*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, July 26, 2008

இனியவன் நீ...


தென்றலாய் தொட்டாய்
புயலாய் தாக்கினாய்.
மறக்க நினைக்கிறேன்
மூச்சுக் காற்றுக்குள்ளும்
சுவாசமாய் நீ....தானே!

தன் உடம்பின்
பாரத்தை விடக்
கூடிய பாரத்தைச்
சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்
உன்னைச்
சுமக்கிறேனே நான்.

மறக்க நினைக்கும்
போதுதானே தெரிகிறது
உன்னை நான்
நேசிப்பதின் ஆழம்.

உறங்க மனமில்லை
நினைவில் நீ...

உறங்கினால்
விழிக்க மனமில்லை
கனவில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 24, 2008

மாற்று உலகம்...

Glitter Graphics
மனமாயை விட்டு அகல
மோன நிலை குடிகொள்ள
ஆனந்த சிருங்காரம்
அள்ளிப் பரவிக் கொட்டி நிரவி.
துயரங்கள் தூர்ந்து விட
துர்க்குணங்கள் தொலைந்துபோக
சந்தங்கள் சேர்த்து
சங்கீதம் கோர்த்து
சொர்க்கத்துள் நுழைவதாய்.

தேவர்கள் பன்னீர் தெளித்து
தேவதைகள் பூத்தூவி
தரிசனம் கணச் சொடுக்கில்.
தாயின் கருவில்
மீண்டும் உருப் பெற்று
பன்னீர்க்குடம் உடைத்து
ஜனனித்த நிமிடத்தைக்
கண் முன் வானவில்லாய்.

வானுக்கும் மண்ணுக்கும்
நூல் தொடுத்ததாய்
ஊஞ்சலின் வண்ணம்.
நதிகள் நகர்ந்து வந்து
காந்தர்வ மணம் புரிந்து கொள்ள
கடல் மீன்கள்
கல்யாணியின் ஸ்வரங்களுக்குள்.

மழை கூடத் தாழ்வாரம் ஒதுங்க
தூவானம் தாலாட்ட
நிலத்தாமரை நிர்வாணமாய்.
உலகம் புதிதாய் பிறப்பதாயும்
மனிதன் மிக மிக
அழகாய் தெரிவதாயும்.
பூக்கள் தலை ஆட்டுகிறது இசைவாய்.

எப்படி...எப்படி...எப்படி
இத்தனை சந்தோஷ உலகமா!
எங்கு... எப்படி...
இசை என்னும் உலகம்
பெரும் கடல்.
நுழைந்துவிட்டால்
இத்தனையும் கிடைக்கும் இலவசமாய்.
வா என் கூட நீயும்
ஓர் இசையாய்!!!

ஹேமா(சுவிஸ்

Wednesday, July 23, 2008

கல்யாணம்...

நாட்டு நடப்பாலே
நாகரீகம் நலிஞ்சு போச்சு.
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேறு கேள்வி ஏதுமில்லை.

நல்லவனா கெட்டவனா தெரியாது.
படிப்பென்ன தெரியாது.
வேலையென்ன தெரியாது.
வயதென்ன போகட்டும் விடு.
குட்டையா நெட்டையா தெரியாது.
முடி கொட்டி தலை மொட்டையா
அதுவும் தெரியாது.

அதைப்போல பெண்ணும்
படிப்பென்ன கேள்வி இல்லை.
சமைப்பாளா கேள்வி இல்லை.(சமாளிக்கலாம்)
சின்னக் குழந்தை அவள்
இனிப்பைக் காட்டி
விருப்பம் கேட்கும் குழந்தை போல
கனடா என்றால்
கன்னியவள் மாட்டேன் என்றா
மறுத்திடுவாள்.

வாழ்க்கையென்ற வருங்காலம்
குடும்பம் என்ற கூட்டல் கழித்தல்
உணரமுடியாப் பருவம் அது.
தொட்டதெற்கெல்லாம்
நொட்டை சொல்லும் தாத்தா
பாட்டியிடமிருந்து விடுதலை.
அதைப் பாடமாக்கு இதைப் பாடமாக்கு
என்கிற பாடப் புத்தகத்திடமிருந்து விடுதலை.

ஆகா எத்தனை சுதந்திரம்.
தூக்கம் தேடும் வரை
தொல்லையில்லாத்
தொலைக்காட்சியும் தொலைபேசியுமாய்.
ஈரெட்டு வயதினிலே
தலை ஆட்டி நிற்பாள்
தஞ்சாவூர் பொம்மை போல.

பெண்ணைவிட மாப்பிள்ளைக்குப்
பத்தில் இருந்து பதினைந்து
வயதேதான் கூடவாம்
அதுவும் பரவாயில்லையாம்.

பச்சைக்குழந்தைக்கு
பாலைப் பருவத்தில்
பகட்டாகத் திருமணமும்
டொரண்டோவில்.

வருடம் ஒன்றிற்குள்
குழந்தைக்கும் ஓர் குழந்தை.
பராமரிக்கத் தெரியாமல்
பரிதவிப்பாள் பாவை அவள்
பாவம் பரிதாபம்.

நம் நாட்டின் கேட்டாலே
மலிஞ்சு போச்சு
முன்னைக் காலம் போல
சின்னப் பிள்ளைக்
கல்யாணம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 21, 2008

நடிகர் திலகம்...

மனதைக் கழற்றி
முகிலுக்குள் முடக்கி,
மேடையேறிப் பாட்டும் கூத்துமாய்
காற்றோடு கதைப்பவனாய்...

சொந்த நினைவுகளை
ஓட்டுக்குள் ஆமையாய்
உள் இழுத்து,
வெள்ளைச் சிரிப்போடு
கலைக்குள் தொலந்தவனாய்...

இயல்பைத் தொலைத்து
நெருஞ்சி முள்ளுக்குள்ளும்
கண்ணில் நீர் மறைக்கும்
கலைஞனாய்...

எதைக் குறித்தும்
அக்கறை தவிர்த்து
தன் தொழில் ஒன்றையே
குறி வைத்து,
கூர்க் கோல் எறியும்
நடிகன் இவனாய்...
சிவாஜி கணேசன்.

இயற்கை அழியும் வரை
எமக்குள் நினைவோடு வாழும்
எங்கள் நடிகர் திலகத்தின்
நினைவோடு
இன்று ஒரு கணம்!!!

ஹேமா(சுவிஸ்

Sunday, July 20, 2008

உயிர் துளைத்து ஓர் உறவு...


குழம்பிக் கிடக்கிறேன்.
என்னைச் சேர்த்துச்
சரியாக்கு.
கை கொடு கொஞ்சம்...
இப்போதைக்கு.
உன் கதகதப்பு
தேவையாய்
இருக்கிறது
கொஞ்சம்.
குளிர்ந்து கிடக்கிறேன்
உயிர்ச் சூடேற்று
நிலம்...உன் மனம்
நீர்....உன் அன்பு
காற்று...உன் மூச்சு
ஆகாயம்...உன் உடம்பு
நெருப்பு...உன் அணைப்பு
உயிர்கள் இயங்க
இவைகள் என்றால்
என்னை இயக்க
இனி...
நீ மட்டும்
எல்லாமுமாய்.
வார்த்தைகள்
வர மறுக்கிற
மெளனத்தின்
மெளனத்துக்குள்
உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
அமைதி...பேரமைதி
முற்றிலும் ...சூன்யம்
ஆனால் இன்பம்.
கருப்பாய்...கடலாய்
முகிலாய்...மரமாய்
உன் உருவம்தான்
எப்படி?
அதையெல்லாம்
தாண்டிய
உன் மனதை
மட்டும்
தேடியபடி நான்.
இப்போ...
தேடிக் கிடைத்திருக்கிறது
உன் மனம்.
என்னைக் காணாமலேயே
உனக்குள்
சிறைப் பிடித்து
வைத்திருக்கிறாய்.
கள்வனடா...நீ
புரியாத வார்த்தைகள்
தேடி...
திட்டித் தீர்த்துப்
போன நீயா
பூவின் இதழை விட
மென்மையாய் மாறி
என் மனம் தொட்டு...
என் பெண்மை தொட்டு...
கதை பேசுகிறாய்.
ஆண்மைக்குள்ளும்
தாய்மை
இதுதானோ!

கண்ணா...
காதலின்
இன்பம் நீயா
இல்லை...
நீயே காதலா...
கட்டி விட்டாய்
கட்டுண்டு கிடக்கிறேன்.
விட்டுப் போனால்
உயிர் விட்டுப்
போகுமோ...அன்பே
எதை நான்
எப்படிச் சொன்னாலும்
நீ வேணும்
என்பது மட்டுமே
உண்மை!!!

ஹேமா(சுவிஸ்) 19.05.2005

Friday, July 18, 2008

கறுப்பு ஆடி...

ஆடிப்பிறப்பாம் நேற்று.
ஓப்பிள் காரில் பறந்தேன்
முருகன் கோவிலுக்கு.
அகதிக் கடவுளை சொகுசாய் பார்க்க.
பளபளப்பாய் உயர்ந்தரக ஆடை
நெஞ்சை மறைக்கும் நகைகள்
பிராங்கில் ஓடர் பண்ணிக் கட்டிய
கால்நீள வாசமில்லா மலர்மாலை.
பக்கத்தே இருமனைவிகளோடு.

கூப்பிய கரங்களுக்குள் கொலைவெறி.
முருகனை முறைத்தேன்.
அறைய நீண்ட கைகளை அடக்கியபடி நான்.
தெய்வங்கள் என்பவர் யார்...என்ன...
உண்மையா...?
என்றுமே பேசாத கற்களுக்கு
இத்தனை அலங்காரம்.
லிட்டர் கணக்கில் பக்கெட் பாலில் குளித்து
மிதமிஞ்சிய படையல்.

உண்ணுகின்ற குழந்தைத் தெய்வங்கள்
ஒற்றைப் பருக்கைச் சோற்றை
எறும்பு காவினாலும் தட்டிப் பறித்துத்
தின்னும் அவலம் என் ஊரில்.
இங்கோ....
பல்லக்கில் உலா வந்த
களைப்பில் தூக்கம்தானே.
பிறகெங்கே பக்தர்களின் பிரச்சனைகளும்
பேச்சுவார்த்தைகளும்.
அவனே கனவில் மிதப்பான்.
அடுத்தநாள் குதூகலத்திற்காய்.
வெம்பிய மாம்பழமாய் மனம் அவிய
ஆடிப்பிறப்பைத் தொடர்கிறேன்.

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே"
என்று பாடிய காலம் போய்
கறுப்பு ஆடியாய் மாறி
ஆடி மெல்ல அசைகிறாள் என்றாலே
மனம் புயலடிக்கத்
துக்கம் விசாரிக்க சாவீடு போகிறது போல
ஒரு பாரம் ஈழத் தமிழருக்கு.

நேற்றும் மட்டக்களப்பில்
கைகள் கட்டப்பட்ட நிலையில்
மீண்டும் மனிதப் புதைகுழி ஒன்று.
காலகாலமாய் குடியிருந்த
கதிர்காமத்து முருகன் கோவில் கலைக்கப்பட்டு
போதி மரமும் புத்தரும் விகாரையும்.
மனிதனை வழிநடத்த கடவுள் என்கிற
ஹீரோவை வைத்துச் சொன்ன கட்டுக் கதைகள்.
உண்மையாய் ஒரு கடவுளும்
நல்லது செய்ததாய் சாட்சியே இல்லையே.

திசை மாறிப் பறந்த பறவை
திறந்து கிடந்த கதவிற்குள்
புகுந்து விட்டதாய் எங்கள் நிலை இங்கு.
நாகதாளியில் எழுதிய எங்கள் பெயர்கள்
இன்னும் அழியாமல்.
கூடுவிட்டுச் சொல்லாமலே வந்துவிட்டோம்.
எங்கள் கூடுகளை மரங்கள் இன்னும் பாதுகாத்தபடி.
விட்டு வந்த வழித்தெருக்கள்
புழுதி சேமித்துப் பொத்தி வைத்திருக்கின்றன
எங்கள் காலடித் தடங்களோடு.
பனம்பழப் பூச்சிகளும்
எச்சில் அமிலம் பூசி காக்கின்றன
பனம்பழங்களை எங்களுக்காய்.

அன்பு வறண்ட பூமி
வாய் பிளந்து காத்துக் கிடக்கிறது
அமைதி மழைக்காய்.
விழுவது மழை அல்ல.
மனிதச் சடலங்கள்.
தென் திசை தெய்வங்களே
என் தேசம் தூரத்தே அமைதி தொலைத்ததாய்.
உண்ட களைப்பில் நீ தூங்கு.
உண்மைச் சக்தி உனக்கிருந்தால் எமக்குக் கொடு.
நாங்களாவது தேடிக்கொள்கிறோம்
எங்கள் அமைதியை!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 16, 2008

ஒரு கிராமத்துக் காலை+மாலை


குயில்களும் காக்கை குருவிகளும்
கூவிக் கரையும் கொஞ்சல்கள்.
உடல் சோம்பல் முறித்து
மலரும் பூஜை மலர்கள்.
புற்களின் நுனியில்
கதிரவனின் முத்தத்திற்காய்க்
காத்துக் கிடக்கும் பனித்துளிகள்.

அடுக்கிய கிடுகின் சுமை
சினம் கொடுத்தாலும்
நெற்றி உரோமத்தை வறட்டியிழுக்கும்
சந்தனமும் குங்குமமும்
கழுத்து நிறை சலங்கையுமாய்

தாங்களே ராஜாக்களாய்
சந்தம் பிசகாமல் துள்ளு நடை போடும்
காளை மாட்டு வண்டில் ஓசைகள்.
இவற்றோடு போட்டி போடும்
காற்றுத் தேடித் தரும்
தூரத்துக் கோவில் மணி ஓசைகள்.

துலாவின் பாரம் போதாமல்
பிற்பாரமாய் நான்கு கற்கள் தொங்க
கூடக் கந்தனும் ராசனும் ஏறி மிதிக்க
துலாப்பாட்டோடு நீர்பாச்சும்
பரம்பரைத் தோட்டக்காரர்கள்.
வருமானம் வேண்டி
விளைந்ததை கலங்களில் கட்டி
உமிக்குள் மிஞ்சியதைக்
கஞ்சியாக்கும் பெண்டுகள்.
கலப்பையோடு வயல்வெளி நடக்கும்
எலும்புக்கூடு மனிதர்கள்.

தூக்கணாங் குருவியாய்
பனை மரத்து நுனியில்
இடுப்பில் பானையோடு தொங்கும்
கள்ளு இறக்கும் ஒருவர்.
இரவு முழுதும் சேர்த்த
நெற்குறுணிகளோடு
விடியலின் வருகையை
வெறுப்போடு புறுபுறுத்தபடி
புற்றுக்குள் ஒளிந்துகொள்ளும்
பெருச்சாளிகள்.

மறைத்தாலும் மறைக்க முடியாத
திக்கித் திணறும் பருவங்களோடு
அன்றலர்ந்த மலர்களாய்
ஆற்றோடும் அருவியோடும்
ரகசியக் காதல் கதை பேசும்
குமரிப் பெண்கள்.
சமவுரிமை சொல்லிச்
சண்டை போட்டு கொஞ்சம்
எக்காளக் கூத்தோடு துள்ளிக் குளிக்கும்
எருமைகளும் மாடுகளும்.

நகரத்து பணக்கார
விக்கிரகங்களுக்கு விதிவிலக்காய்
வறுமைப் பிரசாதமும்
பட்டாடையும் ஆராதனையுமாய்
தங்கள் குடிசையை விட
வறுமைக் கல் ஒன்று உயர்த்தி
மழைக் கம்பி கிழிக்காமல் மூடி
கூரை முகப்பில்"பேச்சியம்மன் கோவில்"
என்று எழுதிய கோவிலில் பூசகரின் மந்திரங்கள்.

மேய்கின்ற மாடுகளும் மனிதர்களும்.
மழைக்கு ஒதுங்க வசதியாய் இருக்குமோ!
பிரம்புத்தட்டி மறைக்க ஐந்து வகுப்புக்கள்
காய்ந்த ரொட்டிக்கும் கறுப்புத் தேநீருக்குமாய்
பேச்சுவார்த்தையோடு காத்திருக்கும்
விரல் விட்டு எண்ண
பன்னிரண்டே மாணவர்களும்
மனம் குடும்பத்தோடு நகரத்திலும்
உடல் வெறும் வருமானத்திற்குமாய்
பொதுக்குரலோடு ஒரு ஆசிரியர்.
ஒருபள்ளிக்கூடம்.

இப்படியாய் விடியும்
ஒரு கிராமத்து விடியல்!!!


தொடரும் மாலையில்...

பனை ஓலை வேய்ந்த குடிசையில்
சொட்டும் முத்துத் தெறிப்பாய் மழை நீர்.
ஏந்திப் பிடிக்க சிரட்டைக் குவளை
அடுக்குகள் ஜலதரங்கமாய்.
தாளம் பிசகாமல் விழும் மழைத் துளிக்கு
மூவர் பாட இருவர் ஆட்டமுமாய்
ஐந்து குட்டிக் குழந்தைகள்.

பாடப் புத்தகம் நனைந்தாலும்
மயிலிறகு நனைந்ததால் அழுவதை
ரசிக்கும்"டயானா"அருகில் உரசஇ
உதைத்த வேகத்தில்
முற்றத்து பங்கருக்குள்ளும் சங்கீதம் பிறக்க.
இன்னிசை கலைக்கும் கலைஞனாய்
கள்ளுப் போத்திலும் கையில் ஒரு சரையுமாய்
காலையில் நடந்த எலும்புக்கூடு குடிகார அப்பா.

குழந்தைகளை முறைக்கும் பருந்திடம்
காத்திடத் தாய்க்கோழியாய் அம்மா.
அடுத்த வீட்டில் அரிசியும் தேங்காயும்
கடன் பட்டு வேலியில் படர்ந்த
தூதுவளையும் பிரண்டையும் தேடி
அரைத்த சம்பலையும்
மண்பானையில் ஆக்கிய சோற்றையும்
காக்கும் காவலாளியாய்
மட்டைப்பந்த்தின் ஓட்ட எண்ணிக்கையாய்
குழந்தைகளுக்கும் குசினிக்கும்
ஓடிக் களைக்கும் பரிதாப அம்மா அவளாய்.

கோழியும் குஞ்சுகளும்
பதுங்கிய கிழிந்த பஞ்சாரத்துள்
சில சமயம் பருந்தின்
அட்டகாசம் பலமாயும்
சிலசமயம் அடக்கமாயும்...

மாலைப் பொழுது அடங்கும்
கிராமம் ஒன்றில் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 15, 2008

இறந்த காதல்...

f love     m a,  Image Hosting
என் அழகானவனே
என்னோடு கை
கோர்த்துத் திரிந்த தெரு
அமைதியாய் தன் பாட்டில்.
கூடிக் கதைத்த கோடியில்
இப்போதும் தனிமையில் உனக்காக.

ம்ம்ம்...நீ பஞ்சு மெத்தையில்
எதிர்காலக் கனவுச் சிரிப்போடு
ஆழ்ந்த நித்திரையில்.
வாழ்வுக் கனவோடு
கனவுக் குழந்தையோடு
இறுகிய தரையோடு
கால்கள் புதைந்துவிட
விறைத்த மனதோடு
காத்திருக்கிறேன் வலியோடு.

பூத்துவிட்ட விழிகளை
மை தடவிக் குளிர்ச்சியாக்கி
தேடலின் நம்பிக்கையோடு
உள்ளத்துத் தீபத்தை
அணையாமல் பாதுகாத்தபடி.
இன்னுமே வரவில்லை.
வறுமைக் கல் எறிய
தூரச் சிதறிய என்னை
தேடிப் பொறுக்காதவனாய் நீ.

உனக்காகவே பாதுகாத்த
என் சிறகுகள்
முறிந்து சின்னாபின்னமாய்.
முன்னால் நிற்கிற
என்னைக் கண்டு கொள்ளாமலே
நீ முத்தமிடுகிறாய்
உன் புது மனைவிக்கு.

ஓ....நீ என்னைக்
கண்டு கொள்ள இயலாதோ!
மானுடக் கண்களின்
கருவிழிக்குள் சிக்காத
மாற்றுலகத்தின்
சிலந்தியோ நான்!
என் ஓலமோ அவலமோ
கேட்காத....கேட்க முடியாத
மனிதச் செவிடனோ நீ!
காற்றின் கனவளவுக்குள்
என் தேகம்.
புரிகிறதா...
போன வாரம்தான்
தூக்குப் போட்டுக்கொண்டு
இறந்துவிட்டேனாம் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 13, 2008

பாரதமே...கைகொடு கொஞ்சம்.


விம்மித் தணிவது
வெளியில் தெரியாமலே
என் தேசத் தாய்
அழுதுகொண்டிருக்கிறாள்
தனித்து விட்டேன்
என்கிற அன்னியமாய்.
தனக்குக் கை கொடுக்கத்
தன் தாய் வருவாள்
என்கிற நம்பிகை பாறாமல்
உயிரை ஓர் அணுவுக்குள் பிடித்தபடி.
பாரதமே புரியாமலா நீ...


என் தேசத் தாயின் குழந்தைகள்
வலுவிழந்து எங்கெல்லாமோ
பரவிக் கிடக்க,
வாலிபக் கனவுகள் கலைந்து
நினைவுக் கல்லறைகளாக
நிரம்பி வழிந்தபடி.
உதிரும் இந்த மலர்களின்
உயிரைக் காப்பார் யார்?


இரத்த வாடைக்குள்ளும்
இரத்த ஆடைக்குள்ளும்
என் தாய் தூக்கம்
தொலைத்துத் தவிக்கிறாளே.
காக்கின்ற அவள் தாய்
காந்தீயம் பேசியபடி
மௌனமாய்
ஆயுதம் வைத்திருப்பவனோடேயே
கை கோர்த்துக் கொண்டு.


எத்தனை காலம்தான் என் தாய்
குருதியில் குளித்துக்கொண்டிருப்பாள்.
உங்கள் வெற்றிக்கு விளையாட
என் தாய்தானா!
எவருக்கு வேண்டும்
உங்கள் வெற்றியும் தோல்வியும்.
அவள் சந்தோஷம் கண்டு
எவ்வளவு காலமாயிற்று.


பிணங்களை
மொய்த்துக் கொண்டிருக்கும்
புழுக்களை வைத்தா
அரசாளப் போகிறீர்கள்.
புழுக்களுக்காகவா
இந்தப் புனிதப் போர்.
தேசிய கீதத்தின் கோட்பாடு
குருதியும் பிணமுமா.
வேதங்களைப் புதைத்தா
கறையானுக்குச் சோறு கொடுத்தீர்கள்.


பாரத தேசமே...
பிளவு பட்டுக் கிடக்கும்
இரு இனங்கள்
ஒருவர் கண்ணை
ஒருவர் கொத்தித் தின்றபடி.
நடுவில் ஏதுமறியா
அப்பாவிகளாய் நாங்கள்.
கை கோர்க்க...கை கொடுக்க
முடியாமல் நீ எப்படி மௌனமாய்!
உன்னை விட்டால் எங்களுக்கு யார்?


பிண வாடைப் போர்வைக்குள்
என் அன்பு தேசத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஆசையோடு.
வாழும் காலம் அகதியானாலும்
இறுதி மூச்சின் காலம்
என் தேசத்தில் விட அவாவோடு.
ஆனாலும் என் தேசத் தாயே
கண்ணீர் கூட வர மறுத்து
வரண்ட கண் குழிக்குள்
எஞ்சியிருக்கும் மிச்சக் குஞ்சுகளை
அடை காத்தபடி.
இதில் எப்படி
நானும் என் ஆசைகளும் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 11, 2008

உள் காயங்கள்...

குட்டிக் குட்டி ஆசைகள்
கூரைச் சேலைக்குள்.
விம்பும் விசும்பலைக் கூட
விரட்டி மறைத்தபடி
மணவறை நோக்கி மரத்த மனதோடு
பயணம் மிக அலங்காரமாய்.

மனவறைக்குள்
திருகிய ஆசைகள் திணறியபடி
வருடங்கள் இருபத்தைந்து
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அழகான மணல் வீடு
அலை அடித்துக்
கலைத்துப் போக
கையாலாகதவளாய்.

மனதோடு பேசிக் கொள்ளும்
பெற்றோருக்கு அடங்கிய மகளை
பேசா மடந்தையை
திருமண பந்தம் திசை திருப்பும்.
குடும்ப கெளரவம் பேசும் அம்மா
பரம்பரை புகழ் பேசும் அப்பா
பேசவே விடாத உறவுகள்.

ஓமப்புகையும் மந்திரங்களும்
மன ஓலத்தை மறைக்க
தங்க வேலிக்குள் கைதியாய்
தாழிட்ட கதவுக்குள்
பால் செம்போடு
தலை குனிந்தபடி
குற்றம் செய்தவளாய்
அவள் மட்டும்
முதலிரவுப் பள்ளிக்குள்.

குட்டிக் குட்டிக் கனவையெல்லாம்
தொலைத்துவிட கலைத்துவிட
பரணுக்குள் தூக்கிப் போட்டுவிட
தகுதிகள் திறமைகள் ஆசைகள்
அலட்டல்கள் அலசல்கள் அத்தனையும்
கண் முன்னாலேயே
தகர்த்து எறியப்படும் நாள் இதுவாய்.

விருப்பம் தெரிவிக்க முன்னமே
கழற்றித் தூர எறியப்படும்
அவள் ஆடைபோல
பெயரின் முன் எழுத்தைக் கூட
கேட்காமலேயே
மாற்றிவிடும் சடங்கு.

குனிந்த தலைக்குள்
கலங்கிய கண்களைக்
கவனிப்பார் யார்?
என்றாலும் பயணம் தொடங்கும்
மணமாலையும் மஞ்சள் கயிறும்
கழுத்தை நெரிக்கும்
இன்னொரு உறவின்
புதிய தொங்கு பாலமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 10, 2008

முடிவதில்லை...



வீரியம் உடைத்து
முளைத்த முளை போல
மனதிற்குள் நுழைந்துவிட்ட
நினைவுகளைக்
கிள்ளி எடுத்துவிட முடிவதில்லை.

மூடிய கண்களுக்குள்
இரயில் பயணங்களாய்
சந்தித்த உருவங்களை
மறக்க முடிவதில்லை.
அப்பாவின் நெஞ்சில்
படுத்துப் பாடமாக்கிய
"பித்தா பிறை சூடியை"
மறக்க முடிவதில்லை.

மூங்கிலை முறித்து வைத்தாலும்
காற்றுப் புகுந்து தரும்
இசையை
நிறுத்த முடிவதில்லை.
இன்று இருப்போம்
நாளை நிச்சயமில்லை.
மனதை ஞானியாக்கி
உறவுகளோடு மீண்டும்
கை கோர்த்துக் கொண்டாலும்
மனதில் பட்ட பழைய வடுக்களை
மறக்க முடிவதில்லை.

பூக்களின் சாலையில்
ஒரு கணம் நின்று
தலை அசைக்காமல் போனதில்லை.
வாழ்க்கையை வெறுத்தாலும்
வேளை வரும்வரை
வாழ்வோடு போராட்டத்தை
ஒத்திப் போட முடிவதில்லை.
என்னதான் வசதியான வாழ்வானாலும்
ஈழத் தமிழருக்கு வெளிநாடுகளில்
"அகதிகள்"என்ற பெயர்
மாற்றப்படப் போவதில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 08, 2008

உயிரின் தேடல்...

விட்டுப்போன இடத்தில் இருந்தே
தொட்டுத் தொடர்கிறது என் உயிரின் தேடல்.
நாம் நடந்த அந்த நடை பாதை...
தெருக் கடந்துவர எமை நித்தம் வாழ்த்தி அனுப்பும்
கடலை விற்கும் வயதான கிழவி...
பாழடைந்த கிணற்றுக்குள் நிலவின் நிழல்...
ஒழுங்கை முந்தலில் வேம்பு வைரவர்...
பெருத்துக் கருத்த பூவரசு...
மனம் நிறைந்து நிறைக்கிறது உன்னை.

அறியவேயில்லை அந்த வயதில்
சாவோலை சொன்ன செய்தி
அதன் வலி சரியாகப் புரியவேயில்லை.
துக்கமாக...துயரமாக...பிரிவாக
இனிமேல் இல்லை என்கிற
ஏக்கமாக உணரவேயில்லை.
எனக்குள் இருள் அறவே இல்லை.

யார் யாரோவெல்லாம் அழுதார்கள்
நானும் அழுதேன்.
அப்பாவும் அம்மாவும் அணைத்திருந்தார்கள்.
நீ இனி இல்லை என்று
எனக்கு விளங்காமலே போனது.
ஆனால் இன்று வலிக்க வலிக்க
ஊழிக்காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

நீ எனை விட்டுப் போன அந்தத் தினம்
இப்போ போலத்தான் இருக்கிறது.
ஒரு கொடுமையின் பேரழிவாய்
ஒரு பூகம்பத்தின் விழுங்கலாய்
என்னை அழுத்தி விழுத்துகிறது.
எனக்குள் அவஸ்தையில்லாமல்
அடிவயிற்றில் இருந்து வரும்
உருண்டை ஒன்று
நெஞ்சக்குழியை அடைக்கிறது.

என்னிடம் இல்லை என்று எதுவுமேயில்லை.
ஆனால் நீ இல்லாதது
என்னிடம் எதுவுமே இல்லாதது போல.
நீ என் வரமா...தவமா
நான் உன்னைப் புரிந்துகொள்ளும் முன்னமே
போய் வருகிறேன் என்று கூடச்
சொல்லாமலே போய் விட்டாய்.
காலங்களின் சுழற்சியால்
வரவாக செலவாக சுற்றிச் சுற்றி
நிறைய மாற்றங்கள்.
நீ மட்டும் வருவதாக இல்லை.

நினைவுகள் நரை கொண்டு விட்டாலும்
சில சமயம் இனி ஒரு முறை
உன்னைக் கண்டு கொண்டால்
கலைந்து போன என் கனவுகள்
மீண்டும் இளமை கொள்ளும்.
வானம் வெளிக்கும்.
வறண்ட பூமிக்குள்ளும் பசுமை தெரியும்.
பூக்களின் அழகில் புதுமை பிறக்கும்.
பசுக்களின் மடியில் பால் வழிந்து ஓடும்.
ஆமாம்....ஆமாம்
எல்லாமே இனி இனிமையாய் இருக்கும்.

ஆனால் என் உயிர் பிடுங்கிப்
போன நீ மட்டும் வருவதாகவே இல்லை.
ஆண்டுகள் பல பறந்து போன பிறகும்
பறித்துப் போன இடத்தில்
வெறித்து நின்றபடியே
என் உயிரைத் தேடியபடி நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 06, 2008

எப்போதாவது உன் நினைவு...

வாழ்வு நரையாகி
நகர்ந்துகொண்டிருக்கிறது.
மன இடுகைகள்
என்றும் இளமையாக.

உன்னை நான்
எப்போதாவது நினைப்பதுண்டு.
பல நாட்கள்
பிரிந்திருந்த காதலர்கள் போல
வேகமாக ஓடி வரும்
கடல் அலை
கரையைத் தொட்டுத்
தழுவிக் கொள்ளும் போது.

கோடைகாலத்தில்
ஆண் குருவியும் பெண் குருவியும்
சேர்ந்தே தும்பு தேடி
கூடு கட்டிப் பின் அடை காக்கும்
பெண் குருவிக்கு ஆண் குருவி
ஆசையோடு
இரை தேடித் தரும்போது.

உன்னோடும் என்னோடும்
ஒன்றாய்ப் படித்த சிநேகிதர்கள்
என்றாவது நிமிட விசாரிப்புச் சந்திப்பில்
"அவனுக்காகவா இன்னும் காத்திருக்கிறாய்"என்று
பரிகாசமாய் கேட்டுச் செல்லும் போது.

பக்கத்து வீட்டுக்
கணவன் மனைவியின்
சின்னச் சின்னச் சண்டைகள்
வேலி தாண்டிக்
காதில் விழும் போது.

மூக்குக் கண்ணாடியை
இடம் மாறி வைத்துவிட்டுத்
தேடும்போது.

எல்லாவறையும் விட
இரவில் தூக்கம் வராமல்
விழித்திருக்கும் போது
இல்லாவிட்டாலும்...
தூங்கும் போது கனவில்
படுக்கையின் பக்க வாட்டில்
கைகளால் தலையணையைத்
துழாவித் தேடி
எடுத்துக் கொள்ளும்போது!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 03, 2008

முடிவில்லாப் பயணம்...

வனவாசம் காட்டில் அல்ல.
வெளி நாடுகளில்.
ஈழம் கண்ணில் விடியும் வரை
எம் இனம் ஏற்றுக்கொண்ட
வேஷம் இது.
காலச் சுழற்சியில்
காத்திருந்து காத்திருந்து
கலைந்த கனவுகள் ஏராளம் ஏராளம்.
நினைவுகள்... நின்மதிகள்...
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாம்...எல்லாமேதான்.

நான் வாழ்ந்த
அந்த அழகான கிராமம்
இப்போ அழிந்துவிட்ட கிராமமாம்.
அகழ் ஆராய்வு செய்கிறார்களாம்.
எத்தனை ஆயிரம் கனவுகளை
அதற்குள் புதைத்துவிட்டு
புலம் பெயர்ந்தோம்.
அகதிகளாய் அநாதைகளானோம்.
எம் கனவுகளை அகழ்ந்து
யார்...எப்போ...புதுப்பிப்பார்கள்?

ஒரு சிறு நூல் நுனியில்
உயிர் ஊசலாட தலை தெறிக்க
தடம் மாறினோமே.
மயிரளவு கூட உயிருக்கு
மரியாதை இல்லாமல்
மரித்த நிலையில்
மிஞ்சும் உயிரைத் தூக்கிக் கொண்டு
தாய் மண் விட்டுத் தூரமாகி
தஞ்சம் கேட்டுத்
தடுக்கிய நாட்டில்
மிஞ்சிய மானமும்
மலையேறி விட...
முடிவேயில்லாத குளிர்ந்த
இரவுகளின் மடியில்
மிச்சம் மீதியிருந்த
மன உணர்வுகளும்
மடிந்து விட்டன.

இப்போதைய தேவை
வேலை...வேலை பணம்...பணம்.
காலை முதல் மாலை வரை
களைத்து விழும் உடலுக்கு
உணவு இல்லாவிட்டாலும்
உணவை ஒதுக்கினாலும்
கனவோடு ஓர் படுக்கை.

கழற்றிப் போட்ட உடைகள்
தலைமாட்டில் காத்திருக்க
குறுகிய இரவு அலாரம் அடிக்க
மீண்டும் மாட்டிக்கொண்டு
பனிக்கூழுக்குள் கால்கள் புதைய ஓட்டம்.

மாதம் முடிய மிஞ்சியதை
பிய்த்து...பிரித்து அனுப்பிவிட்டு
உடலும் மனமும்
களைத்துக் காலில் விழ
மீண்டும் தொடரும்
வேண்டாம் என்று சொல்ல முடியா
முடிவில்லா மெளனப் பயணம்!!!

ஹேமா (சுவிஸ்)23.02.2001

Tuesday, July 01, 2008

அரசியல்வாதிகள்...

எம்மைப்பற்றி
எம்மைச் சிந்திக்க விடாமல்
தம்மைப்பற்றியே
எம்மைச் சிந்திக்க வைக்கும்
எம்மை இயக்கும்
மந்திரவாதிகள்.

தமக்குள்
ஒரு பதிலை...
முடிவை...
வைத்துக்கொண்டு
எமதென்ற
எமக்கென்ற பதிலுக்கு
புள்ளிகள் போடாமல்
தள்ளிவிட்டு,
தம் பதிலோடு
ஒத்து வந்தால் மட்டுமே
சித்தி பெறப்
புள்ளிகள் போடும்
சுயநலச் சாமான்யன்கள்.

அவர்களுக்காகவே மக்கள்
தவிர
மக்களுக்காக அவர்கள்
ம்ம்ம்...
கேள்விக்குறிதான்!!!

ஹேமா(சுவிஸ்)