*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 30, 2012

காதல் வலி...

இறக்கைகளை ஒவ்வொன்றாகப்
பிய்த்து ரசிக்கிறாய்
ஒருமுறை
ஒரே ஒருமுறை
நாம் வைத்த அன்புக்காக்
இரக்கம் காட்டு
களிம்பு தடவு
ஒற்றை முத்தம் தா
சிறகு முளைக்க
பறக்கும் எல்லைக்கல்லாக
உன் வெப்பக் கரம் தா
போகிறேன்
தூர இருந்து ரசிக்கிறேன்
என்னைச் சுற்றி
உன் ஒளிவட்டம்தான்
மீண்டும்....
கண்ணுக்குள் காட்டிய
கடவுளுக்கு நன்றி
என் இறக்கைகளை
பிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 27, 2012

ஊழியக்காரர்கள்...

வெட்டவெளியில்
காற்றசையும் மொழியில் பிறக்கிறது
உமக்கும் எனக்குமான உரையாடல்
தலைதடவிப் போகிறது
ஒரு கிளை
சூரியக்கதிரின் ஸ்பரிசத்தோடு.

கண்கள் இருளுடைக்க
கேட்கின்றீர் ஆயிரம் கேள்விகளை
கனவுகளில் தேடிக் கிடைத்த
உமக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு.

மடித்த வானத்துள் மனசை மறைத்து
தலை குனிந்தே
மண் பார்த்துக் கவிழ்கிறேன்.

நீரைப்போல் சுழித்தோடியவர்களிடம்
கரையாத உணர்வோடு
பெருமூச்சொன்றை
வெப்பமாய் வெளித்தள்ளி
பலஜென்மத்து மீதமென
விரட்டும் விந்தையோடு
உயிர் குடிக்கும் விஷப்பாம்பின்
கதை சொல்கிறேன்.

சப்பாத்திக் கள்ளி காலில் குத்த
திரை விலக்கிய காற்றில்
நீட்டும் ஒரு கையில்
என் குருதி.

சுவறேறும் எறும்புகளின்
கனவுக்கான வேண்டுகோளோடு
ஈரக்காற்றில்
முகம் புதைந்திருக்கும் என்னிடம்
பிரிந்து போவதற்கான
வார்த்தைகளை அவிழ்க்கிறீர்கள்.

தோழர்களே....
மீண்டும் வருவீர்களோ
காத்திருக்கிறோம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 26, 2012

அண்ணாவுக்கு வாழ்த்து...

பிரபஞ்சம் பெரிது
அதைவிடப்
பெரியவன்
நம் சூரியன்
இறைந்தெங்கும்
நிறைகின்றான்
தமிழர்கள்
நெஞ்சமெங்கும்.

வெளிச்சத்தைவிட
அதை....
உமிழ்ந்தெடுத்து
வெளிவிடும்
விளக்கின்
மதிப்பானவன்...

எம் அன்பான
அண்ணனுக்கு
மனம் நிறைந்த
பிறந்த நாள் வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 25, 2012

கார்த்திகைத் தீபங்களே...

கந்தகத் திணறலில்
ஈழத்தாய்
என் தாய்
ஒரு யுகத்தின் தாய்
கருச்சிதைவுற்றிருக்கிறாள்.

நரிகளின் ஊளைகளை
தன் காதில்
அடைத்துக்கொண்டாள்
குழந்தைகளின்
தூக்கம் கலைக்க விரும்பாதவள்.

வீடு கனத்து
பூமி அசைந்து
வானம் பிழக்க
காணாமல் போன
குழந்தைகளுக்களுக்காய்
வேண்டிக்கொள்கிறாள்
கல்லான கடவுளிடம்.

வன்மங்களை வன்மங்களாலும்
சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளாலும்
கிழித்தெறிய முடியும் அவளால்
ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்
பாலுறுப்புக் கிழித்த விரல்களை
எதிர்பாரா தருணத்தில்
சில திருவிழாக் காலங்கள்
தொடங்கலாம்.

எம் மக்கள்
அகதியாய்...
அநாதைகளாய்...
அரற்ற சாபம் குடுத்தவன் எவன்
எந்தக் கள்ளச் சாமியவன்.

சிவப்புச் சால்வைக்காரன்
அள்ளிப்போனதுபோக
மிச்சக் குழந்தைகள்
பயந்து மிரண்டபடி
வயிற்றுக்கும்
அறிவுக்கும்
பெரும் பசியோடு.

மாவீரர்களே
மண் சுமந்த
எம் சிவபெருமான்களே
உங்கள் மண்ணும் மக்களும்
வாய்பேசா மௌனிகளாய்
உயிர் சுமந்த பிணங்களாய்.

காத்திருக்கிறோம்
உங்களுக்காகத்தான்
வந்துவிடுங்கள்
இல்லை எமக்கான
வழி சொல்லுங்கள்.

நமக்கான தீர்வை
பறித்தெடுக்க
இன்னொரு யுகத்தை
ஏன் தந்து போனீர்
துயர்தான்
தமிழன் காலமென
பரிதாபப்படும்
துயர் துடைக்க
இன்னுமொரு சூரியன் தேவையோ
அதற்காவது.......
வரமொன்று தாங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 23, 2012

காவலில்லா என் தேசம்...

தலைவனில்லா தேசத்தில்
யாரும் திரும்பா பூமியில்
நாங்கள் வசிக்கிறோம்
மண்ணையும்
உங்களையும் நேசித்தபடி
காவலே விழுங்கும்
காவல்கள் காக்க இங்கு.

யாரோ ஆள்வதாய்
உணர்கிறோம் எங்களை
ஒற்றைப் பருக்கையை
தாங்களே
பிச்சையிடுவதாயும்
சொல்கிறார்கள்
எங்கள் சமையலறைக்குள்
அவர்களின் சப்பாத்துக்கள்
துப்பாக்கி முனைகளில்
சந்தோஷங்கள் உறைய
உறிஞ்சும் எங்கள் நிம்மதி
அவர்கள் கைகளில்.

கார்த்திகையில்
நாய்களுக்குக்கூட சுதந்திரம்
அதுகூட....
எங்கள் சனங்களுக்கு
ஈழத்தமிழனுக்கு
இல்லாமல் போனது.

ஆர்ப்பாட்டங்களும் ஆயுதங்களும்
எம்மை ஆள்வதாயும்
அடங்காவிடில்
கிடங்குகள் காத்திருப்பதாயும்
நம் பலவீனங்கள்
பேய்களுக்குப் பிறந்தவர்களுக்கு
பேராயுதங்களாயும்.

கொல்லப்பட்ட என் பூமியில்
மிச்சம் இருக்கும்
எல்லாமே கொல்லப்படுகின்றன
போர் தின்று
விட்ட எச்சங்களுக்காய்கூட
காக்கைக்கூட்டம்போல அவர்கள்.

ஒன்றுமில்லாப் பரதேசிகளிடம்
எஞ்சியிருக்கும் கொஞ்ச
சுதந்திர உணர்வும்
பறிபோகிறது
தலைவன் இல்லா நிலத்தில்
அவர்களின் நாய் நரிகூட
எமக்கான தலைவர்களாம்
வாய்பூட்டுக்கள் இலவசமாய்
கேட்டுக்கேள்வியில்லா
மரணங்களும் இலவசமாய்.

கேட்கத் துணிந்த மனிதர்கள்
எம்மைக் காவல் காத்த
காவல் தெய்வங்கள்
இல்லா பூமியில்
எங்கள் சனங்களின் கதி....?!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 18, 2012

தூபம்...

நான் தெரியாதுபோல
நடிப்பதைக்
கண்டுபிடித்துவிடுவாயோ 
ம்ம்ம்...
உன் ஆலாபனையை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியில் நீ.

நீயோ...
விடுகதைகள்போல
பலவற்றைச்
சொல்லிச் சொல்லி 
விடுவிக்கிறாய்
அந்த நேரத்தின்
உன் முகபாவமே
அலாதிதான்
சொல்லத் தெரியவில்லை.

இல்லை இல்லை...
அதுவும் இதுவும் 
ஒன்றில்லையென்று 
சொல்ல நினைத்தும்
ஆகாதது பற்றிச்
சொல்லி ஆகாதென்று 
பேசாமலிருக்கிறேன்.

நீயோ...
உறுதியாக்கிக்கொள்ள
படாத பாடு படுகிறாய்
உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது.

இடைக்கிடை 
தவறு...தப்பு
எனச் சொல்ல 
விழைகிறேன்
விடுவதாயில்லை 
உன் அவசரம்.

நான்...
நீ...
இருள்...
சம்பந்தப்பட்டது என்றாலும்
இயல்புதான் என்கிறாய்
அலாதியான
உன் இயல்போடு.

சொல்லிக்...கொ...ண்...டே
கேட்டுக் கேள்வியில்லாமலே
அந்தி நட்சத்திர இருளில்
என் உணர்வுகளைத்
தின்னத் தொடங்குகிறாய்
சிவப்பு நிற மதுவின்
உதவியோடு
மிகமிகக் கவனமாக!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 14, 2012

என் காதல் மிருகம்...

காதல் தின்று
பின் கொல்லும்
கூர்விழி வாளோடு
உலவும்
ராட்சஷியோ நீ.

கண்ணும்
வார்த்தையும்
குவளை மதுவாய்
போதையாய்
அதைவிட
இன்னும் தேவையாய்.

அன்று சந்தித்த
இரவில்
என்ன பேசினாய்
உன் பக்கமாய்
என்னை...
எப்படிச் சரித்தாய்
இன்றுவரை
சுயமற்று நான்.

மிரட்டும் அன்பில்
வியர்க்கும் மெய்
உன் வெப்ப
ரேகைகளுக்குள்தான்
அடங்கி இயங்கும்.

அடியேய் கிராதகி...
வெளிவரமுடியாக் காட்டில்
அலையவிட்டு
வேடிக்கையா பார்க்கிறாய்
காதல் மிருகமாய்
அறிகிறேன் உன்னை
கொல்லாமல் கொல்லும்
காட்டேரி.

காடும் மலையும் தாண்டி
பூவொன்று கண்டேன்
பறித்து வாவென
புன்னகைப் பூவொன்றைப்
பிய்ந்தெறிந்துவிட்டு
பேசாமலிருக்கிறாய்.

ஒற்றையடிப்பாதையடி
என் காதல்
காடும் மலையும்
காட்டித் தந்தவளே
நீதானே.

தொலைதூரச் சிரிப்பில்
‘காதலும் நீதான் காடும் நீதான்'
எனச் சொன்னவள்....

மௌனித்த மென்னிருளில்

உறைந்து கிடக்கிறேன்
பக்கத்தில்........
வானத்து வெள்ளிகளை
போர்த்திக்கொண்டு
என்....
போக்கிரிக் காதலி!!!


தம்பி 'தாமரைக்குட்டி'யின் அன்புப் பிறந்தநாள் பரிசாக...அவர் தன் காதலுக்காகக் கேட்டு நான் எழுதிக் கொடுத்தது!

Friday, November 09, 2012

பெருந்தவம்...


அவனைத் தேடிப் புறப்பட்டு
காற்றில்லாத் தனித் தீவுக்குள்
வெளிவரத் தெரியவில்லை
ஒரு துளி காற்று வரம்
தேவை எனக்கிப்போ.

இரவும் பகலுமில்லா
மம்மல் பொழுதது
அவன் நிறம்
அதுவாக இருப்பதால்
விட்டு வர விருப்பமில்லை
நிறைக்கிறேன்
எனக்குள் முட்ட முட்ட.

எப்படியிருப்பான்
எங்கிருப்பான்
மீசை இருக்குமா
ஏன் முகம் மறைக்கிறான்
பூச்சாண்டியாய்.

நாம் சுகித்திருந்த தருணங்களில்
மழையாய் நனைத்திருந்தான்
குரல் கேட்டுச் சிரித்த நேரத்தில்
ஒரு வசீகரம்
தீராத விம்ப மயக்கம்
தீரவேண்டாம் எனக்கிப்போ.

காற்று வரட்டும்
மயக்கம் தெளிய தென்றலாய்
அவன் எனக்கு
காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டான்
எனத் தெரிந்துகொண்டே!!!
 
ஹேமா(சுவிஸ்)