*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, April 28, 2014

ஈரங்கள் திருடும் முட்டாள்...


இப்போதான் என் முன் காண்கிறேன்
மென்னீரம் பரவிய இந்த முகத்தை
இலையுதிர்காலத்து மரத்தடியில்
உலர்ந்த இலைகள் சில கவிழ்ந்து
அவன் முகம்போல.

அடையாளப்படுத்துகிறான் தன்னை...

பிறப்பொன்றில்
சாள
க் கதவிடுக்கில்
பாதிப்பாதியாய் நாம் நனைந்ததாயும்
உடலை உலர்த்திவிட்டு
ஈரமனதை நான் விட்டுப்போனதாயும்
பின்னர்
தானே தத்தெடுத்து வளர்த்தாயும்.

நனைந்த ஈர நாட்களில்
நானே இலைகளை உடுத்தியிருந்தேனாம்
தன் முற்றத்தில்
ஒரு வசந்தகால துய்யிரவில்
பொதிகளாய் சுமந்து வந்திருந்தானாம்
என்னில் திருடிய அத்தனையையும்
கனவுக் கிளையில் என் காதலன் கண்டு
தராமலும் போனானாம்.

என்னதான் பொதியில் என்றால்...

மழைநாளில் சேகரித்த
என் யன்னல் மின்னல்கள்
ஆயிரக்கணக்கில்
நான் சேகரித்த என் கவிதைக்கான
சில நிறத்தூரிகைகள்
சில உளறல் வார்த்தைகளும்
மற்றும்
என் கையில் காய்ந்த மருதாணிச்
சிவப்புமென்கிறான் திருடன்.

இராணுவ நுட்பங்கள் நானறிவேன்
அவர்களின் ஒரு மாதிரியான
இறுக்க வாசனையும் நன்கறிவேன்
சப்பாத்தின் அழுத்தங்களையும் அளந்திருக்கிறேன்
முன்னும் பின்னுமாய் அவனைத்துளாவ
ஆயுதமேதுமில்லை
முட்டிய அன்புதானென்கிறான்.

கால் வலியெடுத்துக் கொஞ்சம் கொலுவசைய
கொழுந்திலைகளால் தாம்பாளமிடுகிறான்
என்ன செய்ய இவனை
மீனாய்ச் செதிலிழக்கிறேன் அவன்முன்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 26, 2014

அறத் தீ...



காலம் கல்லாகிப்போனதோ
கடவுள்போல்.

உடைத்துத் திருத்த
உளி எடுத்த
சிற்பியும் பொறுக்கிறான்
கண் திறக்கவும்
அறம் காக்கவும்.

சால்வை உதறி
தோளில் போடவும்
அரசியலுக்கென
ஒரு வித நடையையும்
கண்விரித்தலையும்
பழகியிருந்தார்கள்
வார்த்தையில்
அரசியல் நடிப்பவர்கள்.

மக்களுக்கு
வாழ்வும் சுதந்திரமும்
சுபிட்சமாயில்லை
என்றபோதும்
வேறு வேறு பெயர்களில்
எரித்துக்கொண்டிருந்தார்கள்
நீதியை அவர்கள்
புகை தெரியாமல்.

வருடம் கடந்த போராட்டம்
வயதும் தளர
தளராத் தாய்
அற்புதம்மாளுக்கும்
ஒற்றைத் தீக்குச்சி போதும்
எங்காவது தொடங்கலாம்.

வன்முறையென
அவளை எரிக்கத்தொடங்கும்
அரசு
போர்முறையென்கிற பெயரில்
மனித உரிமைகளை!!!

ஹேமா(சுவிஸ்

Friday, April 25, 2014

நியமம்...


இறுகிக்
குவிந்து கிடந்த மனதை
வழியில் கிடக்கும்
பனித்திடல் விழுத்த...

காலுறைகளையையும்
போர்த்திய கம்பளியையும்
வாசலிலேயே கழற்றிவிட்டு
அசதியாய் பாரமாய்
நுழைகிறது நான்.

அங்கங்கள் இளக
ஒரு கோப்பை தேநீர்.

காலிக் கோப்பையையோ
அன்றி
என்னைச் சுற்றவோ


ஒற்றை இலையான்கூட
இல்லை.

 
சிதையும் சில சொற்களை
மீட்டெடுக்க
சிலாகித்த அன்பு அரட்டை
வலித்த நொடிகள்
நெகிழ்ந்த சமயங்கள்
அத்தனையையும்
அகழ்ந்தெடுக்க
அந்தப் பேரமைதி
போதுமாயிருக்கிறது.

அழவேண்டிருக்கிறது
இப்போ கொஞ்சம்...

இன்னொரு கோப்பைத் தேநீரில்
சற்றுப் பிறகாய் தோள் சாயலாம் ...

பனித்திடல் தாண்டியே
போகவேண்டிருக்கிறது
நாளையும்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 22, 2014

கூடுடையாக் கேள்விகள்...


கேட்கும்
கேள்வி தவிர்க்க
பதிலாய்
இன்னொரு கேள்வி
இரண்டுக்கும் இடையிலொரு
மௌன இடைவெளிவிட்டு
மிக அழகாய்.

அவ்வளவு சுலபமாயில்லை
பதில் சொல்வது
ஆனாலும்
பதில் இருக்கிறது
ஒத்தமாதிரியும்
ஒவ்வாமையாயும்.

பதில் வெளிப்படுகையில்
மனதின் வடிவங்கள்
ஒருசமயம்
வக்ரமாயும்
விரசமாயும்
விகாரமாயும்
வீணானதாயும்
வெகுளித்தனமாயும்
இருக்கலாம்.

கேள்விகள் குறித்த பதில்கள்
கேள்விகளுக்குள்ளும்
பதில்கள் குறித்த கேள்விகள்
பதில்களுக்குள்ளுமே
இயல்புகளை
ஆக்கிரமித்தபடி.

பதில்களும் கேள்விகளும்
கைகளுக்குள்
சாதாரணமாயில்லை
கைராட்டுக்கள்போல்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 21, 2014

நீலக்குருவி....


உயர்தர நிறங்களை
வறுமை தின்ன
நீல நிறத்தை
நிறைத்து நெளிகிறது
அவனது தூரிகைகள்
நீட்சிகளைப் பருகியபடி.

அவனறியாமல்
நீல அலைகளோடு
சுவரொட்டிய நான்
வெளித்தள்ளும்
குமிழ் மூச்சை மேயவிட
மீண்டுமது
உருத்திராட்சப் பூனையென
உருமாறி
உள்ளூரப் பயம் நனைக்கும்
வியர்வையாய்.

புத்தனின் வார்த்தைகளை
நிர்வாணப் பிண்டங்களை
நகரங்களின் அழிவுகளை
நிலாவை
நீரை
இயல்பாய்
மஞ்சளெனவும்
சிவப்பெனவும் கரைத்து
நீலங்களையே அப்பி வரைந்து
புன்னகைத்த உதடுகளால்
அள்ளிக் குதூகலித்தவன்...

கண் தூளிகளில்
கலங்கிய நீல நிறத்தை
இரவில்
என் ஆடையாக்கியாக்கிவிட்ட
அந்தகன் அவன்
அறியவில்லை
என் நுனி விரல்களில் ஒட்டிய
நீலக்குருவியின் இறக்கைகளை.

இருட்டிய கண்களில்

ஒட்டிய மிச்ச நீலத்துளிகள்
இரவை இன்னும் கருப்பாக்க
கீறிமுடிக்கா
நீலக்குருவிகளும்
வானங்களும்
முகங்களும்
மயில்களும்
அவன் தூரிகையில்
நீலங்களாக மட்டுமே
அதனதன் சாயலை
ஒத்தபடி.

சூத்திரம் நிறைந்த
புகழின் உச்சியில்
வறுமையும் நீலமும்
என்னை
நிராகரித்தொடங்கியிருந்ததப்போ...

அவனும் ??? !!!

Artist என்கிற மலையாளப்படத்தின் பாதிப்புக் கவிதையானது.
நண்பர் ”இத்ரீஸ்” ன் இந்த நீலக்குருவி ஓவியமும் மிகப்பொருந்தியது !

ஹேமா(சுவிஸ்)

Friday, April 18, 2014

கனவிது...


கிறங்கா மனதை அசைத்து
கனவைச் சமன் செய்தபடி
என் அறையெங்கும்
இறைந்து கிடக்கிறது
தொலைதூர முத்தம்.

பூனையின்
புசுபுசு கண்களில்
காதலைத் தேக்கி
எனக்குள்
பீச்சிக்கொண்டிருக்கிறது
பிரியங்களாய் அது.

முத்தங்களை
முலை முட்டிக் கேட்கும்
குழந்தையென
ஆக்கிவிட்டு
கலையாக் கனவுகளுக்காய்
காவலுக்கும் எனையிருத்தி
கசிந்துருகி காதலிசைக்க
காற்றையும்
கலைத்துப் பிடிக்கிறது.

வலிக்காத் தமிழ் கொய்து
முத்தங்கள் பிரித்து
பித்தம் நீக்கி
மலர் வாடக் கண் கலங்கி
உயிர்கள் நேசித்து
கொடூரமும்
சிதைவும் கண்டிரங்கி
மரங்கள் ஊன்றும்
மானுடமது.

ஆனாலும்
என் இரவை நீட்டி
மெது மெதுவாய்
கவிழ்த்து வீழ்த்தும்
பெரும்பள்ளமும் அது !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 16, 2014

காலம் அளக்கும் காலம்...


உன்னை மட்டுமல்ல
உனக்கான கவிதைகளையும்
தொலைத்துவிட்டிருக்கிறேன்
உன்னைத் தெரிந்தும்
கவிதைகளைத் தெரியாமலும்.

யாகசாலைச் சிலந்தியென
வளர்தீயின் வண்ணமாய்
உன் நினைவுகளைப் பின்னியபடி
அதே சுழற்சி வட்டத்துள்.

உள்ளிருந்தபடியே
அகற்றிய விட்டத்தை
பெரிதாக்கிவிட்டு
வெளிவரா
என் குடங்கை நிலை
திராணியற்று
எனக்கே பரிதாபமாய்.

இந்தக் கோடையிலும்
உனக்கான
மேகநிறப் பூ மொட்டுக்கள்
இப்போதும்
உன் பெயரோடு
அவிழ்ந்துகொண்டுதான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 14, 2014

ஒரு பழம் இரு பசி...


தூதென வந்த அரூப முத்தத்தை
அநாதையாய்
தவித்தலையவிடாமல்
என்னைச் சோதிக்கும் வைத்தியன்.

தீண்டிச் சீண்டும் இசையென
ஒட்டுமொத்தமாய்
துளைத்து நுழைகிறான்
சூரியக்கதிரென
மனத்திரை விலக்கி.

முடிக்க முடியாத் துவக்கம் இது.

தகுதியற்ற சில சங்கதிகளும்
சில எதார்த்தங்களும்
நமக்கிசைவில்லா
வெற்று வேட்டுக் காலங்களை
சப்பணம் கட்டிக்கொண்டு
ஆத்மார்த்தமெனும் வார்த்தைக்குள்
தீரக் கரைக்கிறது.

மனம் கலைத்தவன்
தலைசாய்க்க
உப்பில் பக்குவப்படுத்தும்
உயிரில் பூத்த பிம்பங்கள்
காதலாய் அன்றி நட்பாய்.

அச்சம் கலந்த சாமிக்கதைகளிலும்
கெக்கலித்த பூதக்கதைகளிலும்
காணாமல் போன காதல்
இதோ இங்கே...

தெருக்கூத்துத் தவிர்த்த
நாகரீகம்போல்
கடந்து நடக்கிறான்

முதன் முதலாய்
மழித்து முகச்சவரம் செய்யப்பட்ட
குழந்தை முகத்தோடு.

உயிரில்லாச் சில முத்தங்கள்
முதல் மோகத்து
அவசர ஆலிங்கனங்களில்
கருக்கொள்ளுமாம்.

அதற்கு அப்பாலும்....

உடை தவிர்த்து
ஒற்றைப் பழத்தில்
இரு பசி !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 09, 2014

மூட்டம்...


காதலின் வெப்பத்தால்
அந்தரங்க
தருணங்களைத் தவிர்க்கவும்...

அந்தகார நேரங்களில்
தண்ணீர் தாகம் எடுக்கவும்...

என்றோ
கூரையில் சொருகிய வாள்
தவறி விழுந்து
வயிற்றைக் கிழிக்கவும்...

சொற்கள் சிதறிய
முகத்தில்
முத்தாய் வியர்க்கவும்...

குற்றங்கள் மறைத்து
முகம் சுருங்கி
கூம்பவும்...

நெஞ்சு முடிக்குள்
முகம் புதைக்கும்
துணையை விலக்கவும்...

கலவி கலைத்து
கவிந்த இருளுக்குள்
கரைந்த
காதலைத் தேடவும்...

தனித்த பொழுதுகளில்
கரையோர நண்டாய்
கடல் முழுகி எழும்பவும்...

உடைந்த இரவில்
சொல்லாமல் வரும்
மழைபோல் பொழியும்

இளமைக்கால நினைவுகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 04, 2014

கடவுள்களான பாவிகள்...


கடலில்
நிலவைக் குளிக்கவைத்து
அசுத்தப்பட்டதாகக்
கழுவிக்கொண்டிருந்தார்கள் கடலை
ஒருபோதும்
தங்களை முகர்ந்து பார்க்காதவர்கள்.

பைத்தியமெனப் பெயரிட்டுவிட்டு
சுற்றிச் சூழ்ந்து பிடுங்கிக்கொண்டார்கள்
சுதந்திர தேசத்து வாழ்வையும்.

பின்னொருநாளில்
பேயனவும் விமர்சித்தார்கள்
பேயகற்றும் வித்தையில்
கைதேர்ந்தவர்கள்.

வாதைகளுக்குள் பழக்கப்பட்டாலும்
முடி பிடுங்கப்பட கதறி அலறுகையில்
அன்பறுத்து நசுங்கிய
வன்ம ஓலமெனவும்
பேசிக்கொண்டார்கள்.

பைத்தியங்களைத் துரத்தும் காமுகர்களும்
பேயை விரட்டும் ஆனந்தாக்களும்
மாறுவதற்கில்லை
ஆனால்...
கடலையும் நிலவையும்
என்ன செய்வார்கள் இனி ?!!!

ஹேமா(சுவிஸ்)



Tuesday, April 01, 2014

கருப்புக் காதலன்...


எல்லைகள் வகுக்கா
ஆகச்சிறந்த
ஆதுர(ம்) முத்தங்களை
எத்தனை முறைகள்
சுவையேற்றியிருக்கிறோம்
அவனும் நானுமாய்.

இறைவன் கலந்த
குறைந்த
வண்ணக்கலவைகளினால்
நிறங்களில் மாறுபட்டவனவன்
நம்புவீர்களா?!

நிறங்களற்றவனின்
தோள்கள் பற்றி
கொடியாகிப்
பின்
நூல் நூலாய்
பின்னிப்போயிருக்கிறேன்
அவன் விரல்களுக்குள்
அப்பப்போ.

எங்கோ வெகுதொலைவில்
தொலையாத அலைகளில்
தெருப்பாடகனின் புல்லாங்குழல்
தேன்மதுரமாய்
அது பிறந்த காடும் இருளாக.

நிறம்மாறுகிறோம்....

கருநீலநிறப் பட்டாம்பூச்சியாய்
வண்ணம் மாறி
பாதையும் தடுமாறி நான்.

அவன் அவன் அவன் .....

கண்டு பிடித்துத் தருவீர்களா
என் கருப்புக் காதலனை?

எப்படியறிவீர்கள் என்னவனை
அதற்குமொரு
கவிதை கேட்பீர்களோ!!!

ஹேமா(சுவிஸ்)