*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, July 08, 2015

அப்பா...அப்பா...

கவியாய்
எனைப் பிரசவித்த
என் குழந்தை...

தன் பெயரையே
என் கவிக்குப் பெயராக்கிய
என் அப்பாக் குழந்தை...

பறையோசையின்
அதிர்விலும் உறங்குகிறது
இறுதிக் கவிதைக்கான
வார்த்தைகளை
என் கண்ணீரில்
நனைத்துவிட்டு.

எனக்கான குறிப்பேதும்
விட்டுச் சென்றதாய்
எந்தத் தடயமுமில்லை
என்னைத்தவிர.

அடிவயிற்றில்
கயிறிறுக்கி
காலன் உயிர் பிடுங்கையில்
அவர் எழுதி ஒடிந்த
பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர்
மூடிய விழியில்.

எழுத்தறிவித்த
என் இறைக் குழந்தை
என்'அப்பா'
'குழந்தை நிலா' வின்
இக்குழந்தை...

இனியொருபோதும்
திறக்கா அவ்விழி
இனியொருபோதும்
'அம்மா' வென அழைக்கா
அப் பாசமொழி.

எரிந்த சிதையிலிருந்தும்
புரண்டு விழுந்திருக்கும்
ஒற்றை விறகு
எனக்கே எனக்காய்!!!

குழந்தை நிலாவின் குழந்தை குழந்தைவேலு என் அப்பா யூலை 1 ல் என்னை விட்டு இறைவனடி சேர்ந்தார்.