*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 24, 2011

சொல்லெறி...

இளக்காரம்...
கேலி...
நக்கல்...
சுற்றிலும்
ஏக‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளால்
நிர‌ம்பி மன‌ம் வழிய
நம்ப மறுக்கும் மனம்
குறுகிச் சுருங்க
ச‌ரியாய் நேர்மையாய்
உண்மையாய் வாழ்வ‌தாய்
நினைத்திருந்த
பூச்சடித்த மாய‌முக‌ம்
குற்ற‌ச்சாட்டுக‌ளால் துளைபட
நொடித்த‌ நொடியில்
நொடித்து
நானாய் இருந்த "நான்"
அத‌லபாதாள‌த்துள் கவிழ்ந்து புரள
கூசி அருவ‌ருக்கும்
காறித் துப்பிய
எச்சில் நாற்ற‌த்தோடு
ஈயம் பூசிய இரும்புத் தகரமாய்
கனமேறிய
கண்ணீர்த் துளிகளோடு
தண்டக்காரனின்
ஆழ்ம‌ன நோண்டலால்
நொடிச்சாவில்
தேக‌ம்
உயிரோடு கையில்
பிடிசாம்பலாய்!!!


ஹேமா(சுவிஸ்

Thursday, March 17, 2011

விளையாட்டு...

நினையா நிமிடத்தில்
தாட்சண்யம் இல்லா
விதியாய்
துதிக்கையும் சிங்க உடலும்
கொண்ட யாளியாய் உருமாறி
புயலாய் நெருப்பாய்
ஆழிப்பேரலையாய் மரணம்.

கருணை மரணம் கேட்டு
போராடும் குற்றுயிரோடு
கிள்ளுப்பிறாண்டு விளையாட
சாமரப்பூக்களோடு தேவதைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, March 14, 2011

ஆத்ம ஓலம்...

வாழ்வின்
வீர வித்தைகளின்
பெரும் பாடுகளுக்கு முன்
எங்காவது
சின்னதொரு துவாரம்
தேடியபடி நான்.

உடலைக் குறுக்கி சிறுத்து
என் முனைப்பின்
அல்லது தேடலின்
அல்லது தேவையின்
சிறகு முளைக்கையில்
வானம் வெற்றுவெளியாகி
சுயமிழந்த அகதியாய்
அலையக்கிடக்கிறது.

சொல்ல முடியா உணர்வுகள்
வர்ணம் கலைத்தெழுதும் விம்பங்கள்
புரிந்து கொள்ளா இதயங்கள்
முன்னேறமுடியா கலாசாரங்கள்
என் அறை முழுதும்
கோமாளிகளின் சாகச அற்புதங்கள்.
மின்குமிழியின் எரிச்சலில்
வாசலிலேயே கிடக்க வேண்டியதாகிறது.

என்னைப் பிய்த்தெறிந்து
எனக்குள் வாழ ஒரு ஆவி
என்னைப் பிடிக்க ஒரு ஆவி
எனக்குள் இருக்கும் நானை
இல்லாதொழிக்க ஒரு ஆத்மா.

முலை கிள்ளி எறிந்து எரித்தாலும்
இந்தச் சமூகம் எரிவதாயில்லை.
எங்காவது வீர மரபுகளோடு
ஒரு வீரன்
ஒரு தமிழன்
சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
மரபுகள் தாண்டி
வந்திட்டால்....!

சிதிலமாய் உக்கிப்போன என் வாழ்வின்
வறண்ட தேசத்துள்
ஈரம் பாய்ச்சி
செத்த சிலந்திகளோடு கிடக்கும்
என்னையும் சேர்த்து அகற்ற
புனிதமாய் ஒரு மாளிகைக்குள்
உயிர்த்தெழுவேன் மீண்டும் நான்!!! (2000/05/01)

ஹேமா(சுவிஸ்)

Monday, March 07, 2011

மனோபாவம்...

என் குழந்தையைவிட
முட்டாளாகவும்
பிடிவாதக்காரியாகவும்
நகம் வளர்க்காத
பிசாசாகவும்கூட நான்.

அவளிடம்
தோற்றுப்போகாமல்
செய்வதெல்லாம்
சொல்வதெல்லாம்
சரியென்றே வாதாடுகிறேன்
நம்பவைக்கக் கூச்சலுமிடுகிறேன்.

விடுவதாயில்லை அவளும் !

உதைந்துவிட்ட புத்தகப்பை
"படிக்கும் புத்தகங்கள் சாமி
தொட்டுக் கும்பிடு."

"இல்லை அம்மா....
சாமியறைக்குள் மாத்திரமே
சாமி"என்கிறாள்!!!
நிலாக்குட்டியின் பிறந்தநாள் வாழ்த்தோடு...மகளிர் தினமும் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, March 05, 2011

விலகாத உறவு...

ஒருக்களித்து வைத்த கட்டில்.
மடித்த சாய்கதிரை.
மூலையில்
சாய்த்த கைத்தடியோடு செருப்பு.
கவிழ்த்தபடி எச்சில் துப்பும் சட்டி.
எறிவதற்கான குப்பைக்குள்
மருத்துப் போத்தல்களோடும்
மற்றும் நினைவுகளும்.
அலமாரியில் ஒரேயொரு சேலை
ரவிக்கையுடன் !

ஓய்ந்துவிட்ட ஒப்பாரி.
அணைந்த ஊதுவத்தி.
பாட்டியையும்
பாட்டியின் ஆவியையும் மறந்து
பயமில்லாமல் தலைவாசல் தூணில்
சுற்றி விளையாடும் பேரப்பிள்ளைகள்.
இயற்கையும் விழிதுடைத்து
அடுத்த அலுவலுக்காய் !

தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!

ஹேமா(சுவிஸ்)