்வை
எப்படிச் சொல்லலாம்
இறுக்கி வதைக்கும்...

பண்பாட்டுப் புடவை நுனியில்
தொட்டில் கட்டியசைத்து
பருவத்தை விழுங்கி
கூழாங்கல்லில்
கட்டித்தூக்கிய காமத்தை....?!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, December 19, 2014

பொம்மைகளற்ற பூமி...

போர்களின் துவம்சம்
முடியவில்லை
மண்புயலில் அமிழும்
கைக்குழந்தைகளோடு.

வேகத் தெருக்களில்
கையசைக்கும் சாத்தானை
வறுமையை
காற்றை
மழையை
எதிர்ப்படும் கடவுளை
அறியப் பிரியப்படவில்லை.

மனம் மரத்தாயிற்று
எப்போதோ.

அழுகுரல்களும்
இரத்தப் பிசுபிசுப்பும்
இன்னும் பிற ஞாபகமூட்டும்
வாசனைகளும் நாற்றங்களும்
நாசியோடு நின்றாயிற்று.

நாட்குறிப்புகளின்
விளிம்புகளிலும்
எச்சங்களின் சேடம்.

ஒரு வேளை
போரினால் இறந்த
குழந்தையொன்றறியலாம்
பாவமும் தர்மமும்
அதன் கொள்கையும்
மதம் சாரா
புதுக் கடவுளின் வருகையையும்.

போர்களும்
மதவெறித் துவேசங்களும்
கொன்றுவிட்டே செல்கின்றன
குழந்தைகளை.

எதற்கும் அசைவதில்லை
இப்போதெல்லாம் நான்
சத்தமிட்டுக் கூக்குரலிடுகிறது
தெருமுனை விலங்கொன்று!!!

 குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, December 14, 2014

*லாம்* களின் இருக்கை...

இருந்திருக்கலாம்
செய்திருக்கலாம்
கிடைத்திருக்கலாம்
சொல்லியிருக்கலாம்....

'லாம்....லாம்...'

படிமங்களில் நிலையழிந்த
இலையொன்று
தரைதட்டும் தரவாகிறது
சில 'லாம்' ங்கள்.

நெளியும் மண்ணுளியாய்
முன்னெப்போதோ
சேமித்த தர்மம்
கொடுப்பினைகள்
தொட்டு நீளும் கைகளில்
திசையறியாமல்.

மந்தார மரங்களுக்கும்
அலுவல்.

நிலையழிந்து
நிலம் தொடும் உடலுக்கு
உலுக்கித் தர ஏதுமில்லை.

மந்தணச் சொற்களையும்
மந்தாரப் புன்னகையையும் 
சேமிக்கிறது
தியானத்தின் பெருவெளி.

நீண்டு நழுவி
நடந்துகொண்டிருக்கின்றன
சில கொடுப்பினைகள்.

முழம் தள்ளித்
தனித்துறங்கும் குழந்தைமீது
முலைவெடித்துச் சீறும் பாலென.

கானல்நீர்க் குவளை
கொடுப்பினையாவது
கிடைத்துவிட்டுப் போகட்டும்
பட்ட மரத்தடியில்
நினைவுக் கனியுண்ணும்
பறவைக்கு.

அலட்சியமாய்
நிராகரித்துவிடாதீர்கள்
சில அங்கீகாரங்களை
மறந்தும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 11, 2014

இறுக்கிய அனத்தம்...

மனம் சலிக்கிறது
கை விடப்பட்ட நாடோடியின்
கனவுப் பாடல்போல் தனித்து.

பேசித் திட்டி
உக்கிரச் சண்டையின் பின்
வார்த்தைகள்
நிறம் வழிந்து வேலியோரமிறந்த
பட்டுப்பூச்சியின் சிகப்பாய்
வயிறு பருத்து.

குட்டிச் சாக்குகளுக்கும்
தன் தந்தைக்கும்
ஏதுமில்லா முலையை
சூப்பிச் சப்பும்
நாய்க்குட்டிகளுக்கும் நடுவில்
பின்னிரவில் காத்திருக்கும்
சிறுமியாய் சிலசமயம்.

கூடிழந்த பறவையொன்றின்
நகச்சிலிர்ப்பை உணர்வதில்லை
காடு தொலைத்தவர்கள்.

அகமும் புறமும் சலித்து
கழுமரப் பழங்கறை
நனைத்து நுழைய
ஏந்திக் கொள்கிறது
வார்த்தைக் கொலைவாள்.

எச்சரிக்கையற்ற சில நிழல்கள்
பின்தொடரும்
செவிமடல்ப் பேய்களாய் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 04, 2014

காற்றின் கால் தடம்...

நினைவோடு ஒட்டிக்கொள்கிறது
சவரம் செய்யாத
உன் முகம்
தலைதடவி
விரல் கோர்க்க
பேசிக்கொண்டே தூங்கிவிடுகிறாய்
பரஸ்பர பார்வையை
என் பக்கம் துளைத்தபடி.

நிராகரிப்பில்லாத
உன் புன்னகை வளைப்பில்
இழுபடும் என் இதயம்
வியர்வை வாசத்தில்
அமர்ந்துகொள்கிறது.

பேசும்போது
அடிக்கடி நீ
சொல்லிக்கொள்ளும்
'குட்டிம்மா'
ஆழ்மன நெரிசலில்
அமுங்கினாலும்
அழியாமல்
பதிகிறது
உன் விம்பத்தோடு.

கணங்களை
இன்றாக்கி
இனியாக்கி
இரவாக்கி
பின்
நாளையாக்கிச் சுருக்க
எதிலும் நீயென
உருகி உடைகிறேன்
நொடிக் கம்பிகளுக்கிடையில்.

கொத்து ரோஜாக்கொடியில்
சிறுகணம் தங்கும் தேனியென
இல்லாமல்
இறுக்கி அணைத்துக்கொள்ளேன்
உன் எழுத்துக்களைப்போல்
ஒரு சிறு கணத்தில்
அதுவாகிக்கொள்ள!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 02, 2014

சங்கமம்...

பிரளய அலறலை அடக்கி
உயர்த்தி
வாசித்துக்கொண்டிருக்கிறது
அடைமழை.

முழுதாய்ச் சங்கமித்து...

பறை கொட்டி
ஆண்டாளாய்க் கண்ணனை
உள்ளூர நிரப்ப....

கனவோடு
இதழால் இதழுறிஞ்சி
மணிச்சிகைக் கொடியாய்
துவள...

கொதித்து வியர்த்து
தவிக்கும் உடலுக்கு
மயிற்பீலி வருடி...

அங்கங்கே
சிறு சிறு துளி தூவி
அந்தரக் கனவுறை போர்த்தி
சறுக்கிக் கடக்கும்
ஈர ராப்பூச்சி
பெருமலைக் காட்டில்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, December 01, 2014

எனதிந்தப் பனியிரவு...

ஒரு மெல்லிசைப் பாடலிலோ
தாழப்பறக்கும் ஈசலின் இறகிலோ
வலசைப் பறவைகளின் ஒலியிலோ
கூட்டலையும் கழித்தலையும் சிலாகிக்கும்
என் நிலாவிடமோ
பனியடக்கி வேர்த்திருக்கும்
சுவர்க் கண்ணாடிகளிலோ
ஒரு கோப்பை பச்சிலைத் தேநீரிலோ
அடங்கா அர்த்தங்களுடன்
ழுழுவதுமாய் வியாபித்திருக்கிறது
எனதான இவ்விரவு.

ஒத்திகையில்லா வாழ்க்கை
ஒத்திகையில்லா மரணம்
நடுவே
ஒத்திகையில்லாக் கனவுகள்.

பிணங்களுக்கான முகங்கள் அவசியமற்றது
ஆனாலும் மனிதனுக்கு அவசியமானது
உறங்கப்போகும் எனக்கும்கூட.

எத்தனை தரம் தப்பித்திருப்பேன்
இந்த இரவிடம்.

நான் இங்கே இப்போ
தெளிவாயிருந்தாலும்
இப்பனியிரவு
பயங்கரமாயிருக்கிறது.

ஒருவேளை
கடைசியாய் இவ்வறையில்
மனித முகமொன்று இருந்ததென்று
சாட்சியும் சொல்லலாம் எனதிந்த இரவு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

சரி...

தவறுக்குள்ளும்
சரி பொருந்தியிருக்கிறது.

வாழ்வியலோடு
வளைந்தும் சரிந்தும் எழுபவர்கள் நீங்கள்
எப்போதும் சரியைச் சரியென
ஒத்துக்கொள்ளப்போவதில்லை.

மொழியற்று முடங்கிய மனம்
நிலையற்று ஒழுங்கற்றுப் பறப்பதையும்
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எனக்குப் பிடிக்கிறது அந்தச் சரியை.

தோள்தட்டி முத்தமிட்டு
அணைத்துக்கொள்கிறேன்
சரியென்பார் யாருமின்றி
என்னை நானே.

மறைவாய் ஒரு சரி இருப்பதை
ஒருக்காலும் உணர்ந்து சரியென்று
முகம் மலர்பவரல்ல நீங்கள்.

உங்களுகென
ஒரு சரியை வைத்துக்கொண்டு
போராடுகிறீர்கள்.

சிவப்பு மதுபற்றி சுவையறியா
உங்களுக்கு அது சரியல்ல.

நானோ அருந்தி அருந்தி அருந்தி அருந்தி
ஆனால் நீங்களோ
குடித்துக் குடித்துக் குடித்தென்பீர்கள்.

என்னைச் சரியென முத்தமிடுகிறது மது
ஆகச்சிறந்த சரியை போதை என்கிறீர்கள்.

சரியான சரியே என்னை
சரியாமல் வைத்திருக்கிறது.

சரியே
உன்னை மிகவும் பிடித்திருக்கிறது
எனக்கு.

விடு...விடு...சரி...சரி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, November 27, 2014

இளைப்பாறலின் விமர்சனம்...

மஞ்சாடி விதைகளை
சேமித்து
மூடி வைத்திருக்கிறது
அடி வேர்களில்
என் மண்
முகட்டு வளையில்
நகங்கள் கிள்ளிய வடுக்களோடு.

குருதி உலர்ந்த வெடிப்பின்
மூலை மடிப்புக்களில்
பொறுக்கியெடுத்த
ஆயிரமாயிரம் கதைகளை
வியாபாரத்துக்கென
திருடிக்கொண்டிருக்கிறது
சினிமாக்களும் இணையங்களும்
நிறை கொள்கலன்களில்
தப்புத்தப்பாய்.

வான்மேகம்
என் தேசப்படத்தின்
முகவரியழித்துத்
திருகிக்கொண்டிருக்க
காத்திராக் காலங்கள்
நழுவி அதிரும்
தந்திக் கம்பிகளில்.

வாழ்ந்த வீடு
சிதறிய சொந்தம்
கருக்குமட்டைப் படலை
குடல் சிதறிச் செத்த நாய்
என் பாப்பாத்திச் சேவல்
கைசயைத்த காவலரண் போராளி
அனாதரவற்ற உப்புமடச்சந்தி
அலைக்கழிக்கப்பட்டவர்களின் இரவு
வலமும் இடமுமாய்
சப்பித் துப்பி எஞ்சிக் கிடக்கும் குரல்கள்
உவத்தலற்ற காலத்தின்மீது
காய்ந்த விமர்சனங்கள்.

இன்னும் சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை.

புழு நெளிய
மலம் மேல் மலமிருக்கும்
என் மக்களின்
விடுதலைத் தகப்பனே
யுத்தத்தின் பிதாக்களே
உங்களைத் தேடுகிறேன்.

தலையில்லாமல் வாழ்வதும்
ஒரு வாழ்க்கைதான்
உயிரும் குருதியும்
வேண்டுமெனில்
இதோ என் தலை.
இழந்த உறவுகளை
அழிக்கப்படும் வரலாற்றை
நினைவூட்டுகிறேனே தவிர
வேறொன்றுமில்லை.

முழந்தாழிடுகிறேன் புத்தனே
குமுத மலரோடு
உனக்காய் ஒருமுறை
அகதி தேசத்து
பனிக்காட்டுப் பெண் நான்!!!

மனதிற்கும் உடம்பிற்கும் தைரியம் கேட்டபடி...
நமக்காய் விதையாய்ப்போன அத்தனை உயிர்களுக்கும்
என் தலை சாய்த்த வணக்கம் !

வரைதல் - சுரேஷ் குமார் Suresh Kumar

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 26, 2014

சில உதிரி வார்த்தைகள்...

சூரியச் சாம்பலை
கண்டதாக
சொல்கிறார்கள் சிலர்
தீச்சுடாக் கதிர்களில்
நான்கு மணிகொண்ட
கிரீடங்களோடு.

வல்வை வெளிக்காற்று
வாங்கி வைத்திருக்கும்
அந்தரத்து வார்த்தைகளில்
தொங்கியிருக்கும் அந்த ஒளி.

முட்டையிட்டுக் கொண்டிருக்குபோதே
உயிர்விடும் ஓணான்
சேடமிழுக்கும் வதைகுரலில்
சொல்கிறது
அச்சூரியனைத் தானே
கடைசியாய்க் கண்டதாய்.

அவர்களும் நாமும்
கை கோர்த்து நடக்கமுடியா
கைவண்டிகளையே
செதுக்கி வைத்திருந்தான் காலச்சிற்பி
ஒருக்களித்த சில்லுகளோடு.

ஓணானின் வேலியில்
பட்டுத் தெறிக்கும் தீச்சுவாலை
முட்டையில் பட்டு வெடிக்கிறது.

பிசுபிசுப்பாய்
அருவருக்கும் நாற்றமென
மெல்ல நகர்கிறதொரு கூட்டம்
நான் மட்டும்
நடுத்தெருவில் நிர்வாணமாய்.

இப்போதும் புரியவில்லை
சூரியனை எரிக்கலாமா
எரித்தாலும் சாம்பலாகுமா?

தலை தடவிப்போகிறது
இன்றைய வெயிலென்னை!!!

இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் ‘அண்ணா’

குழந்தைநிலா ஹேமா

Tuesday, November 25, 2014

உறுதி மொழி...

நிலாக்குட்டி சுகமா நீ ?
கதைச்சுக் கன நாளாச்சு.

இருட்டிவிட்டதா உன் நாட்டில் ?

இது கார்த்திகை மாசம் நிலா
இருண்ட நம் ஈழதேசம்
பார்த்திருக்கிறாயா
பதுங்குழிகளோடு ?

உனக்கென்னடி
கனடிய பிரஜை நீ.

மூன்று மணிக்கே
இருளாகிறது ஐரோப்பாவில்
இருளானவர்கள் நிழலாக
பொப்பிப் பூப்போல்
நிமிர்ந்தே நிற்கிறார்கள்
வணங்கிக்கொள்
இது கார்த்திகை மாதம்.

நமக்காய் வீறுகொண்ட
வேங்கைக் குட்டிகள்
நமக்காகவே நாமம் மாற்றி
நமைந்து போனவர்கள்.

யாரும் அழவேண்டாம்
நெய்யூற்று நிலா தீபங்களுக்கு.

மாவீரர் அவர்கள்
நினைவுக் கல்லறை அற்றவர்கள்
ஆணிகளேயில்லாமல்
நமக்குள் அறையப்பட்டவர்கள்.

அவர்கள் நம்மோடு இருந்தபோது
பதுங்குழியாவது இருந்தது
சொந்தமாய் நமக்கு.

இப்போ நம் குழிக்குள்
புத்தனும் அவன் சேவகர்களும்.

யாரோ ஒருவர் நிறுத்திய சைக்கிளை
நான் உழக்கிக்கொண்டிருக்கிறேன்
துப்பாக்கிகள் அடுக்கிய தெருவில்
தற்செயலாக
அவை வெடிக்கலாம் இப்போதும்
எப்போதும்.

இதுதான் ஈழத்தின்
இயல் வாழ்க்கை இப்போது.

யாரும் விஞ்சமுடியா வாளை
உறைக்குள் வைத்தார்களே தவிர
உறங்க(கி) விடவில்லை.

கள்ளருந்திய செல்லப்பூனைகளாய்
எங்களைச் சுற்றியவர்கள்
எங்கள் இல்லங்களில்.

அவர்கள் தீட்சண்யக் கண்களை
கண்டிருக்கிறாயா நிலா
கனவுகள் எரிந்துகொண்டிருக்கும்
எந்நேரமும் தகதகக்க.

வீரமரங்கள்
நம் அண்ணாக்களும் அக்காக்களும்
அணில் அரிக்க வாய்ப்பில்லை.

அண்ணாக்களின் பாதுகாப்பில்லாத
பூக்கள் இப்போது சிரிப்பதில்லை
பொம்மைகள் எல்லாம் ஊனமாய்
நூதனமான கிராமங்களில்.

நள்ளிரவில்
தனித்துக் கரையும் காகங்களை
முடிந்தவரை ஒற்றுமையோடு
துரத்திக்கொண்டேயிருப்போம்.

நீ கனடா தமிழச்சியல்ல
நானும் சுவிஸ் தமிழச்சியல்ல
நாம் ஈழத்தவர்கள்
எமது தேசம் ஈழம்.

வெல்வோம்
விண் அதிரச் சொல்வோம் நிலா
வெல்வோம் வெல்வோம்
விடுதலைக் காற்றைச் சுவாசிப்போம்.

இன்றல்லாவிட்டாலும்
இழந்த அத்தனைக்கும் ஈடாய்
இன்னொரு சூரிய உதிப்பின்
தலைமுறை மாற்றத்தில்.

கை கோர்த்து
உறுதி கொள்வோம் இன்று.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, November 23, 2014

முற்றில்லா நம் நாட்கள்...

அடித்துச் சொல்கிறார்கள்
போர் இல்லையென்று.

ஏன் இன்னும் ஊருக்குள்
இராணுவம்
சுற்றிவளைப்பு
இறக்கவே முடியா
பாரப் பொதிகளுடன்
கழுதைகளாய் நாம் ?

உச்சுக்கொட்டும்
அவர் அழைப்பு
வீடில்லா நாய்களாய்
மொழியில்லா நாய்களாய்
தலைவனற்ற தேசத்தில் நாம்.

பதுங்கு குழிகள் மூடினாலும்
சீராகாப் பள்ளிகளும்
நீக்கா முள்வேலிகளும்...

தொடரும்
கேள்விகள் பதில்களும்
விசாரணையும்
மண்டியிடுதலும்...

வஞ்சம் தீர்க்க
வடிவான பொறிகளை
வாசனைப் பூக்கள் மறைக்க
பசிக்காமலே புசிக்கும்
உடல் முழுதும் புணர விரும்பும்
புத்தமக(கா)ன்கள்.

யார் சொன்னார்கள்
போர் ஓய்ந்ததென்று ?

கருவறைக் காய்ச்சல்போல
யாருக்கும் தெரிவதில்லை
எம் அவிச்சல்!!!

புகைப்படம் - ஜெரா Jera Thampi

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 18, 2014

முத்தம்...

கொந்துதல்
கொஞ்சுதல்
கௌவுதல் போல
அன்பின் ஆரத்தழுவல்
ஒரு முத்தம்.

ஆர்ப்பரித்து
ஆகாசத்தில் பறக்க
ஏதுமில்லை நமக்கு
கொஞ்சிக்கொள்ளும்
இருவர் தவிர.

தயவு செய்து
எட்டிப் பார்க்காதீர்கள்.

உறையும் குளிரில்
மழை நீர்போல்
இறுகும் இரு தேகத்தில்
ஒரு முத்தம்.

முலை சுரக்கும் தாயின்
முந்தானை
துளைத்துப் பார்ப்பதுபோல்...

கலவியின் உச்சத்தில்
கதவு தட்டி
அழைப்பதுபோல்...

உடை மாற்றும் தனியறையில்
ஒளிந்திருந்து பார்ப்பதுபோல்...

அந்தரங்கமாய்
அனிச்சையாய்
பேசுமொரு மொழியை
அப்பட்டமாய்
போட்டியென்று ஆக்கையில்
கொஞ்சம் அசூசைதான்.

நாகரிகமென்று
நாம் விரும்பும்
ஆங்கில மோகத்தின்
நிட்டூரமது.

முத்தம் தீட்டல்ல திட்ட
ஊட்ட ஊட்ட உயருமன்பின்
ஊட்டச்சத்தது.

முத்தம் தராத் துணையின்
முகம் நிமிர்த்திப் பாருங்கள்
சிலிம்பியிருக்கும்
அல்லது
முறிந்திருக்கும்
முத்தமொன்றங்கு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, November 17, 2014

காதல் கொலை...

உதவிக்காய்
மூன்றாவது கரமொன்று
தேவையில்லை உனக்கு
என் தலைமுடி பிடித்து
இறுக்கிக் கட்டு
நான்...
நிமிர்ந்தே நிற்கிறேன்.

தருவேன்
ஒரு சிலுவை
அறையத் தேவையான
ஆணிகள் சில.

கொஞ்சம் பொறு
உன் ஒற்றைச் சிறகில்
ஒரு முத்தம்
பச்சை விளக்கொளி
சின்னதாய்
தனிமையில் சேர்த்த
ஞாபகக் குடுவை
இதில்....
பலதும் பத்தும்.

இப்போ தொடங்கு
என்னைக் கொல்ல
இறுதி ஆசை
என்னவென்று
கேட்கமாட்டாயா ?

கேளேன்....

எனக்கு
நீ
எழுதிய கடிதங்களில்
சில வரிகள்
உன் குரலில்
போதும்!!!

குழந்தைநில ஹேமா(சுவிஸ்)

Saturday, November 15, 2014

இரவுக் காதலன்...

நேற்றொருவன்
என்னை
உடைக்கத்தொடங்கியிருந்தான்
மொழியற்ற
உளறல் தேசத்துள்
நானற்று
நினைவிழந்திருந்தேன்.

மொழி மந்திரமாய்
புரியத்தொடங்கியது
வீணையின் இதமென்றான்

மெல்ல முறுவலித்தவன்
நீ....
மல்லிகையின் இனமடியென
இடையொடித்து
பின் ஒட்டிக் களிம்பிட்டு

என்னை எரித்து
தானே....
புகைந்துகொண்டிருந்தான்
பெரும் சேவகமென
என் விசும்பல்களுக்கும்
கேவல்களுக்கும்
ஏதேதோ பெயரிட்டபடி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 12, 2014

பட்டகம்...

நமைந்துகொண்டிருக்கிறது
நிலைக் கண்ணாடி.

அடிக்கும் மழையில் கரைகிறது
வரைந்த
சிவந்த குதிரையொன்று.

உறைபனிக் குதிரைகள்
உண்ண வைத்த கொள்ளில்
கண்களின் அசைவு.

பயன் அறுத்த பின்னும்
எகிறிக் குதித்தோடுகிறது எலிகள்
மீண்டும்
பதப்படுத்தப்பட்ட மண்ணில்.

உடைவதும்
தெறிப்பதும்
கரைவதும்
ஓடுவதுமான....

தூரத்து நினைவுகளைச் சரிசெய்து
களைத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது
இந்த வெண்பனிக் காலத்திலும் வேர்க்க வேர்க்க!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, November 07, 2014

பதுளையிலயும் புழுவானான் தமிழன்...


முத்தின மூணு இலையை
முணுமுணுக்காம
தோளில சுமந்து சுமந்து
சுகமா வாழக் குடுத்திட்டு
சொர்க்கம்ன்னு
சாணி மெழுகி
நாலு மூங்கில் கம்பு நட்டு
வீடாக்கிக் குந்தும் வச்சு
குபேரன் நினப்பா
வாழ்ந்திட்டு இருந்தவங்களை
மனுசரா மதிக்காம
மண்ணுக்குள்ள மூடிட்டாங்க.

சிராய்க் கட்டையா
விறைச்ச கை கால்ல
பாம்பு குடிச்சு
அட்டை குடிச்சு
மிஞ்சின ரத்தத்தை
கொஞ்சமும் அஞ்சாம
மிச்சத்தையும் குடிச்சுப்புட்டு
குஞ்சுகளை அநாதையாக்கி
எத்தனை பேர்ன்னு
எண்ணிக்கைகூட தெரில்லன்னு
தமிழனுக்கு
இதுதான் விதின்னு
பதுளைல மூடிட்டாங்க.

நாசமா போன இயற்கைகூட
எப்பவும்
நம்மளுக்கே நாசம் செய்து
மனுசப் பச்சயம் தேடிப் புதைக்குது
அழிச்சவங்க வருங்காலம்
வளமா வாழ.

மாரியம்மா பாப்பாத்தி
வெங்கடாசலம் காத்தையா
தங்கம்ன்னு
பொன்னு பொன்னா
புசுக்குன்னு வெத்தில எச்சி துப்பி
பொய்யில்லாக் கழுதைங்க சிரிச்சது
போக்கடி அம்மனுக்கும் பிடிக்கல.

குண்டு போட்டுக் கொன்னாங்க
ஈழத் தமிழன்னு.

இப்ப......
இலங்கைக்கே
லாபம் தரும்
இல்லாத ஏழைங்களை
அழிஞ்சிடுவாங்கன்னு தெரிஞ்சுமே
காப்பாத்த மாட்டாம
தழையாக்கிப் புதைச்சிட்டாங்க.

தேயிலை பறிப்பவங்க அடுப்பில
கடநிலைத் தேத்தண்ணியோட
மனசும் சேர்ந்து கொதிக்கிறதையும்
கண்மாயைப்போல கண் கலங்குறதையும்
கண்டாங்களா கதிரையில குந்தினவங்க.

ஏகாதிபத்தியக் காரங்களுக்கு
நம்ம குழந்தைங்க
நவீனக் குழந்தைகளா ?
குப்பைகளா ?
தீட்டுப்பட்ட சாதிகளா ?

வாழணும்ன்னு
விதிச்ச விதி சொல்ல
தமிழனா பிறந்த
விதி விதிச்ச சொல்ல
நாசமாப்போன சாமியை
நாக்கில வந்தமாதிரிக்கு
திட்ட வருது.

ஓட்டுக் கேக்கும்
கும்மாரிகளுக்கென்ன
கொன்னு புதைச்சிட்டாங்களே
விருத்தி கெட்ட தமிழனை
’பதுளை’யிலயும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 05, 2014

மாயா உனக்காக...

குளிர் கொத்தித் தின்ன
மஞ்சளும் செஞ்சிவப்புமாய்
பரவிய இலைகள் நடுவில்
கணங்கள் கடுக்க நிற்கிறேன் மாயா.

வாழ்ந்த நினைவாய்
வடுக்களை விட்டுக் காலடி
காலடிவந்து விழுகின்றன
இலைகள்.

பிரியமாட்டேனெனச் சொன்ன
பாசத்தின் உச்சமாய் இருக்கலாம் மாயா
கவிழ்ந்து காலடி நசியும் இந்தத் தண்டனை.

தராத தண்டனைகளின் வலி அதிகம் மாயா
நீயே தண்டித்துக்கொள் என்பதாய்.

நீ சோதித்தபோது சிறகிருந்தது எனக்கு
வெட்டிக் கூண்டிலடைக்க நினைக்கும் உரிமையோடு
உன் வக்ர அதிகார புத்தியை மாற்றிக்கொள்ளும்
சுய உரிமையை மட்டும்
மறுத்துக்கொள்கிறாய் ஏன் மாயா ?

உன் சொற்களின் அகங்காரம் சில
என் மனதில் தக்கையாய் மிதக்க
ஆழப்புதைகிறதுன் மிகை அன்பு.

வாழ்வு பற்றி நினைக்காத என்னிடம் வலி பிழிந்து
மழையாய்ப் பொழிந்தொரு திருகுபாதை செய்தாய்
பாறை அமுக்கிய வலியோடு முளைவிட்ட
வெள்ளைப் புல்லாய் நான்
உன் திருகலில் பிளந்து வெளிவந்தேன் மாயா.

மீண்டும் புதைத்துவிடு
குளிரில் நடுங்கி நிற்கிறேன்
மஞ்சள் நிற இலைகள் நடுவில் மரத்த மனதோடு
இன்னுமொருமுறை
ஆசைத் துளிரேதும் வராதபடி திருகிவிடு
என் நுனியை.

கொஞ்சம் இரு மாயா ...

சில முத்தங்கள் தந்திருந்தாய்
நானேதும் தராத கடனாக
மழைநாளில் அப்பிள் பூவாசம்போல
அள்ளிச் சேமித்திருந்தேன்
யாருமில்லா இந்த நடைபாதையில்
கண்ணீரும் கட்டியாக
கொட்டும் ஐஸ் மழையில்
உதிர்த்திக் கரைக்கிறேன்.

மாயா நீ மலையளவா
இல்லை என் உள்ளங்கையின் கனவளவா
புதிர் அவிழா
இன்னும் கண் வரையா கலையழகும் நீ.

நீ எனக்கொரு ஓவியம்போல
கவிதைபோல அவ்வளவே
இடையூறே தவிர
நிறுத்தமுடியா கால அளவு நீ மாயா.

உன் மீசையழகு
விறைத்த முகமழகு
கர்ஜிசிக்கும் குரலழகு
ஆண்மை சிலிர்ப்பும் சிரிப்பழகு

ஆனாலும் ??????!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)


Sunday, November 02, 2014

வேறு வேறாய்...

எனக்கு அசதியாய் இருக்கிறது
ஊற்ற ஊற்ற நிரப்பமுடியா
உன் காலிக் குவளை.

நடுங்கும் என் விரல் ரேகை
போதுமெனச் சொல்லா
நிறைவுறா
உன் நிழல்களில் பதிகிறது
பதற்றமாய்.

உதிர்ந்து விழும் விநாடிகளை
பெண்டூலம் உதற
விழுகிறோம் தனித் தனியாக.

அரவமற்ற பொழுதொன்றில்
காத்திருப்போடு
நுரையீரல் சுவர்களை
தட்டித் திறந்தவன்
நீயா இப்படி நிரம்பாமல்.

என்னை நிரப்பி
உன் கையிலேந்த விடுகிறேன்
ஒவ்வொரு துளியிலும்
கனத்தோடு.

கையூட்டில்
உதிரம் வடிந்தாலும்
சிதறாமல்
களவாடிய
முத்தங்கள் ஒளித்த
உதட்டு மடிப்போடு
பொருத்திக்கொள்.

நிரம்பிய துளி நான்
திரும்பிடப் போவதில்லை
இனி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, October 30, 2014

பற்று...

இன்னும் திட்டியே
முடிக்கவில்லை
ஏன் முறைக்கிறாய்
கை ஓங்குகிறாய்.

எண்ணத்தைச் சொல்வதற்கும்
உன்னைத் திட்டுவதற்கும்
உரிமையில்லாமல்
ஏன் நான் உன்னோடு
போறேன்.... போடா
போ.......

ம்......ம்
போகமாட்டேன்
உன்னையும் விடமாட்டேன்
வாடகை மனைவியல்ல
நான்..........
இப்படித்தான்.

என்னோடு இரு
என் வார்த்தைகளை
இதுதான்
இதுதானென
கணக்கிலெடுத்து
இரவில் கேட்டு வை
முத்தமாய்த் தீர்த்துவிடலாம்.

இறுதியென முடிவெடுத்தால்
என் முட்டாள் மூதேவி
நீ....தான்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, October 25, 2014

ஆசையற்றவன்...

புத்தனின் போதனைகளை
ஒன்றொன்றாய்
சொல்லிக்கொண்டிருந்த உன்னிடம்
ஒரு மாற்றம் திடீரென்று.

அவகாசம் கேட்ட நீ....

போதனைகளில் இல்லாத ஒன்றை
உனக்காகவும் எனக்காகவும்
ஒப்புவிப்பதாய்ச் சொன்னாய்.

ஆசைகளே இல்லாத
வாழ்வைச் சொன்ன
புத்தனின் எதிர்மறையாய் இருந்தது
நீ உரியும் உடை.

வாழ்வை
அனுபவிக்கத் தெரியாத புத்தனென
முணுமுணுத்துக்கொண்டே...... !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 21, 2014

சதுரங்கக் காதல்...

சதுரங்கப் பலகையில்
உன் முத்தங்களுக்குப்
பலியான சிப்பாய் நான்.

காய்களென அடுக்கிய
பற்களில் அடியிலோ
நாக்கின் கீழோ
ஒளித்துவைத்த
எனக்கான
முத்தங்களைத் தந்துவிடு.
ஆடிக் களைத்த குதிரையென
நான் விழ
கண்களால் கொய்திழுக்கிறாய்
கமுக்கட்டுக்குள்.

பூனை மயிர்களை
ஒதுக்கிச் சிலிர்த்து
மீசை படர்த்தும்
கன்னக்குழிகளில்
நீ....
நிரப்பிய மோகம்
சூளையாகிறது
அசுரத் தீயாய்.

மிதக்கும் காற்றென
பலகைக்குள்
அடங்குகிறது என்னுயிர்
அசைதலுக்கும்
இசைதலுக்குமான
சம விரதத்தோடு.

சிலிர்த்து விறைத்த
என் கணுக்காலை
ஏவலாளிகள் கொண்டு
இழுத்துக் கட்டி
காமப்பேயென
மீண்டும் மீண்டும்
உறைந்த முத்தங்களை
எச்சிலாய்ப் பீய்ச்சிவிடுகிறாய்.

நான் வெல்ல நீ தோற்க
நீ வெல்ல நான் தோற்க
இன்னொரு ஆட்டம்
ஆரம்பமென
சொல்லிச் சொல்லியே!!!

நன்றி - கல்கி தீபாவளி மலர் 2014

நன்றி - அமிர்தம் சூர்யா

Sunday, October 19, 2014

கண்ணா...

குழல் துவாரங்களில்
கண்ணீர் நிரப்பியபின்னும்
மொழி கலைந்து
உமிழ் நீருடன் சமித்த பின்னும்
இளைத்த உடல் களைத்த பின்னும்
இடைமெலிந்து
ஊண் மறந்து நோன்பிருந்த பின்னும்
புகட்டுவாய் பாலெனக் காதல்
பரிந்துண்பாய் இதழ் முத்தமென
காத்திருந்த பின்னும்
கண்ணா....
செய்யா தயவிது ஏன்
தாயுமானவனே
இதுவோ பேரன்பு ?!

படம் - தோழி பூங்கோதை செல்வன் 

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Friday, October 17, 2014

சுயமா நான் சுகமா ?

என்னையறிந்துகொள்ள
யாரோ ஒருவரின் நிபந்தனையற்ற அபிப்பிராயம்
தேவைப்படுகிறதிப்போ எனக்கு
கருப்பொருள்
என் இருத்தல் பற்றியும்
என் எழுத்துப் பற்றியும்.

என்னைப்பற்றித் தெரிந்திருக்கிறது
என் எழுத்துவகை தெரிந்திருக்கிறது
ஆனால் 'நான்' எனும் என் உள்ளூடன் ஏதும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆனாலும்....
அவரவர் விருப்பத்திற்கேற்றபடி
கதைக்கத் தெரிந்திருக்கிறது.

என் எழுத்துக்களின் திமிரோடு
நான் ஒரு கவிஞராகவோ , போராளியாகவோ
மேடைப் பேச்சின் வல்லமையுள்ளவளாகவோ
அதே நேரம் சிறு பெண்ணாகவோ
காட்டிக்கொண்டதேயில்லை எப்போதும்.

யாரோ ஒரு கவிஞனின்
நிறவேறாக் கவிதைகளைத் தொடர்ந்திருப்பேன்
சிலசமயம் முடிக்கப்படா ஓவியத்தை ரசித்திருப்பேன்
என் இமை நனைத்த மழையை ரசித்தும்
கால் புதைத்த பனியைத் திட்டியும்
நித்திரை கலைத்த தொலைபேசியை உடைத்தும்
அப்பாவின் சிகரெட் பழக்கத்தை வெறுத்தும்
அம்மாவுக்குப் பாயாசம் பிடிக்குமென்றும்
பார்வை மங்கல் பற்றியும்
என் நிலாவோடு கதைத்துக் கனகாலமாயிற்று
என்றும் புலம்பியிருப்பேன்.

அழகாய் பந்தி பிரித்து என் வலிகள் இல்லா வாழ்வை
விளங்கியும் விளங்காமலும் நேசமித்ரன் கவிதைபோல
நவீனத்துவமாய்
குறியீடுகள் மறைக்கப்பட்டிருக்கவேணும்
பலர் அறியா என் முகம் போலவே.

நான்கு புத்தகங்கள் வெளியிட்டு
பத்து மேடையில் பேசியவரைக் பெருங் கவிஞரென்றும்
ஐநூறு கவிதை எழுதினாலும் புத்தகம் வெளியிடாவிட்டால்
"முகப்புத்தகத்தில் என்னதான் செய்கிறாய்
என்ன எழுதிக் கிழிக்கிறாய்
உன்னை யாராவது பெருங் கவிஞர்கள்
இதுவரை பாராட்டியிருக்கிறார்களா"என்று
நான்கு புத்தகம் வெளியிட்ட கவிஞரும் பேராசிரியுமானவர்
திட்டுவதுபோல முற்றில்லா வாக்கியங்களோடு
தமிழில் எழுதி ஆங்கிலத்தில் ஒப்பமிட்டும் தரவேணும்.

ஆனால்....

தமக்காய் கூட்டமொன்று வைத்திருக்கும்
பாராட்ட மனமில்லாக் கவிஞர்களுள்
அவருமொருவர்
அவரும் என்னைப் பாராட்டியிருப்பதாய்க் காட்டக்கூடாது.

அகதி வாழ்க்கையில் தனிமைக் கொடுமையோடு
மலம் கழிப்பதுபோல எழுத்தில் மன நாற்றம் கழிக்க
எழுதித் தொலைப்பதையும்
கவிஞர் என்று காட்டிக் கொள்ளவோ
மேடைப் பேச்சுக்கு ஆயத்தமாகவில்லையென்பதையும்
தூஷண வார்த்தைகள் போலவும் போலில்லாததாகவும்
நல்லவானாய் நடித்துக்கொண்டே
நடிகைகளுக்குக் கிசு கிசு எழுதுபவன்போல
எழுதித் தரவேணும்.

முக்கியமாய் ஒன்று...

இலக்கிய இலக்கணத்திற்குப் பொருத்தமில்லா
நவீன நாகரிகம்போல
விளக்கமில்லாக் கையெழுத்துபோல
கையால் வரைந்த கிறுக்கலாய் ஒரு படமும்
எடுத்துத் தரவேணும்.

மிக மிக அழுத்தமாக....

நான் பெயர் புகழ் வாங்க எழுதுபவளில்லை என்பதையும்
அதேநேரம்....
பொழுது போக்குக்காகவும் எழுதுபவள் இல்லையென்பதையும்
என் சந்தோஷங்களையோ துக்கங்களையோ
எழுத்துக்களோடு கதைத்துக்கொண்டிருக்கும்
கதைசொல்லிபோல
எங்கட ஊர் நாய்க்குட்டி விசரிபோல ஒரு விசரென்றும்
சொல்லி முடிக்கவேணும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, October 16, 2014

மோட்சம்...

உரசிப்போனது
கரப்பான் பூச்சியொன்று
நேற்று ராத்திரி.

தோழியின் குழந்தை
முத்தத்தோடு
முகத்தில் பூசிப்போன
பனிக்கூழ் சுவைக்காகவோ

இல்லை...

சர்க்கரை பிசைந்த
கையைத் தேடியோ அல்ல
நிச்சயமாய்.

இறந்து கிடப்பதாயும்
தூங்குவதாயும்
பாசாங்கு காட்டி
ஒளிந்து விளையாடுகிறது
பேணிக்கடியில் சிதறிய
சீனித் துகள்களுக்குள்!!!

பேணி - குவளை

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, October 09, 2014

09.10.2014

கடந்து போக
நினைக்கிறேன்
கையசைக்கிறது
ஏணைக்கயிறு பிடித்த
தொட்டில் கையொன்று.


பூக்களின் புன்னகைக்கும்
அர்த்தமுண்டு.

பிறப்பின் பலனோ
இல்லை அர்த்தமோ
தெரியா வாழ்வில்
கடக்கிறது
இன்றொரு நாளும் !

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, October 06, 2014

குருதி வழிகின்ற குறியீடுகள்...

குழந்தை வெள்ளையாகவும்
கண் நீலமாக இருப்பதாகவும்
பலத்த சர்ச்சை அவர்களிடம்.

இருள் மண்டிய
கர்ப்பத்தின் திரவத்தால்
மூடப்பட்ட குழந்தைக்காக
பயம் கொள்கிறது
சுற்றமும் சூழலும்.

தந்தைக்கு
மெல்லச் சந்தேகம்.

ஆழ்கிடங்கிற்குள்
ஆதவன் கண்படா
பச்சையமற்ற அவிந்த குழந்தைக்கு
உயிர்ச்சத்துக்கள்
கிடைக்காக் கவலை தாய்க்கு.

மறுத்தலும் குறுகுறுத்தலும்
வேண்டாம் பிரச்சனையென்று
ஒதுங்கிக்கொள்கிறார்கள் பலர்
பேசப்போனால் வில்லங்கமென
ஒத்திவைக்கிறார்கள் சிலர்.

தெருவோர மதிலில் ஒருவன்
எதையோ எழுத முயற்சிக்க
தீவிரவாதியென்ற பட்டத்தோடு
காணாமல் போய்விடுவானென
கரிக்கட்டை பறிக்கிறார்
பாவப்பட்ட தந்தையொருவர்.

ஊடகவியலாளன் தன் குறிப்பில்
"அவிந்த குழந்தையும்
அதன் அவதியும் அங்கீகாரமும்"
எனத் தலைப்பிடுகிறான்
கைதாகும் சாத்தியக்கூறுபற்றி
அவன் பயந்திருக்கவில்லை.

கர்ப்பம் விட்டு வருமுன்னமே
சர்ச்சைக்குரிய
குழந்தையாகிவிடுகிறது அது.

எழுதுபவர் எழுத
உறவினர்கள் குசுகுசுக்க
வைத்தியர்கள் ஆராய
தந்தை முகம் சுளிக்க
தாய் தவிக்க
தூரங்கள் துண்டித்துக்கொள்ள
பிறக்குமுன்னமே
தோல் முளைக்காமல்
பிறக்கலாமோவென
எண்ணிக்கொள்கிறது அக்குழந்தை.

நாடுகடத்தப்பட்ட சூழ்நிலையில்
அதிகாரிகளால்
சட்ட ஒழுங்குகளுக்குள்
மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறது
அக்கர்ப்பம்.

நாடில்லா அகதிகளென
முத்திரை குத்தப்பட்டு
பிறக்கவும்
இறக்கவும் விரும்பா
உடலைச் சுமக்கிறது
ஒரு தாயின் வயிறு.

அந்நியமாக்கப்பட்ட
அது
அதுவாகவே
அடங்கிக்கொள்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

Saturday, October 04, 2014

குலவை சேமிப்பவன்...

குலவை தொக்கி நிற்கும்
தேயிலை மலைகளெங்கும்
வாத்தியக் குறிப்புக்களை
சேகரித்து
கொண்டு வந்திருந்தான்
நிசப்தத் தொகுப்புக்களாய்.

உள்ளங்கை வெற்றிலையில்
தனக்கான சாத்தியங்களை
சத்தியமாக்குகிறான்.

முன்வினைக் கட்டினை
நீக்கிப் புரள்கிறது இரவு
மூச்சிழுத்து
கண்ணீர் துருத்த.

இனி....
தீரா முத்தங்கள்
கலக்கும் குலவைகளில்
கலக்கக்கூடும்
அவன் சுவாசம்.

அன்று....
ஆறிய தேநீரானாலும்
காத்திருக்கும்
பருகிய இதழோடு.

கணப் பொழுதில்
கனம் அதிகமாகிறது
குரல் பேழையில்
அவனாய் இருக்குமோ!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, October 02, 2014

மோன இரவொன்று...

'சப்பாத்திக்கள்ளியடி நீ'
என உலர்த்திய
மோனச் சிரிப்பின் விளிம்பில்
தொங்கித் தயாராகிரது
மையலிரவொன்று.

அம்பென
ஊதித் துளைத்து
உயிரை
தூசாய் எண்ணி
கரையும் கண்மையில்
பரபரப்பில்லாமல்
காமரேகை வரைந்து
வசிய இருட்பாயில்
பிரிய வார்த்தைகள்
வலிபடர.

உயிர் உரு(க்)கிய
கணங்களைக் கணக்கிட
ஆணையிட்டு
துயிலாடுகிறது
கவசம் களைந்து
வீரவாள் வீசிய
வெற்றிக்களிப்பில்
ஏதுமறியாததாய்
சொண்டு சுளித்து.

சாட்சியாய்
தகனித்த சுவாசம்
வெட்கி விழித்தபடி
பாவம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 30, 2014

சமிக்ஞைகள் மீறிய குற்றம்...

சுவடுகளை
அடையாளப் படுத்திக்கொண்டார்கள்
அவர்கள்.

சிலந்தி வாயில் பூச்சியென
நெருங்கிய
மரண விளிம்பினோரம்
அடர்நீலக் கண்களோடு
அந்நியப் பறவையொன்று
கருக் கலைதல் பற்றி
பேசிக்கொண்டிருக்க...

மின்னிப் பறக்கிறது
சுண்டிய
சிகரெட்டின் துண்டொன்று.

வெள்ளைப் புறாக்கள்
வாழும் கனவுகளோடு
தகட்டுக் குகை முகடுகளில்.

விநாடிக்குள்
கணநேரச் சிலிர்ப்பில்
எல்லாமே ஆகிவிட்டது
யாருமறியாமல்.

வாழ்வு...

புயலடித்தோய்ந்த மணல்
ஆசுவாசப்படுத்தியபடி
அதன் மேலேயே
ஏலாமையோடு படர்வதாயும்...

கருக்கலைந்தவள்
மீண்டும்
முதல்முறை புணர்ச்சிக்கு
ஆயத்தமாவதாயும்!!!

குழந்தைநிலா ஹேமா !

Saturday, September 27, 2014

நாயும் தவளையும்...

மூச்சிளைக்க
எதையோ உளறியபடி
போராடிக்கொண்டிருக்கிறது
அந்த நாய்
எதிர்வாதம் செய்யாத
அந்தத் தவளையுடன்.

ஆற்றுப்படுத்த
ஒரு மல்லுக்கட்டல் போதும்
அதற்கிப்போ.

இல்லை...

களேவர மனதை அடக்க
மெத்தெனெ
சிறு குறிப்பிசை.

மன்னிப்பின்
மன்றாட்ட
பிரதட்சணத் தாவல்.

அல்லது
பின்னடைவின் ஒடுக்கம்.

இல்லை
பெருங்கோபமடக்க...

ஒரு அடைமழைக்கான
கரகரப்பிரியாவும்
அமிர்தவர்ஷினியும்.

வாயால் கெடுவதே
அதன் விதியென்றால்
விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

Friday, September 26, 2014

திலீபன் தினம் 2014...

வறுமையில் சாகவில்லை
வாடவைத்து
வஞ்சத்தில் சாகடித்தது.

வயிற்றில் பசி அல்ல
மனதில் விடுதலைப் பசி.

விழுந்தாலும் முளைப்பேனென
யாசகம் கேட்டிருந்தவன்
தலையில்....
ஏன் நம் தலையிலும்
இடி வீழ்த்தியது
காந்தி தேசம்.

இருக்கட்டும்
இருக்கட்டும்

கற்பனையில் வாழும்
குழந்தைகளாக
மணல் வீடு கட்டி அழித்த
அண்ணா அக்காக்களாக
இருந்துவிட்டு
அப்படியே சாவோம்.

மகிழ்ச்சிதானே
இப்போ ?!!!

குழந்தைநிலா ஹேமா !

Monday, September 22, 2014

நிலாப் பிரியங்கள் (1)

பிரியம் என்பது
கைகளுக்குள் குவிந்த
உறையா
இப்பனியென
உனக்குள் உறைவது....

பிரியம் என்பது
பசிக்கும்
பதுங்கு குழிக்
குழந்தைக்கு
நிலாக்காட்டி
தூங்கவைப்பது....

பிரியம் என்பது
மழைக் குமிழியென
உடைந்தும்
ஓடியும்
மனதடங்காமல்
மிதந்துழல்வது....

பிரியம் என்பது
பசித்தாலும்
ஊட்டவியலா
தூரமுத்தம் போன்றது....

பிரியம் என்பது
ஊடலென
ஆயுதங்களை
நீட்டிக்கொண்டே
கட்டியும் கொள்வது....

பிரியம் என்பது
விடிகாலை
நாசி நுழையும்
தேநீர் போன்றது....

பிரியம் என்பது
அதிகபட்ச
விமர்சனங்களையும் தாண்டி
’சுகம்தானே நீ’என்பது....

குழந்தைநிலா ஹேமா !

Sunday, September 21, 2014

தலையாட்டிகள்...

யுத்த பூமியில் இரத்த ஓய்வு
ஆனாலும்
அழுத்தும் அதிகார அரசியல்...

காவலில்லா பூமியில்
காலம் பிரசவித்த
தலையாட்டி பொம்மைகள்
தாளடி நிலம் தடவி
உறவுகள் தேடிக் களைத்து
தாவளக் கழிவில்
தான் விளையாடிய
உடைந்த பொம்மைத் துண்டோடு.

கனத்தளவும் முடியாமல்
கந்தக நெடிக்குள் வினாக்களும்
குண்டுகள் துளைத்த தூண்களுக்குள்
ஒளிந்த பதில்களுமாய்.

விதி வரைந்த கரிக்கோடுகள்
சுயமிழந்த வலியோடு
பொம்மைக் குடிலுக்குள் நிலமளைய
தம் வேலி தின்னும் ஆடென
சாக்குருவியாய்
அழவைக்கிறார்கள் எம்மை.

அப்போதும்
முழுமையான என் கோபத்தையோ
வெறுப்பையோ
அதிகாரத்தையோ
அலட்சியத்தையோ காட்டமுடியாமல்
மாறாத தலையாட்டலோடுதான்.

பொம்மைகளுடன் படுத்து
பொம்மைகளுடன் கட்டிப்போட்டு
பொம்மைகளுடனான வாழ்வு
பொம்மையாய்ப் பிடிக்கவில்லை.

கொடூரமாயிருக்கிறது
ஒவ்வொன்றிற்கும்
பொம்மையென தலையாட்ட
பிடிக்கவில்லையென
உணர்த்தவோ சொல்லவோ
முடியாதிருப்பதன் சாபம்.

இன்றளவும்
நான் தலையாட்டிக் கொண்டேதான்.

காட்சிகளை மாற்றிக்கொண்டு
அவர்களும்
அப்படியேதான் இன்றளவும்!!!

பனிப்பூக்கள் பத்திரிகையில் பிரசுரமானது
www.panippookkal.com
நன்றி தியா......
Rasaiya Kandeepan

குழந்தைநில ஹேமா !

Friday, September 19, 2014

சூரியத் தேடல்...

என் சூரியனைக்
கண்டீர்களா யாராவது?

பூவரசு பூத்திருக்கும்
குச்சொழுங்கைகளில்
ஒளிந்திருக்கலாம்
அல்லது
கறையான் புற்றிடை
சிதறியிருக்கலாம்....

சூரிய விசாரிப்பை விடுத்து
இப்போதெல்லாம்
எனைத் தொட்டு விழும்
விம்பத்தைக்கூட
விழுங்கத் தொடங்கியிருக்கிறேன்
பெரும் பாம்பாக.

உச்சி முடியை
எரிக்கத் தொடங்கியிருந்தான்
அவன்!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, September 16, 2014

அலை கக்கிய நிலா...

ஆதியிருப்புத் துளிகளை
அளாவி
அள்ளி வந்திருக்கிறது
இத்தாலியக் கடலுக்குள்
குழந்தைநிலா.

ஆக்கையழுந்த
ஆயிரம் விண்மீன்கள்
கண்களுக்குள் மின்ன
சுனாமி விழுங்கிய
சொச்சமாய்
என்னையும் விழுங்க
பெருங்குரலெடுத்து
மாரடித்தழுதது அலை.

முன்னெப்போதும் பார்த்திரா
வெள்ளைக்குதிரைப் பயணம்
கொங்காணிபோலொரு
கொம்போடு
புழுதி பறக்க..

ஆகரச் சுரங்கம்
நீர் வற்றிய தடாகம்
ஹா ஹா
என்றொரு கந்தருவன்
ஆகாசத்தாமரை
விதமான
செவ்வண்ணத்தில்
செம்பருத்தி
ஆக்கியோனின்
அழகிய கம்பீரக் கிரீடம்
என்காடு
அதில் தாவும்
தத்தம்மாக்கள்
தங்கவால் குரங்குகள்
அடங்காப் பெருங்காமத்தில்
கருகிய இரு வெண்புறா இறகுகள்.

இத்யாதி இத்யாதி....

வேகம்
சூடு பறக்கும் அதிவேகம்
காற்றேயில்லா
பூமி கிழித்து
மிதப்பதாயும்
நடப்பதாயும்
ஒரு வித்தை.

உயர்ந்த
கையுரசிய தூரத்தில்
ஆஸ்திரிய மலைகள்
கடந்துதான் வந்தேன்
அவைகளைக்
கேயிலேந்தும்
பலமெனக்கிப்போ.

ஜேர்மனிய
நிர்வாண மலைகளுக்கு
முடிந்தமட்டும் நீர்பீச்சும்
அலையுயர்த்திய வானத்தில்
மூழ்கிக்கிடக்கிறேன்.

கையேந்தி நிமிர்த்துகிறது
என் கால்களை
இரு கைகள்
சிருட்டித்த அத்தனையும்
அழித்ததாய் திட்டினேன்
நாசிக்குள் நிரவிய
உப்புக் கைக்க.

சாதிக்க ஏதுமில்லை
சாவதற்குப் பயமுமில்ல
ஆனாலும்
உயிர் போகும் தருவாயில்
வாழத்தான் பிடிக்கிறதோ ?

இல்லையென்றால்
உந்தி மூழ்கி
சிரசு சிலிர்ப்பும்
ஒவ்வொரு தரமும்
'பிடி....பிடி'
என்கிற சொல்மட்டும்
வந்தது ஏன்
என் வாயில் ?!!!


குழந்தைநிலா ஹேமா ! 05.09.2014

Wednesday, August 27, 2014

மின்மினிப் பூச்சி - தேவதை !

அனைவருக்கும் வணக்கம்...!

இது ஒரு கதை சொல்லியின் (முதல்) கதை.
என் எழுத்துகளை பிரசுரிக்க இடமளித்த
குழந்தைநிலா ஹேமாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் எழுத்துகளின் தொடக்கம் ஹேமா..
இவர் மற்றும் இன்னும் சிலரின் எழுத்துகளை
வாசிக்க ஆரம்பித்து பின் மெதுவாய் கிறுக்கத் தொடங்கி
இன்று ஒரு கதையும் எழுதும்  அளவுக்கு முயற்சிகளை
தொடர்ந்திருக்கிறேன் என்றால் எல்லாம்,
இவரைப் போன்றவர்களின் எழுத்தின் தாக்கமே காரணம்..
இந்த முயற்சியை என் அபிமான கவிதாயினி பக்கத்தில்
வெளியிடுவதில் மிகுந்த பெருமையடைகிறேன்...!
முதல் கதை கொஞ்சம் கிறுக்கலான கவிதை
நடையில் இருக்கும். பொறுத்தருளவும்...!
கருத்துகள் அன்புடன் வரவேற்க்கப்படுகின்றன...!
பிரியங்களுடன்...
ஒரு கதை சொல்லி !

இனித் தொடரலாம் மின்மினிப் பூச்சி தேவதையோடு...

சுற்றிலும் மலைகள் சுழ்த்திருக்க, பல குடிசை வீடுகளுடனும்,
சில காரை வீடுகளுடனும், நெடுவாய் மூன்று தெருக்களும்
குறுகலான இரண்டு தெருக்களுடனும்
அழகாய் அமைந்திருந்தது அக்கிராமம்..

அது ஒரு மாலை நேரம்.
சூரியன் மெல்ல தலைச் சாய்த்து கொண்டிருந்தான்.
சிறுசுகளின் விளையாட்டு கூக்குரல்கள் செவிகளை
அறைந்து கொண்டிருந்தன..
கோழிகள் பஞ்சாரங்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கால்நடைகள் வயிறு நிரம்பி விட்ட மகிழ்ச்சியில் மண்
சாலையின் புழுதி பறக்க துள்ளல் நடை போட்டன.
வயல் வெளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன் நான்.
சில எட்டுகள் வைத்தால் முதல் தெருவை தொட்டு விடலாம்
என்ற நிலையில் தான் கவனித்தேன்...

எதிர் வெயில் அவள் மேல் படர்ந்திருந்தது..
மஞ்சள் தாவணியின் முனை காற்றில்
அலைபாய்ந்து கொண்டிருக்க,
அதற்க்கும் அவளுக்கும் பொருந்தும்
கச்சித உடைகளும் தரிந்திருந்தாள்.
நேர் வகிடுடன் நீண்ட மயிர்தோகை கூந்தல்,
அந்த சிறிய ஒற்றைக் கல் மூக்குத்தியும்..
அதே அளவிலான ஸ்டிக்கர் பொட்டும் ஒட்டியிருந்தாள்.
அந்த அழகிய வட்ட முகத்தில்..

கொஞ்சமாய் முகம் சுளித்திருந்தாள்..
எதிர் வெயிலின் தாக்கமாக இருந்திருக்கலாம்.
அவள் பாதங்களிலிருந்த வெள்ளிக் கொலுசின் ஓசை
தெருவின் வீட்டுச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது..
அதுவே அவள் வரும் வேகத்தையும் அறிவித்தது..
ஆம்... ஏதோ அவசரத்தில் வருகிறாள்
அதுவும் என்னை நோக்கி...
என்ன நடந்ததோ, எங்கயும் மட்டிவிட்டோமோ
என்ற பயத்தில், முன் எடுத்த அடியை வைக்காமல்
பக்கவாட்டில் ஒதுங்கி சாலையை விட்டு இறங்கி நின்றேன்.

(அவள்- ஓர் அறிமுகம்
அவள் வேறு யாருமல்ல..
என் இதயத்தை எடுத்து வைத்துக்
கொண்டு தரமாட்டேன் போ என்று அடம்பிடிக்கும் ராட்சசி.
என்னதான் ராட்சசி என்றாலும் பேரன்பு மிக்கவள்.
எனக்கொன்று என்றால் துடித்துப் போவாள்.
அழகிலும்,குணத்திலும் மேன்மை பொருந்தியவள்.
இதோ பக்கத்திலும் வந்து விட்டாள்...

என்னடா... உன்னைப் பார்க்கத்தான் இவ்வளவு வேகமாய் வரேன்..
நீ ஒதுங்கி போகிறாய்..
மேலும் சுளித்தாள் முகத்தை..
மனசு கேக்குமா என்ன...?
இல்லடி,,, ஒதுங்கி போகல...
நீ வர்ற வேகத்தில் மோதி கிழே தள்ளி விட்டுட்டேன்னா...
அதான் ஒதுங்கி நின்றேன் என்றவனை முறைத்துப் பார்த்தவள்..
பின்பு சிரித்து விட்டாள்.
போடா.. எப்போதும் என்னை கிண்டல் பண்றதே
உனக்கு வேலையா போச்சு..
தலையில் கொட்டினாள்..
ஏய்.. லூசு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.
வெளி இடங்களில் நெருக்கம் காட்டி நிற்காதே என்று..
யாரும் பார்த்தா அப்புறம் அவ்ளோதான்..
அதனாலென்ன என் ஆள் பக்கத்தில நிற்க எனகென்ன பயம்..
அதுவுமில்லாம அப்பா,அம்மா ஊர்ல இல்ல தெரியுமா...?
பாட்டி ஊர்ல நாளை கும்பாபிஷேகம். முன்னமே கிளம்பி போய்ட்டாங்க,,
மெல்லமாய் கண் சிமிட்டினாள்..

ஒ... அதான் துளிர் விட்டு நிக்கிறியா.. வச்சிக்கிறேன்
சரி, இப்போ எதுக்கு அவசரமா தேடிட்டு வந்தவ என்னை..
அதில்லைடா... உனக்கு தான் தெரியுமே
சின்ன வயசிலிருந்தே எனக்கு அந்த அம்புலி காடு பார்க்கனும்னு ஆசை,
நீ தான் என்னை ஏமாத்திகிட்டு இருக்கியே..
நான் எத்தனை முறை உன்கிட்ட கேட்டிருக்கேன்..
இன்னைக்கு போலாமா...?
போயிட்டு சீக்கிரம் வந்திடலாம்..
கெஞ்சலும் ஏக்கமுமாய் பார்த்தாள்...

வேணாம்டி... அங்க போனா அவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியாது.
போறதுக்கே கன நேரம் ஆகிடும்.. அவ்வளவு நேரம் நாம்
இங்க இல்லாம இருந்தா வீணா பிரச்சினை ஆகும்...

அத நான் பார்த்துகிறேன்.. அங்க நிறைய மின்மினி பூச்சி
இருக்கும் தானே.. எனக்கு அதைப் பார்க்கணும்டா...
அதை கையில் பிடிச்சு... நீ மட்டும் எப்படி வெளிச்சத்தோட
இருக்கேன்னு அதுகிட்ட கேக்கணும்.. ம்ம்ம்,
அதான் எங்க வீட்டில யாரும் இல்லையே.. நீ உன் வீட்டில
பக்கத்து ஊர் நாடகம் இல்ல சினிமா பார்க்க போறேன்னு
சொல்லிட்டு எப்படியாவது வாடா... விரசா திரும்பிடலாம்..
முக பாவனை மாற்றாமல் சொன்னாள்..

மனசு தங்குமா எனக்கு....
சரி போகலாம்... என்றேன்
சொன்ன விநாடி அவள் முகத்தை பார்க்கணுமே
பஞ்சுமிட்டாய் கிடைத்த குழந்தை போல...
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள்,
தலையால் ஒரு முட்டு முட்டினாள்.
எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது...
நன்றிடா...! சொல்லி விட்டு கேட்டாள்..
ஆமா அந்த காட்டில நிஜமாலுமே அம்புலி இருக்கா..?

எனக்கு சரியாய் தெரிந்திருக்கவில்லை..
முன்பு அங்கு போனதும் கிடையாது,,
அங்கு அம்புலி என்றொன்று இருப்பதாகவும்
அங்கு செல்பவர்களை தூக்கி சென்று விடும் என்றும்
செவிவழியாய் கேட்டதுண்டு..
இதை இவளிடம் சொல்லி ஏன் குழப்பனும்...
பாரு எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறாள்லென்று...
மனதிற்குள் நினைத்தவனாய்...

தெரியலடி... எதுவா இருந்தா என்ன..?
உன்னைப் பார்த்தால் ஓடிவிடும் என்றேன்.
போடா.. இங்க மட்டும் என்னவாம்...
அடிக்க வந்தவள் நிறுத்தி..
சரி.. நான் எப்போ கிளம்ப வேணும்,
இப்போவேவா..? என்றாள்.
ஏண்டி... என்னை பஞ்சாயத்தில் நிற்க வைக்காமல் விட மாட்ட போல,
கொஞ்சம் இருட்டட்டும்.. ஒரு ஏழு மணிக்கு மேல..
வடக்கு எல்லையோரம் இருக்கிற அய்யன் கோயிலோரமா வந்து நில்லு.
நான் வந்து கூட்டிப் போறேன்..
இங்க பாரு அந்த இரண்டு மலைகளையும்
அந்த புறமிருக்கும் ஆற்றையும் தாண்டி தான் போயாகனும்..
அதனால ஒழுங்கா சாப்பிட்டு வா..
அப்புறம் பாதிவழியில் நடக்க மலைச்சு நின்றால்
அங்கேயே விட்டுட்டு வந்திருவேன் சொல்லிட்டேன்...
ம்ம்ம்... அம்மா அடை சுட்டு வச்சிட்டு போயிருக்கா,,,
உனக்கும் சேர்த்து கொண்டுவரேன்..
இப்போ வீட்டுக்கு போறேண்டா...
சொல்லிவிட்டு சிறுபிள்ளை ஓட்டம் ஓடி தெரு கடந்து மறைந்தாள்...!
மெல்ல இருட்ட தொடங்கியிருந்தது...

நேரம் ஏழு மணி தாண்டியிருந்தது... இந்நேரம் வந்திருப்பாள்..
பதற்றத்துடன் வீட்டில் ஏதோ சாக்கு சொல்லி விட்டு கிளம்பினேன்..
அய்யன் கோயிலை நெருங்கினேன்..
ஆள் அரவமற்று கிடந்தது..
இன்னும் வரலையோ இவள்... எப்போதும் இப்படி தான் பண்ணுகிறாள்.
வரட்டும் இன்று... நல்லா நாலு திட்டினாதான் பயம் இருக்கும்..
மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவனை பின்புறமிருந்து
தொட்டது ஒரு கரம்...
திட்டுகிட்டு திரும்பியவனை கத்திவிடாமல்
வாய் பொத்தியது அக்கரம்..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்... யாரோ அல்ல..
அவள் தான்..
எங்கடி போனவா..? இப்போவே நேரமாச்சு தெரியுமில்ல..
மிரட்டலாய்...
போடா.. நீ இப்போ வந்திட்டு என்னைச் சொல்றியா...
நீ சொன்ன நேரத்துக்கே வந்து காத்து கிடக்கேன் நான்...
யாரும் பார்ப்பாங்க என்று மதில் பக்கமா நின்றேன்...
பெருமிதமாக சொன்னாள்....

அறிவு கொழுந்து தாண்டி நீ...! சரி போகலாமா என்றேன்.

ம்ம்ம் ஆனா ஒரு அடி தள்ளி தான் வரணும்..
தொடாமல் இருக்கணும், அப்படின்னா போலாம்..
இல்ல, வீட்டுக்கு போறேன் என்றாள்....!
எல்லாம் விதி... கூட்டிகிட்டு போறதும் இல்லாம நிபந்தனை வேறயா..?
தலையில் அடித்து கொள்ள வேண்டும் போல இருந்தது....
சரி போகலாம் என்றேன்...
ம்ம்ம்.... முனகினாள்.
பாதங்கள் வேகம் காட்டின... பாதை சென்ற திசை நோக்கி...

அப்போதுதான் முளைத்திருந்த முழு நிலவு கொண்டு வந்திருந்த
தீப் பந்தங்களுக்கு வேலை இல்லாமற் செய்திருந்தது...
முதல் மலையை மெதுவாக கடந்தோம்...
இரண்டாம் மலை நெருங்கியதும்
அம்புலி காடு கண்ணில் பட்டதுதான்...
அவள் நடை வேகம் கூட்டிச் சொன்னாள்..
சிக்கிரம் வாடா என்னை சொல்லிட்டு நீ தான் மெதுவா நடக்கிறாய்..
வரியா இல்ல விட்டு போகவா...? என்றாள்.

ஏண்டி சொல்ல மாட்ட நீ.... காடு வரட்டும் உன் வேகத்தை பார்க்கிறேன்..

ஏண்டா... ?

அங்கதான் அம்புலி இருக்கே என்றேன்.

நிச்சயமாய் பயந்துபோய் இருப்பாள் போல..
நிஜமாவா...? பக்கம் வந்து கையை இறுகப் பற்றிக் கொண்டாள்..
ஏய்..சும்மா சொன்னேன் டி லூசு...
பயப்பதடாத என்றேன்...
ம்ம்ம்.. என்றாலும் கையை விலக்கவில்லை..
உணர்ந்தேன் அவளுக்கு என்மேலிருந்த
அன்பின் பிணைப்பையும் நம்பிக்கையும்,,
சற்று நேரம் எதுவும் பேசாமலே தொடர்ந்தது பயணம்...

ஆற்றை நெருங்கியதும் அவளே பேச்சை துவக்கினாள்...
ஆமா இன்று குளிச்சியா நீ...? என்றாள்..
இல்லை என்றேன்..
அழுக்கு பையா... இங்கதான் இவ்ளோ தண்ணி ஓடுதுல்ல..
போய் குளிச்சிட்டு வா.. நெட்டினாள் என்னை.
பரவால்ல... காலைல குளிச்சிக்கிறேன்...
ஏற்கனவே குளிரா இருக்கு... இப்போ குளிச்சா அதிகமாயிடும்
அப்புறம் ஏதும் ஏடாகூடமாயிடும் என்றேன்...
வேணாம்பா.... அப்படின்னா என்றைக்குமே நீ
குளிக்க வேண்டாம் என்றாள் கேலிச் சிரிப்போடு..
ம்ம்ம்.. நான்.

ஆற்றை கடக்க அந்த பழைய கல் பாலம் தான் எப்போதும் துணை..
பாலத்தை நெருங்கியதும் வெடுக்கென என் கையை உதறியவள்,
குட்டி ஓட்டம் காட்டி பாலத்தில் நின்று சொன்னாள்..
ஹை.... நான் தான் முதலில் தொட்டேன்... கீச்சு குரலில் சொன்னாள்.
பின் பாலத்தின் குறுக்காகவும், நெடுக்காகவும் சற்று தூரம் போய்
திரும்பி வந்து மறுபடி திரும்ப போய்....
சிறுபிள்ளைத்தனம் செய்து கொண்டிருந்தாள்... நான் இருப்பதையும் மறந்து...!
என்னடி பண்ற நீ....?

ஒன்னுமில்லையே என்றவள்...  பெருமூச்சொன்றை உதிர்த்து சொன்னாள்..
சின்ன பிள்ளைல இங்க சிலமுறை வந்துருகேண்டா தாத்தாவோடு...
அப்போல்லாம் பாலத்தின் மேல் தரை தட்டி சில நேரங்களில் தண்ணீர் ஓடும்.
காலால் எத்தி விளையாடுவேன்... அவ்வளவு சந்தோசமா இருக்கும்..
இங்க பாரு ஒருமுறை அப்படி விளையாடுறப்போ லேசா அடிபட்டுச்சு..
உடனே தாத்தா ஓடிபோய் அதோ அக்கரையிலிருந்து
ஏதோ இலை பறிச்சு வந்து மருந்திட்டார்...
என்று கணுக்காலிலிருந்த சிறு கீறல் தழும்பைக் காட்டினாள்..
கூடவே தாத்தாவின் நினைவுகளையும்...!
என் கண்களில் துளிர்த்த சிறு துளிகளை மறைக்க முயன்று..
ம்ம்ம் போகலாம் என்றேன்...
நல்லவேளை அவளிருந்த சந்தோஷ மனநிலையில் இதை கவனித்திருக்கவில்லை...!

காட்டை நெருங்கி விட்டோம் என்பதின் அடையாளமாய்
வெட்டவெளியில் தொடர்ந்தது பாதை...
தூரத்து நெட்டை மரங்கள் கையசைத்து வரவேற்ப்பது போல ஆடியது காற்றில்..
இப்போது நிலா தொடுவானிலிருந்து வெகுவாகவே மேலே வந்து விட்டிருந்தது.
நல்ல வெளிச்சம் பகலைப் போல காட்சியளித்தது.
காட்டு மிருகங்கள் இரவு உணவு முடித்து
அப்போதுதான் உறங்க தொடங்கியிருக்கும் போல,
மிக லேசான கர்...கொர் சத்தங்கள் தூரத்தில் கேட்ட வண்ணம் இருந்தன..
பக்கமிருந்த மரங்களில் பறவைகள் எங்களை கவனித்து
விட்டாற்போல அவ்வப்போது கீச்சிட்டன..

எங்கடா ஒரு மின்மினி பூச்சி கூட காணல...?

எனகென்னடி தெரியும்...
ஒருவேளை ரொம்ப வெளிச்சமாய் இருக்கிறதால வரலையோ என்னவோ..?
கோபப்பட்டு அவள் நிலவை முறைத்தலோ என்னவோ,
மேகக் கூட்டத்துக்குள் மறைந்து கொண்டது நிலா...!

லேசான இருட்டு அவளை கொஞ்சமாய் பயமுறுத்தியிருக்கும் போல..
மீண்டும் இறுகப் பற்றிக் கொண்டாள் என் கரத்தை...!
மனதிற்குள் சிரித்து கொண்டேன்.
வெளிகாட்டாமல்,
என்னடி..? என்றேன்.
ஒன்றுமில்லை நட என்றாள்.
இம்முறை நெருக்கம் அதிகரித்திருந்தது...!

அன்றே மலர்ந்திருந்த காட்டு மலர்களின் மணம் எங்கள் வழியெங்கும் நிரம்பியிருந்தது.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு குளம்...
அதில நிறைய தாமரை பூக்கள்...
நாங்கள் குளத்தை நெருங்கியதும் எங்கள் சத்தம் கேட்டு தவளைகள்
தான் சத்தத்தை நிறுத்தி விட,
அமைதியானது குளமும்.. வனமும்...!
நிசப்தமே படர்ந்திருந்தது எங்கும்..
அவள் அரை இருட்டிலும் தாமரை பார்க்க ஆசைப்பட்டு,
எனக்கு அத பார்க்கணும் கண்ணா என்றாள்.
என்னடா இவ ஆசைப்பட்டு கேக்கிறாளே...
என்ன செய்ய ன்னு தவித்து நின்றேன்..
என் தவிப்பு கடவுளுக்கும் கேட்டிருக்கும்...!
சரி என்று குளத்தில இறங்கி அதை பறித்துக் கொண்டு
வந்து அருகில் காட்டலாம் என்று இறங்க ஆரம்பித்தேன் குளத்தில்...!

அப்போது...........

சிவப்பும் மஞ்சளும் கலந்த ஏதோ ஒரு பெரிய
ஒளி பெருக்கு குளத்தின் எதிர்புறத்தில்
இருந்து குளத்தில் மேல்புறமாக நெருங்க பரவ ஆரம்பித்தது...!
புரியமால் பயத்தில் அவள் என் கை பிடித்து,
வேணாம் டா.. என்றாள்.
நான் அவளை சமாதானப் படுத்தி மீண்டும் இறங்க ஆரம்பித்தேன்.
அதற்குள் அந்த ஒளிப் பெருக்கு குளம் முழுக்க
பரவி விட்டிருந்தது.
கூட்டமா இருந்த அந்த ஒளி வட்டம் சிறு சிறு பிரிவா பிரிந்தது.
அவள் முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம்...!

ஆம் அவை எல்லாம் மின்மினி பூச்சிகள்......
அவள் பார்க்க ஆசைப்பட்ட மின்மினி பூச்சிகளே தான்...!
அந்த வெளிச்சத்தில் அத்தனை தாமரை மலர்களும்
அவ்வளவு அழகாய் காட்சி தந்தது.
மெய்மறந்து சிலையாகி நின்றாள் அவள்..
அவள் முகம் தாயை பார்த்த குழந்தையின் பரவசம் போல ஆகியிருந்தது...!
சரி பூ வேண்டுமென்று கேட்டாளே என்றுனர்ந்தவனாய்,
மீண்டும் குளத்தில் இறங்க ஆரம்பித்தேன்..
அவள் சொன்னாள்...
வேண்டாம்டா......அது அங்கேயே இருக்கட்டும்.. அதுதான் அழகு எனறாள்...!

அவள் வார்த்தைகளை மின்மினிகளும் கேட்டிருக்கும் போல...
அத்தனை மின்மினியும் அவளை வட்டமிட ஆரம்பித்தது..
அவளைச் சுற்றிச்...சுற்றி,,,, அழகாய், அழகழகாய்...
கூடவே நானும் சுற்றினேன் மின்மினியாய் மாறி...!
அப்போது எனக்கொன்று சொல்லத் தோன்றியது..
சொன்னேன் அதை...
இப்போ நீ  ரொம்ப அழகா இருக்கடி...
தேவதை போல,,,,,
என்னடா...? சரியாய் கேட்காதவள் கேட்டாள்.
வேகமாய் கத்திச் சொன்னேன்..
தேவதை டி நீ.... அழகாய் புன்னகைத்து, மெதுவாய் முகம் சுளித்து,
கைகளை அகல விரித்துச் சொன்னாள்..
இறுக்கமா கட்டிக்கோடா தேவன் மட்டும் ஏன் தனியா நிற்க வேணும்...?

நிஜமாகவே மிரண்டு போனேன்.. இவளா பேசியது என்று...??
யோசித்து முடித்த நொடிப்பொழுதில் இழுத்தணைத்து கொண்டாள்.
இப்போதாண்டா உண்மையாலும் தேவதை நான்.உண்மைக் காதலின் மகத்துவத்தை எந்த ஆண்மகனும் உணர்திருப்பான்,
அந்த இடத்தில் இருந்திருந்தால்...!
எவ்வளவு நேரம் அப்படியே கடந்திருக்கும் என்பதை இருவராலும்
உணர முடிந்திருக்க வில்லை....!
தொடர்ந்து கொண்டிருந்தோம் எங்கள் காதல் கண்ணாமூச்சி
விளையாட்டுகளை மின்மினிப் பூச்சிகளோடு...!

மீதமிருக்கும் இரவில் நடந்திடப் போகும் விபரீதங்கள் எதையும்
துளியும் உணர முற்படதவர்களாய்..
நேரம் நள்ளிரவைத் தொட்டு விட்டிருந்தது.....

- தொடரும்...


சல்லடை நினைவுகள்...

வேர்களுக்குள் வேர்த்தபடி
என்னுள் கிளைவிட
தோல்கீறி
முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்.

சில....
நிழல் பரப்பும்
எலுமிச்சை வாச வேர்களின்
நடுவில்தான்
உனது வீடும்
எனது வீடுமெனச் சொல்லி...

வானம் தாண்டிய
ஒரு பெருவெளியில்தான்
முந்திய நம் குடிசை
இருந்ததாக
அன்றைய ஊடல் பொழுதில்
எழுதியும் வைத்திருந்தாய்.

எப்போதெனக் கேட்டபடி
உன் தோள் சாய
முன்பொரு காலமென
நீ...சொல்ல
நான்...சிணுங்க
மெல்ல என்....
கொலுசின் மணிகளைக்
கழற்றிக் கொண்டிருந்தாய்.

பூக்களில்தான்
உன் குடியிருப்போ
தேனீக்களின்
தோழியோ நீ
இறகுகளை
தேவதைகளுக்குப்
பரிசளிப்பாயோவென...

வான் பறக்கும்
பறவைகளாய் மாறி
கண் தரும் காமக்களியில்
உன்னோடு களிப்பதில்தான்
எத்தனை அற்புதம் !!!

குழந்தைநிலா ஹேமா !


Sunday, August 24, 2014

முடியாதவர்கள்...

அவதானமாய் வீழ்த்தப்படுகிறேன்
என் இருப்பின் சூத்திரங்களையே
ஆயுதமாக்கி.

வேடிக்கை பார்க்கிறது
காலம்
பிடி தளர்ந்த என் கையில்
அத்தனை ஆயுதங்களையும்
திணித்து.

பலம் குறையக் குறைய
திருப்பிக் கொடுக்க
முடிந்தளவு முனைகிறேன்
நரம்பறுத்த கைகளை நீட்டி.

ஒரு நிலைக்குப்பின்
என்னிடம் வாங்கிய
ஆயுதங்களாலேயே
என் ஆன்மாவையும்
அறுக்கத் தொடங்குகிறார்கள்.

மிக நிதானமாய்
நீந்தி வருகிறது
எனக்கான
முடிவிலியின் கணங்கள்
புஷ்பக விமானத்தில்!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, August 19, 2014

பறத்தலுக்குமுன்...

உச்சுக்கொட்டியபடி
என் உயிர் பிரிவதை
பார்க்கவென்று
காத்திருக்கிறாய்
எச்சிலைக்கூட
விட்டு வைக்காத
காட்டுக்குரங்குபோல
வீட்டு மூலையில்
புழுதியலம்பி.

சிலந்தி
தன்னைத்தானே சிக்கெடுக்க
போராடிக்கொண்டிருக்கிறது
பூனையும் நாயும்
கோழியும்
இரை தேடிக்கொண்டிருக்கும்.

பானையிலிருக்கும்
துக்கிணிப் பருக்கை
எனக்கேதான்
போதுமாயிருக்கிறது
போய்விடு.

துடக்குக்கழிக்க வாசலில்
துடைப்பமெடுத்து
வைத்துவிட்டேதான்
போயிருக்கிறார்கள்!!!

குழந்தைநிலா ஹேமா !

Thursday, August 14, 2014

குழந்தைகளற்ற தேசம்...

நிலாக்குட்டி....
உனக்கென்ன
விடுமுறையும் அதுவுமாய்
குட்டியானை
அதுதான் உன் அம்மாமேல்
உருண்டு பிரண்டு சண்டைபோட்டு
பிஸ்ஸாவும் சினிமாவுமாய்
பொழுது போக்குவாய்.

நிலா....
மூச்சை முழுதாய் உள்ளிழுத்து
மெல்ல அனுபவித்து
வெளிவிடுவது போலானது சுதந்திரம்
நிச்சயம் நீ அனுபவிப்பாய்
வேற்று நாட்டில் பிறந்தாலும்.

நம் ஊரிலேயே எத்தனை முறைதான்
அடையாள அட்டையை
முழத்துக்கு முழம் காட்டுவோம்
எப்போதாவது எப்போதாவதுதானே
இங்கு அந்த அடையாளம்
தேவைப்படுகிறது.

அழிந்த வீதி
இறந்த ஊர்
அலையும் ஆவிகளின் அழுகுரல்
நச்சுக்காற்றைச் சுவாசிக்கும்
உன் இனச் சகோதரர்கள்
போரில் இறந்த
முதல் விரலையும்
கடைசி விரலையும் கோர்த்த
உன் அண்ணா அக்காக்கள் வாழ்ந்த
அடர்ந்த சூன்ய பூமி
அடையாளக் கல்லறைகள்கூட
அற்ற அரூபம் அறிவாயா ?

குழந்தைகளை அழிப்பதே
அடக்குமுறைக்கான யுக்தியாய்
ஆயுதமாய் கையாளுகிறார்கள்
நிலா இப்போதெல்லாம்.

இனத்தை அடியோடு ஒழிப்பதை
சரிவரச் செய்கிறார்கள்
காஸாவிலும் ஈழத்திலும்
நல்லவேளை நீ
அங்கு பிறக்கவில்லை.

கோவிலில்லா ஊரில்
குடியிருப்பதுபோல
குழந்தைகளில்லா
ஊரும் வீடும்
எப்படியிருக்கும்
நிலா ?

நீ கேட்ட பார்பிக் கிலுக்கி
அங்கு இனிக் கிடைக்காது
பார்பிகளும் தம் தாய்களை
சூழ்ச்சி அரசியலிலிருந்து
காப்பாற்றும் கவலையில்தான்.

தாயின் குறியில் குண்டு வைத்து
கருவிலேயே கொன்றார்கள் ஈழத்தில்
காஸாவில் ஒவ்வொரு இஸ்ரேலியனும்
குண்டாகி
கொன்று தின்கிறான் குழந்தைகளை.

நிலா....
உனக்கு அம்மா சொன்னாளா ஒரு கதை ?

அரசியல் கிலோ என்ன விலையென்று
ஏதுமேயறியாச் சிலரையும்
இராவணுவக் குண்டுகள் துளைப்பதுண்டு
உன் தாத்தாவைச் சிதறடித்ததுபோல.

ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும்
அப்படித்தான் நிலா
உன்னைப்போல
பாலும் சொக்லேட்டும்
அம்மாவின் மடியும்
ஒரு கரடி பொம்மையுமே
உலகமாயிருக்கும்
அதற்கெப்படித் தெரியும்
அரசியலும் துப்பாகியும்
இனமும் மதமும்.

கண்முன்னால் பறிகொடுத்து
பதுங்கு குழிக்குள் பரிதாபமாய்
புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள்
குழந்தைகள்
பெற்றுக்கொள்வார்களா இனி ?
சாத்தியமில்லையே நிலா
இப்போதைக்கு.

இன அழிப்பின் உச்சத்திட்டம்
இதுதான் நிலா
அறிந்துவை
நம் இனத்தின் பாடுகளை நீயும்
இன உணர்வு ஓர் நாள்
உன் மனதோடு
கேள்வி கேட்கும் நிச்சயம்!!!

செஞ்சோலைச் செல்வங்களின் நினைவுநாளில்....

குழந்தைநிலா ஹேமா !

Wednesday, August 13, 2014

தோலும் தோல்வியும்...

காமம் உரச
தீரா இரவு வலிதர
நீந்திக்கொண்டிருகிறது
உடல் நெளிய
மீன் குஞ்சொன்று.

தீர்மானமற்ற காதல்
காமத்தின் முடியாமை
ஒத்திய காயங்களுக்கு
விதியின் அகோர வெக்கை
மருந்திட முடியாப் பெண்மை.

ஆதுரமாய்
முத்தமிடுகிறது
அந்த மீன்குஞ்சு
முன்னொருநாள்போல்
பாதிப் பௌர்ணமி
அதிசயிக்க.

மனதையும் உடம்பையும்
இறுக்கி
சுற்றிப்படர்கிறது பசலை.

ஆனாலும் வேண்டாம்
ஒலிப்பதிவில் முனகி ஒலிக்கும்
காமம் விற்கும் ஒருத்தியென
ஒரு காதல் அசிங்கம்.

மேசை மெழுதிரியும்
அர்த்தமில்லாக் கவிதைகளுக்குள்
சிக்காத சில வார்த்தைகளும்
அழுகி நாறும் பூவிதழ்களும்
போதுமெனக்கு!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, August 12, 2014

மழை குடிக்கும் ஓரிரவு...

உன் இரவில் என் விழிப்பு
என் இரவில் உன் நித்திரை.

அடைமழையின்
இரவிங்கே
அங்கே ?

உலர்ந்த இறகில் அடர்மகிழ்வு
நனைந்த இறகில் தளாத்துக்கம்
கை நிறைய உன் வார்த்தை மழை
காளான்களில் தவளை உருவம்.

அம்மாவுக்கு மாத்திரை சரியாகக் கொடுத்தாயா
சின்னச்சின்ன வேலைகளைத் தாங்கிக்கொள்
உன் புகை நாற்றத்தை அவளிடம் காட்டாதே
அணைத்து முத்தம் கொடு அழாது அந்தப்பறவை.

பசியென்று சொல்லிவிட்டு காத்திருக்கிறாய்
செய்மதிக் கோபுரத்தில்
இணையம் சொல்வதை நான் சமைக்கும்வரை
வயிற்றிற்குள் பிரபுதேவாவும் பீஷ்லூசியும்.

தூரத்துப்பச்சை நீயும் சரி நானும் சரி
இலைகள் அசைந்தாலும்
காற்றுத் தொங்கி நிற்கும் கடலுக்குள்.

கண்ணா...
பாலகுமாரனின் நாவல்கள் வாங்கியனுப்பு
உடையார் நாவல் பாலகுமாரனின் பிறவிக் கடன்
சோழ தேசத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் பல
ராஜராஜத்தேவரும் பஞ்சவன் மாதேவியும்
இறப்பின் பின் தஞ்சைக் கோவிலைச் சுற்றியே
ஆன்ம வடிவமாக உலவுகின்றனராமே.

மனக்குளத்தில் என்னயுமறியாமல் கல்லெறிந்தேனா
சலசலப்பும் குழப்பமும் பிரார்த்தனையும் கேட்கிறது
பிளவுறும் மௌனமுடைத்தலறுகிறது சில சொற்கள்
உன் அழுகையின் மொழி கனக்கிறது
அன்பின் பற்றாக்குறையாக.

தெருவில் இருவரின் அன்பின் பிணைப்புப் பார்த்தேன்
இவர்கள் போல் போலியாய் நாமில்லை
மனங்கள் சாகும்வரை
அக்காதல் வருமா நீறு பூத்த என் வாழ்வில்
தேசத்தில் என் உயிரும்
ஊசலாடும் உள்ளூடலுமாய் நானிங்கு.

நம்பிக்கைக் கடவுளொருவர் உயிர்ப்பித்ததாய் சொன்னாய்
அவர் கழுத்திலும் ஆயிரம் வடை மாலைகள் பார்
வேண்டுதலுக்கும் விற்பனைக்கும் லஞ்சத்திற்குமாய்.

இப்போதைக்கு....
உன் முத்தத்தை தள்ளி வை தீயாய் சுடுகிறது.

கண்ணா...
கை கொடு பாரதி பாடலில் இளையராஜா இசை தொடு
இந்த மழையில் குடையாய் நானென்றேன்
மழையாய் நீயென்கிறாய்
காதல் தவிர்த்துக் கட்டிக்கொள் கொஞ்சம்
குடை வேண்டாம்
ஈரம் சொட்டச் சொட்ட நனைதலே இதம் இருவரும்!!!

குழந்தைநிலா ஹேமா !


Saturday, August 09, 2014

முக்கண்ணன்...

கருவியில் கண் வைத்து
துளைப்பவன் சும்மாயில்லை.

இயற்கையை
போரை
பிண்டத்தை
பணத்தை
பாசத்தை
காதலைக்
கடவுளை
அழிவை
ஆற்றலை
உயிராக்கி
உணர்வாக்கி...

நிஜத்தை நிழலாக்கி
சொல்லாத சொற்களைக்
கிளிக் கில் கூட்டியெடுத்து
புகையாக்கி...

பறவையைப் படமாக்கியவன்
சிறகுகளையும் வானத்தையும்
தனக்குள் அடக்கி...

விரும்பினால்
வியாபாரமாக்கியும்
வெளிப்பாடாக்கியும்...

வில்லனாயும்
உண்மை சொல்லும்
வீரனாயும்
அவனே ஊடகத்தில்!!!

நிழலில் ஜெரா நன்றி !

Jera Thampi

குழந்தைநிலா ஹேமா